வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள் - வாழ்க்கை
தொலைந்து போகும் கருஞ் சிறைகள்

வயிறு வரை தொங்கும் கழுத்துபட்டை கெளரவம் - ஒரு
நாள் மறந்தால் உள்ளே அனுமதி மறுக்கும் கேவலம்

சுற்றிலும் பராமரிக்கப்படும் அழகு - பார்வை
கணினியைத் தாண்டாது, பிறகு?

சுழலும் நாற்காலியின் சொகுசு - முதுகுத்
தண்டை பதம் பார்க்கும் பிறகு

இணையத்தினால் கைக்குள் உலகம் - ஆனால்
பக்கத்தில் இருப்பவனுக்கு மின்னஞ்சல்

உடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு
சட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை

வேண்டிய மட்டும் பணம் - அள்ளி 
அள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்

ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குச் சட்டை - முப்பத்தைந்து 
வயதில் தலை முழுதும் சொட்டை

ஐம்பது லட்சத்தில் வசதியாய் வீடு - படுக்கை
அறை தெரியாது, அசதியாய் வரும்போது

வெள்ளைக்காரனின் பெயர்கள் மனப்பாடம் - மனைவி
மக்களின் பெயர் மறந்து போகும் 

விலையேற்றத்துக்கான பிரதான காரணமென்று தூற்றும் - இருந்தும் 
ஒட்டு மொத்த சமுதாயமும் கூடிச் சுரண்டும்


மன் என்ற மன்னாருக்கும், மதன் என்ற மதனகோபாலுக்கும், அம்பு என்ற அம்புஜாக்ஷிக்கும் நடக்கும் இல்லை மிதக்கும் காதல் கலாட்டாகளின் கலவை மன் மதன் அம்பு! ஒரு சேஞ்சுக்கு வலையுலகின் எந்த விமர்சனமும் படிக்காமல், கதை தெரியாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கிறது. நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டர் தமிழ்நாடு மாதிரி, வந்தவருக்கெல்லாம் டிக்கட் கிடைக்கும். ஆனால் என்ன, சங்கூதுற வயசுல சங்கீதா மாதிரி ஒட்டடை பிடித்த அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு டீடிஎஸ், ஏசி என்று கொஞ்சம் அரிதாரம் பூசி விட்டிருப்பார்கள். முதுகு வலிக்காரர்கள் அமர ஏதுவான நாற்காலி. கொஞ்சம் கூட முன்னும் பின்னும் நகராது, சாயாது!  கொடுமை என்னவென்றால் இங்கு  ஃ பஸ்ட் கிளாஸ் 80/, பால்கனி 100/, பாக்ஸ் 120/ ரொம்ப ஓவர். ஃ பஸ்ட் கிளாசுக்கு கீழ் கிளாசே இல்லை. முன் இருக்கைகள் அத்தனையும் காலியாய் கிடக்கின்றன. நாட்டில் எல்லோரையும் ஃ பாஸ்ட் கிளாஸ் சிட்டீசனாக நடத்துவதே இது போன்ற சில தியேட்டர்கள் தான்!

படத்தின் முதல் பாதி திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவை அப்படியே வாயில் போட்டுக் கொண்டால் எப்படி வழுக்கிக் கொண்டு போகுமோ அப்படி வழிந்து செல்கிறது. அழகான அடக்கமான கதை. அதற்கேற்ற கச்சிதமான திரைக்கதை. ஆங்காங்கே சில நச் வசனங்கள். ரம்மியமான ஒளிப்பதிவு ...முதல் பாதி! ஆனால் அப்படியே ஒரு அழகான நீரோடை போல செல்ல வேண்டிய கதை இடைவேளைக்குப் பிறகு கமலிடம் உள்ள கிரேசி மோகன் பாதிப்பினால் தடம் மாறி விடுகிறது. தசாவாதராத்திலும் தேவையில்லாமல் கிரேசி மோகன் டைப் சீன்களையும், வசனகளையும் வைத்திருந்தார். அதே போல் இதிலும்! இந்த ஆள் மாறாட்டக் குழப்பங்களிலிருந்து தமிழ் சினிமா மீள வேண்டும். அதிலும் முக்கியமாய் கமல் படங்களில். போதும் சார்!

மாதவனின் குடிகார நடிப்பு அற்புதம். அவரின் அந்த நடிப்பை "பார்த்தாலே பரவசம்" படத்திலேயே கவனித்திருக்கிறேன். (டேய், என்னடா பேர் எல்லாம் சொல்லி கூப்பிடறே?அவன் எவ்வளவு கருப்பு தெரியுமாடா? என் பக்கத்துல நிக்க முடியுமாடா அவன்?), அவர் நன்றாய் குடிகாரராய் நடிப்பார் என்பதற்காக, வெனீஸ் வந்த பிறகும் அவர் தண்ணீரிலேயே மிதப்பது போல் காட்டியது எல்லாம் ரொம்ப ஓவர். தன் காதலி அடுத்தவனிடம் ஊர் சுற்றுகிறார்,  இதனால் அவருடனான தன் திருமணத்தை முறித்துக் கொள்ள வரும் ஒருவர் இப்படி போதையிலா உழல்வார்? டூ மச்! அதிலும் ஒரு கன்னிப் பெண்ணின் மேல் சந்தேகப்படும் அந்த கேரக்டர், மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு டைவர்சியிடம் அவள் இரண்டு பாடல்கள் பாடி விட்டார் என்பதற்காக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். சேட்டை தானே? ஆனால் அதை எல்லாம் நம்மை யோசிக்க விடாமல் அதையெல்லாம் சாமர்த்தியமாய் காமெடியால் மறைத்து விடுகிறார் எழுத்தாளர் கமல். (அப்புறம் நீ எப்படி கண்டுபுடிச்சேன்னு கேக்க கூடாது!! ஆமா!)

த்ரிஷாவுக்கு நிறைய்ய வேலை இல்லை. இருந்தாலும், சென்னையில் வளர்ந்த தமிழ் நடிகை, அதிலும் தமிழில் கவிதை எழுதும் நடிகையின் பாத்திரத்தை நடிப்பது, சென்னையில் வளர்ந்தும் தமிழே அதிகம் பயன்படுத்தாத த்ரிஷாவுக்கு கஷ்டமாய் தான் இருந்திருக்கும். குஷ்புவை காட்டி கமல் த்ரிஷாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்! நல்ல எடுத்துக் காட்டு, ஆனால் காலக் கொடுமை. வித விதமாய் உடை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு நடிகையின் பாத்திரத்தை கச்சிதமாகவே செய்திருந்தார். ஒரு நடிகையின் கார் மோதியிருக்கும் வேளையிலும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஒரு நடிகையாய் இருப்பதற்கான விலையை அழகாய் எடுத்துக் காட்டுகிறது. த்ரிஷாவின் குரல் நன்றாய் தான் இருக்கிறது. ஏன் அவர் டப்பிங் செய்வதில்லை என்று புரியவில்லை. அவரின் குரலில் பேசும் (பாடும்?) கமலின் கவிதையின் பின்னணி ஒரே இரைச்சல்! ஒரு வேலை தியேட்டரின் கோளாறாக இருக்கலாம். பாடல்களும் ஒன்றும் மனதில் நிற்கவில்லை. இன்னும் அதிகம் கேட்கவில்லை என்பதே உண்மை. (எல்லாம் இந்த இளையராஜாவை சொல்ல வேண்டும், மனிதர் எந்த புது பாடல்களையும் கேட்க விட மாட்டேன் என்கிறார்). அது தவிர இந்தக் கவிதை இந்தப் படத்திற்கு எழுதியதா, அல்லது கோர்த்ததா என்று தெரியவில்லை. கமலின் இந்தக் கவிதையை விட அவர் தீபாவளி அன்று காஃபி வித் அணுவில் பாடிய வெண்பா(க்கள்) என்னை ஆச்சர்யப்படுத்தியது! 

சங்கீதாவைப் பற்றி சொல்லாமல் மன்மதன் அம்பு நிறைவடையாது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாய், ஒரு டைவர்சியாய், ஒரு ஹை ஃபை சொசைட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணாய் மிக கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கொடுத்த பாத்திரத்தை அனாயாசமாய் செய்திருக்கிறார் என்று தோன்றியது. மாதவன் பாத்ரூம் போக வேண்டும் என்றதும், ஒண்ணா, ரெண்டா என்று கேட்பதும், பிறகு நிலைமையை உணர்ந்து, என் பையன்கிட்ட கேட்டு கேட்டு, உங்க கிட்டயும் அப்படியே கேட்டுட்டேன் என்று வழிவதும், சோ ஸ்வீட்! த்ரிஷாவின் பாடிகாட்டும் கலக்கியிருந்தான். 

முக்கியமான ஒருவரை மறந்து விட்டேன். ஓவியா! கமல் படம் என்றது ஆசையாய் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு துணை நடிகை கூட நடிக்க ஒப்புக் கொள்ளாத ரோல். பாவம் அவர். நான் இந்தப் பதிவை போட்ட பிறகு இவரின் ஞாபகம் வந்தது, அதனால் மறுபடியும் பதிகிறேன்.

படம் பார்த்து விட்டு கடைசியில் எனக்குத் தோன்றியது, மன்மதன் அம்பு போன்ற படங்களை எடுக்க ஆயிரம் பேர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஒரு உலக நாயகனாய் இருந்து கொண்டு, ஒரு மணி நேரத்துக்குள் ஒன்பது கதைகள் சொல்லும் தன்மை கொண்ட  கமலஹாசன் உலகத் தரமாய் ஒரு தமிழ் படத்தை தருவது எப்போது?