இன்னைக்கி நவீனைப் பார்த்தேன். என்றேன்.

யாரு என்பது போல் பார்த்தார்.

என்னோட x பாய் ஃப்ரென்ட்ங்க. சொல்லி இருக்கேன்ல...

ஓ! ம்ம், லக்கி மேன், என்ன பண்றானாம்.

உங்களுக்கு இருக்கே கொழுப்பு. என்ன பண்ணுவான், அவன் ரைட்டர் தானே.

ம்ம், ஊட்டில எப்படி?

ஏதோ புதுசா நாவல் எழுத வந்திருக்கானாம். ப்ளூ மெளன்டைன் ல இருக்கானாம்.

நீ வீட்டுக்கு இன்வைட் பண்ணலையா?

பண்ணேன், ஆனா அவன் ஒன்னும் பெருசா இன்ட்ரெஸ்ட் காட்டல.

ஏன்? உன்னைப் பார்த்து அவனுக்கு சந்தோஷமா இல்லையா?

தெரியலை. ரைட்டர்களுக்கு எழுத்துல தான் எல்லா உணர்ச்சியும் வரும். மூஞ்சில ஒன்னும் காணோம்.

ம்ம்ம்..உனக்கு?

எனக்கு ரொம்ப சந்தோஷம். எவ்வளவு நாள் ஆச்சு அவனைப் பார்த்து.

எதனால பிரிஞ்சீங்கன்னு சொன்ன?

வீட்ல எல்லாம் வந்து பேசினான். ஆனா, ரைட்டரா தான் ஆவேன்னு சொன்னான். எங்க அப்பா வேணாம்னுட்டாரு.

நீ ஒன்னும் சொல்லலையா?

அப்பாகிட்ட என்ன சொல்றது? ஒரு வேலை பார்த்துட்டே எழுதுன்னு அவன்கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அவன் முடியாதுன்னுட்டான். சரி, அப்பா ஒத்துக்க மாட்டார், நான் உன்கூட வந்துர்றேன்னு சொன்னேன். இல்லை, உங்க அப்பா சொல்றது சரி தானே, எனக்கே என் ப்யுச்சர் தெரியலை, உன்னைக் கூட்டிப் போய் என்ன பண்றதுன்னு தயங்கினான். நான் என்ன பண்ண முடியும்?

ம்ம்ம்..அவன்கூட வாழ்ந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பேன்னு தோணுதா?

ஏங்க அப்படி கேக்குறீங்க? இப்போ எனக்கு என்ன குறை? என்னை ராணி மாதிரி தானே வச்சுருக்கீங்க.

சும்மா விடாத, உண்மையை சொல்லு, அவன் கூட இருந்தா நல்லா இருந்துருக்கும்னு மனசுல ஓரத்துல தோணல?

கல்யாணம் ஆன புதுசுல அவனைப் பிரிஞ்சது, முன்ன பின்ன தெரியாத உங்களைக் கட்டினது எல்லாம் கலக்கமா தான் இருந்துச்சு. அப்புறம் உங்க நல்ல மனசு என்னை அப்படி யோசிக்க விடல. என் காயத்துக்கெல்லாம் மருந்தா நீங்க இருந்தீங்க! அப்புறம் எனக்கு என்ன கவலை?

ம்ம்ம்ம்...

என்ன ம்ம்ம்...ஆமா, இத்தனை வருஷம் கழிச்சி என்னைப் பார்க்குறான், என்னைப் பார்த்த சந்தோஷமே அவன் முகத்துல இல்லைங்க. ஏன் அப்படி?

என்னைக் கேட்டா? நான் என்ன சொல்றது?

நான் வேற யார்கிட்ட கேக்குறது?

மேடம், எந்தப் புருஷனாவது தன்னோட வொய்ஃபோட x பாய் ஃப்ரெண்ட் பத்தி இவ்வளவு நேரம் பேசுவானா? இதுக்கே நீ எனக்கு கோவில் கட்டணும்!

சார், எந்த வொய்ஃபாவது தன்னோட x பாய் ஃப்ரெண்ட பார்த்துட்டு டைரக்டா ஹஸ்பண்ட்கிட்ட வந்து சொல்லுவாளா? இதுக்கு நீங்க எனக்கு என்ன கட்டணும்?
ஹஹஹ..அப்போ ரெண்டு கோவிலாக் கட்டி உண்டியல் பக்கத்துல ரெண்டு பேரும் உக்காந்துருலாம்.

ஐய்யே...பதில் சொல்லுங்க..

எனக்கு என்ன தெரியும்! ஒருவேளை, அப்போ நீ ரொம்ப அழகா இருந்த, இப்போ கல்யாணம் ஆகி, புள்ளை பெத்து அழகெல்லாம் வடிஞ்சிருச்சுன்னு நினைச்சானோ என்னமோ?

அப்போ நான் இப்போ அழகா இல்லையா?

எனக்கு நீ என்னைக்கும் அழகு தானே ராஜாத்தி என்று சொல்லி, என்னை அள்ளி அணைத்தார். நான் அவரின் கழுத்தைக் கடித்தேன்.

-

மறுநாள் விடிந்ததும், நான் என் பழக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தேன். எழுந்ததிலிருந்து சுழன்று சுழன்று பிள்ளைகளையும், அவரையும் அவரவர் இடத்துக்கு அனுப்பி விட்டு ஒரு காபியுடன் உட்கார்ந்த்து டீவியில் "அழகிய அசுரா" பாட்டைப் பார்க்கும்போது சட்டென்று எனக்கு பத்து வயது குறைந்தது. பாடல்கள் மாயக்கம்பளங்கள், எத்தனை சுலபமாய் நம்மை நம் இளமைக் காலங்களுக்கு இட்டுச் செல்கின்றன. அவனுடைய பிறந்த நாள் பரிசாய் ஒரு கேசட் முழுவதும் இந்தப் பாட்டை நான் பதிந்து கொடுத்திருந்தேன். எங்கள் வழக்கமான இடத்தில் அமர்ந்து வாக்மேனில் இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டிருப்போம். நான் கண்களை மூடி அந்த நிமிடம் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து காபி டம்ளரை வைத்து விட்டு, கண்ணாடி முன் நின்றேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எப்படி இருக்கிறேன்? இவர் சொன்ன மாதிரி கல்யாணம் செய்து, புள்ளை குட்டி பெற்று நிஜமாகவே என் அழகு வற்றி விட்டதா? அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. மூக்கில் கொஞ்சம் சதை பிடிக்க ஆரம்பித்திருந்தது. வயதாவதற்கான ஒரு அறிகுறி. கண்கள் துடிப்பாகவே இருந்தது. பிள்ளை பெற்றும், வயிறு தொங்கவில்லை, அதோடு நான் பெரிதாய் வெயிட் போடவும் இல்லை. சில சமயங்களில் எனக்கே அப்படித் தோன்றி இவரிடம் சொன்னாலும் இவர் ஒத்துக் கொள்ள மாட்டார். மார்பு கொஞ்சம் சரிந்திருந்தது. அது இயற்கை தான்.

பிறகு ஏன்? இத்தனை ஆண்டுகள் கழித்து எனக்கு அவனைப் பார்த்து ஏற்பட்ட இன்பம், சந்தோஷம், அவனுக்கு ஏற்படவில்லை? நான் அவனை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறானா? அவனை நம்பி நான் அவனுடன் சென்றிருக்க வேண்டுமா? அவன் தானே வேண்டாம் என்றான். இவர் சொன்ன மாதிரி, என் அழகு குறைந்தது தான் காரணமா? என் அழகு மட்டும் தான் நானா? அவன் வாழ்க்கையில் எனக்கு அவ்வளவு தான் இடமா?
யோசிக்க யோசிக்க எனக்குத் தலை சுற்றியது. இந்த விஷயத்தை மறந்து வீட்டு வேலைகளில் மூழ்கினேன். ஆனாலும் திரும்பத் திரும்ப அதே கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன்.

(தொடரலாமா?!)

0 Responses