தமிழ் ஸ்டூடியோ நடத்திய "பாலுமகேந்திரா" குறும்பட விருது வழங்கும் விழா நேற்று கோடம்பாக்கத்தில் BOFTA [Blue Ocean Films Technology & Academy] பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தது.  என்னை போன்ற ஒரு சினிமா ஆர்வலனுக்கு பாலுவின் பெயரில் விருது வாங்குவதை விட சிறப்பு ஒன்று இருக்க முடியாது.



இந்த விருது அறிவிக்கப்பட்டதும், "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிரதீப் குமாரா? என்று ஆர்வம் போங்க, என்னுடைய [என் இயக்கத்தில் உருவான] குறும்படங்களான "விடியல்", "தமிழ் கிஸ்", "பச்சா பையா" ஆகியவைகளை சமர்ப்பித்து விட்டேன். மூணுல ஒன்னாவது தேறாதா என்ற நப்பாசை தான். சமீபத்தில் வெளியிட்ட "Article 39" படமும் தாயாராய் இருந்ததால் அதையும் சமர்ப்பித்தோம். ஆக இந்த போட்டியில் என் படங்கள் மட்டும் நான்கு :-)

எடிட்டர் லெனின் அவர்கள் முதல் சுற்றுக்கான பதினாறு படங்களை தேர்ந்தெடுத்தார். அதில் ஒன்று "Article 39(F)"! சனிக்கிழமையே, முதல் சுற்றுக்கு தேர்வான பதினாறு படங்களில் "Article 39" தேர்வானது குறித்து அலைபேசியில் அழைத்து சொன்னார்கள். ஞாயிற்றுக் கிழமை 1:30 மணிக்கு அந்த பதினாறு படங்களும் சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, BOFTA நிறுவனர் தனஞ்செயன், எடிட்டர் லெனின் [ஜூரி] முன்னர் திரையிடப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு மணிக்கே "Article 39" க்ரூ ஆஜர். ஆனால், ஏதோ சூப்பர் ஸ்டாரின் முதல் நாள் ஷோ போல், தியேட்டர் ஃபுல். !. உள்ளே நிற்க இடமில்லை.  படங்கள் இன்னும் திரையிட ஆரம்பிக்கவில்லை. "என்னடா இப்படி ஆகிவிட்டதே! நம் படத்தை திரையில் பார்க்க முடியாமல் போய் விடுமோ? "என்று ஸ்க்ரீனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது லெனின் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை கூட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த என் மீது அவரின் கண்கள் நின்றது. ஒரு புன்முறுவல். "எனக்கு அவரை தெரியும், அவருக்கு என்னை தெரியாதே!" என்று நான் முழித்துக் கொண்டே "வணக்கம் சார்" என்றேன், என் அருகில் வந்து என் தோளில் கை வைத்து நின்று "ரொம்ப நல்ல நடிச்சுருக்கே! அருமையா இருந்தது. ஆமா, இத்தனை படமா எடுப்பே? என்றார்!" எனக்கு ஒரு நிமிடம் தலை கால் புரியவில்லை. "ரொம்ப நன்றி சார்" என்று வாயில் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு என்னமோ அங்கேயே அப்போதே அவார்ட் கிடைத்து விட்டது போல் இருந்தது. அவ்வளவு பெரிய மனிதர், இத்தனை படங்களை பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார் என்றால், இதை விட வேறு என்ன வேண்டும். புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அவருக்கு பின்னால் வந்த ஒருவர், கை கொடுத்து, "உங்க எல்லா படத்தையும் பாத்தாரு, ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க" என்றார்.


பிறகு தமிழ் ஸ்டூடியோ அருண் என்னை பார்த்து விட்டு, "படத்துல நடிச்சுருக்கீங்களா? சீக்கிரம் வரச் சொன்னேன்ல?" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டார். அருண், நான் 1:30 நிகழ்ச்சிக்கு 1 மணிக்கே வந்துருக்கேன் என்றேன். "நிகழ்ச்சி காலையில 10 மணியில இருந்து!" என்று புள்ளி வைத்தார். பிறகு அவர் லெனின் ஐயாவை சாப்பிட அழைத்தார். சாப்பிட கீழே இறங்கியவர் என்னை பார்த்து கையால் "வா" என்று சைகை செய்து கொண்டே முன்னால் போனார். நான் நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே போனேன். அவர் அருகில் என்னை அமர வைத்து மறுபடியும் பாராட்ட ஆரம்பித்தார். "எல்லா படங்களும் பாத்தேன், அதெல்லாம் வேற யாரோ டைரக்ட் பண்ணி இருக்காங்க போல, இது தான் சிறப்பா இருந்தது!" என்றார். அதெல்லாம் ஆரம்ப காலத்துல நானே பண்ணதுங்க, இது பாலாஜி டைரக்ட் பண்ணார் என்று அருகில் இருந்த இயக்குனரை கை கட்டினேன். அவ்வளவு நேரம் அவர் அருகில் இருந்ததையே நான் மறந்து விட்டேன். பாலாஜி மன்னிப்பாராக! பிறகு அவரையும் பாராட்டினார். போட்டிக்கு வந்த 65 குறும்படங்களில் 16 தேர்வு செய்ததாக சொன்னார். "65 படம் எப்படி சார் பாத்தீங்க?" என்றதற்கு, "படம் பாக்க தான் நமக்கு எப்பவுமே புடிக்குமே, கின்னஸ் ரெக்கார்டுக்கே கொடுக்கலாம் அத்தனை குறும்படங்களை பாத்துருக்கேன் என்றார்! பிறகு நல்ல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல படங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அத்தனை பேச்சுக்களிடையிலும் "நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டார்.

அதோடு விடாமல் உள்ளே சென்று உட்காரும்போது என்னை கையோடு கூட்டி போய் அவர் அருகே அமர்த்திக் கொண்டார். அங்கே மக்கள் நிற்க இடம் இல்லாமல் இருக்கும்போது நான் சொகுசாய் ஒரு சேரில் அமர்ந்து கொண்டது எனக்கே கொஞ்சம் உறுத்தியது. நல்ல வேலையாய் லீனா வந்து விட்டதால், அருண் வந்து விரட்டுவதற்குள், நான் இடத்தை காலி செய்து எழுந்து நின்று கொண்டேன்.

பதினாறு படங்களும் திரையிட்டு முடிந்ததும், மாலை ஆறரை மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. கார்த்திக் சுப்பாராஜ், மாலன், லீனா, சாரு, லெனின் மற்றும் தனஞ்செயன் எல்லோரும் இந்த நிகழ்வை பற்றியும், குறும்படங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும், அதன் முன்னேற்றங்களை பற்றியும் எடுத்துரைத்து பேசினார்கள்.

சாரு, லீனா, தாங்கள் பார்த்த பதினாறு குறும்படங்களில் இருந்த குறை நிறைகளை மேலோட்டமாய் எடுத்துரைத்தார்கள். வணிக சினிமா சுற்றி இருக்கும் அத்தனையும் அழித்து வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, குறும்படங்கள் தான் இலக்கியத்துடன் ஒரு நட்பை வளர்த்துக் கொள்கிறது என்பது ஆறுதலாய் இருப்பதாய் லீனா ஒரு கருத்தை முன் வைத்தார். அதோடு குறும்படங்களுக்கே உரிய மெலோட்ராமா, செண்டிமண்ட், க்ளிஷேடாய் இருப்பதையும், இவைகளில் எந்தப் படமும் இன்னும் ஒரு முழுமையான கலை வடிவம் என்று சொல்வதற்குரியதாய் இல்லை என்றும் குறிப்பிட்டார். சாரு, மாற்று சினிமா மேல் தனக்கு உள்ள பயத்தையும், இசையை சரியாய் உபயோகப்படுத்துங்கள், ஐரோப்பிய சினிமாக்களை பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேச வந்த லெனின் அவர்கள் தன் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான மொழியில் ஒரு கொண்டாட்ட மனநிலையில் பேசி எல்லோரையும் அந்த மனநிலைக்கு கொண்டு சென்றார். வகுப்பில் மாணவனை கேள்வி கேட்டு எழுப்பும் ஆசிரியரை போல் தான் படத்தில் பார்த்து அவர் மனதில் பதிந்த உருவங்களை எழுப்பி எல்லோருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கள் குழுவினரை எழுப்பி நல்லதாய் சில வார்த்தைகள் பேசி விட்டு, "அதுக்காக அவங்களை தேர்ந்தேடுதேன்னு நெனைச்சுடாதீங்க!" என்றார்.

எந்தப் படம் வென்றது என்று சொல்லாமல், மேலோட்டமாய் எல்லோரும் நிறை குறைகளை சொல்லிச் சென்றது ஒரு புது அனுபவம். "தேவை இல்லாத இடங்களில் இசையை போட்டு ஏன் கொல்கிறீர்கள்?" என்று சாரு சொல்லும்போது அவர் எந்தப் படத்தை பற்றி பேசுகிறார் என்று தெரியாமல், அதை ரசிப்பதா, இல்லையா என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அது ஒரு பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.

ஒரு வழியாய் அனைவரும் பேசி முடித்து, விருதுக்கான படங்கள் அறிவிக்கப்பட்டது. "கண்காணிப்பின் மரணம்", "ஆயா" ஆகிய படங்கள் முதல் இரண்டு இடத்தையும், "ஞமலி", "Article 39 (F)" சிறப்பு பரிசுகளை வென்றது. எங்களை பொருத்தவரை, பங்கு பெற்றதே முதல் வெற்றி! முதல் சுற்றில் வெற்றி பெற்றது அடுத்த வெற்றி. அதன் பிறகு, லெனின் போன்ற ஒரு ஆளுமை எங்களை அருகில் அமர்த்தி பேசுவது பெரிய வெற்றி. இதற்கு மேல் விருது வேறு கொடுத்தால் அதை போனஸாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்! "இதோடு எப்படி உங்களை விடுவது?" என்பது போல், சமீபத்தில் கார்த்திக் சில குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்ட "பெஞ்சு டாக்கீஸ்" படத்தை போல் வெற்றி பெற்ற நான்கு படங்களையும் ஒன்றிணைத்து வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில்; வெள்ளித் திரையில் - Article 39 (F)! இப்படித் திணற திணற...:-)







இத்தனை செலவு செய்து, இத்தனை உழைப்பை சேர்த்து, இப்படி ஒரு விருதை வழங்குவதால் தமிழ் ஸ்டூடியோவுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. "நாட்டுக்கு உழைக்கிறேன்!" என்றாலே வீட்டில் திட்டுவார்கள்; தமிழ் ஸ்டூடியோ குழுவினர் "நல்ல சினிமாவுக்கு உழைக்கிறேன், அதற்காக இத்தனை பணத்தை செலவழிக்கிறேன்!" என்று இத்தனை வேலைகளை செய்கிறார்கள் அவர்கள் வீட்டில் எப்படி அவர்களுக்கு சோறு போடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை க்ளிஷேடாய் போய் விடும் :) அதிலும் அருணிடம் சென்று நன்றி என்று என்ன ஆரம்பித்தாலும் மனிதர் சுட்டு பொசுக்கி விடுவதை போல பார்க்கிறார். எதுக்கு வம்பு?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன்,

பாலுமகேந்திரா நல்ல படங்களையும், நல்ல மாணவர்களையும் சினிமாவிற்கு விட்டுச் சென்றிருக்கிறார்  - உத்தம கலைஞன்! 
4 Responses
  1. Anonymous Says:

    படித்து மகிழ்ந்தேன். நன்று. அடுத்து வெள்ளித்திரையில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.


  2. Unknown Says:

    superb G vaalththukkal


  3. Anonymous Says:

    வருகைக்கு நன்றி. யாரென்று தெரிகிறதா?


  4. Peace Says:

    Congratulations!