பள்ளியிலோ கல்லூரியிலோ வாத்தியார்களுக்குத் தெரிந்திருக்க, ஒன்று நன்றாய் படிக்க வேண்டும், இல்லை தருதலையாய் இருக்க வேண்டும்! நான் பள்ளியில் படிக்கும் போது நன்றாய் படிக்கவும் இல்லை; தருதலையாய் திரியவும் இல்லை. பத்தோடு பதினொன்றாக போய் வந்து கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரிக்குப் போனதும் கொஞ்சம் மாறி விட்டேன். நன்றாய் படிக்க ஆரம்பித்திருப்பேன் என்று நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக உள்ளங்கையில் ஹன்சை அரைத்து வாயின் ஓரத்தில் அதை போட்டுக் கொள்ளும் அளவுக்கும் போகவில்லை. அப்படிப் போவதற்கான எல்லா தகுதியும் எனக்கு இருந்தது. என்ன சேர்க்கை சரியில்லை [அட ராமா...] இந்தப் பதிவு கீழுள்ள வரிகளைப் படித்ததனால் வந்த விளைவு:

திருச்சி ரேடியோ, ப்ளாசா தியேட்டருக்கு எதிரே இயங்கி வந்த காலத்தில் நான் ஒரே ஒருமுறை ஸ்ரீரங்கத்திலிருந்து `மணிமலர்நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளியின் சார்பாக நாற்பது பிள்ளைகளுடன் சென்று வந்தது ஞாபகமிருக்கிறது. ஏதோ ஒரு வார்த்தை ரேடியோவில் படித்ததற்காக எனக்குப் பள்ளியில் ஒரு கதர் துண்டு கொடுத்தார்கள். நான் பள்ளி நாட்களில் வாங்கிய ஒரே பரிசு அது.

இது யார் எழுதியது என்று உங்களுக்கு உடனே புரிந்திருக்கும். நம்ம வாத்தியார் தான்! அட பரவாயில்லையே தமிழ் உரைநடையையே ஒரு புரட்டு புரட்டினவரு ஒரு கதைப் போட்டி, கட்டுரைப் போட்டின்னு ஒரு பரிசும் வாங்கலையே..நம்மளை மாதிரியே இருந்திருக்கிறாரே என்று ஒரு...அதாங்க தமிழ்ல ஒரு அருமையான வார்த்தை வருமே, வேணும்போது கிடைக்காது....இருங்க...! பீலிங்! அவராவது ஒரு துண்டு வாங்கியிருக்கார். நம்ம என்ன வாங்கியிருக்க்கோம்னு யோசிச்சேன். ஹூஹும்! சின்ன வயசிலிருந்து நான் நன்றாய் வரைவேன். பிள்ளையாரை நேரில் பார்த்தது மாதிரி அப்படி அச்சு அசலா வரைவேன். தசாவதாரத்தையும் பேப்பரில் வரைந்து வெட்டி வீட்டின் சுவற்றில் ஒட்டி வைத்திருந்தேன். சோற்றுப் பருக்கைகள் காய்ந்ததும் பரமாத்மா தானாக கழன்று கொண்டார். அதோட ரஜினி நிக்கிற மாதிரி, மல்லாக்க படுத்துருக்குற மாதிரி, குப்புற படுத்துருக்குற மாதிரின்னு வித விதமா வரைவேன். நானும் எனக்குத் தெரிஞ்சி 4, 5 ஓவியப் போட்டியில கலந்துருக்கேன். முடிஞ்சதும் ஒரு சர்டிஃபிக்கேட் கொடுப்பாங்க.. நான் அப்போ இங்கிலீஷ் மீடியம் படிச்சதால, அது கலந்து கொண்டதற்கான பரிசு என்று சர்ட்டிஃபிக்கேட்டில் எழுதியிருந்ததை புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். சோ, அது படி பாத்தா எனக்கு நினைவு தெரிஞ்சி பள்ளியில் நான் எந்தப் பரிசும் வாங்கினதில்லை.

பள்ளியில் சீண்ட ஆளில்லாமல் இருந்த எனக்கு கல்லூரியில் சேர்ந்ததும் என்னையும் நம்பி ஒரு கூட்டம் சேர்ந்தது. எப்போ பார்த்தாலும் சினிமா, சினிமா பாடல்கள், சினிமா டயலாக்குகள் என்று சுற்றும் என்னைப் பார்த்த என் சீனியர் ஒரு பாரதிராஜாவின் கையில் பாக்யராஜ் கிடைத்ததைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டார். தமிழ் சினிமாவினால் உருப்புடாம போன கேஸ்களில் அவனும் ஒருவன் என்று நானும் பின்னாளில் தெரிந்து கொண்டேன். எங்கள் திறமையை காலேஜ் அறிய, ஃபிகர்ஸ் அறியக் காட்ட கல்லூரி விழாவின் மூலம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நானூற்றி இருபது நொடிகள் நடக்கும் ஆஸ் யு லைக் இட் நிகழ்ச்சியில் எங்கள் பெயரையும் கொடுத்தோம். அதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே கடுமையாய் உழைக்க அரம்பித்தோம். ரங்கீலா பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம். யாயிரே யாரே பாட்டுக்கு ஆட ஒரு சீனியர் ஃபிகரை பிடித்தோம். அந்தப் பாட்டின் இடையில் ஒரு குட்டிப் பையன் வந்து 4 லைன் பாடுவான். அந்த இடத்தில் தான் நீங்கள் எங்கள் க்ரியேட்டிவிட்டியை புரிந்து கொள்ள வேண்டும்! அந்தக் குட்டிப் பையனுக்கு பதிலாக அப்பு கமலை அப்படியே கொண்டு வந்தோம். அப்பு கமல் வேஷத்தை நானே ஏற்றிருக்கலாம். இருந்தாலும் நான் சும்மா நின்னாலே அந்த உயரம் தான் இருப்பேன் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். என்னை வாரியணைத்த சீனியர் தான் அந்த வேஷம் கட்டினார். இப்படியாக பாலிவுட்டையும் கோலிவுட்டையும் இணைத்து பிணைத்து ஒரு புதுமையான விருந்து சீ சீ..எனக்கே ஒவராக இருக்கிறது! பாட்டும் ஆட்டமும் பட்டையை கிளப்பியது!

பிரச்சனை என்னவென்றால் அந்தப் பாடல் போக எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் இன்னும் மிச்சமிருந்தது. அந்த இடத்தை நிரப்புவதற்கு நாங்கள் பட்ட பாடு தான் மேட்டரே! மற்ற க்ரூப் பசங்க எல்லாம் "தங்கச்சி, சட்டத்தோட கண்ல மண்ணைத் தூவி உன்னை யாரும் கெடுக்க முடியாதும்மா, அதுக்கு முன்னாடி நானே உன்னை...அவ்!" என்று கேப்டன் மாதிரி பேசி கதறடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்க மிமிக்ரி செஞ்சா அதோட சேர்ந்து ஒரு க்விஸ் ப்ரோக்ராமும் வைக்க வேண்டி வரும். நாங்களே பேசிட்டு இது யாருன்னு கேட்டு சரியா சொல்றவங்களுக்கு பரிசு கொடுக்க வேண்டியியது தான். அப்படி ஒரு திறமை நம்மகிட்ட... ரிகர்சலின் போது சரி கழுதை இதெல்லாம் வேலைக்கு ஆவாது என்று எண்ணி சின்ன சின்ன ஜோக்ஸாக செய்வோம் என்று பல ஜோக்குகளை ரிகர்சல் செய்தோம். எடுத்துக்காட்டாக...

ஒரு பெண் பாடுகிறாள்: காலையும் நீயே மாலையும் நீயே...நான் கோபமாய் அவளிடம் போய், அப்படியா, "அப்போ மத்தியானம் யாருடீ?" என்று சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும்! அதற்கு அந்தப் பெண் கண்ணாம்பா ரேஞ்சுக்கு தன் வலது கையை தன் வாயில் குப்புற வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வுக்கு வந்தவரிடம் ஃபைலை வாங்கி ஃபைலை மேலாகப் பார்த்து, இந்த மாதிரி 4 பைலை நம்ம ஆபீஸ்லயும் வாங்கி போடுங்க என்று குமாஸ்தாவிடம் சொல்வது! [இதே சீனை ஒரு படத்தில் பின்னாளில் பார்த்தேன்!]

எப்படி ஜோக்ஸ்!

இன்னும் என்னன்னமோ ரிகர்சல் செய்தோம். மறந்து விட்டேன். கடைசியில் ஒரு மொக்கை நாடகம் ஒன்றை போட்டு ஈடு கட்டினோம். அதில் என் நடிப்பை பாத்திருந்தீங்கன்னா சின்ன வயசு சிவாஜி உங்க கண்ல ஒரு நிமிஷம் வந்து போயிருப்பாரு!!! எங்க மொக்கை தாங்காம பசங்க போட்ட கூச்சல்ல முதல் வரிசை தவிர வேற யாருக்கும் நாங்க என்ன செய்றோம்னு புரியலை. நல்ல வேலையா ஜட்ஜஸ் எல்லாம் முன் வரிசைல இருந்ததால எங்களுக்கு 2ம் பரிசு கிடைச்சது! அந்தப் பரிசு கண்டிப்பா அந்த அப்பு வேஷத்துக்குத் தான்! மனுஷன் இன்னைக்கும் அதே வேஷத்தை போட்டு பரிசை அள்ளிட்டு இருக்காரு! என் வாழ்நாள்ல நான் வாங்கின முதல் பரிசே இரண்டாம் பரிசு, அடேடே!!

இப்போதெல்லாம் அலுவலகத்தில் எப்படி நேரத்தைக் கடத்துவது என்றே தெரியவில்லை. அமெரிக்காவில் ஆன்ஸைட் கோ ஆர்டினேட்டராக இருப்பது அழகான பெண்களின் சகவாசம் மாதிரி! எல்லா வேலையையும் அவங்க தலையில கட்டிலாம்னு நினைக்கும் போது இனிக்கும்; ஆனா நம்ம ஒன்னு கேட்டு அவன் வேற ஏதோ செஞ்சு கொடுத்து வீட்டுக்குப் போய் தூங்கிடுவான்! அப்புறம் நம்ம தாலியை அறுப்பானுங்க! [இங்கிலீஷ் படத்துல தாலி சென்டிமண்ட் இல்லையே!!!] அதை நினைக்கும் போது கதி கலங்கும்! சரி இதுக்கும் அழகான பொண்ணுங்க சகவாசத்துக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டீங்கன்னா...பைக்ல பாதி ஏறி உங்க மேல பாதி ஏறி கட்டிப் புடிச்சிட்டு வரும்போது இனிக்கத் தான் செய்யும்! ஆனா, தம் அடிக்காதே, உன் ஃப்ரண்ட்ஸே சரியில்லை, இதை வாங்கிக் கொடு அதை வாங்கிக் கொடுன்னு போனை எடுத்து நச்சு நச்சுங்குமே அதை நினைச்சா கேரிங்கா இருக்குல்ல? அதே தான்! உவமை ஓக்கேவா?

சரி விஷயத்துக்கு வர்றேன். அலுவலகத்தில் நேரம் போகவில்லை. எவ்வளவு நேரம் தான் ஜீமெயில், ஆர்குட், தட்ஸ்தமிழ், தமிழ்மணம் கை கொடுக்கும் சொல்லுங்க! [அதோட நீங்க இப்படி வெட்டியா இருக்கும்போது மேயும் வலைதளங்களையும் சொல்லுங்க! என்னோட இலக்கிய ரசனை பத்தி உங்களுக்குத் தெரியாது. தட்ஸ்தமிழ்ல வர்ற சினிமா நியுஸ் ஒன்னு விடாம படிக்கிறவன் நான். அதுவும் ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழே அந்த 2 பேரோட கமெண்ட்ஸ்! சோ, என்னை சாதரணமா எடை போட்றாதீங்க! அந்த மாதிரி உலகத் தரமான வலைதளங்களை மட்டும் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!!!] சரி கழுதை ஏதாவது நாமளா எழுதிபுடலாம்னு பிழியிறதுக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டு உக்காந்தா இந்த மூளை....ஹிஹி...சரி ரைட்டர்ஸ் ப்ளாக் ஆயிடுச்சுன்னு கூகுள் பஸ்ஸும் போட்டாச்சு! அப்புறம்? சரி வேற வழியில்லாம தமிழ்மணத்தோட கால்ல சாஷ்டாங்கமா விழுந்து ஒவ்வொரு பதிவா படிக்க ஆரம்பிச்சுருக்கேன். முடியலை...முக்காவாசி மொக்கை தான்! ஒன்னு சினிமா, இல்லை புத்தகம், இல்லை யாரோ ஒரு மனுஷன்..எதையோ ஒன்னை விடாம விமர்சனம் பண்ணிட்டே இருக்காங்க..[இந்தப் பதிவையே பாருங்க, நான் இப்போ வலையுலகை விமர்சிக்கிறேன்! நான் சொல்றதை ஒத்துக்குறீங்களா?] புது விஷயங்களை சொல்ற சில பதிவுகள் இருக்கத் தான் செய்யது! அது என்னமோ தெரியலை எதை பத்தியாவது சொல்லிப் புரிய வைக்கிற ஒரு உருப்படியான பதிவுன்னாலே ஸ்கூல்ல லஞ் முடிஞ்சதும் வர்ற ஹிஸ்டரி பீரியட் ஞாபகம் வந்து தொலைஞ்சுடுது. ஒரு வேளை நம்ம வாத்தியார் மறுபடியும் பொறந்து வந்து ஒரு வலைப்பதிவை ஆரம்பிச்சி டிஜிடலுக்கும்/அனலாகுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் பாணியில் உணர்த்தினா தான் படிப்பேன்னு நெனைக்கிறேன்.

சென்ற வாரம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஒரு ட்ரிப் அடித்து வந்தேன். 4 நாட்களில் 40 இடங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு சராசரி இந்திய மனப்பான்மையோடு!! வேலையை விட விடுமுறைகள் அதிக பளுவாகிவிடுகிறது இந்தியர்களுக்கு. யுனிவர்சல் ஸ்டூடியோஸ், டிஸ்னி லேண்ட், சீ வேர்ல்ட் 4 நாட்களில் கவர் பண்ண வேண்டும் என்பது ப்ளான். டிஸ்னி லேண்டிற்கு முழுதாய் இரண்டு நாட்கள் இருந்தாலும் பத்தாது! அத்தனை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் குழந்தைகளுக்குத் தான் என்று தோன்றுகிறது. எத்தனை ராட்டினங்களில் தான் ஏறுவது? அதிலும் அமேரிக்காவில் ராட்டினம் ஒவ்வொன்றும் ராட்டினமாகவா இருக்கிறது. எல்லாம் கொல வெறி பிடித்தவர்களைக் கொண்டு வடிவமைத்திருப்பார்கள் போலும். இங்கு குழந்தைகளும் அதே கொலை வெறியுடன் தான் பிறக்கிறார்கள். அத்தனை பெரிய ரோலர் கோஸ்டரைப் பார்த்தால் கொஞ்சமாவது பயம் வேண்டாம் கண்ணில்? சின்ன புள்ளத்தனமா இல்லையே....அவ்வ்வ்வ்!!

பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக்கவும். [நல்ல படங்கள், அவசியம் க்ளிக்கிப் பார்க்கவும்!]












அதுவுமில்லாமல் சீ வேர்ல்ட் என்னை அவ்வளவாய்க் கவரவில்லை. ஏதோ ஒரு மீன் விற்கும் கடைக்கு சென்ற மாதிரி இருந்தது. சின்ன சின்ன குட்டை மாதிரி கட்டி விட்டு ஷார்க் வகையறாக்களை விட்டிருந்தார்கள்! எல்லா குழந்தைகளும் நட்சத்திர மீனை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் சாவட்டும் என்று கொண்டு வந்து விட்டிருப்பார்களோ என்னமோ! கொடுமையாய் இருந்தது. ப்ளோரிடாவில் ஒரு வேல் (முருகரோடது இல்லை, திமிங்கலம்) பயிற்ச்சியாளரை இந்த வாரம் கொன்றதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! அந்த மாதிரி ஒரு ஷோ இங்கும் இருக்கிறது. என்ன தான் ஷோ நன்றாக இருந்ததாலும் அந்தப் பிராணிகளை நம் சுயநலத்திற்காக இப்படி படுத்துகிறோமே என்று குற்ற உணர்ச்சியே மேலோங்குகிறது.














சோ, இதையெல்லாம் சொல்லி ஒரு வழியாய் என் குடும்பத்தாரை கன்வீன்ஸ் செய்து 4வது நாள் மலிபு என்ற இடத்துக்குச் சென்றோம். அங்கே ஒரு வெங்கடேஷ பெருமாள் கோவில் இருக்கிறது. நான் கோவிலுக்குக் கூப்பிடுவதை என் மனைவியால் தாங்க முடியவில்லை. [அப்படி என்றால் ராட்டினங்கள் என்னை என்ன பாடு படுத்தி இருக்கும்!!] என்னைப் பொறுத்தவரை விடுமுறை என்பது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். 3 நாட்கள் ஒவ்வொரு ஷோவுக்கும் ஓடி ஓடி கால்கள் வலுவிழந்து விட்டன. எனக்கு கோவில் ஒரு சாக்கு தான், ஊரைப் பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை.












நான் நினைத்ததை விட மலிபு அற்புதமாய் இருந்தது. சுற்றிலும் சிறு சிறு பச்சைப் பசேலென்ற குன்றுகள், ரம்மியமான க்ளைமேட் ஊட்டியை நினைவு படுத்தியது. கோவிலும் அருமையாய் இருந்தது. அதிலும் அங்கு வாழும் நம்மவாக்கள் கோவில் கட்டியதோடு நில்லாமல் அங்கு ஒரு மண்டபம் கட்டி புளியோதரை[$3], தயிர் சாதம்[3$] + பச்சடி, காப்பி[$1], டீ[$1] விற்கிறார்கள். பர்கர் கிங், சப் வே என்று செத்துப் போய் அடங்கிப் போயிருந்த நாக்கு ஏசுநாதரைப் போல் உயிர்த்து எழுந்தது! அந்த மண்டபத்தில் நடராஜர் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்! "அது சரி, நீங்க ஒத்தைக்கால்ல நிக்காதீங்க, ஸ்டேஷனுக்கு ஆகாதுல்ல?! என்ற நான் கடவுள் வசனம் ஞாபகம் வந்தது! அந்தக் கோயிலை ஒட்டி ஒரு பெரிய பார்க். பெரிய பெரிய வேன்களோடு ஆங்காங்கே கூடாரம் அமைத்துக் கொண்டு கேம்பிங். வாழப் பிறந்தவர்கள். ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆனால், சுற்றி இருக்கும் மலையில் ஏறுகிறார்கள். மலை மேல் ஒரு லேக்கும் இருக்கிறது. எங்களுக்கு நேரம் இல்லாததால் மலையேற முடியவில்லை. கடைசி நாள் ட்ரிப் மற்ற மூன்று நாட்களை விட அருமையாய் அமைந்தது!! கலிஃபோர்னியாவில் வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கடல் இருக்கிறது, பச்சைப் பசேலென்ற மலை இருக்கிறது, அருமையான சீதோஷ்ன நிலை!! ஆனால் இவை எல்லாமே மன் ஹேட்டன் பீச்சில் காரை பார்க்கிங் பண்ண ஒவ்வொரு தெருவாக அலையும் போது அடிப்பட்டுப் போகிறது!! (அதிலும் திங்கள் கிழமை மதியம் முன்று மணிக்கு!)

மறுநாள் ஆபிஸ் போனதும் என் மேனேஜர் [அவரும் இந்தியர்] என்னிடம் ஆர் யு டயர்ட்? என்று கேட்டார். எந்த வெள்ளை காரனாவது விடுமுறை கழித்து வரும் ஒருவனிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்பானா? பாம்பின் கால் பாம்பறியும்!

ராமுவும் சோமுவும் நெருங்கிய நண்பர்கள்! திரை கடல் கடந்து திரவியம் தேடும் மென்பொருள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் இருவரும் வீக் என்ட் எப்படிக் கழிந்தது என்று பேச ஆரம்பித்து...

ராமு: சொல்லு சோமு, எப்படி போச்சு வீக் என்ட்?

சோமு: என்ன புதுசா, வால்மார்ட், இந்தியன் ஸ்டோர்ஸ் போய் தான்! உனக்கு?

ராமு: லைப்ரரியில இருந்து ரெண்டு படம் வாங்கிட்டு வந்தேன். இரண்டு படமும் எந்த த்ரில்லருக்கும் குரைஞ்சது இல்லை! அப்படி இருந்தது.

சோமு: அப்படியா? என்ன படம்?

ராமு: சிக்ஸ் டிக்ரீஸ், ஹோம், அப்புறம் இன்கன்வீனியன்ட் ட்ரூத்! வாழ்ற ஒவ்வொருத்தரும் பாத்தே ஆகணும்!சோமு: என்ன சைக்கோ பாத்தா?

ராமு: அப்படியும் சொல்லலாம், மனுஷங்க எல்லாம் ஒரு விதத்துல பாத்தா சைக்கோ தானே? இந்தப் படங்களைப் பத்தி சொல்லனும்னா, நம்ம சுயநலத்துக்காக நம்ம வாழ்ற பூமியை என்ன பாடு படுத்துறோம்ன்றதை அவ்வளவு துல்லியமா சொல்றாங்க! அதாவது இந்த 3 படமும் பூமி வெப்பமடையிறதைப் பத்தியும், அதனோட விளைவுகளைப் பத்தியும் அவ்வளவு த்ரில்லிங்கா சொல்லுதுப்பா!

சோமு: ஓ! க்ளோபல் வார்மிங்கா?

ராமு: பாத்ததுல இருந்து என் வயிறும் வார்மிங் ஆயிப் போச்சு! பாத்தாலே பயம்மா இருக்கு! இத்தனை கொலைவெறியோடவா நடந்துக்குறோம்னு இருக்கு! மனுஷன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு!

சோமு: அப்படி என்ன தான் சொல்றாங்க?

ராமு: சிக்ஸ் டிக்ரீஸ் படத்துல, பூமியோட வெப்பம் பயங்கர வேகத்துல ஏறிட்டு இருக்கு, இதே வேகத்துல போனா ரொம்ப நாள் தாங்காதுன்னு சொல்லி, ஒவ்வொரு டிக்ரியா ஏறும்போது என்ன என்ன விளைவுகள் வரும்னு விஞ்ஞானிகள் கணிச்சிருக்குறதை பாத்தா பத்து அவதார் ஒன்னா பாக்குற மாதிரி இருக்கு!



சோமு: நீங்க வேற, இந்த விஞ்ஞானிகளுக்கு வேற வேலையில்லை. எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, கடைசியில ஒரு சின்ன கேப்பாசிட்டார் தப்பா போட்டதால தப்பு நடந்துருச்சுன்னு பேச்சை மாத்திருவாங்க! அந்த அளவுக்கு இது சீரியஸான விஷயமான்னு எனக்குத் தெரியலை.

ராமு: என்ன சோமு இப்படி சொல்லிட்ட, விஞ்ஞானிகளை அரசியல்வாதிங்க ரேஞ்சுக்கு பேசிட்ட, அவங்ககிட்ட டேட்டா இருக்குப்பா, அவங்க சும்மா ஒன்னும் உளறல...அன்டார்டிக்கால 40 வருஷத்துல 40% பனி உருகிடுச்சாம். இதே வேகத்துல போனா இன்னும் 40% உருகுறதுக்கு 20 வருஷமே போதும்ன்றாங்க!

சோமு: சோ வாட் சே?

ராமு: நமக்கு இனி வேட் ஐ சே!! சூரியன்ல இருந்து வர்ற கதிர்களை இந்த பனி மலைகள் எல்லாம் ஒரு கண்ணாடி மாதிரி நின்னு எதிரொலிச்சி மறுபடியும் பூமிக்கு வெளியே அனுப்பிட்டு இருக்கு. அதனால பூமியோட வெப்பம் மெயின்டைன் ஆகுது. இந்த பனி மலைகள் உருக, உருக, அதோட எதிரொலிக்கிற தன்மை குறைஞ்சு சூரியனோட கதிர்கள் வெளியே போகாம பூமியில தங்கிடும், அதனால பூமியோட வெப்பம் ஜாஸ்தியாகும். பனிமலைகள் உருகுறதால, அதையே சார்ந்து இருக்குற போலார் கரடிகள் அழிஞ்சிடும். அதோட கடல் மட்டம் அதிகமாகி நியுயார்க், பீஜிங், கல்கத்தா, கலிஃபோர்னியா போன்ற பல கடலோர நகரங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடும்! ஒரு பக்கம் பனி மலை உருகுது, நீர் மட்டம் அதிகரிக்குதுன்னு சொல்றாங்க, இன்னொரு பக்கம் இன்னொரு ஐஸ் ஏஜ் ரொம்ப தூரம் இல்லைன்னும் சொல்றாங்க! சோ, டிசைன் டிசைனா அழியிறதுக்கு பூமி ரெடியாட்டு இருக்கு! நான் சொல்றது வெறும் ட்ரைலர் தான்! மெயின் பிக்சர் பாத்தே இன்னும் அசந்து போயிடுவே! இப்போ கூட டைம் இருக்கு, முழிச்சுக்குங்க, இல்லைன்னா உங்க கொள்ளுப் பேரன், பேத்தி எல்லாம் உங்க பரம்பரையே கெட்ட வார்த்தையிலே திட்டுவான்னு சொல்றாங்க!



சோமு: என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு சுழற்சி தான்! வாழ்க்கை ஒரு வட்டம்டான்ன மாதிரி பூமி அழியிறதும், உருவாகுறதும் வரலாறு தானே! மனுஷன் இல்லைன்னாலும் பருவநிலை மாற்றங்கள் இருந்திருக்கும், கடல் கொந்தளிச்சிருக்கும், எரிமலை வெடிச்சிருக்கும். இன்னொரு ஐஸ் ஏஜ் வந்திருக்கும்! அப்படி இல்லைன்னா நம்ம டைனோசர்களை ஜுராசிக் பார்க்ல பாத்ததுக்கு பதிலா நாகேஸ்வர ராவ் பார்க்ல பாத்துருக்கலாம்!

ராமு: கண்டிப்பா, ஆனா இவ்வளவு சீக்கிரம் அது நடந்திருக்காது. இத்தனை மாற்றங்களுக்கும் அது இத்தனை வேகமா நடக்குறதுக்கும் நம்ம தான் முழுக்க முழுக்க காரணம்!! அதை மறுக்கவே முடியாது!

சோமு: நான் என்ன சொல்றேன்னா, இதுவும் ஒரு அரசியல் பிரச்சனை தான்! இப்போ ஓப்பன் ஹேகன்ல இதைப் பத்தி பேசினாங்களே, அது ஒன்னும் வேலைக்காவலையே!

ராமு: ஆமாம் ஏன், என்ன ஆச்சு?



சோமு: நீயே சொல்லு, அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் வளர்ற நாடுகளைப் பாத்து நீங்க எல்லாரும் முன்னேறின வரை போதும், உலகம் அழியுது, சுற்றுப்புறத்தை பாதுகாக்கணும், அதனால நீங்க இனிமே தொழிற்சாலைகளை உருவாக்குறதை எல்லாம் கம்மி பண்ணிக்குங்க.. இனிமே நியுக்ளியர் டெஸ்ட் பண்ணாதீங்க, அப்புறம் உலகம் அழிஞ்டும்னா மத்தவனுக்கு கோவம் வருமா இல்லையா? எவனாவது ஒத்துப்பானா? இவன் பூமிக்கு பண்ணாத நாசமா? மொதோ இவங்க திருந்தணும். இவனுங்க உலகம் பூரா கை குலுக்கிட்டே தன்னோட ஊருக்குப் போனவுடனே இன்னொரு நியுக்ளியர் டெஸ்ட் பண்றான். இதுவரைக்கும் அமேரிக்கா 200, 300 தடவை டெஸ்ட் பண்ணியிருப்பான், நம்ம 2, 3 தடவை பண்ணியிருப்போமா? ஹிரோஷிமா நாகாசாகியில போர்ல குண்டு போட்டு பாதிப்படைஞ்சாங்க! ஆனா, இவன் டெஸ்ட் பண்ணதுல அதனோட கதிரியக்கம் தாக்கி எத்தனை பேர் பாதிப்படைஞ்சிருக்காங்க தெரியுமா? அம்மணமா ஓடிச்சாம் எலி; அதுக்கு அண்டர்வேர் குடுத்துச்சாம் புலி!

ராமு: சரியா சொன்னே, புவி வெப்பமடையிறதுக்கு அமேரிக்கர்கள் தான் 30% சதவிகிதக் காரணம்னு புள்ளி விவரம் சொல்லுதே! அம்மாக்கொன்னு, அப்பாக்கொன்னு, புள்ளைக்கொன்னுன்னு பேனா கணக்கா கார் வச்சிருந்தா...முதல்ல அதை இவங்க நிறுத்தனும்! ரோட்ல எவனைப் பாத்தாலும் அவ்வளவு பெரிய கார்ல ஒரே ஒருத்தன் தான் போறான்! நம்ம ஊர்லையே கார் பூல் பண்ணுங்கன்னு நம்ம சொல்லிட்டு இருக்கோம்! அதுவுமில்லாம எனர்ஜியை வேஸ்ட் பண்றதுன்னா அதை இவங்கிட்ட தான் கத்துக்கணும்! ஒரு கடை திறந்திருக்கும் போதும் ஜெகஜோதியா இருக்கு; மூடி இருந்தாலும் அதே மாதிரி தான் இருக்கு! ஆயுத பூஜை இருந்தாலாவது அன்னைக்கு ஒரு நாளாவது எல்லா விளக்கையும் அணைச்சி பொட்டு வைப்பாங்கன்னு சொல்லலாம், அதுவும் இல்லை!! ஊருக்கு உபதேசம், எனக்கு எபதேசம் கதை தான்!

சோமு: மனுஷங்க சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு!! இயற்கையை காக்கனும்னு நாமளே சொல்றோம், ஆனா காட்டுக்குள்ள போய் ஒரு மிருகத்தோட உடம்புல ட்ரான்ஸ்மிட்டரை நம்ம தானே பொருத்துறோம்? அது எப்படி சாப்பிடுது, எப்படித் தூங்குதுன்னு டீவியில பாக்கும்போது நல்லா தான் இருக்கு! ஆனா நம்ம இயற்கையை எங்க டிஸ்டர்ப் பண்ணாம இருக்கோம்? இதோ மார்ஸ் பாட்டுக்கு நிம்மதியா சுத்திட்டு இருக்கு, அங்கே போய் தண்ணியத் தேட்றேன், பெட்ரோலைத் தேட்றேன்னு எதையாவது நோண்ட வேண்டியது! அப்புறம் குத்துதே குடையுதேன்னு சொன்னா? நான் என்ன சொல்றேன்னா, உலகம் பூரா இத்தனை பிரிவினையா இருந்து இந்த பிரச்சனையை எதிர் கொள்ள முடியாது! அத்தனை நாடுகளும் ஒன்னா நின்னு போராடனும்! அது ரொம்ப ரொம்ப கஷ்டம்! நீ சொல்றதெல்லாம் வச்சி பாக்கும்போது டைனோசர் கதி தான் நமக்கும்னு நல்லா தெரியுது!



ராமு: இது வரைக்கும் வெளியே இருந்து நம்மளை அழிக்க யாரும் வர்லை..அதான் நம்மளை நம்மளே அடிச்சிட்டு இருந்தோம்; இப்போ தான் எல்லாரையும் அழிக்க ஒன்னு வந்துருச்சே! இனிமே ஒன்னு சேர்ந்து தான் ஆவனும்! இல்லைன்னா பூமி பொளக்கப் போகுது, எல்லாம் உள்ளே போக வேண்டியது தான்! கரெக்ட் தான்! ஆனா டைனோசர் கதி நமக்கும் ஆச்சுசுன்னா அப்புறம் நமக்கு ஆறு அறிவு இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு?

சோமு: ஆறாவது அறிவு தானே? நமக்குத் தான் அது ஜாஸ்தியா இருக்கே. நம்ம மக்கள்ட உலகம் அழியுதுடான்னா போதும், உடனே எக்ஸ்ட்ரா ரெண்டு ஆட்டை அடிச்சி சாப்பிடுவான்! சாகுறதுக்கு முன்னாடி அனுபவிச்சிட்டு போவோம்பான்! அந்த சூ மேக்கர் லிவின்னு ஒன்னு வந்ததே, அப்போ உலகம் அழிஞ்சி நம்ம செத்தோமோ இல்லையோ நெறையா ஆடுங்க செத்துச்சு! நம்ம கைல ஒண்ணுமில்லை.

ராமு: அங்கே தான் நம்ம தப்பு பண்றோம். நம்ம கைல தான் எல்லாம் இருக்கு; உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்னு கூடி இதைப் பத்தி பேசி முடிவெடுக்குறதுக்குள்ள உலகம ஒரு தடவை அழிஞ்சி அதுவாவே சரியாயிடும்!! அதனால நம்மால இதுக்கு என்ன பண்ண முடியுமோ, அதை செய்யலாம். உதாரணமா வீட்டுக்கு வழக்கமான பல்ப் போடாம சீஃப்எல் பல்ப் போடலாம். பெட்டிக் கடையில போய் பாக்கு வாங்குறதுக்கு வண்டியில போகாம நடந்து போகலாம். அதனால கார்பன் எமிஷன் கம்மி ஆகும். மரத்தை நடுரோமோ இல்லையோ அதை வெட்டாம இருக்கலாம். ஹீட்டரை பொட்டு ரொம்ப சூடா குளிக்காம கொஞ்சமா சூடு பண்ணி குளிக்கலாம். எல்லாமே energy consumption தான். கொஞ்சம் பாத்து பண்ணா போதும். இப்படி நெறைய்ய இருக்கு நம்ம கையில!! இந்த மூணு படத்தையும் பாக்குறதும், அதைப் பத்தி நாலு பேருக்கு சொல்றதுமே நீ அதுக்கான தீர்வுல இறங்கிட்டேனு அர்த்தம்!! ஆன்லைன்ல தானே இருக்கே, ஹோம் படம் யு ட்யுப்ல இருக்கு. பாரு! http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU அட்டகாசமா எடுத்துருக்கான்! சரி சரி ரொம்ப நேரம் செல்லுல பேசினா க்ளோப் வார்ம் ஆயிடும்! போனை வைப்பா!

சோமு: அது சரி...

புகைப்படைப் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே! அப்புறம் கிளிக்னு ஒரு வகைப்படுத்தல் எதுக்கு? காசி ஹரி ராம் மாதிரி இருக்குற எனக்குள்ள ஒரு பீசி ஸ்ரீ ராம் ஒளிஞ்சிட்டு இருக்காருன்னு உங்களுக்குத் தெரியனுமா இல்லையா? அதான்!!

கார் வாங்கிட்டு அமெரிக்காவுல லாங் டிரைவ் போகலைன்னா உம்மாச்சி வாயிலையே குத்தாது! அதான், காமெரா கையுமா கெளம்பிட்டேன்!! இருக்கா இல்லையான்னு தெரியாத சாமி சத்தியமா இதெல்லாம் நான் க்ளிக் பண்ணதுங்க!

மாடு இருக்கு; மேடு இருக்கு; லார்டு [கிருஷ்ணர்] எங்கே?



வயலுக்கு நீர் பாய்ச்சுற மெஷின்! எத்தனை கொழாய் பாருங்க!



நம்ம ஊர்ல யானை கூட இத்தத் தண்டியில்லையேப்பா?



இது தான் பாம்பு நதி! புரியிற மாதிரி சொல்லனும்னா SNAKE RIVER!



வண்ண வண்ணக் குழந்தைகள்



வெறும் பாம்பு இல்லை, பச்சை பாம்பு!



வெயிலோடு விளையாடி...



ஷோஷோன் நீர் வீழ்ச்சி, , ட்வின் ஃபால்ஸ் [ஊர் பேருங்க] வானவில் தெரியுதோ?




என்னோட வழக்கமான க்ளிக்



நீல வானம் அதில் எத்தனை மேகம்...






இது தாங்க ஐடாஹோ! அழகா இருக்குல்ல?

இந்தப் பதிவுல நான் சொல்லப் போறது ரெண்டு விஷயம். ஒன்னு உழவர் தினம்! ரெண்டு ஒரு ஹிந்திப் படம்! இதை விட ஒரு பொறுத்தமான தலைப்பு கெடைக்குமா? சொல்லுங்க!

எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல்!! இந்த நாளில் கிராமப்புறங்களில் பஞ்சாயத்து டீவி, கேபிள் டீவி எல்லாம் வராத காலங்களில் கதிரவனை வணங்கி வழிபடுவார்கள். இப்போது சன் டீவியில் அவர்கள் பொங்கலுக்கு வெளியிடும் படங்களுக்கான டார்சர் ட்ரைலர்களையும், "என்னைய்யா ராஜா என்னை பாத்து இப்படி சொல்லிபுட்ட!" என்று குழையும் பாப்பையாவையும் பார்த்து சிறப்பாய் கொண்டாடுங்கள்! வேறு என்ன சொல்ல?!

என் பக்கம் ஒன்றும் பெரிய விஷயமில்லை. புது வருஷத்துக்கு என் வலைப்பதிவுக்கு புது சட்டை வாங்கிப் போட்டதைத் தவிர! வேலையும் கொஞ்சம் குளிரும் சற்று குறைந்திருக்கிறது! (டச் வுட்!!) சொந்தக் கதை சொத்தைக் கதை எழுதி எழுதி எனக்கே போர் அடித்து விட்டது. நாமும் ஒரு காலத்தில் கதை கவிதை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தோமே என்று என்னுடைய பழைய வலைப்பதிவுகளை எடுத்து படித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! இப்போது ஒரு எழவும் தோன்ற மாட்டேன் என்கிறது. இந்த எஸ். ராமகிருஷ்ணன் ப்ளாட்ஃபாரத்தில் நடந்ததை 10 பக்கத்துக்கு எழுதுகிறார். அவர் எழுத்தாளர்!!

சரி இன்றைய பதிவிற்கான விஷயத்திற்கு வருகிறேன். போர் அடிக்கிறதா? வயிறு வெடிக்க சிரித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதா? தமிழ் படங்களில் வேட்டைக்காரனைத் தவிர எல்லாம் பார்த்தாகிவிட்டதா? அதையும் பார்த்து விடலாமே போன்ற விபரீத எண்ணங்கள் வருகிறதா? வரலாற்றில் [அதாவது இறந்த காலத்தில்!!] உங்கள் வீட்டில் யாரும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதில்லையா? அப்படியென்றால் இந்தப் படத்தைப் பாருங்கள்!


வேலை வெட்டி இல்லாத நாலு வெட்டிப் பசங்க. ஒரு விபத்தில் அடிபட்டவரை காப்பாற்றப் போக அவர் சாகும் தருவாயில் தான் சம்பாதித்த பத்து கோடி பணத்தை கோவாவில் ஒரு இடத்தில் பத்திரமாய் புதைத்து வைத்திருப்பதாகவும் அதை அவர்களையே பங்கிட்டுக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு செத்து விடுகிறார். அவர் ஒரு பெரிய கள்ளக் கடத்தல் மன்னர். இதுக்காகவே அவர் பின்னாடியே 10 வருஷமா துரத்திட்டு இருந்த ஒரு போலீஸ்காரர். அவரோட ப்ரமூஷனே இந்தக் கேசை வச்சித் தான்! இந்தப் பசங்களுக்குத் தான் உண்மை தெரியும்னு அவருக்கு புரிஞ்சி போய் இவனுங்களை பின் தொடர்றாரு! அந்தப் பணத்தை யார் எப்படி எடுத்துக்குறாங்கன்றதை நீங்க சின்னத்திரையில் (டிவிடி தானே?) பார்த்து மகிழவும்!

ரிதேஷ் தேஷ்முக், ஹர்சத் வர்ஷி (சர்கெட்!), ஜாவேத் ஜாஃப்ரி, சஞ்சய் தத், அஸ்ரானி எல்லோரும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை எடுக்க அவர்கள் மும்பையிலிருந்து கோவா செல்வதற்குள் அதில் ஒவ்வொருத்தனும் படும் பாடு இருக்கிறதே!! சிரித்து சிரித்து கண்களில் நீர் வற்றி விடும்! இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் படத்தில் கதாநாயகியே இல்லை! இதை விட ஒரு புதுமை என்ன வேண்டியிருக்கு சொல்லுங்க! யூ ட்யூபில் முழு படமும் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். கூகுலாரை நாடுங்கள்! ஹிந்தி நன்றாய் தெரிந்தால் மிகவும் ரசிக்கலாம்! ஐ ரெக்கமண்ட்!!

அப்பாடா, ஜனவரி மாசத்துக்கு ஒரு பதிவைப் போட்டாச்சு! [எப்படி எல்லாம் ஒப்பேத்த வேண்டியிருக்கு!]

கிறுஸ்துமஸ் விடுமுறையை பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டாடினேன். இதப் பார்றா, எப்பவுமே பொலம்புற ஆளு கொண்டாடினதை பத்தி எல்லாம் சொல்றானேன்னு ஆச்சர்யமா இருக்குமே உங்களுக்கு!! எனக்கே இருக்கே...சரி கதைக்கு வருவோம்!! 2 வருஷத்துக்கு முன்னாடி நான் அமேரிக்கா வந்தப்போ பனிச்சறுக்கு முதல் முறையா விளையாடினேன். இது ரெண்டாவது தடவை...2 வருஷம் கழிச்சி விளையாடினா, அது மொதல் தடவை மாதிரி தான்!!

பனிச்சறுக்கு ஆரம்பத்தில் எல்லோருக்கும் பிடித்து விடாது. ஏனென்றால் அது விளையாட நாம் கொஞ்சம் அவஸ்தை பட வேண்டும். நான் இருக்கும் ஊரில் வீட்டை விட்டு வெளியில் வந்தால் போதும், ஒரு அழகான இளம் பெண்ணிடம் ஐ லவ் யு சொல்லி அவள் செருப்பை கழட்டி கன்னத்தில் ஒரு அரை அறைந்தால் எப்படி இருக்குமோ அதை விட மோசமாய் குளிர் அறையும்.!! [எனக்கு எதையும் சுத்தி வளைச்சி பேசத் தெரியாது பாருங்க!!! ஹிஹி] இதில் போக்கிரி விஜய் மாதிரி பல சட்டைகள் போட்டுக் கொண்டு [இந்த ஊர்ல போட்டா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு!!] அந்த பனி மலையின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி என் எடையில் பாதி எடை கொண்ட பூட்ஸ்களை மாட்டி விட்டு [அதை மாட்டி விட்டால் நிலாவில் நடப்பதைப் போலத் தான் நடக்க வேண்டும்!] என் உயரத்திற்கு காலில் இரு கட்டைகளை மாட்டி விட்டு, கையில் அதே சைசுக்கு இரு குச்சிகளை கொடுத்து இப்போ சறுக்கு பாப்போம்னா, நமக்கு பேட் வேர்ட்ஸ் வருமா? வராதா?

அவன் சொல்லிக் கொடுத்தான், தம்பி கால்ல இருக்குற ரெண்டு கட்டைகளையும் பிஸ்ஸா ஷேப்ல கொண்டு வந்தா போதும் அது நின்னுடும்னு....அது அவனுக்கு மட்டும் தான் நிக்கும்னு எனக்குத் தெரியாது...நானும் பிஸ்ஸா, பர்கர்னு என்னோட க்ரியேட்டிவிட்டி எல்லாம் யுஸ் பண்ணி நிப்பாட்டிப் பாத்தேன். ஒரு தடவை சருக்க ஆரம்பிச்சோம்னா பேதி மாதிரி அது பாட்டுக்கு நிக்காம போகும் பாருங்க...அப்புறம் நல்ல வெள்ளக்கார பொண்ணா பாத்து முட்டி மோதி நிப்பாட்ட வேண்டியது தான்! [ஸ்வபா....எவ்வளவு கஷ்டம் பாருங்க!!]

இத்தனைக்கும் கத்துக்குட்டிகளுக்காக தனியாய் ஒரு சின்ன ஸ்லோப் இருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதில் தான் கத்துக்கனும். மேலே ஏற்றி விடுவதற்கு ஒரு மெஷின். அலுங்காமல் குலுங்காமல் அந்த சின்ன ஸ்லோப்பின் மேலே சேர்ப்பித்து விடும், பிறகு சறுக்கி கீழே வர வேண்டியது தான். பெரிய மலை உச்சியில் செல்பவர்க்கு விஞ்ச், இரு சீட்டுகளுடன் அவர்களை ஏற்றிச் செல்லும், இரண்டு நிமிடத்தில் சல்லென்று சருக்கி கீழே வந்து விடுகிறார்கள். அந்த மலை உச்சியிலிருந்து அவர்கள் வருவதை பார்த்தாலே பயங்கரமாய் இருக்கிறது. இதில் பொடிசுகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அப்பாவுடன் சரிக்கு சமமாக அந்த மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கிக் கொண்டு வருகிறார்கள். பொறந்தவுடனே கத்துக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே என்று தோன்றுகிறது. இதனால் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கத் தெரியும் வரை, பனிச்சறுக்கை அவ்வளவாய் ரசிக்க முடியாது!!

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 இடியட்ஸ் பார்த்தேன். முன்னாபாய் அளவுக்கு ரசிக்க இயலவில்லை என்றாலும், பரவாயில்லை. இப்படி ஒரு கல்லூரிக் கதைக்கு அமீர்கான், மாதவன் எதற்கு என்று புரியவில்லை. அமீர்கான் இந்தப் படத்திலும் கல்வி முறையைப் பற்றி விமர்சிப்பது அலுப்புத் தட்டுகிறது. ஹிராணிக்கு தன்னுடையை பார்வையாளர்களை சந்தோஷக் கண்ணீர் விட வைப்பதில் அவ்வளவு பிரியம் என்று நினைக்கிறேன். மனிதர் எல்லா படங்களிலும் அதை பொறுப்பாய் செய்கிறார். சமீபத்தில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு நடிகர் பொமன் இரானி. எந்த காரெக்டர் என்றாலும் பிய்த்து உதறுகிறார். பேஜ் 3யில் எடிட்டர் காரெக்டரும், லகே ரஹோ முன்னாபாயில் சிங் காரெக்டரும், கோஸ்லா கா கோஸ்லாவில் வில்லன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திலும் ஒரு கடுமையான கல்லூரி முதல்வராக மிகச் சரியாய் செய்திருக்கிறார். மற்றபடி அமீர்கானுக்கு இந்தப் படமும் ஒரு வெற்றியே என்று தான் சொல்ல வேண்டும்.

சரியாய் ஒரு மாதத்திற்கு ஒரு முறை எனக்கும் ப்ளாக் இருக்கிறது என்று எனக்கு நினைவுக்கு வந்து விடுகிறது. சந்தோஷம்!! கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாடாய் உழைத்தேன். மாட்டுக்காவது ஓட்டுபவன் அசந்து விட்டால் விடுதலை தான்! ஆனால் எங்கள் நிலைமை அதை விட மோசம். எவன் இருக்கிறானோ இல்லையோ வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். நாளுக்கு மினிமம் 15, 16 மணி நேரமாவது வேலை பார்த்திருப்பேன். கண்ணாடியில் என்னை பார்க்கும் போதெல்லாம் என் மீதே பரிதாபம் வழிந்து கொட்டியது. என் பத்து வருட மென்பொருள் வாழ்க்கையில் நான் அவ்வப்போது இப்படி மாட்டிக் கொள்வதுண்டு! என்று சொல்வதை விட, அவ்வப்போது தப்பித்துக் கொள்வதுண்டு என்று சொன்னால் சரியாய் இருக்கும். பத்து வருடங்களில் கிட்டத்தட்ட 8 வருடங்களாவது இப்படி பேய் வேலை பார்த்திருக்கிறேன். அது எப்படி என்னை பார்த்ததும் இவர்களுக்குப் புரிகிறது என்று தெரியவில்லை. வடிவேலு சொல்வது போல்
"ஒரே ஒரு தடவை தான் பார்த்தாங்க, கைய கால அமுக்கச் சொல்லிட்டாங்க!"
"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா, இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க!"

ம்ம்...நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் தான் நடிக்கப் போறென்னு தெரியலை. பாக்கலாம்...

அமேரிக்காவில் முடமாய் வந்திறங்கிய எனக்கு இரண்டு வாரத்திற்கு முன் தான் கால்கள் கிடைத்தன. [என்ன புரியலையா? என்னை ஒரு எலக்கிய வாதியா ஆக விட மாட்டேங்களே...]கார் இல்லாததைத் தான் காலில்லாததாகச் சொன்னேன். அமேரிக்காவில் சில பெரு நகரங்களைத் தவிர்த்துப் பார்த்தால் காரில்லாதவன் காலில்லாதவன் தான்!! இங்கு எந்த இந்தியனை பார்த்தாலும் ஹோண்டா, டொயோட்டா தான் வாங்குகிறார்கள்! இதை தான் நம் ஊரிலேயே வாங்கலாமே என்று நினைத்து நிசான் சென்ட்ரா வாங்கினேன். அங்கிருக்கும் கடனை அடைக்க இங்கு வந்தால் இங்கு ஒரு புது கடன் தொடங்குகிறது! ஒரு வழியாய் தத்தி தத்தி நடக்கத் தொடங்கி விட்டேன். [கார் வாங்கிட்டு ஏன் நடக்கிறீங்கன்னெல்லாம் கேக்கப் படாது!] இங்கு கார் ஓட்டுவது பெரிய கம்பு சூத்திரம் இல்லை. பொம்மை கார் ஓட்டுவது போலத் தான். ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் வண்டி நகரும், ப்ரேக்கை அழுத்தினால் வண்டி நிற்கும். அவ்வளவு தான்! கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, க்ளட்ச் மிதிக்க வேண்டிய அவசியமில்லை..கெட்ட வார்த்தைகள் தெரிய வேண்டிய அவசியமில்லை. [..தா! வீட்ல சொல்டு வந்தியாடா!!]ஏனென்றால் நீங்கள் போகும் பாதையில் திடுதிப்பென்று எவனும் வர மாட்டான். இன்னொரு ஆச்சர்யம், லெப்ஃட் இன்டிகேட்டர் போட்டால் லெஃப்ட் தான் திரும்புவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ஆனால் நீங்கள் வண்டி ஓட்டும் போது எவனாவது பின்னால் ஹாரன் அடித்தால் "யு ஸ்டுப்பிட் ஆஃப் தி நான்சன்ஸ் ஆஃப் தி இடியட் என்று அர்த்தம்!" அதாவது அவசியமில்லாமல் எவனும் ஹாரனே அடிக்க மாட்டான்! [ஆமா, இதெல்லாம் நான் தான் மொதல்ல சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன்! உங்களுக்குத் தெரியாதா என்ன?]

நேற்று அவதார் பார்த்தேன். டைட்டானிக் வந்த சமயத்தில் டிஸ்கவரி சானலில் ஒரு முறை அதன் மேக்கிங் பார்த்தேன். படத்தை விட அது பிரம்மாண்டமாய் இருந்தது! எத்தனை ஆட்கள், எத்தனை வயர்கள், எத்தனை மெஷின்கள், எத்தனை மெனக்கெடல்...இனிமேல் கேமரூனே நினைத்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமாய் ஒரு படத்தை எடுக்க முடியாது என்று நினைத்தேன். அது நேற்று அவதார் பார்த்த போது சுக்கு நூறாய் உடைந்து போனது!! டைட்டானிக் எல்லாம் எனக்கு சப்பை மேட்டர் என்பது போல் இருக்கிறது இந்தப் படம்! அதிலும் ஐமேக்ஸ் 3டியில் பார்த்தால் சொல்லவா வேண்டும். "இதை டைட்டானிக் படம் வந்தவுடன் எழுதி விட்டேன்; இந்தப்படத்தை எடுப்பதற்கு அப்போதிருந்த தொழில் நுட்பம் பத்தவில்லை!" என்று மனிதர் கூலாய் சொல்கிறார். அடப்பாவிகளா...இப்படியா கற்பனைக் குதிரையை ஓட்றது!! ம்ம்..இந்தப் படம் இன்னொரு ஒரு பத்து வருடத்திற்குத் தாங்கும்! அதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாரோ!!!

அமேரிக்காவில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது. 24, 25 இரு நாட்களும், 31, 1 இரு நாட்களும் அலுவலகம் விடுமுறை! சனி ஞாயிறையும் சேர்த்தால் 4, 4 நாட்கள். ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும். பனிச்சருக்கு விளையாட வேண்டும்! இதற்குள் நான் எழுதிய ப்ரோக்ராமில் பக் வராமல் இருக்க வேண்டும்!
கர்த்தர் என்னை இரட்சிப்பாராக!!
வருகிற 16ம் தேதியுடன் (அதாவது நாளையோடு!) நான் முதன் முதலாய் அழுது, முன் பின் தெரியாத நர்ஸ்கள் எல்லாம் என்னை பப்பி ஷேமாய் பார்த்து முப்பத்தியோரு வருடம் ஆகிறது. ஹிஹி பிறந்த நாளை நான் இப்படி தான் சொல்றது!! ஹிஹி!! நர்சரி பள்ளியில் படித்த போது காலையில் எழுந்து குளித்து பக்கத்து பிள்ளையார் கோயிலுக்கு போய் உக்கி போட்டு [பிள்ளையார்: அட, அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா?] ஓடி வந்து புது ட்ரஸ் போட்டுக் கொண்டு கேரமில்க் மிட்டாய்களை ஒரு டப்பாவுக்குள் போட்டுக் கொண்டு எங்கள் காம்பவுண்டில் ஒவ்வொரு வீடாய் ஏறி மிட்டாய் கொடுத்தது ஞாபகம் வருகிறது. சிலர் ஒரு ரூபாய் கொடுப்பார்கள். சிலர் ஐம்பது பைசா! எனக்குத் தெரிந்து பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியதால் பிறந்த ஒரே பயன் அன்றைக்கு பார்த்து டீச்சர் எதையோ கேட்டு எல்லோரையும் அடிக்க, என்னை மட்டும் பர்த்டே பையன் என்று விட்டு விட்டார்கள். அதைத் தவிர ஒன்றுமில்லை!!

கல்கி படத்தில் ஸ்ருதி (எங்கேப்பா இந்த பொண்ணு?) ரகுமானை அறைந்து விட்டு ஒரு கேள்வி கேட்பார். யாருக்குடா பொறந்த நாள் வர்ல? நாய் பன்னிக்கு கூடத் தான் பொறந்த நாள் வருது என்று! பொறந்த நாள் கொண்டாட்றானாம், பொறந்த நாள் என்று! அது தான் ஞாபகம் வருகிறது. அந்தப் படத்தை அப்போ பாத்தப்போ ஆமா, இல்லை கரெக்ட் தான்! என்று தோன்றியது.

இத்தனை வருடம் இந்த உலகில் குப்பை கொட்டியதில் ஒன்றும் பெரிதாய் சாதிக்கவில்லை. அரைகுறை கல்வி அறிவை வைத்துக் கொண்டு ஐ. டி. யின் தயவால் சில லட்சங்களை சம்பாதித்துக் கொண்டு, ஒரு சின்ன ஃப்ளாட் கட்டி கொண்டு, எல்லா இடங்களிலும் வாடகை ஏற்றி விட்ட கூட்டத்தைச் சேர்ந்தவன் என்ற பாவத்தை சுமந்து கொண்டு, அமேரிக்காவில் உயர் ரக குப்பை கொட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பார்க் ஸ்டேஷனில் மின்சார ரயில் நின்றதும் திபு திபுவென்று ஓடும் கூட்டங்களில் ஓடுபவனுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நான் ஒரு காமன் மேன்! அதுவே எரிச்சலாய் இருக்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் இதற்க்கா பிறந்தேன் என்ற ஒரு கேள்வி மனதுக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஃப்ளாட்டுக்கு லோன் கட்டனுமே என்ற கவலையில் அது எங்கோ மறைந்து விடுகிறது! முதல்வன் படத்தில் மணிவண்ணன் சொல்வது போல் காலம் பூரா வேலை பாத்து ஒரு சின்ன வீட்டு கட்டி ஹிண்டு பேப்பர் படிப்பதுடன் என் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று பயமாய் தான் இருக்கிறது!

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார்! நான் கண்டு கொண்டே இருக்கிறேன்; வந்ததற்கு நீங்கள், அது நினைவாகட்டும் என்று வாழ்த்தி விட்டாவது போங்களேன்!!

மக்களே செளக்கியமா? மாசத்துல ஒரு தடவை வந்து போறதுக்கு உனக்கு எதுக்கு ப்ளாக் கருமாந்திரம் எல்லாம்னு கேக்குறது புரியுது! என்ன பண்றது, வேலை அப்படி! அமேரிக்கா வந்து ஒருத்தன் வீடு பாத்து, காரோட்ட கத்துக்கிட்டு, சுத்தி முத்தி நண்பர்களை தேடிப் புடிச்சி சேத்துகிட்டு, நாலு இடம் சுத்தி பாத்துட்டு.. அப்பாடா! இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கு குறைஞ்சது ஆறு மாசம் ஆவும்! எனக்கும் அதே கதி தான்! அப்பாடா ல அப்பா நான் சொல்ல என் மேலிடம் மிச்ச டாவை சொல்லி நீ ரிச்மண்ட்ல குப்பை கொட்டினது போதும், கெளம்பு பாய்ஸி, ஐடாஹோக்குன்னு (ஐய்யய்யோ!) சொல்லிடுச்சு! ரிச்மண்ட்ல இருந்தே நான் ஆணி புடுங்குறேனேன்னு சொன்னதுக்கு, ஐடாஹோல இருக்குற ஆணியை ரிச்மண்ட்ல இருந்து எப்படி புடுங்குவே, ஏதோ ரிச்மண்ட்ல பொறந்து வளந்த மாதிரி பேசுறேன்னு கெட்ட வார்த்தையிலேயே திட்டினாங்க! போறாளே பொன்னுத்தாயி பொலபொல வென்று கண்ணீர் விட்டு பாட்டை பேக்ரவுண்ட்ல போட்டு விட்டு தூக்க முடியாத பல பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போட்டு வந்துட்டோம்! இதுல உங்களுக்கு டெய்லி ஒரு ப்ளாக் எழுதனுமாக்கும்? அட போங்கப்பா! ஆமா, நானே பேசிட்டு இருக்கேனே, என்னடா இவன் மாசத்துக்கு ஒன்னு எழுதுறான்னு குறைபட்டுக்குற ரெண்டு பேராவது இருக்கீங்களா? இல்ல நானா தான் பெனாத்திட்டு இருக்கேனா? எங்கே, என் ப்ளாக் புடிக்கும்ன்றவங்க கையைத் தூக்குங்க, சரி நீ எழுதுனா என்ன எக்கேடு கெட்டுப் போனா என்னன்றவங்க கையத் தூக்குங்க? சரி, ரெண்டுக்கும் தூக்காதவங்க இப்போ கையைத் தூக்குங்க! தெரியுமே, அங்கேயும் ஒருத்தன் இருப்பானே!

பாய்ஸில இருக்குற சனம் யாராவது மாசத்துக்கு ஒரு தடவை ஒரு இலக்கியப் படைப்பை அளிக்கும் (அதாங்க மொக்கை!!) என் ப்ளாக்கை படிச்சீங்கன்னா இந்த ஊர்ல எப்படி நடந்துக்கனும், என்ன எது வாங்கனும், வால் மார்ட் எங்கே, இந்தியன் ஸ்டோர் எங்கேன்னெல்லாம் கத்துக் கொடுக்க வந்துருங்க!! இது இங்கே தானே இருக்கப் போவுது, மெல்ல பாத்துக்கலாம்னு மட்டும் நெனைக்காதீங்க! அமேரிக்காவுல நெறைய எடத்துல இருக்கு நான் புடுங்க வேண்டிய ஆணி!


உன்னை போல் ஒருவன் பார்த்தேன். கமல் இந்தப் படத்தை எடுக்கிறார் என்று கேள்விப்பட்ட போதே எனக்கு அது சிலாக்கியமாய் படவில்லை. ஜனநாயக நாடு இது. யார் என்ன செய்ய முடியும்? இதோ எடுத்து விட்டார். நானும் பார்த்து விட்டேன். யார் என்ன செய்ய முடியும்?

படத்தின் நிறை

ஸ்ருதியின் இசை. தமிழ் சினிமாவில் பாடல்களை முதலில் தூக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்திற்கு இத்தனை பாட்டு வைத்திருக்கிறாரே என்று கமலின் மீது எரிச்சலாய் வந்தது. நல்ல வேலை படத்தில் பாடல்கள் இல்லை. "வானம் எல்லை" என்ற பாடல் அற்புதமாய் இருக்கிறது. ஸ்ருதியின் குரலில் ஏதோ ஒரு அற்புதம். கேட்டு முடிந்த பிறகும் காதுகளில் ரீங்கரித்து கொண்டே இருக்கிறது.



படத்தின் குறைகள்

இந்தப் படம் முதலில் ஹிந்தியில் வந்தது!

காமன் மேன் வேடத்தில் கமல் நடித்தது! அதிலும் அப்படி ஒரு ஸ்டைலிஷான தாடி வேறு. சத்யா தாடியாவது வைத்திருக்கலாம். ஒரே சேரில் உட்கார்ந்து கொண்டு என்ன அற்புதமான நடிப்பு என்று சொல்பவர்கள் ஹிந்தியில் இதை பார்க்க வேண்டும். ஊர்ல இத்தனை இடத்தில பாம் வச்சிருக்கேன் என்று கமல் சொல்வதில் "எப்புடி, நான் யார் தெரியுமா, கண்ல வெரலை விட்டு ஆட்ரோம் ல" என்ற ஒரு ஆணவத் தொனி தெரிகிறது. அது ஹிந்தியில் தெரியவில்லை. அவர் ஒரு காமன் மேன் ஆகவே வாழ்ந்திருந்தார். கமலுக்கு எப்போதும் நஸ்ருதின் ஷா மீது ஒரு பொறாமை. மனுஷன் என்னமா நடிக்கிறார் என்று அவரே சிலாகிக்கும் பேட்டியை பார்த்திருக்கிறேன். அதற்கான சரியான நேரம் பார்த்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார், அதாவது சிவாஜி ஒன்பது வேஷம் போட்டார், நம்ம பத்து போட்ருவோம் என்பது போல் தான் இதுவும். புதிய பாதை படத்தில் பார்த்தீபன் கமலைத் தான் நடிக்க சொன்னாராம். நான் இதை செய்தால் கமல் என்ன அருமையாய் நடிச்சிருக்கார் என்று சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். நீங்கள் செய்தால் தான் இயல்பாய் இருக்கும் என்று சொல்லி கமல் ஒதுங்கினாராம். அதே போல் இந்தப் படத்திலும் இவர் ஒதுங்கி இருக்கலாம்.

காமன் மேன் பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் தமிழில் யார் என்று யோசிக்கும் போது எனக்குத் தோன்றுவது டெல்லி கணேஷ் தான்! படம் ஓடாது அது வேறு விஷயம்.அனால் அவர் இதற்கு அற்புதமாய் பொருந்துவார், நன்றாகவே நடிப்பார் இதில் சந்தேகமே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. கோவை தமிழ் பேச சரளாவை ஜோடி சேர்த்துக் கொண்டது போல் இதையும் கமல் செய்திருக்கலாம். சரி வியாபாரத்திற்காக வேண்டுமென்றால் கமலே கமிஷினராக செய்திருக்கலாம். கமிஷினர் வேடத்திற்கு மோகன்லாலை விட மம்முட்டியோ, பிரகாஷ் ராஜோ தான் ஏன் சாய்ஸ். மோகன்லாலை பின்னாலிருந்து பார்த்தால் அவரின் கன்னம் தெரிகிறது. நடிப்பு அவ்வளவாய் தெரியவில்லை. அனுபம் கேரிடம் தெரிந்த ஒரு பதற்றம், மிடுக்கு, சீரியஸ்னஸ் மிஸ்ஸிங் மாதிரி தான் எனக்குத் தோன்றியது. ஹிந்தியில் அந்த வேடத்தை பார்க்கும் போது, அந்தப் பதவியில் இருப்பவர் எவ்வளவு வேகமாக சரியான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது. அந்த அனுபவம் எல்லாம் இதில் கிடைக்கவில்லை. ஒரு வேலை ஹிந்தியில் பார்க்காமல் இருந்திருந்தால் அந்த அனுபவம் கிடைத்திருக்கலாமோ என்னமோ!

படத்தில் இயக்கம் (அதான் கமலை திட்டியாச்சே!), ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு பற்றியெல்லாம் நல்ல தியேட்டரில் பார்த்தவர்கள் போட்டிருப்பார்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவு விஷயம் தெரியாது.

மொத்தத்தில் உன்னை போல் ஒருவன் ஒரிஜினல் போல் இல்லை!



குயிக் கன் பார்த்தேன். கொஞ்சம் ஸ்லோ கன் தான். கவ்வைக் காப்பாற்றுவது கவ்பாயின் கடமை லைன் நன்றாய் இருந்தாலும் நான் வெஜ் தோசை எல்லாம் போரடித்தது. வேறு ஏதாவது யோசித்திருக்கலாம். அத்தனை கலர் உடையிலும் மனிதர் எத்தனை சீரியசாய் இருக்கிறார். தென்னை மரத்திலிருந்து எல்லோரும் முருகனைத் தாக்க இவரும் சரமாரியாய் சுடுகிறார். குண்டு தீர்ந்தும் ஆட்கள் மேலே வந்து பாய்ந்து கொண்டே இருக்க, வெறுத்துப் போனவர், "கீழே இறங்குங்கடா கொரங்குகளா!" என்பது சூப்பர்! பம்பாயில் அவர் ராஜு சுந்தரத்திடம் ஒத்தைக்கு ஒத்தை இறங்கும் போது, ஏன்டா உனக்கு வேற இடமே கிடைக்கலையா என்று அவர் சொன்னவுடன் காமெரா மெல்ல ஜூம் அவுட் ஆக பம்பாயின் பரபரப்பான சாலை ஒன்றில் ட்ராஃபிக்கில், இருவரும் ஒரு காரின் மீது ஏறி நிற்கும் இடம் க்ளாஸ்! விருமாண்டி பேய்க் காமனுக்கு இந்தப் படத்தில் தான் யுனிஃபார்மிலிருந்து விடை கிடைத்திருக்கிறது. அதற்காகவே அவர் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. குயிக் கன் முருகன், ரைஸ் ப்ளேட் ரெட்டி, மேங்கோ டாலி பெயர்கள் அத்தனையும் க்ளாஸ்! ரம்பாவா இது? சுந்தர புருஷன் 2 எடுக்கலாம் போல இருக்கிறதே. அந்தக் கூர்மையான அறிவு இருக்கே...



ஈரம் பார்த்தேன். ஈரமே இல்லாதவர்களை ஈரமே கொல்கிறது என்ற லைன் நன்றாகவே உள்ளது. அது என்னமோ ஷங்கர் தயாரிப்பு என்றால் நம் மக்கள் ஒன்றுக்கு பத்தாக்கி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. பல கேடு கேட்ட படங்களுக்கு பரவாயில்லை தான். அட இது நல்லா இருக்கே என்று ஆச்சர்யப்படும்படி ஒன்றுமில்லை என்று தான் தோன்றியது.

சரி படங்களை விடுங்கள். என் விஷயத்திற்கு வருகிறேன். கடந்த ஒரு மாதத்தில் ஒன்று கண்டு பிடித்திருக்கிறேன்! ரைட்டர் பிளாக் ரைட்டருக்கு மட்டும் வருவதில்லை. யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம்! கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இப்படி ஒரு மொக்கையை போட்டிருக்கிறேனே (நான் அப்படித் தான் சொல்வேன், நீங்க இதுவா மொக்கை உங்களுக்கு தன்னடக்கம் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும், சரியா?) அப்போ என் கண்டுபிடிப்பு சரி தானே? என்ன நான் சொல்றது?

அப்புறம்அவிய்ங்க ராசா நம்ம தோஸ்த் தான்! வலைச்சரத்துல ஒரு வாரத்துக்கு வாத்தியாரா இருந்துட்டு வாலண்டரி சஷ்பன்ஷன் வாங்கிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த ஒரு வாரத்தில் பல நல்ல மாணவர்களை அவர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதில் அடியேனும் ஒன்று! என்னை பாத்து வலைப்பூவை ஆரம்பிச்சதா சொல்லியிருந்தார்! இன்னுமா நம்மளை நம்புறாய்ங்க என்று தான் தோன்றியது. ஏதோ நல்லா இருந்தா சரி!