ஞாயிற்றுக் கிழமை. மணி இரவு 1. youtube ல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். phone வந்தது. மாமா தான். ஒரு வேலையாய் பூந்தமல்லி வரை போக வேண்டி இருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு, பாண்ட்டுக்கு மாறினேன். அன்று இரவு தான் முடி வெட்டி இருந்தேன். shampoo போட்டு தலைக் குளித்து இருந்ததால், முடி சொன்ன பேச்சையெல்லாம் கேட்டது. இஷ்டத்துக்கு வகுடு எடுத்து சீவி சீவி கலைத்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியை பார்த்து தன்னையே ரசித்துக் கொள்ளும் எந்தப் பிள்ளையயும் அம்மாக்களுக்குப் பிடிப்பதில்லை. "டேய், ராத்திரி ஒரு மணிக்கு உனக்கு என்னடா அழகு வேண்டிக் கெடக்கு? லைட்டைப் போட்டு என் தூக்கத்தையும் கெடுத்துட்ட இருக்க? பேசாம பட்றா" என்றாள். "நான் வெளியே போறேன்!" என்றேன். "என் தப்பு தான், நான் புள்ளைய பெத்துருக்கனும், பேய பெத்தா இப்படித் தான். எங்கையாவது போயித் தொலை, லைட்டை அணை!" என்று அங்கலாய்த்தாள். எரிச்சலாய் வந்தது எனக்கு.

சீப்பைத் தூக்கிப் போட்டு, பைக் சாவி, ear phone, cap எடுத்துக் கொண்டு கிளம்பினேன். தாம்பரத்திலிருந்து சென்னை பைபாஸ் பிடித்தால் 20 நிமிடத்தில் பூந்தமல்லி. காதில் head phone ல் "என்றென்றும் புன்னகை", cap ஊடே முடி கோதும் காற்று, ரசித்து பைக்கை முறுக்கினேன். காற்றின் வேகம் தலையில் இருந்த cap ஐ கழட்டப் பார்தது. காற்றுக்கும் எனக்கும் இருந்த அந்தப் போட்டி நன்றாக இருந்தது. சென்னையில் பைக் ஓட்ட சிறந்த நேரம் இரவு தான். அதுவும் நவம்பர், டிசம்பரில் அந்த மெல்லிய பனியில், காதில் ear phone மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே மெல்ல ஊரைச் சுற்றி வருவது ஒரு சுகம். அதுவும் ரிங் ரோட் என்றால் சும்மா பறக்கலாம். அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்த படி சென்று கொண்டிருந்தேன்.

அப்போது தூரத்தில் ஒருவன் நடந்து போவதைப் பார்த்தேன். ஒரு மாதிரி லுங்கியை மடித்துக் கட்டி கையில் சில சாமான்களை வைத்திருந்தான். "இந்த இடத்தில் ஏன் நடந்து கொண்டிருக்கிறான்? இப்படியே எவ்வளவு தூரம் நடப்பான்?" என்று தோன்றியது. அவன் அவ்வப்போது திரும்பி வண்டி ஏதும் வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தான். என் வண்டியை தூரத்தில் பார்த்ததும், கையை உயர்த்தி லிஃப்ட் கேட்க ஆரம்பித்தான். எனக்கும் இரக்க குணம், உதவும் எண்ணம் எல்லாம் இருந்தாலும், இந்த மாதிரி சமயத்தில், இந்த மாதிரி ரோட்டில், முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு உதவுவது எல்லாம் வேண்டாத வேலை. அதனால் அவனைக் கண்டு கொள்ளாமல் கடந்தேன். ஆள் கருப்பாய், ஒல்லியாய், கூலி வேலை செய்பவன் போல் இருந்தான். அவன் கையில் வைத்திருந்த சாமானில் ஒரு ரம்பமும், சுத்தியும் இருந்தது. வண்டியை வேகமெடுத்தேன். அவன் ஒரு வித ஏமாற்றத்தில் என் வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது rear view mirror ல் பார்த்தேன். பாவமாய் இருந்தாலும் ஆள் ஒரு மார்க்கமாய் இருப்பதால் பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அவனை விட்டு ஒரு நூறு மீட்டர் வந்திருப்பேன், காற்றுக்கும் எனக்கும் நடக்கும் போட்டியில் இந்த முறை காற்று வென்றது. தலையிலிருந்து என் cap சட்டென்று பின்னால் பறந்தது. வண்டியை நிறுத்தி விட்டு cap ஐ எடுக்கத் திரும்பினால் அந்த ஆள் என் cap எடுத்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும், அவன் "cap லூசா இருக்கு போல, காத்துல அடிச்சிருச்சு" என்றான். நான் தலையைசைத்துக் கொண்டே, cap ஐ வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தர்மசங்கடமாய் உணர்ந்தேன்.

"எங்க போறீங்க?" என்றேன்.

"டோல்கேட் ல விட்டா போதும்." என்றான்.

"சரி வாங்க" என்று நடந்தேன். அவன் பின்னால் நடந்தான். அடுத்த நொடி அவன் கையில் உள்ள சுத்தியால் என் பின் மண்டையில் பலமாய் ஒரு அடி. இல்லை. அப்படி எனக்கு ஒரு பிரமை. திரும்பிப் பார்த்தால் பாவமாய் நடந்து வந்து கொண்டிருந்தான்.

"இந்த நேரத்துல, இந்த ரோட்ல தனியா போறீங்க?" என்றேன்.

"அஹ்..என் கூட்டாளியோட தான் வந்தேன். அவனுக்கு என்னமோ அவசரமா ஜோலி ஒன்னு வஞ்ச்சுன்னு எதுனா வண்டிய புட்ச்சி போன்னுட்டான்."

cap ஐ tight செய்து தலையில் போட்டு அமர்ந்து வண்டியை எடுத்தேன்.

அவன் பின்னால் சற்று தள்ளியே உட்கார்ந்து கொண்டான்.

பாட்டை நிறுத்தி, ear phones ஐ கழுத்தில் போட்டுக் கொண்டேன். அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசினாலும் காற்றில் சரியாய் கேட்காது. அவனும் எதுவும் பேச்சு கொடுக்கவில்லை. கண்ணாடியில் பார்க்கும்போது, எதிர்க்காற்றை அனுபவித்தபடி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டே வந்தான். வண்டியை வேகம் எடுத்தேன்.

இந்த ரோடு எப்போதும் காலியாகத் தான் இருக்கும். அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு. லாரிகளும் இல்லை. அவன் நினைத்தால் என்னை அடித்துக் கொன்று, பொறுமையாய் ரம்பத்தால் துண்டு துண்டாய் அறுத்து போட்டாலும் அங்கே கேட்பாரில்லை. "ஒரு பைக், கொஞ்சம் பணத்துக்காக சுத்தி எடுத்து கொல்லும் அளவுக்கு துணிவார்களா?" என்று ஒரு எண்ணம் தோன்றி, பின் தினமும் பேப்பரில் இதை விட கேவலமான விஷயத்திற்கு எல்லாம் அடித்துக் கொண்டு சாகும் செய்திகள் கண் முன் வந்து மறைந்தன. ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் கூட இன்னொரு மனிதனுக்கு எதிரி தான் என்ற நினைப்பு மேலும் பயமுறுத்தியது. இப்படி மண்டையில் திகலாய் என்னன்னமோ எண்ணம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. "எப்படா டோல்கேட் வரும்!" என்று இருந்தது. ஒரு கணம் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாய் பார்த்துக் கொண்டோம். அப்போது எதிர்காற்று அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் தீர்க்கமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. எனக்கு உள்ளே ஏதோ பிசைந்தது. அந்த நொடியில் எதிர்பாராமல் வலது பக்கத்தின் divider ல் இருந்து திடீரென்று ஒரு நாய் ரோட்டில் பாய்ந்தது. என்ன ஏது நடக்கிறது என்று என் மூளைக்கு எட்டுவதற்குள் அனிச்சை செயலாய் வண்டியின் எல்லா ப்ரேக்குகளையும் ஒரே நேரத்தில் அழுத்தினேன். வண்டியில் உள்ள disc break திடுமென்று விழித்து வண்டி balance தவற நான் முன்னால் தூக்கி எறியப்பட்டேன். கைகளிலும் கால்களிலும் சிராய்த்து, இரண்டு முட்டியிலும் செமையாய் வலித்தது. விழுந்த வேகத்துக்கு, நான் இன்னும் சுயநினைவோடு இருப்பதே எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

மெல்ல எழுந்து உட்கார்ந்து கைகளில் உள்ள சிராய்ப்புகளைப் பார்த்தேன். மண் படிந்த தோல் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாய் இருந்தது. முட்டியில் பேன்ட் கிழிந்து ரத்தம் தோய்ந்திருந்தது. மெல்ல எழுந்தேன். வலிக்கிறது, ஆனால் நிற்க முடிகிறது. வண்டி எங்கோ ஓரமாய் கிடந்தது. Cap எங்கே விழுந்ததோ தெரியவில்லை. அந்த ஆள் தூக்கி வந்த பை, சுத்தி, ரம்பம், மற்ற சாமான்கள் சிதறிக் கிடந்தன. அவன் மல்லாக்கக் கிடந்தான். அவன் அருகில் சென்றேன். அவன் உடம்பில் ஒரு அடியும் இல்லை. அவன் பின் மண்டை தான் பிளந்து கொலகொலவென்று இருந்தது.

0 Responses