நான் வலையுலகில் என் வலது கையை எடுத்து எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் அகி விட்டன! எதுவுமே வெகு சீக்கிரத்தில் சலித்து விடும் எனக்கு இது ஒரு ஆனந்தம் கலந்த ஆச்சர்யத்தை தருகிறது! ஏனென்றால் எத்தனையோ உருப்படியான காரியங்களை [அவரவர் மனதிற்கு எது சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறதோ!] எனக்குள் நானே சலித்துக் கொண்டு பல முறை கை விட்டிருக்கிறேன்! அத்தகைய ஒரு உருப்படியான காரியத்தை இவ்வளவு நாட்கள் என்னால் தொடர்ந்து செய்ய முடிந்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சி!

வலையுலகிற்கும் எனக்குமான உறவு ஒரு தாமரை இலை நீர் போல் ஆரம்பத்திலிருந்தே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது! நான் வலையுலகில் இருக்கிறேனே தவிர இங்கு நடக்கும் எந்த விதமான விவாதங்களிலும், சம்பவங்களிலும், சம்பிரதாய பேச்சுக்களிலும், ஏச்சுக்களிலும் கலந்து கொள்வதில்லை! என் மனதை மிகவும் பாதித்தாலன்றி எந்த வலைப்பதிவுக்கும் சென்று பின்னூட்ட முதலீடு இடுவதில்லை! [முதல் போட்டால் தானே லாபம் கிடைக்கும்!] அதனால் தான் "இன்று நான் பல் விளக்கவில்லை" என்பது மாதிரியான பதிவிற்கு 105 பின்னூட்டங்கள் வருவதைப் போல் என் பதிவுகளுக்கு அத்தனை பின்னூட்டங்கள் வருவதில்லை! அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை! [டோனைப் பார்த்தா கவலைப்படாத மாதிரி தெரியலையே!]

நிறைய வலைபதிவுகளில் பார்த்திருக்கிறேன்! முதல் பின்னூட்டம் "இன்று நான் தான் ஃபஸ்ட்", "நான் வந்துட்டேன்", "அப்பாடா மொதோ கமெண்ட் போட்டாச்சு" என்று நிறைய பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அது என்ன விளையாட்டு என்று எனக்கு இன்றும் விளங்கவில்லை! அப்படி என்ன சொல்லி வைத்துக் கொண்டு பின்னூட்டமிடுவது என்று எனக்கு புரியவில்லை! அதே போல் போலி டோண்டு யாரை திட்டினார், அனானி கமெண்ட் போடுவது யார்? இட்லி வடை ஆணா பெண்ணா என்பது போன்ற வலையுலக சரித்திர நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதே இல்லை! யார் வம்பு தும்புக்கும் போகாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் ரொம்பவே சமத்து பையனாக நானுன்டு என் வலைப்பூ உண்டு என்று இருந்திருக்கிறேன்! ஒருவேளை அதனால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க முடிந்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது!

இந்த மூன்றரை வருடங்களில் நான் பதித்த வலைகளின் எண்ணிக்கை வெறும் 132 மட்டுமே! இதில் பாதியாவது தேர்ந்த பதிவாய் இருந்தால் சந்தோஷம். சில வலையுலக நண்பர்கள் என் பதிவுகள் படித்து ரசித்து பல சங்கிலிப் பதிவிற்கு என்னை கோர்த்து விட்டிருக்கிறார்கள்! அது பெரும்பாலும் சுயத்தைப் பற்றிய பதிவாகவே இருக்கும். அது எழுத அமரும் போதெல்லாம் மனதுக்குள் கவுண்டமணியின் குரல் "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா" என்று ஒலிக்கும். என் வலைப்பதிவு என்பதால் எனக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் என்று ஒரு கேள்வி மனதுக்குள் எழும். அத்தோடு அந்தப் பதிவின் கதை முடிந்து போகும். என்னைப் பொறுத்த வரை ஊர் உலகத்திலுள்ள எதைப் பற்றி வேண்டுமென்றாலும் வெகு சுலபமாய் ஒரு மொக்கை பதிவை எழுதிவிடலாம். ஆனால் உன்னை பற்றி நான்கு வரி சொல் என்றால் போதும்....ஐய்யோ சாமி, மண்டை காய்ந்து விடுகிறது....அதனால் தான் கூடியமட்டும் என் சுய புராணங்களை விட்டு என் மனதை பாதித்த விஷயங்களில் என் பார்வையை செலுத்தி ஒரு நல்ல வலைபதிவராய் என்னை முன்னிருத்த ஆசைப்படுகிறேன்! [என்ன மெசேஜா?]

யாழ்.நெட் காலத்திலிருந்து நட்சத்திர வாரத்தை அறிந்திருந்தாலும், இப்பொது தான் எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன், "என்னை எல்லோரும் சகலகலா வல்லவனாக சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டு போகட்டும், மார்க்கெட்டுக்கு உதவும்...நான் சகலகலா மாணவன் என்பது தான் உண்மை!" என்று சொன்னதைப் போல் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த அந்தஸ்து கிடைத்தாலும் சரி இப்போதாவது கிடைத்ததே, மார்க்கெட்டுக்கு உதவும் என்று நினைத்து, சகலகலா மாணவனாக முன்னேறுகிறேன்....வழக்கம்போல் உங்களின் ஆசிர்வாதங்களுடன்!
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜன் வந்தேனே...வந்தேனய்யா....

வந்தனம் தந்தேனைய்யா!
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
சாமி...
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
தத்தோம் தரிகிட..தித்தோம் திரிகிட தா!!

பெரியோர்களே! சபையோர்களே...

இன்று தொடங்கும் என் நட்சத்திர வாரத்திலே சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும் குற்றத்தை மறந்து குணத்தை மட்டும் கொள்ளும்படியாக தாழ்மையுடன் தண்டியிட்டும் மண்டியிட்டும் கேட்டுக் கொள்கிறேன்!!

டேய் மூடா சோடா!!

க்ளுக் க்ளக்....

ஆ! வர சொல்லு வர சொல்லு....
சமீபத்தில் விகடனில் வந்த சாப்ளீனின் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் உந்துதலால் சாப்ளீனின் படங்களாய் பார்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கும் டிவிடி கடையில் ஆரம்ப காலங்களில் அவர் இயக்கி நடித்த குறும்படங்களே கிடைத்தன. வெகு காலமாய் சாப்ளீன் ஹிட்லரை கேலி செய்து நடித்த படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது சமீபத்தில் நிறைவேறியது...

"க்ரேட் டிக்டேட்டர்" - இது சாப்ளீன் பேசிய முதல் படம்.

இந்தப் படத்தில் ஒரு யூத சவரத் தொழிலாளியாகவும், ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியாகவும் இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் என்னமாய் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவர் வழக்கமாய் நடிக்கும் கேலிச் சித்திரம் அல்ல...சர்வாதிகாரிகளையும், போலியான மனித வாழ்வையும் அத்தனை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு மேல் நான் படத்தைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னால் சொல்லவும் முடியாது...இந்தப் படத்தின் இறுதியில் சாப்ளீன் தன்னுடைய கதாபாத்திரதிலிருந்து விலகி அசல் சாப்ளீனாகவே மாறி மனிதம் மறந்து போன மனிதர்களை தன் பேச்சு வன்மையால் விளாசித் தள்ளுகிறார்.அந்த உரையை தான் கீழே திரையிட்டுருக்கிறேன்!



பிற்காலத்தில் அந்த சொற்பொழிவின் உன்னதத்தை உணர்ந்து அமேரிக்க அரசாங்கமே அதை வானொலியில் வாசிக்குமாறு அவரை பணித்தது. நியுயார்க் டைம்ஸில் அந்த ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக "க்ரேட் டிக்டேட்டர்" தேர்வு பெற்றது.

எனக்கு இரண்டு வருத்தங்கள்!

1. மார்டின் லூதர் கிங் ஆற்றிய பிரபலமான சொற்பொழிவு "ஐ ஹேவ் அ ட்ரீமை" போல் ஏன் இது அத்தனை பிரபலம் அடையவில்லை!
2. பேசும் படங்கள் இன்னும் சற்று முன்னதாகவே வந்திருக்கலாம்!
யாரும் பார்க்காத
வேளையில் - அதைப் பற்றி
எந்தக் கவலையுமில்லாமல்
மொட்டு ஒன்று
மெல்ல பூக்கிறது!

நின்ற நிலை கடந்து
அமர்ந்த நிலை அற்று
தவழ்ந்து வரவும் தெம்பின்றி
தனியே - பசியில்
சாகிறது ஒரு ஜீவன்

ஜாதியின் பெயராலோ
மதத்தின் பெயராலோ
ஒரு அழகிய காதலை
தீயிட்டுக் கொளுத்துகிறது
ஒரு கூட்டம்

எங்கோ ஒரு இடத்தில்
யாரோ ஒரு பெண்ணை வன்புணர
துரத்திக் கொண்டு
ஓடுகிறது ஒரு கூட்டம்!
அவளின் மரண ஓலம்
செவிட்டில் அறைகிறது!!

முந்தானையை பிடித்துக் கதறும்
குழந்தையின் கையை விலக்கிவிட்டு
சத்தமில்லாமல் அழுது கொண்டே
போகிறாள் ஒரு தாய்

கிழக்கே இரவை நோக்கியும்
மேற்கே பகலை நோக்கியும்
நாட்கள் உருண்டோடுகின்றன

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை ஒன்று - சிறிதாக
ஒரு புன்னகை பூக்கிறது...
பாண்டி அந்த போலீஸ் ஸ்டேஷனையே வைத்த கண் வாங்காமல் ஒரு பீலிங்கோடு பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கேஸை கூட உருப்படியா பிடிக்காததால் வேலைய விட்டே தூக்கிட்டாங்க! அதே ஸ்டேஷனில் அவர் ராஜ நடை போட்டது அவர் கண் முன் விரிகிறது...

டக் டக் என்று கம்பீரமான ஒரு பூட்ஸ் சத்தம் கேட்கிறது...ஒரு கருப்பு கூளிங் கிளாஸில் ஸ்டேஷனுக்குள் நுழைகிறார். வாசல் படி
தடுக்கி கீழே விழுகிறார்.

பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] யு, ஸ்டுப்பிட் அண்ட் நான்சன்ஸ் ஆல்சோ...ஸ்டேஷனை சுத்தமா மெயிண்டைன் பண்ண வேணாம்?
இருளடைஞ்சி போயிருக்கு! கண்ணே தெரியலையே...
கான்: சார் நீங்க கூளிங் க்ளாஸை கழட்டினா...
பாண்டி: ஓ, மை சீ...[கழட்டிக்கொண்டே] ஆல் ரைட் ஆல் ரைட்...[வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது!]
கான்: சார், இவர் தான் நம்ம ஸ்டேஷன்ல புதுசா சேந்துருக்குற கான்ஸ்டபிள்..பேரு சுப்பையா சார்!பாண்டி: சுப்பையாவோ, குப்பைய்யாவோ, நான் கடமை கண்ணியம் காக்கிச்சட்டைன்னு வாழ்றவன்...எனக்கு கடமை தான் முக்கியம்!
சுப்: சார் உங்களைப் பத்தி எனக்கு நெறைய டவுட் இருக்கு சார்..கொஞ்சம் க்ளியர் பண்றீங்களா...
பாண்டி: கோ கோ...[சுப்பையா போகிறார், அவரை அழைத்து...]கேளுன்னு இங்கிலீஷ்ல சொன்னேன்..இங்கிலீஷ் தெரியுமா?
[சுப் முறைக்கிறார். பாண்டி முழிக்கிறார்!]
சுப்: அது கோ அஹெட்டு...
பாண்டி: [மனதுக்குள்] ஆஹா, நம்மகிட்ட வர்றவங்க மட்டும் டான்பாஸ்கோ ஸ்கூல்ல படிச்ச மாதிரி டான் டான்னு இங்கிலீஷ் பேசுறாங்களே...ஒரு வேளை என்கிட்ட அனுப்புறதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல ட்ரயின் பண்ணி அனுப்புறாங்களோ?
சுப்: சார்....உங்க நடை உடை தோரணை எல்லாம் பாக்கும்போது ஒரே மிரட்டலா இருக்கு..ஆனா நீங்க ஏன் சார் இந்த சிரிப்பு போலீஸ் மாதிரி சின்னதா மீசை வச்சுருக்கீங்க...
பாண்டி: [சிரிப்பு போலீஸா, இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களா...]குட் கொஸ்டீன்! நானும் ஒரு காலத்துல வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி தான் மீசை வச்சிருந்தேன்! ஆனா ஒரு சங்கிலித் திருடனை துரத்திப் புடிக்கும் போது நான் ஒரு எடத்துல எம்பிக் குதிச்சதுல ஒரு பக்கத்து மீசை என் கண்ணையே குத்திருச்சு! அதனால அன்னைக்கு என்னால அந்தத் திருடனை புடிக்க முடியலை...என் மீசையாலயே என்னோட காக்கிச்சட்டைக்கு களங்கம் வரனுமான்னு யோசிச்சேன்! பாக்க சிரிப்புப் போலீஸா இருந்தாலும், உள்ளே
நெருப்பு போலிஸா இருப்போம்னு முடிவு பண்ணேன்! வெளியே நான் சாப்ளீனா இருந்தாலும் எனக்கு உள்ள ஒரு ஹிட்லர் மல்லாக்கப் படுத்து தூங்கிகிட்டு இருக்கான்றதை நீ மறந்துராதே...
சுப்: சூப்பர் சார்...வெளியே சிரிப்பு போலீஸ்; உள்ளே நெருப்பு போலீஸ்! அள்ளிட்டீங்க சார்...
பாண்டி: யோவ், இது என்ன பெருமாள் கோயிலா அள்றதுக்கு, நெக்ஸ்ட் கொஸ்டீனை ஐ சே!
சுப்: சார் இதுவரைக்கும் நான் வேலை பாத்த ஸ்டேஷன்ல எல்லாம் ரவுடிங்களுக்கு தான் ரவுடி ரங்கன், செயின் ஜெயபால், சைக்கிள் சூசை, ஜேப்படி ஜெகதீஸ்னு பேரு இருக்கும். உங்களுக்கு ஏன் சார் டூமில் பாண்டின்னு பேர் வந்தது...
பாண்டி: கம் டு த பாயிண்ட்! [மனதுக்குள்: எதுக்கு வம்பு தமிழ்லையே பேசுவோம்!] நான் நெனச்ச கேள்விக்கு வந்துட்டே...சொல்றேன்
கேளு...அது 1999ம் வருஷம். அப்போ நான் ஏட்டா இருந்தேன்...
சுப்: அப்பவுமா?
பாண்டி: [முறைத்து விட்டு] காமன் சென்ஸ்! கதைய கேளு மேன். எங்களுக்கு ஒரு பயங்கர கொள்ளைக் கூட்டத்தைப் பத்தின துப்பு கெடச்சது. வீரத்துக்கும் விவேகத்துக்கும் பேர் போன என்னை நம்பி ஒரே ஒரு கான்ஸ்டபிளோட அந்தப் பெரிய கூட்டத்தை பிடிக்க அனுப்சாங்க! அவங்க எல்லாரும் அந்த பாழடஞ்ச கட்டடத்துல இருந்தாங்க...நாங்க ரெண்டு பேரும் அந்த இடத்தை சுத்தி வளைச்சுட்டோம்!
சுப்: ரெண்டு பேர்.....! சுத்தி...அப்புறம்...

[காட்சி விரிகிறது]

பாண்டி: [மைக்கை எடுத்து] ஹாய் ப்ரண்ட்ஸ்! [ஹா ஹா...சற்று கர்ஜித்து விட்டு] நீங்க யாரும் எங்க இரண்டு பேர் கிட்ட இருந்து தப்ப முடியாது. உங்களை சுத்தி வளைச்சுட்டோம்! ஏட்டுப் பாண்டியா கொக்கா! [ஹா ஹா] தப்பிக்க நெனைச்சா என் துப்பாக்கி இரையாயிடுவீங்க...[துப்பாக்கியை எடுத்து வானில் சுடுகிறார். அதில் தோட்டாவே இல்லையென்று அப்போது தான் தெரிகிறது!]

[இண்டெர் கட்]

சுப்: ஐய்யயோ, அப்புறம் என்ன பண்ணீங்க...பாண்டி: இதுக்கு முன்னாடி என் வீரத்தை பாத்தே, இங்கே என் விவேகத்தை பார்...

[மறுபடியும் காட்சி]

கான்1: என்ன சார், தோட்டா இல்லையா...
பாண்டி: அதான் எனக்கு குழப்பமா இருக்கு!
கான்1: இப்போ எப்படி சார் அத்தன பேரையும் புடிக்கிறது?
பாண்டி: நீ ஒன்னும் கவலைப்படாதே..இப்போ பார்!
[உள்ளேயிருந்து ஒருவன், என்னங்க ஏட்டு துப்பாக்கி சத்தமே வர்ல...]
பாண்டி: இப்போ கேளுங்கடா...ஹா ஹா... டுமீல் டுமீல்...டுமீல் டுமீல்...[வாயால் "டுமீல்" "டுமீல்" என்று பாண்டி கத்துகிறார்]
[ஒரே நிசப்தம்!]
பாண்டி: என்னங்கடா சத்தத்தையே காணோம்! எல்லாம் பயத்துல ஒன்னு, ரெண்டுன்னு போயிட்டீங்களா...
[உள்ளேயிருந்த கொள்ளைக் கூட்டம் வெளியே வருகிறது]
பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] பாத்தியா அத்தனை பேரும் சரண்டர்...ஹா ஹா..
தலைவன்: ஆமா, எங்கே இன்னொரு தடவை சுடுங்க..
பாண்டி: [பழக்க தோஷத்தில் டுமீல் டுமீல் என்று சத்தம் போட]
தலைவன்: இவ்வளவு நாள் காக்கிச்சட்டையோட வீரத்தை தான் பாத்துருக்கேன், இன்னைக்கு தான் அதோட அறிவுக் கொழுந்தை
பாக்குறேன்!
[பாண்டி கர்வமாய் கான்ஸ்டபிளை பார்க்கிறார்]
தூத் தேரி...திருடன் போலிஸ் வெளையாட்றவனை எல்லாம் போலிஸ்
ஆக்கிட்டானுங்க! உன் கைல பிடிபட்றதுக்கு நாண்டுட்டு சாவலாம்டா....தூ! துப்பாக்கியில தோட்டா இல்லையாம், அதனால இவர் டுமீல் டுமீல்னு சவுண்ட் விடுவாராம், அதை கேட்டு நாங்க ஒன்னுக்கும், ரெண்டுக்கும் போயிடுவோமாம்! எங்களை இவ்வளவு கேவலப்படுத்திட்டியேடா...உன்னை....[பாண்டிக்கு தரும அடி விழுகிறது]
பாண்டி: [முடிந்ததும்...மனதுக்குள்] ஆரம்பிக்கும்போது நல்லா தான் ஆரம்பிக்கிறாங்க...முடிக்கும் போது தான்...நாம கொஞ்சம் ஓவரா
தான் போயிட்டோமோ?

[காட்சி முடிகிறது]

சுப்: தூ...
பாண்டி: என்ன நீயும் துப்புற?
சுப்: இதெல்லாம் ஒரு கதை...இதுக்கு ஒரு ப்ளாஸ் பேக் வேற...
பாண்டி: [மனதுக்குள்] மொதல்ல பேர் காரணத்துக்கு நல்ல ஒரு கதையா டெவலப் பண்ணனும்! ஆளாளுக்கு துப்புறாங்களே...
வலைபதியாததற்கு அலுவலகத்தில் வேலை என்று இப்போது சாக்கும் சொல்ல முடியாது! ப்ராஜக்ட் முடிந்து விட்டதால், போய் எங்காவது ஒழி என்று இரண்டு வாரம் லீவு கொடுத்து அனுப்பி விட்டார்கள்! சும்மா இருப்பதே சுகம் என்று வீட்டில் தான் இருக்கிறேன்! ஆனாலும் ஒரு வாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை!!

முதல் நாள் முழுவதும் வீட்டில் இருந்தேன் என்று நினைக்கிறேன்! கொஞ்சம் பயம் வந்து விட்டது. என்னடா அலுவலகத்தில், நாங்கள்ளாம் எப்படியெல்லாம் கோட் அடிச்சோம் தெரியுமா என்று தாம் தூம் என்று குதித்து லீவு வாங்கினோமே, இந்த ஒரு நாளுக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே என்று பகீரென்றது! சரி வீட்டில் இருக்கக் கூடாது, எங்காவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஞானம் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது!

அந்த ஞானத்தின் விளைவாக என் நண்பன் ஒருவன் செங்குன்றத்தை தாண்டி ஒரு கோயில் இருக்கிறது. அங்கு சென்று வந்தால் சீக்கிரம் திருமண பாக்கியம் கிட்டுவதோடு வீடு, மனை வாங்கும் சுப காரியங்களும் நடைபெறும் என்று சொன்னான்!! அடேய் நான் ஆல்ரெடி வீடு வாங்கியாச்சே அது கைய விட்டு போகாதுல்ல என்று அப்பாவியாய் கேட்ட என்னை பொருட்படுத்தாது அந்தக் கோயிலுக்கு கூட்டிப் போனான்! போகும் வழியெல்லாம் என் சிந்தனைகள் இங்கு சில பத்திகளாக...

அவன் சொன்ன கோயில் செங்குன்றத்தை தாண்டி கொல்கத்தா ஹைவேயிலிருந்து சிறுவாபுரி என்ற இடத்தில் ஒரு டீ கடை சந்தில் திரும்பி வயல் வரப்புகளை கடந்து போனால் வருகிறது. அங்கு சீண்டுவாரேயில்லாமல் அப்பாவியாய் ஒரு முருகன் காட்சியளிக்கிறார்! சரி சிறுவாபுரியின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்த டீ கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து அந்தக் கோயிலைப் பற்றி இப்படி ஒரு கதை கட்டி விட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்! நான் போய் இறங்கியதும் என் நண்பர்களை முறைத்து சொன்னது, "நான் ஐ பாட் வச்சிருந்ததாலே நீங்க தப்பிச்சீங்க!!" உடனே என் நண்பன் நீ தான் சாமி கும்பிட மாட்டியே ஹெல்மெட்டை வச்சுக்க என்றான்! எனக்கு அப்போ தான் வெளங்கிச்சு இதுக்கு தான் நம்மள கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு...ஹைய்யோ...ஹைய்யோ!!

அது ஒரு சின்ன கோயில் தான், சுற்றுலா துறையினரின் [டீ கடை பசங்க] புத்திசாலிதனத்தால் கோயிலை புதுப்பிக்கும் அளவிற்கு பொருள் சேர்ந்திருக்கிறது! பாவம் முருகன் வழக்கம் போல் குபு குபுவென்று கொதிக்க கொதிக்க உஷ்ணத்தில் நிற்கிறார். அய்யர் சற்றே வெளியில் வந்து பக்தர்களுக்கு விபூதி கொடுக்கும் இடத்திற்கு டைல்ஸ் ஒட்டி ஸ்ப்ளிட் ஏசி எல்லாம் பொருத்தியிருப்பது கொஞ்சம் ஓவர்! என் நண்பன் முருகனிடம் உருகி வேண்டிக் கொண்டிருந்தான்! போதும் வாடா, ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் ஆயிட போகுது என்றேன்...அதற்கு அவன், இருடா, ஒன்னுக்கு ரெண்டு வீடா கெடச்சுட்டா என்றான்! அடக் கடவுளே....

அப்போது மணி மாலை ஒரு ஆறு இருக்கும். அந்த நேரத்தில் கூட கோயிலில் எங்கள் மூவருடன், அந்தக் கோயில் அய்யர், இன்னும் சிலர், அப்புறம் ரொம்ப கொசு...அவ்வளவு தான்! என் நண்பன் ஒருவனுக்காகவே அய்யர் ஓடி ஓடி எல்லா கடவுளுக்கும் லைட் போட்டு தீபாராதனை காட்டி...என்ன ஒரு ஸ்பெஷல் கவனிப்பு!! அங்கு சுற்றுலா துறையின் ஒரு அதிகாரி நான்கு கற்களை பொறுக்கி வைத்துக் கொண்டு சார், வீடு கட்டுங்க சார் நெனச்சது நடக்கும் என்றார்! எனக்கு தூக்கி வாரிப் போட்டது...ஓஹோ சிச்சுவேஷனை மெயின்டெய்ன் பண்றீங்களா..ஆமா சார் இங்கே கன்ஷ்ட்ரக்ஷன் காஸ்ட் என்ன போகுதுன்னு ஒன்னும் எஸ்கலேஷன் ஆகலையா என்று கேட்டிருக்கலாம்! சரி போனா போகுதுன்னு விட்டுட்டேன்! விட்டுட்டேன்!!

இதையெல்லாம் விட ஒரு கொடுமையை எல்லா கோயில்களிலும் நான் பார்ப்பது; இருபது ரூபாய் பல்பை வாங்கி மாட்டி விட்டு அதற்கு அவன் முழு முகவரியோட உபயம் எழுதுவது!! இந்தக் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல! முருகன் முகத்தைத் தவிர அனைத்திலும் உபயம் இருந்தது! ஒரு வேளை ப்ரஹாரம் இருட்டாக இருப்பதால் அங்கு இருக்கும் உபயம் தெரியவில்லையோ என்னமோ! ஒரு அழகான முருகன் படத்தை அய்யர் கொடுத்தார், நன்றாக இருக்கிறதே என்று நம்பி வாங்கிப் பார்த்தால் முக்கால் படம் முருகனுக்கு, மீதி கால் படம் விளம்பரத்திற்கு!!

துக்கம் வரும் சமயத்தில் ஆறுதலாய் இருப்பதற்காக கடவுள் என்ற பாத்திரத்தை மனிதன் படைத்தான்! கஷ்டம் வரும்போதெல்லாம் அதோ கடவுள் வருவார், அவர் நமக்கு எல்லா செல்வங்களும் அள்ளித் தருவார், நம் கஷ்டங்களை எல்லாம் போக்குவார்...இந்த ஜென்மம் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்வு செழிக்கும் என்று நம்பி காலம் தள்ளினான்! இன்று அந்த நம்பிக்கையும் நீர்த்துப் போய் எத்தனை போலியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கடவுள் கடவுள் என்று இல்லாத கடவுளின் பெயரை சொல்லி இருக்கும் சக மனிதனை ஏமாற்றிப் பிழைப்பது என்ன பிழைப்பு? திருமணமாக ஒரு சாமி, குழந்தை பெற ஒரு சாமி..இப்படியே போனால் அந்தக் கோயிலுக்கு போ, வீட்டு குழாயில் தண்ணீ வரும், அந்தக் கோயிலுக்குப் போ வீட்ல கரண்டே போகாது என்று கூட சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!!

என் நண்பர்களை போல் பலர் இருக்கிறார்கள்! இத்தகைய விஷயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை!! ஆனாலும் அவர்கள் அந்த மூட நம்பிக்கைச் சேற்றுக்குள் சுகமாகவே மூழ்கிக் கிடக்கிறார்கள்! என்னுடன் தானே படித்தார்கள் என்று அவர்களின் கல்வியையும், பகுத்தறிவையும் அதே சேற்றில் என் கையால் துழாவுகிறேன்! துழாவிக் கொண்டேயிருக்கிறேன்!!
வேளச்சேரியிலிருந்து என் ஜாகையை மாற்றிக் கொண்டு மடிப்பாக்கத்திற்கு வந்து விளையாட்டாய் மூன்று மாத காலம் ஆகிவிட்டது! கடந்த ஒரு மாத காலமாய் புது இடத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரி எழுத ஒன்றும் கிடைக்காத போது இதைப் பற்றி ஜல்லி அடித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்!

"பெயர் மறந்து போன" ப்ரோட்டீன்ஸ் [ப்ராய்லருக்கு கடைக்கு புது விதமான பெயர்], படையப்பா சலூன், சுனாமி ஸ்நாக்ஸ் எல்லாம் தாண்டி நடு ரோட்டில் படுத்திருக்கும், மாட்டு மந்தையின் மேல் ஏறாமல் நேராய் வந்தால் பஸ்சே இல்லாத மடிப்பாக்கம் பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு சிதிலமடைந்த சிமிண்ட் சாலையில் நடந்தால் 5 நிமிடத்தில் என் ஜாகை!

வாழ்க்கை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது! மதுரை திருமலை நாயக்கர் மஹால் 7 வது தெருவில் வசித்து வந்த என்னை ஒரு சுனாமி பேரலை போல் தாக்கி தூக்கி எறிந்ததில் நான் விழுந்தது நியு தில்லி கரோல் பாக். அங்கிருந்து சண்டிகரில் சில பல செக்டார்களை கடந்து பெங்களூர் திப்பசந்திராவில் குடி புகுந்து சென்னை வேளச்சேரியிலிருந்து தற்போதைக்கு மடிப்பாக்கத்தில் என்னை கொண்டு சேர்த்திருக்கிறது வாழ்க்கை! எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு சராசரி இந்தியனைப் போல் ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரு சிறிய வீட்டை வாங்கியாகிவிட்டது!! இனி மடிப்பாக்கம் தான் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்! பார்க்கலாம்...

மடிப்பாக்கத்தில் இருப்பது ஏதோ மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டிய ஒரு அக்ரஹாரத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுகிறது!! எங்கும் மடிசார் மாமிகளும், ஆங்கிலம் பேசும் மாமாக்களும் வியாபித்திருக்கிறார்கள்! எல்லா பிள்ளைகளும் அமேரிக்காவில் செட்டில் ஆகி விட, ஒரு பெரிய வீடு கட்டிக் கொண்டு கிருஷ்ணா ராமா என்று காலம் கழிக்கிறார்கள் பெரும்பாலோர்! ஏன்டா அம்பி, ஆத்துக்கு வரப்படாதா என்று என்னிடம் மாமிகள் யாராவது கேட்டால் ரொம்ப பவ்யமாய் "இல்லை மாமி, நேக்கு நீச்சல் தெரியாது, நான் பாத்ரூம்லையே ஸ்நானம் பண்ணிக்கிறேன்" என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்! என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் போடா அசடு என்பார்களா? என்ன ஒன்று இன்னும் இள வயது மாமிகள் யாரும் என் கண்ணுக்கு சிக்கவில்லை...

மடிப்பாக்கம் பஞ்சாயத்தாரின் வசம் இருக்கிறது. அந்த ஆலமரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை! பார்த்தால் சொல்கிறேன். மடிப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் கேள்விபட்டேன்! மடிப்பாக்கத்தில் நல்ல சாலைகளே இல்லை. கைவேலி சாலை கொஞ்சம் பரவாயில்லை. நான் இருக்கும் தெருவில் சில நாட்களுக்கு முன் நல்ல மழை நாளில் சாலை போட்டார்கள்! எப்படா என்று காத்திருந்தவர்கள் போல் ஃபோன் லைனுக்காக குழி தோண்டி போட்டார்கள்! சாலை போட்டதற்குப் பிறகும் குழி தோண்டுவதற்கு முன்னும் அது குண்டும் குழியுமாய் தான் இருந்தது என்பது வேறு விஷயம்! மடிப்பாக்கம் மிகவும் தாழ்ந்த இடம் என்றும் மழை நீர் தேங்கும் என்றும் பயமுறுத்துகிறார்கள்! எப்படியோ என் வீட்டில் கார் பார்க்கிங் வசதி இருக்கிறது, அதை தக்க சமயத்தில் போட் பார்க்கிங்காக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்....நல்ல கட்டுமரம் ஒன்று சீப்பாக எங்கு கிடைக்கும்?

சென்னையில் எங்கே இருக்கே? என்று கேட்பவரிடம் மடிப்பாக்கம் என்றால் அது ரொம்ப தூரம் ஆச்சே என்கிறார்கள்! அவர்களுக்கு நான் அளிக்கும் ஒரே பதில் சென்னையில் எல்லாமே தூரம் தான்! ஒவ்வொரு ஏரியாவும் ஒவ்வொரு ஊர்! மயிலாப்பூரில் இருப்பவருக்கு வேளச்சேரி பிடிக்காது, புரசைவாக்கத்தில் இருப்பவருக்கு தி.நகர் பிடிக்காது! அவரவர் இடம்; அவரவர் வாழ்க்கை!! என்ன சொல்கிறீர்கள்?
அலுவலகத்தில் என் நண்பன் ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட மெயிலிங் க்ரூப்பில் (நூன் ஷோ) சில நாட்களாய் எந்த மெயிலும் வராமல் இருந்ததால் ஏன் யாரும் மெயில் செய்யவில்லை என்பதை தன் தாய் மொழியான மலையாளத்தில் ஒரு கவிதை வடிவில் எழுதிக் கொண்டிருந்தான்! அதைப் பார்த்த இன்னொருவன் தன் தாய் மொழியான வங்காளத்தில் அதை மொழி பெயர்த்தான்! தமிழில் எழுத என்னை பணித்தார்கள்! வேடிக்கையாய் எழுதத் தொடங்கி தமிழிலும், ஹிந்தியிலும், என் தாய் மொழியான செளராஷ்ட்ராவிலும் கற்பனைக்கேற்ப மொழி பெயர்த்தோம்.

அநியாயமான வேலைப் பளுவில் இந்த விஷயம் நிஜமாகவே ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் இருந்தது...நம் இந்திய மண்ணின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கண்கூடாகக் காண முடிந்தது...

தமிழ் அல்லாதவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தருகிறேன்!

The Context
When a group of people (NoonShow) did not mail me for a long time, I thought of asking them, in a poetic manner, why there are no mails. Wrote a poem (hopefully J) in Malayalam and rest is this-story below!

Below,we have Poem in different langauges. The concept (thread) is same, but different imagination is used in each languages to express the concept.

The langauges include:
Malayalam, Bengali, English, Tamil, Hindi,Sourastra and Telugu. (in the oder of writing)

This is a good example of Team Effort and collective imagination..
Spreading Our Thoughts…

Malayalam
Ividey maranam nadanam aadiyilla,
Ividey wherpadin kadhakal churul azhiyunilla,
Pinnae endhay,Nishchalam aya kootamayi munottu pokunu NoonShow.

Arangukal thakartha ezhuthukarudey thulika chalanam illa,
Ezhuthiya shabdha bedhiyilla, vaaku tharkangal illa...
Enthey, ellarum karma niradharai maariyadhinaaloo,
Atho ezhudhan vakukal illathathinalloo.

Bengali
mrityur chhaya aajo ei matir opor nai
bichhinnatar kalchhayao aajo dekha jai na
tobe keno ei sorge sobai ekhono nishabdatar modhhe beche

tobe keno moshir sobdo aaj aar sona jai na!
tobe keno loker mukher shobdo aaj beronor agei hariye jai!
sobai ki kaajer gotir modhhe hariye geche,
othoba sobai ki shobdohintar modhhe beche ache?

English
No one has departed from us
None of them has deserted us
For whom are these condolenses and why this silence for??

If ur theoritical silence is surprising many..
Ur physical calmness is befriending many..
IS this due to physical tiredness??
or an intended quietness??

Tamil
ingu maranam ethum sambavikkavillai
ingu pirivugal ethum nearavillai
irunthum ean intha mounam

vaalin munaigalaai iruntha pena munaigal indru mazhungiyathenna
naakin neelangal indru kurugiyathenna
uzhaipinaal vantha kaLaippo
pizaippathu arithaamo, pesi theerthaal!

Hindi
yehaa koi maraa tho nahi
yehaa koi bichadke gaya tho nahi
tho phir sannaatta [baal theek karo!] kyon hain bhai?

company pen nahi de raha hain kya?
ya sub gunge hogaye kya?
haan pata hain, gandha hain phir bhi dhandha hain!
magar aapki baatein tho itni gandi nahi hain...

Hindi 2
yehaan koi guzar ke tho nahi gayaa?
yehaan koi hume akele mein chodke tho nahi gayaa
tho phir sannaate ki baadal kyon chaaya huva hain?

chun chun ke likh likh ke
ek ek ko maar raha thaa
un ungliyaan kamzoor kyon huva?
jahaan ek shabdh chayiye tha,
wahaan ek bhaashan hi derahaatha..
un palkon ko kya huva?
raam kare..aapki code kaam kare!
chalo...ab tho baath karo!!

Telugu
evaru poyaarani ee Mounam..
evaru vidichi vellaarani ee shokam..
ee mounam...eee shokam pi enduku neekintha moham???

nee kalam kadalatamledaa??
leka nee manasu moogatam leda??
idi pani vani valla vacchina alasatvama??
leka maa pi tamakocchina kopama!!!

Sourashtra
et konni morraani
et konni soddi jeeraani
aski kago iso jhaili bisiriyo!!

mail likatho peino abbaraniyaa?
awra jaath vatho howdan jedriyoyaa?
kaamum jeev jaariyoyaa?
bhedavaanre! vatho keruvoraa...

இதை படிக்கும் உங்களுக்கும் வேறு மொழி தெரிந்தால் எழுதிப் பாருங்களேன்!
வாரம் ஒரு வலை பதித்த காலம் போய், மாதம் ஒன்று என்றாகி, இப்போது அதுவும் முடியாமல் போகிறது! கஷ்டமாக இருக்கிறது! வலைபதிவது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது! ஒரு நல்ல படைப்பை அளித்து அது அனைவராலும் பாராட்டப்படும் போது ஒரு படைப்பாளியாய் மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது!பணம் கிடைக்கிறது என்பதற்காக யாரோ ஒருவரின் வாழ்வை, யாரோ ஒருவரின் கனவை, யாரோ ஒருவரின் லட்சியத்தை அடைய அடி மாடுகள் போல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!! அப்படி உழைக்கும்போதும், மனம் ஒவ்வாத எத்தனை காரியங்களை செய்ய வேண்டியிருக்கிறது! இதற்குப் பெயர் தான் வாழ்வதென்றால் சாவதற்கு என்ன பெயர்? நமக்கான வாழ்வை வாழ்வது எத்தனை கஷ்டமான காரியமாக இருக்கிறது! ஏன் இப்படி? சென்னை பாஷையில் சொல்வதென்றால் என்ன கொடுமை சார்!

இன்றாவது இவன்(ர்) வலைபதிந்திருக்க மாட்டானா(ரா?) [மரியாதை எல்லாம் நாங்களா பாத்து குடுக்கனும்!] என்று தினமும் என் வலைதளத்திற்கு வந்து போகும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் பல!!
ரஜினியின்/ஏவி.எம்.மின்/ஷங்கரின் சிவாஜி வந்து 15 நாட்கள் கடந்து விட்ட இந்த நிலையில் நாங்களும் தான் அந்த படத்தை இரண்டாவது நாளே பார்த்துட்டோம் என்று சொல்லி விட்டு, இத்தனை நாட்கள் கழித்து விமர்சனம் போடுவது ஏதோ பழைய சிவாஜி கணேசன் படத்திற்கு விமர்சனம் போடுவது போலிருக்கிறது! இருந்தாலும் சற்றும் தளராத விக்ரமன்...



மணிவண்ணன், வடிவுக்கரசி, சன் டி.வி. உமா இவர்கள் எல்லோருக்கும் நல்ல ஸ்கொப் படத்தில்! வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்!

அங்கவை சங்கவை, படப்பிடிப்பு முடியும் வரை வெயிலிலேயே நின்று தங்கள் உடல் வருத்தி படத்தில் காட்சிகள் இயல்பாக இருக்க கருத்து விட்டார்களாம்! என்ன ஒரு உழைப்பு! அதிலும் தீபாவளி தீபாவளி பாட்டுக்கு இடுப்பை அசைத்து அசைத்து அவர்கள் ஆடுவது மனதுக்கு உற்சாகமாக இருக்கிறது!

யார்? 9தாராவா அது? உடல் மெலிந்து போய் ஏதோ 2தாரா, 3தாரா போலிருக்கிறார்! ஆடும்போது அவர் தொப்பை குலுங்காதது என் மனதை உலுக்கி விட்டது!

ஷ்ரேயா பின்னழகை இழுத்து இழுத்து வளைத்து வளைத்து அது அப்படியே ஒரு நாள் நின்று விட போகிறதோ என்று எனக்குக் கொஞ்சம் பயமாகவும் சற்றே கிளுகிளுப்பாகவும் இருக்கிறது! இவருக்கு நைட்டியே கொடுத்தாலும் தொப்புளுக்கு இரண்டு இஞ்ச் கீழே தான் கட்டுவாரோ என்னமோ..

படத்தில் ஆரம்ப காட்சியில் அலை கடந்து அழும் கூட்டம் தமிழ் சினிமாவின் நல்ல கண்டுபிடிப்பு! தொடர்ந்து இவர்களுக்கு நல்ல படங்கள் கிடைத்தால் திரை வானத்தில் ஜொலிக்க வாய்ப்புண்டு!



படம் வந்து இவ்வளவு நாள் கழிச்சி விமர்சனம் பண்ணனும்னா இப்படி தான் பண்ண முடியும்!

நிற்க

படம் பார்த்ததன் பாதிப்பில் ரஜினி படம் என்றாலே இப்படித் தான் இருக்க வேண்டுமா என்று என் மூளையை கசக்கி பிழிந்ததில் [ஹேய் பொய் தானே சொல்ற!!]கீழ் வரும் கதை பிறந்தது! ரஜினி ரசிகர்கள் இதைப் படித்து விட்டு, என் விலாசம் கேட்டால் என்னைத் தெரிந்த நண்பர்கள் என்னை காட்டிக் கொடுத்து விட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! இனி கதை...

சுத்தி பொட்டல் காடா இருக்கு! வானம் பாத்த பூமி! வானத்தையே பாக்குற ரஜினி! பூமியும் அவர் தலைய மாதிரியே தரிசா கெடக்கு! [படத்தில ரஜினி பொது விழாக்களுக்கு வர்ற அதே கெட்டப்புல வர்றாரு!] நம்ம நாட்ல தான் விவசாயிங்க கதை உங்களுக்கு தெரியுமே, அதே தான்! இவரும் நொந்து போய் லோன போட்டு ஸ்டைலா வெதைய வேற போட்றாரு, எழவு வெளைய தான் மாட்டேங்குது! பாங்குல இருந்து மாட்டை ஓட்டிட்டு போயிட்றாங்க! குடிக்க கஞ்சி இல்லை! அப்போ தான் அவர் பொங்கி எழுறாரு! அதுவோ இத்து போன டவுசரா சும்மா ஸ்டைலா கிழியுது பாருங்க!! [இதுக்கே அவார்ட் நிச்சயம்!]....அங்க தான் இன்டர்வல்!

பாப்கார்ன் எல்லாம் சாப்டு நீங்க உள்ள வந்ததும், ரஜினி பாங்க்ல இருக்காரு! சும்மா வெரலை சுண்டி ஒரு பஞ்ச் பேசும்போது விரல் சுலுக்கி ஆள் காட்டி விரல் மட்டும் அப்படியே மடங்காம நின்னுடுது! அப்படியே சோகமா வீட்டுக்கு கையை தூக்கிட்டே நடந்து வர்றாரு! மனோரமா தான் ரஜினி அம்மா! போகும்போது உன் தலை நிமிந்து இருந்துச்சு, இப்போ உன் தலை தொங்கி விரல் நிமுந்துருச்சேப்பான்னு.. பஞ்ச் டயலாக் வேற, ரஜினிக்கு கோவம்னா கோவம்! பொங்கி எழலாம்னா டவுசர் வேற கிழியும்!! சரி அம்மா தானேன்னு மன்னிச்சி விட்டுர்றாரு!

அந்த வெரலுக்கு விளக்கெண்ணை தடவி சுளுக்கு எடுக்குறாங்க மனோரமா..அப்போ அம்மா சென்டிமென்டோட ஒரு பாட்டு! பாட்டு முடிஞ்சதும் சரியாயிடனும்ல, அதானே லாஜிக்! சரியாயிடுது! இந்த சமயம் கொஞ்சம் ஜாக்கிரதையா டவுசர் கிழியாம பொங்கி எழுறார் ரஜினி! ஜன்னல்ல வச்சிருக்குற பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து மனோரம்மாக்கு கதற கதற ஊத்திக் கொடுத்துட்டு தானும் குடிச்சிட்டு ஸ்டைலா விழுந்து சாவுறாரு! காமெராவை பான் பண்ணி டாப் அங்கிள்ல காட்றோம், பஞ்ச் டயலாக் சொல்ற அதே தோரணையில ஒரு வெரல் மட்டும் தூக்கிட்டு செத்து போயிருக்காரு!

"ஒரு பஞ்ச் இன்று பஞ்சத்துக்கு அடிபட்டது"ன்னு ஸ்கிரீன்ல மெஸஜை போட்டு படத்தை முடிக்கிறோம்! நீங்க பூச்சி கொல்லி மருந்தோட என்னைத் தேடி வர்றதுக்குள்ள நான் அப்பீட் ஆயிக்கிறேன்!!
பதிவு போட்டு வெகு நாட்கள் ஆன விரக்தியில் இதே எழுதியே தீர்வது என்று எழுதிய பதிவு இது! உங்களுக்கு இதை படித்தே தீர்வது என்று நிர்பந்தம் ஏதும் இல்லையென்றால் படிக்கத் தேவையில்லை! இந்தப் பதிவு அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா என்று எனக்கே சந்தேகம் தான்!

சமீப காலமாக என் வலைபதிவின் தோலுரித்து புது தோல் போர்த்த வேண்டும் என்ற ஆசை என்னை பிடுங்கித் தின்கிறது..இணையத்தில் புது தோல்களை தேடி தேடி, என் தோலுரிவது தான் மிச்சம்! யாருக்காவது விதவிதமான தோல் கொண்ட அதையும் ப்ரீயா குடுக்குற மகராசன்கள் தெரிஞ்சா சொல்லுங்க. என் தோலை உங்களுக்கு செருப்பா தச்சி போட்றேன்! [தோலை வச்சி எப்படியெல்லாம் டயலாக் சொல்டேன் பாத்தீங்களா?]

நிற்க

எனக்கு இந்த உப்புமா பதிவுகளில் நம்பிக்கையில்லை! [நீ போட்டது பூராவுமே உப்புமா பதிவுகள் தான் என்பவர்கள் எனக்கு தனி மடல் வரைய வேண்டுகிறேன்!] பல வருடங்கள் கழித்து என் வலைப்பதிவை புரட்டிப் பார்த்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

நிற்க

இந்த சிவாஜி படம் வந்தாலும் வருகிறது வலையுலகில் அதை வைத்து எத்தனை பதிவுகள்! சிவாஜி என்ற தலைப்பை பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது! எரிச்சல் குறைவதற்குள் அதையெல்லாம் படித்து விடுவேன்! ஒரு ஏழைத் தமிழனால் வேறு என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்?

நிற்க

சமீபத்தில் பெரியார் படம் பார்த்தேன், உன்னாலே உன்னாலே என்ற அற்புதமான யூத்ஃபுல் படத்திற்கெல்லாம் விமர்சனம் எழுதும் நான் இதற்கு எழுத முடியவில்லை! பெரியாரை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற நினைப்போ என்னமோ..படம் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ ஒரு கடமையாய் நினைத்து பார்த்து விடலாம்!

நிற்க

ஒரு ஜோக்!

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அர்த்த ராத்திர்யில் பஸ் வழக்கம் போல் ஒரு டீ கடையில் நின்றது. குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அந்த டீ கடையை மொய்த்தோம்! ஒன்று புரியவில்லை, ட்ரைவர் தூக்கம் வராமல் இருக்க டீ குடிக்கிறார், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நாங்கள் எழுந்து ஏன் டீ குடிக்க முன்டியடிக்கிறோம்? தமிழனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று ஒரு லைட் டீ போடச் சொன்னேன்! அவர் வெள்ளையாய் ஒரு க்ளாஸ் நீட்டினார், என்னங்க ரொம்ப லைட்டா இருக்கே என்றேன். அதற்கு அவர், இது உங்களுக்கு இல்லை, அவருக்கு[இன்னொருவரை சுட்டி]..இது டீ இல்லை பால் என்றார்! எல்லோரும் பல்பு வாங்குவார்கள்! எனக்கு அன்று பல்பு மாலை!

இப்போ அல்லாரும் ஒக்காருங்கோ!! [இன்ஸ்ப்யர்ட் பை டுபுக்கார்!]
அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம்
உடலெங்கும் வெயிலேறி
இரவிலும் பிசுபிசுக்கிறது

அதிக சத்தத்தையும்
கொஞ்சம் காற்றையும்
கக்குகிறது மின்விசிறி

கொசுவர்த்தி எரிகிறது
"இனிமேல்" கொசு கடிக்காது
என்று ஆறுதல் அடைகிறது மனம்

அப்போது...

என்றும் போல் இன்றும்...
தடை படாத
மின் தடை

அக்னி நட்சத்திரத்தில் - இந்த
அர்த்த ராத்திரியில் தினமும்
மின் தடை செய்வதில்
இவர்களுக்கு என்ன லாபம்?

கதவைத் திறக்கிறேன்,
கொஞ்சம் காற்று வரும் என்று நம்பி...
நம்பிக்கை தானே வாழ்க்கை!

வழக்கம் போல் அதுவும்
வெற்றியின் முதல் படியிலேயே முடிகிறது

தெருக்களில் நாய்களுடன்
சில மனிதர்கள், என்னைப் போலவே!

இரவுகளில் ஒரு உருவம் தெரிந்தால்
குரைப்பது என்று முடிவெடுத்திருந்த
நாய்கள் இத்தனை பேரை பார்த்து
குழம்பித் தான் போயிருக்கின்றன

எத்தனை அரசியல்வாதிகள்
புழுக்கம் தாங்காமல் இந்த நேரத்தில்
வெளியே வந்திருப்பார்கள் என்று
நையாண்டி செய்கிறது மனம்

தூங்காமல் விழித்து
மாடாய் உழைத்து
நேர்மையாய் கட்டிய வரிப்பணம்
கண்ணில் வந்து போகிறது

மறுபடியும் உடல் பிசுபிசுக்கிறது!
எனக்குத் தெரியும்...
இது புழுக்கத்தினால் அல்ல



உன்னை விட சின்ன வயசு பசங்ககிட்ட சேராதன்னு அம்மா தலை தலையா அடிச்சிகிட்டாங்க! நான் கேட்டேனா..கேக்கலையே! இப்போ அவஸ்தை பட்றேன்!!

ஒன்னுமில்லீங்க, இந்த உன்னாலே உன்னாலே பாட்டு, மியுசிக்கை எல்லாம் ரிங் டோனா வச்சுகிட்டு, பேன்ட்ரில எப்போ பாத்தாலும் அந்த படத்தோட ட்ரைலர் பத்தி பேசிகிட்டு, அந்த படத்துல ஒன்னுமே இருக்காதுன்னு நான் சொன்னா உடனே, உங்களுக்கு வயசாயிடுச்சு மேனஜர் கூட போய் உக்காந்துக்குங்கன்னு ஓரம் கட்டிற வேண்டியது...நீங்களே சொல்லுங்க, என்னை மாதிரி ஒரு யுத்துக்கு ரத்தம் கொதிக்குமா இல்லையா? என்ன இருந்தாலும் எனக்கு வாலிப வயசில்ல?

ஜீவா தான் யுத்ஃபுல்லா படம் எடுப்பாராமே, சரிடா, நானும் யுத்டான்னு கெளம்பிட்டேன்! என்னை மாதிரி 2 யுத்களையும் கூட்டிட்டு..சும்மா சொல்லக்கூடாது, உங்க வீட்டு எங்க வீட்டு கொத்தில்ல, உலக மகா கொத்து! நீங்க எனக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னாலும் பரவாயில்லை! கொத்து கொத்து தான்!

நான் மிகவும் விரும்பி பதிய ஆரம்பித்து பாதியிலேயே சுவாரஸ்யம் குறைந்து பதியாமலேயே விட்ட பதிவு என்னிடம் ஏராளம். ஒரு நாலு வரி எழுதுவதற்குள் எனக்கு சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது..ஒரு திரைப்படத்தை எழுதி எடுப்பது என்பது சாதரண விஷயமா? இந்தப் படத்தை எப்படி தியேட்டர் வரை கொண்டு வந்தார்கள் என்று எனக்கு விளங்கவில்லை..இதற்கு ஒரு புது ஹீரோ, ஒரு புது ஹீரோயின் வேற..

வினய் [ஆள் நல்லா தான் இருக்காரு, அதுக்காக?]

தனிஷா [ஒரு முறை தான் குனிந்தார், சரியாக கவனிப்பதற்குள் நிமிர்ந்து விட்டார்]

சதா [சதா இவங்களையே ஹீரோயினா போட்டு ஏம்பா டார்சர் பண்றீங்க]

ஹாரீஸ் [ஆமா சார், ஜீவா சார் என்ன சிச்சுவேஷன் சொல்லி பாட்டு வாங்கினாரு? ஒரு பாட்டு கூட சிச்சுவேஷன்லா இல்லையே..ஆனா ஒன்னு சார், உங்க பிஜிஎம்லையே தெரியுது உங்க கோவம்!]

எஸ். ராம்கிருஷணன் [நமக்கு தான் விகடன் இருக்கே சார், உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?]

தோட்ட தரணியும், காஸ்ட்யும் டிசைனரும் [எல்லாரும் ஜோரா கை தட்டுங்க, படத்துல உருப்படியான விஷயம் இது தான்!]

ஜீவா [வேற யாராவது நல்ல படம் எடுப்பாங்க, அதுல உங்க போட்டோக்ராப்பி தெறமைய காட்டிகிட்டு பேசாம இருங்க..நமக்கு எது வருதோ அது தான் செய்யனும்..ஓகே..இனிமே யுத்ஃபுல்லா படம் எடுக்குறேன்னு சொல்லி பாருங்க.....இல்ல சொல்லிப் பாருங்களேன்!]

படத்தின் கடைசியில் சதா ஒரு டயலாக் பேசினார்..

"போதுமா?" - இது தான் டயலாக்

அப்பாடா இப்போவாவது இந்த பொண்ணுக்கு மனசு வந்துச்சேன்னு எனக்கு கண்ல தண்ணியே வந்துருச்சு..போதும்டி அம்மா..இங்க எல்லாருக்கும் போதும் போதும்னே ஆயிடுச்சு!

நீங்க ஒரு படம் நல்லா இல்லைன்னு சொன்னா
அது ஜஸ்ட் லைக் தெட்
அதுவே நாங்க சொன்னா வயசாயிடுச்சா?
தரதரரப்பப் தரதரரப்பப் ....


ஒரு மத்தியானப் பொழுதின்
மயான அமைதி - தூக்கத்திலிருக்கும்

ஒரு குழந்தையை
திடுக்கிட்டு எழச் செய்கிறது

சத்தமில்லாமல் ஊர்ந்து செல்லும்
நிழலில் ஒரு கருகிய
வாசம் வருகிறது

தெருவோரத்தின் துரு பிடித்த
ஒரு குழாயிலிருந்து
கிரீச்சிடும் சத்தம் கசிகிறது

மேகங்களைக் கொண்டு
விதவிதமான பொம்மைகளை
செய்து செய்து
அழிக்கிறது வானம்

ஒரு பெரிய மரத்தின் வேர்
நீரை உறுஞ்சவும், அந்த மரத்தின்
இலைகள் காற்றில் சிலிர்க்கவும்
சரியாய் இருக்கிறது

எங்கோ எதையோ கூவி விற்கும்
ஒருவனின் பலவீனமான குரலில்
அவன் பசி எதிரொலிக்கிறது


படம் ஆரம்பிக்கும்போதே ஒரே கூத்தும் கொண்டாட்டமுமா தானேய்யா ஆரம்பிக்கிறாய்ங்க! திருவிழாவென்ன, கொட்டென்ன, மேளமென்ன, கூத்தென்ன..அடடா.......பருத்தி வீரன் கத்தியோட குஸ்தி வாத்தியார் குண்டியில குத்த, வேகத்தோட பொறப்படும்போது தான் வான வேடிக்கையோட டைரடக்கரு பேரைப் போட்றாய்ங்க! அங்கன ஆரம்பிக்குது அலப்பரை! கெட்ட அலப்பரையில்ல!

பருத்தி வீரனும், சித்தப்பு செவ்வாழையும் சேந்து செய்ற அட்டகாசம் இருக்கே, போய் பாத்தாவில்ல தெரியும்..அவனுக ரவுசென்ன பவுசென்ன? ஒன்னுமில்ல, ஒரு வேலை வெட்டிக்கு போறதில்லப்பா, தண்ணிய போட்டுட்டு, அடுத்தவனை கண்ட இடத்துல சொறுவிட்டு, வாரா வாரம் ஜெயிலுக்கு போயிட்டு அதுல மெட்ராஸ் ஜெயிலை ஒரு தடவை பாத்துரனும்ன்றது ஒரு மனுஷனுக்கு லட்சியமாம்! சும்மா சொல்லக் கூடாது நல்ல தான் கெட்டு போயிருக்காய்ங்க!!

இந்தச் சண்டியரை சண்டைக்கிழுத்து உண்டு இல்லைன்னு ஆக்குற ஓரே ஆளு அவ மாமம் பொண்ணு முத்தழகு! அடடா..அந்தப் புள்ள பேர்ல மட்டுமா அழகு, ஆளும் தான்! பகுடர் போடாமையே பளபளப்பா இருக்குறவளப் போயி இந்தப் பயலுக கருவாச்சி கருவாச்சின்னுல்ல கூப்பிட்றாய்ங்க! அவய்ங்க கெடக்காய்ங்க மானங் கெட்ட பசங்க!

வீரனுக்கு மொத தடவையா அவன் சித்தப்பு புத்தி சொல்லி, அவன் மனசுலயும் வருதுய்யா அந்த காதல் கருமாந்திரம். பொறவென்ன நம்ம சண்டியரு அவ பேர் இருக்குற தன் மார்ல தாம் பேரையும் பச்ச குத்திகிட்டு ஒரு அம்பு வுட்றாரு பாருங்க! டாப் க்ளாஸ்! அதை அப்படியே முத்தழகுக்கு காட்டிட்டு "சாஞ்சுக்கலாம்ல"னு சொல்றானே, அங்கன சாஞ்சது முத்தழகு மட்டுமில்ல, படம் பாக்குற அத்தன சாதி சனமுந்தான்! அதோட நின்னானா, சொல்லிட்டு அந்தக் கையை தூக்கி தலைக்கு மேல குடுத்துட்டு காலை ஒரு சைஸா வச்சுட்டு ஒரு ஆட்டு ஆட்றான் பாருங்க! ஏ ஒன்னேன்! அந்தப் புள்ள வேற 'ஐய்யய்யோ' பாட்டு பாடிகிட்டே வானத்துல இருந்து அந்தக் கைய நீட்டி அள்ளுது பாருங்க! எப்பா, அள்ளிட்டு போகுது போ!!

முத்தழகோட அப்பனாத்தா என்ன, பருத்தியோட சேக்காளிக என்ன, இவனுக கிட்ட மாட்டி பொழப்பு கெட்டு போற டக்லஸ் அண்ணெ என்ன..இப்படி எம்புட்டு பேரை சொல்றது...பின்னிபுட்டானுவல்ல பின்னி!! என்னா ஒன்னு கழுத, அருவாளையும், ரத்தச் சத்தத்தையும் கொஞ்சம் கொறைச்சுருக்கலாம்! சண்டிப் பசங்க கதைய எடுத்துட்டு ராமயணமா சொல்ல முடியும்?

ம்யுஜிக் தானே, அத ஏன் கேக்குறீங்க, அப்பனுக்கு புள்ள தப்பாம தான் பொறந்துருக்கு! டேய் அது என்ன இந்த பின்னாடி ம்யுஜிக் வருமே, எழவு என்ன க்ரவுண்டுடா அது? ஆ...அதேன்னே பேக்ரவுண்ட்டு ம்யுஜிக்கு ..யப்பா யப்பா..கோவமா போறப்ப ரோஷமா வருது, காதலா வாரப்ப காத்தா வருது..அடக்கி வாசிக்க வேண்டிய எடத்துல அடக்கியும் வாசிக்குதுல்ல...

இங்கன கதயா சொல்லிட்டு இருக்கோம், வாய பொளந்து பாக்குறவ...மிச்ச கதயும் சொல்லிட்டா படத்த தியேட்டர்ல போயி யாரு பாக்குறதாம்? என்ன நாஞ்சொல்றது?

----------------------------------------------------------------------------

பருத்தி வீரன்

ஒவ்வொரு வார்த்தையும் வசனமல்ல.......வாழ்க்கை!
இது ஒரு படமல்ல....ஒரு வாழ்வின் பதிவு!!



இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?




புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!




கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!





சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!

தமிழ் மையமும் தமிழக அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து நடத்திய சென்னை சங்கமம் இன்று இனிதே நிறைவுற்றது! மிகவும் அற்புதமான விஷயம்! நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பல வகை கிராமியக் கலைகளை சென்னையின் தெருக்களுக்கே கொண்டு வந்து ஒரு திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள்! அவர்கள் சொல்வது போல் இது நம்ம திருவிழா தான்!

தமிழ் மையத்தின் எம்.டி. திரு. கேஸ்பர் ராஜ், இந்த யோசனை ஆகஸ்ட் மாதத்தில் உதித்ததாகவும், ஆனால் வேலை செய்யத் தொடங்கியது ஜனவரியில் தான் என்று சொன்னார்! உண்மையாகவே வரவேற்கத் தக்க ஒரு விஷயம். இதைப் பற்றி ஹிந்து பேப்பரில் படிக்கும் போது தான் நம் கிராமங்களில் எத்தனை வகையான ஆட்டம் இருக்கிறது என்றே தெரிகிறது!

நான் முதலில் சென்றது நந்தனத்தில் ஒய் எம் சி ஏ பக்ஸ் தியேட்டரில் நடந்த மொஸார்ட் மீட்ஸ் இந்தியா என்ற நிகழ்ச்சிக்கு! இது சிஃம்பொனியுடன் நம் கர்நாடக சங்கீதத்தை கலந்து கொடுக்கும் முயற்சி! ஃப்யுஷன் என்கிறார்களே, அது தான்..[எனக்கு எல்லாம் கேள்வி ஞானம் தான், இதில் பெருசா தப்பு இருக்க வாய்ப்பில்லை, கொஞ்சமாவது சரியா இருந்தா தானே தப்பு கண்டுபுடிக்க முடியும்...] அற்புதமாய் செய்தார்கள்! கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் வரிசையாக உட்கார்ந்து வயலின் வாசிப்பதையும், கோரஸாய் ஆண்களும் பெண்களும் பாடுவதையும் இது வரை சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்! சென்னை சங்கமத்தின் உதவியால் ஒரு தர்ம தரிசனம்! சங்கராபரணம், சிந்துபைரவி, பந்துராஹளி ராகங்களை வாசித்துக் காட்டினார்கள்! காதில் தேன் வழிந்து எறும்பு மொய்த்ததென்றால் நம்பவா போகிறீர்கள்! அந்த ஓபன் தியேட்டரில் தொடை தட்டிக் கொண்டே கேட்டதில் ஒரு கொசுவும் சாகவில்லை! இது சங்கீதக் கூட்டம் என்று அறிந்து தொடையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் கொசுவாரின் கச்சேரி!மறுநாள் ஃபின்லேண்டில் இருந்து வந்த ஒரு குழு நடனமாடி பாட்டு பாடி மகிழ்வித்தார்கள்!

நேற்றும் இன்றும் பெசன்ட் நகர் பீச்சில் கண்டு களித்தேன்! குடும்பாட்டம், ஜிம்னாஸியம், சத்தியமங்கலத்தில் வாழும் மலை வாழ் மக்களின் ஆட்டம் என்று விதவிதமாய் அமர்க்களப் படுத்தினார்கள்! கடற்கரையே ஆடியது என்றால் மிகையாகாது! அந்த இடத்திலேயே சினிமா இசையமைக்க குடும்பாட்டக் குழுவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதாக மேடையில் அறிவித்தார்கள்!

அடடா தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வருடா வருடம் இதை நடத்தப் போவதாகத் திட்டம்! இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம்! சென்னை சங்கமத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், [முதலில் கடற்கரையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வையுங்கள் சார்!] அழிந்து வரும் பல கிராமியக் கலைகள் தழைத்தோங்கவும், இருக்கிறானா இல்லையா என்று தெரியாத இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!
காதலர் தினத்தை முன்னிட்டு!

ஓவியம் கொஞ்சம் சோகத்தை கக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது! இதற்கும் மேல் சொன்ன கவிதைக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை!



இந்தக் கவிதை நல்லா இருந்தால், உங்க காதலி வலைப்பதிவுகளை மேயாதவராக இருந்தால், நான் தான் எழுதினேன் என்று தாரளமாய் அள்ளி விடுங்கள்! காதலுக்காக ஏங்கும் அனைத்து இதயங்களுக்கும் ஃபுல் ரைட்ஸ்!

வாழ்க காதல்!
வளர்க கலப்புத் திருமணங்கள்!!
ஒழிக ஜாதி வெறி!!!

[அது வேற ஒன்னுமில்லீங்க...ஹிஹி!! ஊரார் புள்ளய ஊட்டியில வளர்த்த நம்ம புள்ள கொடைக்கானல்ல வளரும்னு ஒரு நப்பாசை தான்!!]

உன் விழிகளின் வீரயத்தில்
விழித்துக் கொண்டது
என் வாலிபம்

உன் புன்னகையின் பூரிப்பில்
புத்தொளி பெற்றது
என் தேகம்

உன் அங்கங்களின் ஆணையில்
கீழ் படிந்தது
என் ஆண்மை

உன் ஈரமான உதடுகளில்
கதகதப்படைந்தது
என் உதடு

உன் கூந்தலின் கருமையில்
இரவாகவே மாறியது
என் உலகம்

உன் பெண்மையின் பேரின்பத்தில்
நல்ல போஷாக்கு பெற்றது
நம் காதல்

என்ன தலைப்பு பாத்து வந்தீங்களா? ஹிஹி, தெரியுமே...சரி சரி, படிங்க!

நேற்று எனக்கு நிஜமாகவே சனி உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்! பிரபுதேவா ஏதாவது செய்திருப்பார் என்ற நப்பாசையில் போக்கிரி பார்க்க வேண்டியதாகிவிட்டது. படத்தை விட்டு வரும்போது என் சட்டை முழுதும் ரத்தம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அத்தனை வன்முறை! கமலின் சண்டியருக்கு போர்க்கொடி தூக்கிய கனவான்கள் இப்போது எங்கப்பா ஒளிந்து கொண்டீர்கள்? போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி மூன்றும் சாரமாறியாய் போட்டுத் தள்ளும் படங்கள் தான்! அடுத்த வீட்டுப் பையன் மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லி, இன்னைக்கு பெரிய அருவாளை கைல வச்சுட்டு நிக்கிறார் விஷால்!

டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது நம்ம லிங்குவிடம் [அதாங்க நம்ம பீமா லிங்குசாமி] பேசிக் கொண்டிருந்தேன்! [என்ன கற்றதும் பெற்றதும் சாயல் அடிக்குதா?] என்ன சார் இந்த படம் எல்லாம் பாக்க வந்துருக்கீங்க? இது நான்! ஏன்பா, இந்த படம் நல்லா இருக்காதா? இது அவர்..இல்லை இது மாஸ் படமாச்சே, நீங்க எப்படி? இந்த மாதிரியும் ஒரு படம் எடுக்கனும்ல..அதான்! ஏன் சார், விக்ரம் வைச்சி இப்படி படம் தான் எடுக்குறீங்களா? இல்லை இல்லை..அதற்குள் தியேட்டரின் இருட்டில் கலந்து விட்டோம்!

படத்திற்கு போக்கிரிலு என்று பெயர் வைத்திருக்கலாம்! அப்பட்டமானலு தெலுங்குலு படம்லு!! முடியலலு!!

எனக்கு ஒன்று (அல்ல ஒன்றுக்கு மேல்) புரியவில்லை! இந்தப் படம் ஏன் தெலுங்கில் ஹிட் ஆனது? தெலுங்கில் இப்படி ரத்தக்களறியாய் இதற்கு முன் ஒரு படம் கூட வந்ததில்லையா?

நிற்க

இன்று அது ஏன் தமிழில் இப்படி ஓடுகிறது? தமிழ் மக்களுக்கு என்ன ஆகிவிட்டது? விஜய் என்ன படம் நடித்தாலும் பார்ப்பார்களா? மாஸ் ஹீரொ, மாஸ் ஹீரோ என்று இப்படிப்பட்ட படங்களாய் எடுத்து இன்னும் தமிழ் சினிமாவை பாழ் படுத்தப் போகிறோமா? கலைஞர்களுக்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? எம்.ஜி.ஆர் என்றொரு மாஸ் ஹீரோ தன் எல்லா படங்களிலும் உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டினார்! ரஜினி என்றொரு மாஸ் ஹீரோ தன் ஸ்டைலாலும், மேனரிஸங்களாலும் மக்களை குஷிபடுத்தினார்! விஜய் என்ற மாஸ் ஹீரோ எல்லா படங்களிலும் அரிவாளுடனும், துப்பாக்கியுடனும் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்! அதிலும் இந்தப் படத்தில் கடைசியில், தான் ஒரு போலிஸ் அதிகாரி என்று வேறு அடையாளம் காட்டிக் கொள்கிறார்! [என்ன வேணா சொல்லுவீங்களா..ஒரு நியாய தர்மம் வேண்டாம்?]

படம் முடியும் தருவாயில் விஜய் துப்பாக்கியால் ஒருவரை துளைத்து கொண்டிருந்தார். தியேட்டரில் மயான அமைதி. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை திடீரென்று சத்தம் போட்டுக் கை கொட்டி தன் விஜய் மாமாவை பார்த்து சிரித்தது! படம் முடிந்தவுடன் அந்தக் குழந்தையின் தந்தையிடம், நான், குழந்தைகளை இந்த மாதிரி படத்துக்கெல்லாம் கூட்டிட்டு வராதீங்க என்றேன்! அவர் ஆமோதித்து தலையில் அடித்துக் கொண்டார்!

வெளியே வரும்போது லிங்குசாமி கண்ணில் படவில்லை. அவர் வேறு இப்படி ஒரு படத்தை எடுத்து தொலைத்து விடப் போகிறார் என்று அடி வயிற்றைக் கலக்குகிறது! உங்கள் யாருக்காவது அவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லி வையுங்கள்!

அமேரிக்காவில் என்ன வியாபாரம் செய்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிகிறது! இல்லையென்றால் நீங்கள் சூ செய்யப்படுவீர்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர் உங்கள் வியாபாரத்தின் மீது வழக்கு தொடர்ந்து பல மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்கலாம். மேலோட்டமாக, இங்கு மோட்டல் வைத்திருந்த ஒரு இந்தியரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவருடைய மோட்டலில் ஒரு நாள் தங்க வந்தவர், கால் தடுக்கி விழுந்து விட்டார். மோட்டல் ஓனரின் அறியாமையாலும், அஜாக்கிரதையாலும் தான் நான் தடுக்கி விழுந்தேன். இவர் எனக்கு இத்தனை மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வாதாடி கடைசியில் அந்த இந்தியர் தன்னுடைய மோட்டல் சாவியை அவர் கையில் கொடுத்து விட்டு வெறும் கையுடன் நடையைக் கட்டினாராம். பார்த்தீர்களா கொடுமையை..

ஸ்டார் பக்ஸில் [இது ஒரு மில்லியன் டாலர் கம்பேனியாமே அப்படியா?] ஒரு காபி குடிக்கும்போது அந்த கப்பில் கவனித்தேன். நீங்கள் குடிக்கப் போவது மிகவும் சூடானது என்று ஒரு எச்சரிக்கை, நானும் மெதுவாக வாய் வைத்து மெல்லமாய் உறிஞ்சினேன், காபி ஆறிப் போய் பல மணி நேரம் ஆகியிருந்தது..அதே போல் காபி கப்பில் ஏதாவது பொன் மொழி இருப்பதுண்டு. பொன்மொழி 1 வரி இருந்தால், அது எங்கள் கருத்தல்ல, எழுதியவரின் கருத்து..இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற எஸ்கேப்பிஸம் 10 வரியில் இருக்கும். [சரிடா, இப்போ உங்களை என்ன சொல்லிட்டோம்] நானும் சரி இப்படி ஏதாவது நொள்ள சொல்லி ஒரு மில்லியன் டாலர் வாங்கிட்டு இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்றால் ஒரு குறையும் கண்ணுக்கு தெரிய மாட்டேன் என்கிறது..[குறை சொல்லியே பேர் வாங்கும் புலவர்கள் மத்தியில் அடியேனை பார்த்தீர்களா?]ஒரே வழி, நான் இங்கு ஒரு குறையும் பார்க்க முடியவில்லை என்று வழக்கு தொடர்வது தான்!

நம் ஊர் போல் இங்கு ரயிலை அதிகமாக உபயோகிப்பதில்லை. எல்லாம் சாலை வழி தான்! ஒவ்வொரு ஃப்ரீ வேயிலும் [நம் ஊரில் இது ஹைவே!] ஒவ்வொரு காரும் 80, 90, 100 மைலில் பறக்கிறது. அந்த ரோட்டில் அழகை என்னவென்று சொல்வேன். நீங்கள் செல்ல வேண்டிய லேனில் இருந்து சற்று விலகி எதிர் லேனில் சென்று விட்டால் டயரில் கிரீச் சத்தமிட்டு நீ தவறான பாதையில் செல்கிறாய் என்று எச்சரிக்கிறது! அட அட அடா...அனுமதிக்கப்பட்டிருக்கும் வேகத்தை மீறி செல்லும் வண்டிகளை கண்காணிக்க அங்கங்கு ரேடார் பொறுத்தப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் உள்ள ரோட்டில் கூட ஒரு குப்பை இல்லை. அமேரிக்க மக்களின் சுய ஒழுக்கம் அந்தச் சாலைகளில் பிரதிபலிக்கிறது! நான் பார்த்த வரை நம் ஊர்களில் இருப்பதைப் போல் சாலை ஓரங்களில் அதிக மரங்கள் இல்லை. எல்லாம் பரந்து விரிந்த வெறும் நிலமாகத் தான் இருக்கிறது. ஒரு வேளை சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் நம் மக்களைப் போல் சிறு நீர் கழிக்க முடியாததாலோ என்னவோ! [புரியலை? மரம் வளர உரம் வேணாமா ஹிஹி] போர் காலங்களில் ஆகாய விமானங்கள் இறங்க ஓடு தளங்களாகவும் இந்த சாலைகளை உபயோகிப்பார்களாம்! அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எத்தனை விசாலமான, தூய்மையான சாலைகள் என்று!

நிற்க

மோன்டனா [ஹெலினா, வேலைக்கு வந்த இடம்]
நெவேடா [லாஸ் வேகஸ்]
அரிசோனா [கிராண்ட் கேன்யன்]
செளத் டகோடா [மெளன்ட் ரஷ் மோர்]
வையோமிங் [யெல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்]
நியு யார்க் [நியுயார்க் நகரம்]
மேரி லேன்ட் [பால்டிமோர்]
கலிஃபோர்னியா [லாஸ் ஏஞ்சல்ஸ்]

வந்து மூன்று மாதங்களில் அமேரிக்காவின் 8 மாநிலங்களை பார்த்து விட்டேன்! இது நானே எதிர்பார்க்காத ஒன்று! என் நண்பர்கள் வட்டத்தில் யார் அமேரிக்கா சென்றாலும் பணம் சேமிக்கனும்னு நினைக்காதே, நல்லா ஊர் சுத்தி பார் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கும்! அதை என் விஷயத்தில் அச்சரம் பிசகாமல் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு பரம திருப்தி! ஏக சந்தோஷம்! எத்தனை விதவிதமான ஊர்கள், மனிதர்கள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள்! அடேயப்பா..வெறும் 2 அல்லது 3 லகரங்களை சேர்த்து வைப்பதற்காக இத்தனை அனுபவங்களை இழப்பதா?

அடுத்த வார இறுதியில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்படுகிறேன்! அமேரிக்காவில் முக்கியமான அனைத்து பெரு நகரங்களையும் பார்த்தாயிற்று! ஒரே குறை நயாகாராவை பார்க்க முடியவில்லை..குளிர் காலத்தில் அது உறைந்து விடுவதால் அனுமதி கிடையாதாம். உறைந்து போன அருவி, கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...ம்ம்ம்ம் நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்! அடுத்த டார்கெட் ஐரோப்பா தான்!

உலகம்..அழகு கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!!

முன்னாலேயே போட்டிருக்க வேண்டிய பின்குறிப்பு: அமேரிக்காவைப் பற்றிய என் பதிவுகள் அத்தனையும், நான் பார்த்தவைகளையும், கேள்விப்பட்டவைகளையும் கொண்டு முழுக்க முழுக்க என் பார்வையில் எழுதப்பட்டது..இதில் தவறிருக்கவும் வாய்ப்புண்டு!

- பயணங்கள் முடிவதில்லை!
நான் பார்த்த வரை அமேரிக்கர்கள் மந்த புத்திக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்! [நான் பார்த்த வரை!] கடிவாளம் போட்ட குதிரை போல, தான் இத்தனை வருடங்கள் எப்படி ஒரு வேலையை செய்தோமோ, அது எத்தனை சுற்றி வளைத்து செய்ய வேண்டி இருந்தாலும் அதையே செய்கிறார்கள்! ஏன் இதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டும்? இதற்கு வேறு வழி இல்லையா என்று யோசிக்கவே மாட்டார்களோ என்னமோ?

நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு நாள் ஒரு அமேரிக்க நண்பனை வைத்துக் கொண்டு வேர்ட் டாக்குமென்டில் டாக்குமென்டிக் கொண்டிருந்தேன்..தலைப்புக்காக சிலவற்றை அடிக்கோடிட்டேன். அதாவது "கன்ட்ரோல் யு" அடித்தேன். திடீரென்று அவன் பதட்டப்பட்டு, அது எப்படி மெளஸ் இல்லாமல் நீ கோடு போட்டாய் என்று வியந்து கேட்டான்! நான் ஷார்ட் கட் கீ என்று சொல்லி எப்படிச் செய்வது என்று காண்பித்தேன்! "யு ஆர் ஜீனியஸ்" என்றான்! ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான்டா என்று நானும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய ஜீனியஸ் தனங்களை வெளிக்காட்டிக் கொண்டேன். நீ டீ ஆத்தக் கூட லாயக்கில்லை என்று பள்ளியில் என் வாத்தியார் என்னை திட்டியது எனக்கு ஞாபகம் வந்தது!! இதில் பாரட்டப்பட வேண்டிய விஷயம், தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதில் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை! நம்மைப் போல் எனக்குத் தெரியும், இருந்தாலும் உனக்கு தெரியுதா என்று டெஸ்ட் பண்ணேன் என்று பீலா விடுவதில்லை.என்னை பொறுத்தவரை, பொதுவாகவே இவர்கள் ஒரு நாள் மாங்கு மாங்கு என்று பார்க்கும் வேலையை நாம் ஒரு மணி நேரத்தில் செய்து விடுவோம் என்று தோன்றுகிறது! அதனால் தான் இந்தியர்களுக்கு இங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு மெளசும் நிறைய மவுசும் இருக்கிறது! [மெளஸ், மவுசு எப்படி கனெக்ட் பண்ணேன் பாத்தீங்களா? அப்படி பொங்குதுங்க..சரி சரி!]

அமேரிக்காவின் பெயரை மாற்றி பேப்பரிக்கா என்று வைக்கலாம்! அத்தனை பேப்பர்களை செலவழிக்கிறார்கள்! இன்று ஒரு நாள் யாரும் எந்த வகையான பேப்பரையும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லி விட்டால் போதும், பாதிக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்! கம்ப்யுட்டரில் ஒரு ஃபைல் தயாரித்து அதை ஒரு ஃபோல்டரில் போட்டு, அந்த ஃபைலை ப்ரிண்ட் எடுத்து அந்த பேப்பரை ஒரு ஃபைலில் போட்டு அதன் மேல் பத்து பதினைந்து ஸ்டிக் நோட் போட்டு டாக்டர் கையெழுத்தில் ஏதோ கிறுக்குகிறார்கள்! கடைசியில் தேடும்போது எது வேண்டுமோ அதை தவிர ஏகப்பட்ட பேப்பர்கள் இருக்கின்றன..ப்ரிண்டருக்கு வாய் இருந்தால் கதறி அழும்! நான் இந்தியாவில் ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை ப்ரிண்ட் எடுக்க போவேன், அன்னைக்குன்னு பாத்து பேப்பர் இருக்காது, இல்லைன்னா சோடா புட்டி கண்ணாடி போட்டு பாத்தாலும் தெரியாத அளவுக்கு மங்கலா விழும்! நானும், ஆனியே புடுங்க வேணாம்னு வந்துருவேன்!

நான் இங்கு வந்த அன்று என் ஸீட்டில் ஒரு பெரிய டப்பா கொண்டு வந்து வைத்தார்கள்! முழு மகாபாரதத்தை ப்ரிண்ட் எடுத்து அதற்கு பின் போட எவ்வளவு பெரிய ஸ்டாப்லர் வேண்டுமோ அவ்வளவு பெரிய ஸ்டாப்லர்! ஒரு பெரிய கத்திரிக்கோல், பெரிய பஞ்சிங் மெஷின், நிறைய ஸ்டிக் பேட், நிறைய பேப்பர் க்ளிப்ஸ், சலஃபன் டேப், நிறைய மார்க்கர்ஸ் [மஞ்சள் கலர் சிங்குசா, பச்சை கலர் சிங்குசா...சே சே!], பேனாவில் தப்பாய் எழுதி விட்டால் அழிப்பதற்கு எரேசர் [ப்ளேடால் எப்படி அழிப்பது என்று இவர்களுக்கு இன்னும் தெரியாதா? பென்சில் என்றால் எச்சி தொட்டு அழிப்பது தான் பெஸ்ட்!] எனக்கு சந்தேகமே வந்து விட்டது, எனக்கு கம்ப்யுட்டர் கொடுப்பார்களா இல்லை அரசு அலுவலகம் மாதிரி பெரிய பெரிய பேரெடை கொடுத்து அதில் ப்ரோக்ராம் எழுது என்று சொல்லி விடுவார்களோ என்று! அடப்பாவிகளா..அவர்கள் கொடுத்த ஒன்றை கூட நான் இன்னும் தொடவில்லை, சில பேப்பர் க்ளிப்ஸை தவிர..கனினியின் பயனை இன்னும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று படுகிறது!

NOTE: இந்த பத்தியை சாப்பிட்டுக் கொண்டே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

அலுவலகத்தில் விடுங்கள், டாய்லட்டில்..அட நம் நாட்டில் தான் தண்ணீர் பஞ்சம் இருந்தும் தண்ணீர் இல்லையென்றால் நாம் வருவதை கூட அடக்கிக் கொண்டு விடுவோம்! இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! துடைத்துக் கொண்டு ஒரு அரை மணி நேரம் சோப்பு போட்டு இவர்கள் கை கழுவுகிறார்கள்! [இப்போ என்ன பண்ணிட்டீங்கன்னு இந்த தேய் தேய்க்கிறீங்கன்னு கேக்கலாம் போல இருக்கு!] என் நண்பரிடம் ஏன் இவர்கள் கக்கூஸில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை என்றதற்கு அவர்கள் கையை அந்த மாதிரி இடங்களிலெல்லாம் உபயோகிக்க மாட்டார்கள் என்றார். எனக்கு ஏனோ நான் பார்த்த ட்ரிபில் எக்ஸ் படமெல்லாம் ஞாபகம் வந்தது! சுத்தக்கார பாப்பாத்திகள்!

இன்னொரு முக்கியமான விஷயம் எப்போது பார்த்தாலும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள்! அலுவலகத்தில் ஒரு பெண் ஒரு மூட்டை பாப்கார்னை [உங்கள் தலை மேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!] கம்ப்யுட்டரில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு மணி நேரத்தில் தின்று தீர்த்து விட்டாள்! இருந்த இடத்திலேயே உட்கார்ந்து என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்பது இவர்களுக்கு மிக்க வசதியாய் இருக்கிறது. நம்மை மாதிரி வத்தக் குழம்பை சாதத்தில் குழைத்தா அடிக்க போகிறார்கள்! வாயில் நுழையாத பெரிய பர்கர் அல்லது சான்ட்விச்..அதில் ஆடு, மாடு, கோழி, பன்னி என்று அடித்து போட்டிருப்பார்கள்! நாளைக்கு ஒரு ஃபுட் ஃபெஸ்டிவல் வந்து விடுகிறது! எப்போதும் ஏதாவது கொறிக்க இருந்து கொண்டே இருக்கிறது! என் அமேரிக்க நண்பன், போ, போய் எடுத்து சாப்பிடு என்று என்னை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளுவான்! நண்பா, உன் அன்புக்கு ரொம்ப நன்றி நீ ஒன்றை மறந்து விட்டாய், நான் அமேரிக்கன் இல்லை இந்தியன்..உங்களைப் போல என்னால் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று மன்றாடினேன்! அவன் விழுந்து விழுந்து சிரித்தான்! சாப்பிட்டுக் கொண்டே இருப்பது எங்கள் வேலைகளில் ஒன்று என்றான்! [அவன் சொல்லும்போது எனக்கு அவ்வளவு புரியவில்லை, வாயில் அவ்வளவு பெரிய பர்கரய்யா..பர்கர்!] நானும் அவ்வப்போது அவர்களை போல் கொறிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் நினைக்கிறேன்! சென்னை போனதும் சாப்பிடாம எப்படி நீங்க எல்லாம் வேலை செய்றீங்கன்னு கேட்டு டின் வாங்கி கட்டிக்க போறேன் என்று தோன்றுகிறது!! am i getting westernized?

- பயணப்படும்
தேன்கூட்டிற்காக



1995 - செளராஷ்ட்ரா காலேஜ், மதுரை.

ஒரு மலையை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் தொடங்கியது என் வாழ்வின் வசந்த காலம். நாம் நடந்து வந்த அந்த வசந்த காலங்களை சற்றே திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் நம்மையறியாமல் நம் முகத்தில் ஒரு புன்னகை அரும்பும். இன்று என் முகத்திலும் அதே புன்னகை. என் கல்லூரிக் நாட்களை பற்றி வலை பதிய வேண்டும் என்று வெகு நாட்களாய நினைத்துக் கொண்டிருக்கிறேன், அது சிறில் அலெக்ஸ் மூலம் குறும்பு என்ற தலைப்பின் மூலமும் இன்று நிறைவேறுகிறது. அதற்கு நான் முதலில் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்! எத்தனை இனிமையான நாட்கள்? எதிர்காலத்தைப் பற்றி எந்த பயமும் இன்றி, எந்தக் கவலையும் இன்றி பாடித் திரிந்த அந்த நாட்களை அசை போடுவது எனக்கு கசக்கவா செய்யும்? அதிலும் கரும்பு தின்ன கூலி போல் அதற்கு தேன்கூட்டில் பரிசு வேறு கொடுக்கிறார்கள். கல்லூரி வாழ்வில் இல்லாத குறும்புகளா? பேச்சுகளா? கேலிகளா? கிண்டல்களா? [அப்பாடா பில்டப் ஓவர்!]



சீனியர்: பஸ்ட் இயரா?
நான்: ஆமா
சீனியர்: எந்த க்ரூப்?
நான்: பி.எஸ்.எஸ்ஸி. பிசிக்ஸ்
சீனியர்: ஓ, ராணி க்ளாஸா? [பெயர் மாற்றப்படவில்லை]
நான்: இல்லை, ராணி தான் என் க்ளாஸ்!
சீனியர்: ???!!! [வலை நாகரீகம் கருதி அவர் சொன்னது சென்ஸார் செய்யப்படுள்ளது..ஹிஹி]



மாமா கூப்பிட்றாருன்னு அந்த அக்காவை கூப்பிடு என்று என்னை கேர்ள்ஸ் பார்க்குக்குள் அனுப்பி வைத்தார்கள். [பெண்களுக்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும், அதற்கு நாங்கள் வைத்த பெயர் ஜுராஸிக் பார்க்] அங்கெல்லாம் போகக்கூடாது என்று தெரியாமல் ஐ, கேர்ள்ஸ் பார்க் ஆச்சே, ராக்கிங் என்றால் இப்படி இல்ல இருக்கனும் என்று குடு குடுவென ஓடிய என்னை தடுத்து நிறுத்த படாத பாடு பட்டுப் போனார்கள் சீனியர்கள்!



நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்னமோ, காலேஜே சைட் அடிக்கும் ஒரு பெண் என் க்ளாஸில் இருந்தது. பசங்க எல்லாம் சேந்து என்னை அவளிடம் முதலை கதை சொல்லச் சொன்னார்கள். முதலை கதை உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு கதையாகப்பட்டது என்னவென்றால்...

முதலை இருக்கும் ஒரு குளத்தில் நீங்கள் இறங்குகிறீர்கள், அது உங்கள் காலை பிடித்துக் கொள்கிறது நீங்கள் என்ன சொன்னால் அந்த முதலை உங்கள் காலை விடும்? இது கேள்வி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அப்படி சொன்னா விட்ருமா? என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் விஷயம்.

தெரியலை நீயே சொல்லு என்றாள்.

தெரியலை நீயே சொல்லுன்னா விட்றுமா? என்றேன்

என்ன சொல்றது என்று சிரித்தாள்

என்ன சொல்றதுன்னா விட்றுமா?

ஐய்யோ, ஆளை விடு பிரதீப்

ஐய்யோ, ஆளை விடு பிரதீப்ன்னா விட்ருமா?

ஒன்றும் சொல்லாமல் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்

இப்படி ஒன்னும் சொல்லாம சிரிச்சுட்டே இருந்தா விட்ருமா?

அவள் சிரிப்பில் மயங்கி..நான் பசங்களை பார்த்தேன். டேய் ஒரு வேளை இவ சிரிச்சா முதலை விட்ருமோன்னேன்! யாரும் இதை எதிர்பார்க்கவில்லை, எல்லோரும் மிகவும் ரசித்து சிரித்தார்கள்!



சீனியர் பெண்களிடம் கடலை போடுவது என் தலையாய கடமை. அதிலும் இந்த சேம் சேம் ஸ்வீட் விளையாட்டு இருக்கே..இரண்டு பேர் ஒரே கலரில் ட்ரஸ் போட்டிருந்தால் யார் முதலில் சேம் சேம் ஸ்வீட் சொல்கிறார்களோ அவருக்கு இன்னொருவர் சாக்லேட் வாங்கித் தரணும். அதிலும் காலேஜ் பெண்களுக்கு காட்பெரீஸுக்கு கீழ் மிட்டாய்கள் இருப்பதே தெரியாது. நான் அதற்கு மசியவே மாட்டேன். ஜீரக மிட்டாய் ஒரு பாக்கெட் வாங்கி ஆளுக்கு 2 தர்றேன் வாயில போட்டுக்குங்க என்று நழுவி விடுவேன். இன்னொரு முறை இப்படித் தான் ஒரு பெண் சேம் சேம் ஸ்வீட், கிவ் மீ எ ஸ்வீட் என்றாள், நானே ஸ்வீட், என்கிட்ட போய் வேற ஸ்வீட் கேக்குறியே என்றேன், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும்! [இனிமே ஸ்வீட் கேப்பியா? கேப்பியா?]



ஜீனியர் நானே இப்படி இருந்தால் என் சீனியர்ஸ் எப்படி இருப்பார்கள்! என் தம்பியும் என் காலேஜில் என் க்ரூப்பில் என் ஜீனியராய் சேர்ந்தான்! ஒரு செமஸ்டர் முடிந்து ரிசல்ட் வந்ததும் என் சீனியர் ஒருவர், என்ன உன் தம்பி எப்படி மார்க் எடுத்துருக்கான் என்று கேட்டார். நானும் தெனாவட்டாய், சூப்பர் மார்க், அள்ளிட்டான்ல யாரு ட்ரைனிங் எல்லாம் ஐய்யா தான் என்று என் காலரை உயர்த்தி பீத்திக் கொண்டிருந்தேன். அவர் அமைதியாய், நல்ல வேளை உன் தம்பி நீ சொல்லித் தந்ததை கவனிக்கலைன்னு நினைக்கிறேன் என்றார். சீனியர் சீனியர் தான்!



காலேஜில் மாடல் எக்ஸாம் என்று ஒன்று வைப்பார்கள். செமஸ்டர் வருவதற்கு முன் ஒரு தடவை மாதிரி பரிட்சையாம்! செமஸ்டருக்கு படித்து பாஸாவதே பெரிய விஷயம், இதில் மாடல் எக்ஸாம் வேறு. மாதிரி பரிட்சை என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரே போட்டி தான்..பரவாயில்லையே, படிப்புன்னா போட்டி இருக்கனும் என்று புருவம் உயர்த்தாதீர்கள், போட்டி, யார் முதலில் எக்ஸாம் ஹாலில் இருந்து வெளியே வருவது என்று! இதற்கு நைட் ஸ்டடி வேறு போட வேண்டும், அப்பா எத்தனை வேலைடா..என் நண்பனின் பாட்டி விட்டிற்கு கூட்டமாக கிளம்பி விடுவோம். பக்கத்தில் தான் அலங்கார் தியேட்டர். அப்போது அங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே [இதை படிக்கவே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே, நான் அடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்?] என்ற ஹிந்திப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரிட்சை நடந்த அத்தனை தினங்களும் நைட் ஸ்டடி அங்கு தான்..ராத்திரி கண் விழித்து படம் பார்த்து விட்டு, பரிட்சை ஹாலில் தூங்காமல் முதல் ஆளாய் வெளியே வருவதில் இருக்கும் கஷ்டம் அனுபவித்தால் தான் தெரியும். ஹாலில் பசங்க அநியாயம் பண்ணுவாங்க. கேள்வித் தாளை தரும்போது, சிலர் இது எதுக்கு சார் என்று வந்தவரை கலாய்ப்பார்கள்.ஒரே ஒரு பேப்பர் தான் வாங்குவார்கள். அதில் முதல் 2 வரி தான் எழுதப் பட்டிருக்கும். அதுவும் கேள்வியாய் தான் இருக்கும். அந்த ஒரு பேப்பருக்கு சார் நூல் என்று ஒருத்தன் எழுந்து நிப்பான். வாங்குவது ஒரு பேப்பர், அதையும் பின்னால் இருப்பவனுக்கு பார்த்து எழுத கொடுத்து விட்டு வெறும் மேஜையில் தலை கவிழ்ந்து படுத்திருந்தான் ஒருவன். சூப்பர்வைசர் அவனை பார்த்து அதிர்ந்து பேப்பர் எங்கே என்றார், அவன் மெல்ல அழுகும் குரலில், இவன் பாத்து எழுத வாங்கிட்டு தர மாட்றான் சார் என்றான். அவருக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அவர் காப்பி அடித்துக் கொண்டிருந்தவனிடம், பேப்பரை வாங்கி பார்த்து அதிர்ந்து கேட்டார், ஏன்டா அவனே 2 வரி எழுதியிருக்கான். அதை நீ வேற பாத்து எழுதுறியா குட்றா அவன் பேப்பரை என்று கடிந்து கொண்டார். இது எப்படி இருக்கு?



ஒரு நாள் லஞ்ச் முடிந்து எல்லோரும் தூங்கி வழிய ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் அவரவர் பெஞ்சில் தலை சாய்த்து படுத்திருந்தோம். ப்ரொஃபஸருக்கோ பரந்து விரிந்த தலை..வழுக்கை சார்! திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். என் பக்கத்தில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினேன். அவன் தூக்கத்தை கெடுத்த கடுப்பில் என்னடா, சொல்லித் தொலை என்றான். நான் மெல்ல அவனிடம், டேய் மாப்ளே..இந்த ஆளு எப்பிட்றா முகம் கழுவுவாரு? ரொம்ப தூரம் கழுவ வேண்டி இருக்கும்ல..ரொம்ப கஷ்டம்டா..என்றேன்! அவன் சிரிப்பை அடக்க முடியாமல் அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பெஞ்சுக்கு அடியில் சரிந்து விட்டான்.



இப்படித் தான் ஒரு வாத்தி போர்டில் ட்ரான்ஸிஸ்டர் [இது 98.3 FM ட்ரான்ஸிஸ்டர் இல்லை, பிசிக்ஸ் ட்ரான்ஸிஸ்டர்பா..] படத்தை போட்டார். நாங்களும் தூக்கம் வராம இருக்க ரொம்ப பொறுப்பா அதை நோட்ல வரஞ்சோம். அவர் வெறுத்து போய் இந்த படத்தை தான் நான் டெய்லி போட்றேன், இதை ஆயிரம் தடவைக்கு மேல போட்டாச்சு என்றார்! [எல்லாம் ஒரே கட்டம் கட்டமா தான் இருக்கு...யாரு கண்டா!] ஒரு வேளை இது தான் வாத்தி குறும்பா?



கெமிஸ்ட்ரி லேப் என்றாலே டெஸ்ட் ட்யூப்களும், பியுரட்டுகளும், பிப்பட்டுகளும் வைத்து ஜிமிக்ஸ் வேலை காட்டுவது தானே..அங்கு இருந்த வாத்தியாருக்கு பசங்க என்ன பேர் வச்சுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? ஜீபூம்பா! [ஹைட் ஆஃப் க்ரேயேடிவிட்டி!] சால்ட் அனாலிஸிஸ் என்று ஒன்று உண்டு. ஏதாவது ஒரு உப்பை கொடுத்து அதற்கான பல சோதனைகள் செய்து அது சோடியம் க்ளோரைடா, கால்சியம் கார்பனைட்டா இப்படி எத்தனையோ வகையறாக்களில் எது என்று கண்டு பிடிக்க வேண்டும்! ஒரு உப்பை வாங்கிப் பார்த்து அதன் தன்மைக்கேற்ப சோதனைகள் செய்தால் அது என்ன உப்பு என்று தெரியும், எனக்குப் பிடித்த பெண் எங்கே போகிறாளோ, என்ன செய்கிறாளோ அதையே செய்து கொண்டிருந்தால், உப்பை எங்கேயிருந்து கண்டு புடிக்கிறது. ஒரு மண்ணும் வராது..நேரா ஜீபூம்பாகிட்ட போவேன், அவர் ஒரு பெரிய நோட்டை வச்சிருப்பார். அதில் என் பெயருக்கு நேரே எனக்கு என்ன உப்பு கொடுக்கப் பட்டது என்று எழுதியிருக்கும். நான் செய்த சோதனைகளை வைத்து அது எந்த உப்பு என்று சொல்ல வேண்டும். நான் சொன்னதும் நோட்டில் உள்ளதும் ஒன்றாக இருந்தால் பெருசா என்ன செஞ்சிடுவாரு, இன்னொரு உப்பை தூக்கி கொடுப்பாரு! நான் போனவுடன் அந்த நோட்டை எட்டிப் பார்ப்பேன், அவர் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நோட்டை மறைத்து கொள்வார்...அடடா இன்ஸல்ட் ஆகிப் போச்சே!..இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம நான் முழிப்பேன்..அவர் ம்..என்ன உப்பு சொல்லும்பார். நான் காப்பர் சல்ஃபேட் சார் என்பேன்! அவர் நோட்டைப் பார்த்து இல்லையேப்பா என்பார். சார், இல்லை சார், இது அம்மோனியம் சல்ஃபேட் என்பேன்..இல்லையே என்பது போல் தலையசைப்பார். அவர் வெறுத்து போய் இது மக்னீசியம் க்ளோரைட் பா என்பார். கரெக்ட் சார் என்று நான் வந்து விடுவேன்! நம்ம தப்பா சொன்னா அவர் சரியா சொல்றாரே, இவர் ரொம்ப நல்லவர்டா என்று பசங்களிடம் அவர் பெருமை வளர்த்து விட்டேன்!அதற்குப் பிறகு நான் சோதனை செய்வதையே நிறுத்திக் கொண்டேன்....



இந்தக் கடைசி புள்ளிகளில் தொத்திக் கொண்டு நிற்கின்றன என் எஞ்சி இருக்கும் கல்லூரி நாட்கள், இன்னும் எத்தனையோ குறும்புகளுடனும், கும்மாளங்களுடனும்! [இன்னா ஓபனிங்! இன்னா பினிஷிங்!! ஹார்ட் டச் பண்டியே கண்ணு!]
தேங்க்ஸ் கிவ்விங் நீண்ட விடுமுறையில் லாஸ் வேகஸ் சென்றிருந்தேன். அந்த நகரத்தை பார்த்த வியப்பில் ஒரு வாரம் என்னால் சரியாக வாயை மூடவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! [எதாவது விபரீதமா நினைச்சுக்காதீங்க] ! அத்தனை ஆச்சர்யங்கள், அத்தனை அதிசயங்கள்!! இப்படியும் ஒரு ஊரா என்று வியப்பே மிஞ்சுகிறது.

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! இந்த தடவை நான் பேசப் போவதில்லை, என் படங்கள் பேசும்![பேசிட்டாலும்]

நியுயார்க் நியுயார்க்



பாரீஸ் பாரீஸ்



சீசர்ஸ் பாலஸ்











அமெரிக்காவில் பிரை நிலவு இந்தப் பக்கம் திரும்பி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?













இயற்கைக்கு முன்னால் மனிதன் தான் எத்தனை சிறியவன்!









ஹூவர் டாம், அரிசோனா







அனைத்து படங்களும் இந்தக் காமிராவினால்...



நான்.. நானே தான் எடுத்தேன் [பின்ன வேற யாராவது மண்டபத்துல கொடுத்தா எடுத்து வந்தேன்..நான் நானே தான் எடுத்தேன் ஐயா!] :-)



- பயணப்படும்
தேன் கூடு போட்டிக்காக

தலை நிறைய மல்லிகை பூ. நெத்தியில் ரத்தச் சிவப்பில் வட்டமான பெரிய பொட்டு. மிகையாக மஞ்சள் பூசியும் பொலிவு குறையா முகம். பல வருடங்களாய் முகத்தில் இல்லாத சாந்தி! அவள் தலைக்கு மேலே எரிந்து கொண்டிருந்த ஊதுபத்தியும் தொங்கிக் கொண்டிருக்கும் நூறு வாட்ஸ் பல்பும் இல்லையென்றால் அவள் இறந்து விட்டாள் என்று சொல்ல முடியாது. அந்த ஊதுபத்தியின் நறுமணம் மணியின் நாசியின் வழியே மூளைக்குச் சென்று உன் மனைவி இறந்து விட்டாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அது அவனுடைய துக்கத்தை இரட்டிப்பாக்கியது. அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

அந்தத் தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலின் வழியே சூரிய ஒளி ஆங்காங்கே கோலம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியை தங்கள் ஆடைகளில் ஏந்தி இரண்டு குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எழவு வீட்டின் துக்கம் பழக்கப்பட்டு போன சில ஆடவர்கள் அன்றைய செய்தித் தாளில் முழ்கிப் போயிருந்தார்கள். துயரை ஆற்ற முடியாத சில தாய்மார்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பெருமை கொண்டும் அவளுடைய இத்தகைய நிலையை நினைத்தும் அவளுடைய தலையெழுத்தை நொந்து கொண்டார்கள்.

ஒரு பெரிய கருப்பு நிற கண்ணாடி அணிந்து அன்றைய நாளிதழில் மூழ்கி இருப்பவரிடம் சாந்தா வீடு இது தானே என்று அவன் கேட்டு விட்டு அவர் பதில் சொல்வதற்குள் மெல்ல வாசலில் தன் செருப்பை கழற்றி விட்டு படியேறி வீட்டுக்குள் புகுந்தான். அவன் குரலில் இருந்த நடுக்கத்தை அவர் உணர்ந்தாரா தெரியவில்லை, பழைய படி பிரதமர் என்ன தான் சொல்கிறார் என்பதில் அவர் கவனம் செலுத்தினார்.

வந்தவனுக்கு நாற்பது வயது இருக்கலாம். சிறிய கட்டம் போட்ட சட்டையும் பழுப்பேறிப் போன வேட்டியையும் அணிந்திருந்தான். மெலிந்த தேகம். நல்ல நிறம். கரிய வானத்தில் ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்களைப் போல கரிய கேசத்தில் ஆங்காங்கே மின்னும் நரைத்த தலை முடி. அவன் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு கைகளிலும் சந்தனம் பூசி அவளுடைய வயிற்றில் அவளுடைய கைகளை வைத்திருந்தார்கள். அவளுடைய கைகள் பெரிய ரோஜாப் பூ மாலைக்கு நடுவில் கொஞ்சம் தான் தெரிந்தது. பச்சை நிற பட்டுப் புடவை உடுத்தியிருந்தார்கள். கண்களில் பொங்கி வரும் கண்ணீர் அவனை சரியாக பார்க்க விடாமல் செய்தது. மெல்ல அவள் அருகில் சென்றான்.

அவளை பார்த்தவாறே அவளை கிடத்தியிருக்கும் கட்டிலில் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான். அங்கு இருந்தவர்கள் அழுவதை நிறுத்தி அவனையே திகைத்து பார்த்த வண்ணம் இருந்தனர். மணி தலை கவிழ்ந்து மயக்க நிலையில் அழுது கொண்டே இருந்தான். அவன் அவளையே வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து மெல்ல ஒரு விசும்பல் ஒலி கேட்டது. மணி மெல்ல தலை தூக்கி பார்த்தான். அவன் அவளுடைய கைகளில் கை வைத்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று மணியை பார்த்து ஏன் இப்படி என்பது போல் கை காட்டினான். அவளுடைய தாடையில் கை வைத்து ஏதோ முனங்கினான். அவனுடைய அழுகையில் அது அமுங்கிப் போயிற்று! மெல்ல அங்கு இருந்த ஒரு பெரியவர் எழுந்து அவனிடம் வர எத்தனித்தார். சட்டென்று கையை எடுத்து தடதடவென தலையில் அடித்து ஓங்கி அழுதான். மணி பிரமை பிடித்ததைப் போல பார்த்து கொண்டிருந்தான். ஏன் இப்படி பண்ணிட்டே என்று அவன் கேட்டது இப்போது தெளிவாகக் கேட்டது. தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு அழுதான். அந்தப் பெரியவர் பக்கத்தில் வந்து அவனை எழுப்பினார். அவன் அவர் கைகளில் சிக்காமல் முரண்டு பிடித்தான். சரி வாங்க, எழுந்திருங்க..இங்கே உக்காருங்க என்று அவனை கஷ்டப்பட்டு எழுப்பி அந்தப் பெரியவர் அழைத்து போனார். அவன் திரும்பி திரும்பி அவளைப் பார்த்த வண்ணம் ஓலமிட்டு அழுது கொண்டும் வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டும் நடந்து சென்றான். அந்த ஓலம் அடங்க சிறிது நேரம் ஆனது.

சற்று நேரம் அழுகையை மறந்து எல்லோரும் அவன் போன வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த யாரும் அவனை இதுவரை பார்த்ததில்லை! பேயரைந்து போயிருந்த மணிக்கு அந்த ஊதுபத்தியின் மணம் மறுபடியும் அவன் மனைவியின் சாவை ஞாபகப்படுத்தியது! அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்!

1973

எதற்கோ இலவசமாய் கிடைத்த அந்தச் சிறுகதை தொகுப்பில் இருந்த இந்தக் கதையை படித்து விட்டு புத்தகத்தை மூடும் போது ஈரம் படிந்த கண்களை துடைத்துக் கொண்டு தூங்கச் சென்றான் சீனிவாசன்!
ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நானும் என் நண்பரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்து கொண்டோம், டிரைவர் அதிர்ச்சி அடைந்து இல்லை, இல்லை நான் தான் ஓட்டுவேன் என்றார். பார்த்தால் என் நண்பர் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார்! [என்ன? என்ன நக்கல்? எங்களுக்குத் தெரியாதாக்கும், இங்கே லெஃப்ட் ஹேன்ட் ட்ரைவிங்னு..எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்..]

ஹோட்டலில் எதற்கோ ஃபோன் செய்யப் போய் 911 எண்ணை தெரியாமல் அழுத்தி அது போலீஸுக்கு போய் ஹோட்டல் முதலாளி துடிதுடித்துப் போனார். தெரியாமல் அங்கு ஃபோன் செய்து விட்டால், மன்னித்து விடுங்கள், ராங் நம்பர் என்று வைத்து விடுங்கள் இல்லையென்றால் இங்கு யாரோ இறந்து கிடக்கிறார்கள் என்று போலீஸ் வந்து விடுமாம். கஷ்டம்! [நம் நாட்டிலும் அவசர போலீஸ் 100 எண்ணை அடித்தால் இப்படித் தானா?] பிரச்சனை என்னவென்றால், ஹோட்டல்களில் 9ஐ எஸ்கேப் கீயாக பயன்படுத்துகிறார்கள். 9 அடித்து விட்டு, நாட்டு எண் 1ஐ அடித்து வேறு எண்ணை அடிக்க, தெரியாமல் 1 அழுத்தி விட்டால் கதை முடிந்தது!

தூரத்தை கேட்டால் மயிலில்[இது முருகனோட மயில் இல்லை], எடையை கேட்டால் பவுண்டில், தட்பவெட்பநிலையை கேட்டால் ஃபாரன்ட்ஹீட்டில் என்று சொல்லி அதை கிமீக்கும், கிகிராமுக்கும், செல்சியசுக்கும் மாற்றி மாற்றி பார்த்து எங்கள் நாட்கள் கணக்கு செய்வதிலேயே கழிந்து விடுகிறது. நான் வழக்கம் போல் அந்த மாதிரி கணக்கு செய்வதில் கலந்து கொள்வதில்லை! [வேறு மாதிரி கணக்கு என்றால் பண்ணலாம்!] 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட்டா என்று என் நண்பர் ஃபார்முலா எல்லாம் ஞாபகப்படுத்தி அதை செல்சியஸில் ஆக்கி பார்த்துக் கொண்டிருப்பார். எப்படியும் செல்சியஸில் வந்தவுடன் இவ்வளவு கம்மியா என்று வாய் பிளக்க போகிறோம், நான் 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்! கதம் கதம்!

அமேரிக்கர்களுடைய வேலையையும், குடும்பத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத இயல்பு என்னை மிகவும் கவர்கிறது. 8 மணிக்கு அலுவலகம் வந்து, 5 மணிக்கு எல்லோரும் ஜூட்! 5 மணிக்கு மேல் மெயின் கதவு கார்டை காட்டினாலும் திறக்காதாம்! 5 மணி வரை தான் அந்த கார்டுக்கு அனுமதியே வழங்குகிறார்கள்! எனக்கு கார்ட் கொடுக்கும்போது, எதற்கும் இருக்கட்டும் இவர்களுக்கு 24 மணி நேரமும் கொடுத்து விடுங்கள் என்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள்! [எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ?]

கிட்டத்தட்ட மூன்று வார லீவிலிருந்து ஊர் சுற்றி விட்டு வருகிறார்கள்! அடுத்த மூன்று வாரத்திற்கு எங்கு போவது எந்த ஊர் சுற்றுவது என்று கூகுளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! விடுமுறையை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம்? வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம்! ஹும், அமேரிக்கர்கள் வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது!

- பயணப்படும்
செளக்கியமா இருக்கீங்களா? என்ன சென்னையில் நல்ல மழையாமே? என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி! நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்.

சரி என் கதைக்கு வருகிறேன். ஒவ்வொரு கனிப்பொறி வல்லுனரின் நித்திய கனவான அமெரிக்காவுக்கு ஒரு வழியாய் வந்தாகிவிட்டது. இங்கு வந்து பல யுகங்கள் கடந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள். அதிக ஆள் அரவமில்லாத எந்த ஒரு புது நகரத்தில் குடி பெயர்ந்தாலும் நாட்களை பிடித்து தள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

நான் இருப்பது மேல் சொன்ன மாதிரியான ஒரு சின்ன டவுன். சுற்றிலும் மலைகள், [கொஞ்சம் கண்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்!] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று! உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள்! ஊர் முழுவதும் அத்தனை தங்கம். நம் ஊரில் தோண்டினால் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, தங்கம் எங்கிருந்து வருவது?

அமெரிக்கா என்றவுடன் எல்லோரும் செல்வது கலிஃபோர்னியா, நியுயார்க்..வழக்கமாய் நான் புலம்புவது போல் எனக்கு என்று வரும்போது, ஹெலனா, மோன்டனா! அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான்! அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான்! பர்கரில் இருந்து பால் நிலவு வரை! பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு! எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது! இங்கு சுற்றிலும் மலையும், காடுகளும் இருப்பதால், மான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் மக்கள் வருகிறார்கள்!

காலை நேரங்களில், மதிய வேளைகளில் வெளியே வந்தால் ஊரடங்குச் சட்டம் ஏதாவது போட்டு விட்டார்களா என்று தோன்றுகிறது. ரோட்டில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் கேட்டேன், எங்கே ரோட்டில் யாரையும் காணவில்லை என்று? அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள்! என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார்! சென்னையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன், அவர் என்ன என்றார்..கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேனோ என்னவோ!

இது மிகச் சிறிய ஊர் என்பதால் அமெரிக்காவின் பெரு நகரங்களில் இருப்பதைப் போல் இங்கு போக்குவரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை. கை தட்டிக் கூப்பிட நம் ஊர் போல் ஆட்டோக்களும் இல்லை! டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது! இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும்! அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்!

அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது!
  • ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்! காலை வணக்கம் சொல்கிறார்கள்!
  • எந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள்
  • எல்லோரிடமும் மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு! நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்! பத்தில் ஒரே ஒருவர் சிடு மூஞ்சியாய் இருந்தால் அதிகம்!
  • கார் ஓட்டுபவர்கள் தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒரு நிமிஷம் நிறுத்தி அவர்கள் கடந்து சென்ற பிறகே செல்கிறார்கள் [நம் ஊர் ஞாபகம் வந்தது, சாவுகிராக்கி, வீட்ல சொல்ட்டு வந்தியா நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா?]
  • ஊனமுற்றவரகளையும், வயதானவர்களையும் மிக கண்ணியமாக நடத்துகிறார்கள்
  • எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்!
    அதற்கு

ஒரு உதாரணம் கூற வேண்டும். வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நானும் என் நண்பரும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்றோம். இறங்கியதும், ஒருவருக்கு 6.50, இருவர் என்றால் 7.50 என்றார். என் இந்திய நண்பர், அது எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாய் தானே தங்குகிறோம், 6.50 தான் தருவேன் என்று அபத்தமாய் பிடிவாதம் பிடித்தார். சரி பரவாயில்லை நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று மிக்க கண்ணியமாக வாங்கிக் கொண்டார். மறுநாளும் அதே டிரைவர். சென்று இறங்கியதும் அதே கணக்கை சொன்னார். என் நண்பர் அதே பழைய பல்லவியை மறுபடியும் பாடினார். அதற்கு அவர், போன தடவை கேட்டீர்கள், பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டேன், இந்தத் தடவையும் நீங்கள் அதையே சொல்கிறீர்கள் சரி உங்கள் இஷ்டம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார். என் நண்பர் பில் கேட்டார். அவர் சரியாக 7.50 என்று எழுதிக் கொடுத்தார். நாங்கள் 6.50 தானே கொடுத்தோம், நீங்கள் 7.50 என்று பில் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். என்ன செய்வது, நீங்கள் தர மாட்டீர்கள், நான் என கை காசை போட்டுக் கொள்வேன்..அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சாதாரணமாய் சொன்னார். இருவரும் வெட்கித் தலை குனிந்தோம்! போன முறையே இப்படி எல்லாம் இந்தியாவில் போடும் சண்டை போட வேண்டாம், கேட்டதை கொடுத்து விடுவோம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவே இல்லை. சிலருக்கு அடிபட்டால் தான் உரைக்கிறது!

- பயணப்படும்!


[img courtesy: flickr]

என்ன? தீபாவளியா? ஒரே கொண்டாட்டமா? எனக்கு ஒன்னு சொல்லுங்க! ஒருத்தன் தீபாவளிய எங்க கொண்டாடலாம்? வீட்ல, பாட்டி வீட்ல, மாமனார் வீட்ல? ரைட்? நடு ரோட்ல? என் விதியை கேளுங்க! இந்த வருஷம் எனக்கு தீபாவளி ஃப்ளைட்ல.. கரெக்கிட்டா 20ஆம் தேதி பேரிக்காவுக்கு, சே அமேரிக்காவுக்கு கெளம்புறேன். எல்லாம் பெட்டியை தூக்கிட்டு எக்மோருக்கு பறந்துட்டு இருக்கானுவ, நான் மட்டும் ஏர்போர்ட்டுக்கு பறக்கனும், பறக்குறதுக்கு..எப்படி இருக்கு கதை? அட நிஜம் தாங்க!

நம்ம தான் எது செஞ்சாலும் காமெடி ஆச்சே, நம்ம மக்காவுக்கெல்லாம் ஒரே குஷி இன்னொரு கழைக்கூத்தாடியும் அமேரிக்காவுக்கு போவுதுன்னு..டேய் மாமு தீபாவளியே ப்ளைட்லயாடா? ஒரு ராக்கெட் கொண்டு போய் ஃப்ளைட்ல வச்சு வெடி மாமு, ங்கொக்க மக்கா நம்ம யாருன்னு காட்ட வேணாம்! இப்படி ஒருத்தன். ஏர்போர்ட்ல அம்புட்டு நேரம் என்ன எழவத் தான் பண்றதுன்னு தெரியாம ஒருத்தன்ட பொலம்பிட்டேன். இது என்ன பிஸ்கோத்து பிரச்சனை, அங்கன நெறைய ஏரோப்ளேன் நிக்கும் மாமு, ஒரு நல்ல ரெக்கையா பாத்து டப்புன்னு கீழே துண்ட விரிச்சி படுத்துறுன்னான். ஸ்ஷ்...அப்பா முடியவில்லை என்று புலிகேசி ரேஞ்சுக்கு ஒரு பெருமூச்சு விட்டேன். 2 வார்த்தை இங்கிலிபீசுல பேசிட்டா போதும், தொறை இங்கிலீஷ் எல்லாம் பேசுதுன்றானுவ..சரி கெளம்புரேன்னு ஆபிஸ்ல பசங்ககிட்ட சொல்லி ஜகா வாங்கும் போது ஒருத்தன் அப்போ நாளைக்கு வர மாட்டியா? உன்னை இனிமே பாக்கவே முடியாதான்னு ஒரே அழுவாச்சி! டேய் பாக்கவே முடியாதான்னு எல்லாம் சொல்லாதீங்கப்பா..அட்லாண்டிக் ஓஷன் எல்லாம் தாண்டி போறேன்! திரும்பி வருவேண்டான்னு தேத்திட்டு வந்துருக்கேன்! ஒவ்வொருத்தன் ரவுசும் தாங்க முடியலபா...

அமேரிக்காவுக்கு போவதை இவ்வளவு சலிப்பாய் யாராவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹிஹி..திடீரென்று கம்பெனியிலிருந்து ஒரு மூனு மாசம் போயிட்டு வாயேன் என்று அனுப்பி விட்டார்கள். நானே எதிர்பார்க்காத ஒன்று. சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டேன். நான் போகும் இடம் வடக்கு அமேரிக்கா(வாம்)! நான் போவது், மலையும் மலை சார்ந்த இடமும். நகரம் : ஹெலெனா மாநிலம் : மோண்டனா [யாரோ ஒருத்தன் "ஐ, ஆண்டெனா மாதிரி இருக்கு அங்கே சன் டி.வி. தெரியுமான்னு கேட்டான்!" இல்லை தெரியாம தான் கேக்குறேன் என்னை பாத்தவுடனே தான் இந்த மாதிரி கேள்வி எல்லாம் இவங்களுக்கு கேக்கத் தோனுதா?] இடத்தை பார்க்க விரும்பினால் கூகுள் மேப்பில் ஹெலெனா, மோண்டனா என்று டைப்புங்கள். இன்னும் 2 நாட்கள் பொறுத்து கூகுள் எர்த்தில் பாருங்கள், நான் நடந்து போய் கொண்டு இருப்பது தெரிந்தாலும் தெரியும்!

இதன் மூலம் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அங்கு போய் என்னால் காப்பி ஆத்துவதோடு இந்த தமிழ் சேவை எல்லாம் ஆத்த முடியுமா் என்று தெரியவில்லை. அதனால் என்னை நீங்கள் எல்லோரும் சற்று பொறுத்து அருள வேண்டும். திரும்பி வந்தவுடன் ஒரு பயணக் கட்டுரை எழுதுகிறேன். இது ப்ராமிஸ், கோல்கேட், வீக்கோ வஜ்ரதந்தி!!

சீ வாட் ஐ சே..[இன்னைக்கு உனக்கு வேட் ஐ சே! இருக்குற இருப்புக்கு இங்கிலீஷ் வேற!]

படக் குறிப்பு: அதாங்க..அட, புரியல இந்த ஏரோப்ளேன்லாம் ஆவுமேங்க..என்னங்க இது..தொண்டைலையே நிக்குது..ஆ! டேக் ஆஃப்!

[img courtesy: flickr]

அப்பா ஐந்தாவது முறையாக வண்டியை உள்ளே வைக்கும்படி சொன்னார். நல்ல ஒரு கதையில் கதாநாயகன் யாரையோ சந்திக்கச் சென்று கதவைத் தட்டும் போது அவருடைய குரல் எனக்கு மறுபடியும் கேட்டது. நான்காவது முறையாக அவர் சொன்ன போது "நான் வைக்கிறேன், நீங்க போய் படுங்க!" என்று சற்று எரிச்சலாய் சொன்னது ஞாபகம் வந்தது. அப்பாக்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் முதன் முறை சொன்னதும் நாம் எதையும் செய்வதே இல்லை! முன் சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? உடனே சொன்னால் மறுபடியும் நான் எரிந்து விழுவேன் என்று நினைத்தாரோ என்னவோ! அவருக்கு இரவு சாப்பாடு முடிந்தவுடன் வீட்டை பூட்டி விட வேண்டும். அவரவர் கவலை அவரவர்க்கு..

அந்தப் பக்கத்தின் நம்பரை பார்த்துக் கொண்டு, வண்டி சாவியை எடுத்துக் கொண்டு செருப்பை தேடினேன். ஒரு செருப்பு மட்டும் தலைகீழாய் கிடந்தது. ஹாலில் இருந்து வரும் சொற்ப வெளிச்சத்தில் என் செருப்பை கண்டு பிடித்தேன். இப்போது இந்த கஷ்டம் வேறு. எரிச்சலாய் வருகிறது. அங்கு இருக்கும் ஒரு க்ரில் கேட்டைத் திறந்து, வெளி கேட்டை நன்றாக திறந்து வைத்துக் கொண்டேன். வெளியே குளிர்ந்த காற்று வீசுகிறது. வானத்தைப் பார்த்தென். பெளர்ணமி நிலவின் வெளிச்சம் வானத்தில் எங்கும் கோலமிட்டிருந்தது. பக்கத்து வீட்டில் தென்னை மரங்கள் இருக்கின்றன. தென்னங்கீற்றின் வழியே நிலவைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கடற்கரைக்கு போயிருக்கலாம் என்று தோன்றியது. சரி என்று வண்டியை எடுத்து மேலே ஏற்றினேன். அப்போது தான் பார்த்தேன் அதை. மழைக்காலம் வந்து விட்டால் இந்தப் பிரச்சனை. என் உள்ளங்கை அளவுக்கு, சீ சீ அதை யார் உள்ளங்கையில் வைத்துக் கொள்வது? ஒரு பெரிய தவளை. சிறு வயதில் தவளை இலக்கியம் தெரிந்த என் நண்பன் ஒருவன் சொரித் தவளை நம்ம ஒடம்புல பட்டா நமக்கு பட்ட இடத்தில் சொறி புடிக்கும்என்று சொன்னான். அவன் எந்த நேரத்தில் சொன்னானோ, எந்த தவளையை பார்த்தாலும் இது சொறித் தவளையோ என்று தான் தோன்றும். இது என்னவோ இளம் பச்சை நிறத்தில், கொட்ட கொட்ட விழித்து கொண்டு நான் வண்டி வைக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜன்னலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய கண்!

வழக்கமாய் நான் வண்டியை ஜன்னலோரம் ஒட்டி வைப்பது வழக்கம். இன்று என்ன செய்வது? எனக்கோ அருவருப்பில் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. வண்டியை மெதுவாய் நடுவில் நிறுத்திவிட்டு, வெராண்டாவில் இருக்கும் ஒரு விளக்கமாற்றை எடுத்து கொண்டேன், கூட கொஞ்சம் தைரியத்தையும். எனக்கு தவளைகளிடம் பயத்தை விட அருவருப்பு ஜாஸ்தி. விளக்கமாற்றால் ஒரே தள்ளு தள்ளியதில் என் வண்டியின் பெட்ரோல் டாங்கில் போய் நின்றது. அது வழுவழுப்பாய் இருப்பதால் லேசாய் வழுக்கிக் கொண்டிருந்தது. இன்னொரு முறை தட்டியதில் அது வண்டி சாவி அருகில் சென்று நின்று கொண்டது. எனக்கோ அதை ஒவ்வொரு முறை தள்ளத் தள்ள அருவருப்பின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. தெரியாமல் மேலே பார்த்தால் தலைக்கு நேரே பல்லி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறது. அட ஆண்டவா, உன் படைப்பில் தான் எத்தனை விந்தைகள் என்று வியந்தேன், இல்லை வியர்த்தேன். என்னால் இப்போது தவளையை பார்க்க முடியவில்லை. கிழே தவளை, மேலே பல்லி! அப்பாவை கூப்பிட்டு அந்த தவளையை விரட்டச் சொல்லலாமா என்று நினைத்தேன். ஒரு தவளைய விரட்ட தெரியல பேச்சு மட்டும் காது வரைக்கும் நீளுது என்பார். ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது வீட்டுக்குள் நுழைந்து விட்டால் எனக்கு அதனிடம் பயமில்லை; அருவருப்பு தான் என்று இவருக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை.

சரி என்று வண்டியை மட்டும் கொஞ்சமாய் ஓரமாய் நகர்த்தி விட்டு, நகர்த்தும் போது சக்கரத்தில் கீழ் மாட்டி அந்த தவளை நசுங்கியிருந்தால் என்று இந்த பாழாய் போன, விவஸ்தையே இல்லாத மனம் நினைத்து உடம்பை ஒரு தடவை உலுக்கிப் பார்க்கிறது. உள்ளே வந்து அமர்ந்து அந்த புத்தகத்தின் விட்டுப் போன பக்கத்திலிருந்து தொடங்கினேன். அவன் கதவு திறந்ததும் என் காலில் ஒரு தவளை விழுந்தது, அவன் சந்திக்கப் போன நபரிடம் பேசிக் கொண்டிருந்த போது சக்கரத்தின் கீழ் அடிபட்ட தவளை தெரிந்தது. அவன் பையிலிருந்து ஒரு தவளையை எடுத்து அந்த நபரிடம் நீட்டுகிறான். எனக்கு அம்மா கொடுத்த பாலில் தவளை ஒன்று மிதக்கிறது. எனக்குத் தெரியும், அந்தத் தவளை எப்படியோ எங்கோ மறைந்து போயிருக்கும். ஆனால், என் மனதில் வந்து உட்கார்ந்திருக்கும் இந்த மனத் தவளைகளை நான் எப்படி விரட்டுவது? ஒரு வேளை என் மனமும் சொறி பிடித்துருக்குமோ?


[img courtesy: flickr]

I N S T E A D . . . D O N A T E!

என் நண்பர் ஒருவர் விளம்பரத் துறையில் இருக்கிறார். எனக்கு அதில் நிறைய ஆர்வம் இருப்பதால், அவரிடம் பேசும்போதெல்லாம் ஏதாவது விஷயத்தை சொல்லுங்கள், நானும் ஸ்கிரிப்ட் எழுத முயற்சிக்கிறேன் என்று நச்சரிப்பதுண்டு. இந்த முறை அப்படி கேட்டவுடன், ரத்த தானத்தைப் பற்றி ஒரு விளம்பரம் செய்ய வேண்டும். அதைப் பற்றி யோசி என்றார். அதன் விளைவு தான் நீங்கள் மேலே காண்பது.

இனி பின்னூட்டமிடுவதும், ரத்த தானம் தருவதும் உங்கள் கையில்!
பல நாட்கள் கழித்து தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சாமியாடத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குள் இறங்கியிருப்பது ஏ. ஆர். ரகுமான் சாமி. எனக்கென்னமோ இளையராஜா சாமி என்னை பிடித்து ஆட்டும் அளவுக்கு ரகுமான் சாமி ஆட்டுவதில்லை. ஆனால் இசை என்னும் சாமி எப்போதும் என்னை பிடித்து ஆட்டுவதால் எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு. [எத்தனை சாமிப்பா நாட்ல!] அப்படித் தான் இரண்டு நாட்களாய் சில்லென்ற காதலை [படத்தின் பாடல்களை சார்!] ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பதிவு இந்தப் படத்தின் இசையின் விமர்சனம் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றித் தான்.



"நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது" என்ற பாடல். இந்தப் பாடலின் சிச்சுவேஷன் [இதற்கு தமிழில் என்ன சொல்வது?] காதலியைப் பிரிந்த காதலன் தனிமை உணர்ந்து பாடுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால் [நான் கேள்விப்பட்டது வரை] மெட்டுக்கு பாட்டெழுதாமல், பாட்டுக்கு மெட்டு போடப்பட்டிருக்கிறது. வாலி பாட்டெழுத ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் பாட்டை எல்லோரும் ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. இந்தப் பாட்டைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் [வைரமுத்துவின் கம்பீரமான குரலையும், கவிதை நயமான தமிழையும் கடன் வாங்கிக் கொள்கிறேன்!]
"வார்த்தைகள் ரகுமான் தம்பியின் இசையில் சம்மணமிட்டு அமரவில்லை! நொண்டியடிக்கிறது" என்று தான் சொல்ல வேண்டும்!

ஓரிரு வரிகளைத் தவிர அனைத்தும் புளித்துப் போன பழைய வரிகள். நிமிஷங்கள் வருஷமாவதையும், குளிர்காலம் கோடை ஆவதையும், செந்தணல் பனிக்கட்டி ஆவதையும் எத்தனை முறை தான் எழுதுவார்களோ நம் கவிஞர்கள்..கேட்டதையே கேட்பதை விட தனிமையே தேவலை என்று தோன்றுகிறது. பாட்டுக்கு மெட்டு என்றால் கவிஞர்களுக்கு அல்வாவுடன் கொஞ்சம் காராசேவ் சாப்பிடுவது போல்[ஸ்வீட் காரம்பா!]. வாலி போன்ற பெருங்கவிஞர் இப்படி சொதப்பியிருக்கக் கூடாது.

"காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" என்ற பாட்டையும் வாலி எழுதி விஸ்வநாதன் மெட்டு போட்டார் என்று படித்திருக்கிறேன். அந்தப் பாட்டின் பல்லவி ஒன்றே போதும், கவிதை! வாலி சார், பேசாமல் நீங்கள் அவதார புருஷனே தொடருங்கள்!!

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர் என்றும் என்னை தாங்கள் யாரும் சொல்லி விடக்கூடாதெ, அதனால் சரி பாட்டுக்குத் தானே மெட்டு..நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன்.. என்றதன் விளைவு கீழே [ஐய்யோ, சேருக்கு அடியில இல்லைங்க!!]

[முன் குறிப்பு: இதிலும் ஏற்கனவே சொன்ன விஷயங்கள் வந்திருக்கலாம், ஆனால் எழுதும் போதும், படிக்கும் போதும் எனக்கு அலுக்கவில்லை!]

[பல்லவி 1]
சுவாசம் முழுதும் உன் காதல்
தேசம் முழுதும் உனை தேடும்
வாசம் மாறா உன் தேகம்
பேசாப் பொழுதும் என் உயிர் பாடும்

[பல்லவி 2]
கண்கள் ரெண்டும் உனை தேடும்
கவிதை என்றும் பொய் பேசும்
இதயம் இன்று இளைப்பாறும்
இயக்கம் கொஞ்சம் தடுமாறும்

[சரணம் 1]
காதலி என்ன கடவுளா?
தூணிலும் துரும்பிலும் தெரிகிறாள்

காதலைச் சொல்லி பிரிகிறாள்
கனவினில் எங்கும் விரிகிறாள்

காதல் வளர்வது பிரிவிலா
கண்கள் கலங்கியதென்ன பரிவிலா

காதலில் இரக்கம் பஞ்சமா
தோற்றவன் உலகில் கொஞ்சமா

[பல்லவி]

[சரணம் 2]
மழை தனியாய் எனை நனைக்க
மனம் உனையே நினைத்திருக்க

என் இளமைப் பறவை பறந்தது
உன் நினைவு சிறகுகளால்

என் இதயம் ஒன்றே சிறந்தது
உன் இதயம் வென்றதால்

இமை மேல் கொஞ்சம் ஈரம்
இளமையில் தனிமை சாபம

[பல்லவி]

யாரங்கே..யாரடா அங்கே!! லகுட பாண்டிகளே! மெட்டு போட கூட்டி வாருங்கள் ரகுமானை...