மறுநாள் ஸ்ரீ நகரை சுற்றிப் பார்க்கத் திட்டம். ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரம். ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் குளிர் கால தலைநகரம். இப்படியாக இந்த மாநிலத்துக்கு மட்டும் இரண்டு தலை நகரங்கள். ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஒரு குன்று தெரிந்தது. அதன் மேல் ஒரு கோவில். அதை தான் முதலில் பார்க்கப் போகிறோம் என்று சன்னி முன் தினமே சொல்லி வைத்திருந்தான். அது சங்கராச்சாரியார் கோவில். ஆதி சங்கரர் ஒரு காலத்தில் அங்கு தவம் செய்த போது உருவான கோவில். கோவில் செல்லும் வழி குறுகலாய் இருந்ததால் சன்னி எங்களை முக்கால் தூரத்தில் இறக்கி விட்டு தரிசித்து வரச் சொன்னான். கையில் காமெரா, உணவு பொருட்கள் என்று எதுவும் கொண்டு செல்ல முடியாது. குழந்தைகளுக்காக மட்டும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மலையேறினோம். குன்றின் மேல் இருக்கிறோம் என்று தான் பெயர், வெயில் கொளுத்திக் கொண்டு தான் இருந்தது. இன்னும் கோவில் எவ்வளவு தூரம் என்று வருவோரிடம் கேட்டதும், "இதற்கே இப்படி என்றால் கோவிலுக்கு முன்னூறு படி ஏறனும் என்ன செய்வீர்கள்?" என்று குண்டை தூக்கிப் போட்டார்கள். ஆதி சங்கரர் மேல் எனக்கு கொலை வெறி உண்டானது! கீழே அவ்வளவு இடம் இருக்கு?! இந்த மலை மேல வந்து தான் தவம் பண்ணனுமா? என்று நற நறத்துக் கொண்டே படியேறினேன்.



[விக்கி]
மலையின் உச்சியில் உள்ள அந்தக் கோவிலில் இருந்து ஸ்ரீநகர் மிக அழகாய் தெரிந்தது. எந்த ஒரு இன்பமும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் தான் கிடைக்கும் போலும்?! அங்கு ஒரு மரத்தடியில் இளைப்பாறிவிட்டு எங்கள் வண்டி உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காஷ்மீர் அரண்மனை ஒன்று பார்ப்பதாக இருந்தது. அந்த வழியில் டிராப்பிக் ஆகி விட்டதால் சன்னி எஸ்கேப் ஆகி எங்களை கீழே கடத்தி வந்து விட்டான். வண்டி அடுத்ததாய் முகல் கார்டனுக்கு சென்றது. நான் முன்னமேயே சொன்னது போல் இந்த மாதிரி கார்டன்களை பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தும் குடும்பத்துடன் சென்று விட்டு அதிரடி முடிவகள் எதையும் எடுக்க முடியாது. சன்னி கடிவாளம் கட்டிய குதிரை போல் எங்கு எல்லோரும் வழக்கமாய் போவார்களோ அங்கே தான் போனான். கேட்டதற்கு, "நீங்கள் பல கார்டன்களை பார்த்திருக்கலாம், எங்கள் காஷ்மீரில் கார்டன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!!" என்று மார் தட்டினான். அவனை சொல்லி குற்றமில்லை.





சரி என்று முகல் கார்டனுக்குள் நுழைந்தேன். விடுமுறை மற்றும் கோடை காலம் ஆதலால் செம கூட்டம். பல வித இயற்கை வனப்பை ரசித்த பிறகு, இந்த கார்டனில் சரியாய் இலைகள் வெட்டப்பட்ட செடிகள், சமன்படுத்தப்பட்ட புல்தரைகள், நீருற்றுக்கள் என்று எல்லாம் செயற்கை அழகு! இருந்தும் அழகு தானே...அங்கு ஒரு ஊற்று இருந்தது. எல்லோரும் அங்கு வரும் தண்ணீரை பிடித்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்தத் தண்ணீரை தான் ஜவஹர்லால் நேரு குடி தண்ணீராக பயன்படுத்தினாராம். கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறிவிட்டு, நிஷாத் கார்டன் என்று இன்னொரு இடத்திற்கு சென்றோம். அதற்குள் மதியம் ஆகிவிட, எல்லோருக்கும் பசித்தது. காஷ்மீரின் ஸ்பெஷல் உணவான மட்டன் ஷோர்பா சாப்பிட்டு பார்க்க வேண்டும், பிறகு நம்கீன் சாய் [அதாவது உப்பு போட்ட டீ!] குடிக்க வேண்டும்  என்று ஆசை. ஆனால் சன்னி, அது கிடைக்கும் ஹோட்டல்  வேறு வழியில் இருப்பதாலும், அவன் கட்டிய கடிவாளத்தில் அந்தப் பாதை தெரியாது என்பதாலும் நாளை கூட்டி செல்கிறேன் என்று கவிழ்த்து விட்டான். எதோ ஒரு தாபாவில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டோம்.



பிறகு பொட்டானிக்கல் கார்டன். என் மாமா மகன்  நிறைய பூங்காக்களுக்கு செல்ல இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று கிரிக்கெட் பேட் கொண்டு வந்திருந்தான். நல்ல புல் தரையில் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை போட்டோம். ரிசார்ட்டில் கிடைத்த அதே அனுபவம், இரண்டு பேர் பால், பேட் வைத்துக் கொண்டு நின்றால் போதும், எங்கிருந்து தான் வருவார்களோ, ஒரு குட்டி கூட்டமே சேர்ந்து விட்டது.  அதில் ஒரு சுள்ளான் பயங்கரமாய் விளையாடினான். இழுத்து இழுத்து அடித்து எங்களை நாக்கு தள்ளி ஓட விட்டான். நாங்கள் போதும் என்று புறப்பட்டதும் அவன் முகம் வாடி விட்டது.


அதை முடித்துக் கொண்டு கிளம்பிய போது வழியில் ஒரு பெரிய பலூன் உயர பறந்து கொண்டிருந்தது. தருவை அதில் ஏற்றினால் சந்தோஷப்படுவாள் என்று நினைத்து உள்ளே போனோம். தரையில் இருந்து கிளம்பி ஒரு இருபது அடி மேலே போய், அங்கே ஒரு நிமிஷம் நின்று விட்டு மறுபடியும் கீழே இறங்கி விடும்.இதற்கு ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய்! இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தான் செல்ல முடியும். சரி வந்தது வந்து விட்டோம், நாமாவது செல்வோம் என்றால் அதற்கும் பெரிய வரிசை. அட போங்கப்பா என்று கிளம்பிவிட்டோம். அந்த பலூன் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்ல ஆளுக்கு இருபது ரூபாய் டிக்கட் வேறு! இருநூறு ரூபாய் தண்டம்...வெளியே வந்ததும் ஒரு பலூன்காரனிடம் தருவுக்கு ஒரு பலூன் வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்! பத்து ரூபாயில் முடிந்திருக்க வேண்டியது...ம்ம்ம்ம்!

அங்கிருந்து கிளம்பி ஷாப்பிங் சென்றோம். காஷ்மீர் புகழ் கம்பளங்கள், குர்தாக்கள், புடவைகள், ஸ்வட்டர்கள், பாஷ்மினா ஷால்கள் என்று நிரப்பி வைத்திருந்தான். விளையும் கம்மியாய் தான் தெரிந்தது. நாங்கள் பாஷியான ஷால், புடவை, ஸ்வட்டர், மரத்தால் ஆனா படகு வீடுகள், கீ செயின்கள் என்று முடிந்த வரை அள்ளிக் கொண்டோம். [இந்த வரியை எழுத ஒரு நிமிடம் ஆகவில்லை, ஆனால் அந்த வேலை முடிய...ஷபா!] பாங்க் பாலன்ஸ் இளைத்தது; நெஞ்சு வலித்தது! பட், பேமிலி ஹாப்பி அண்ணாச்சி! அன்றைய நாளை மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டோம், தங்கி இருந்த இடத்துக்கு திரும்பினோம். மறுநாள் இடத்தை காலி செய்து விட்டு குல்மார்க் புறப்பட வேண்டும்.

சுற்றுவோம்...
1 Response
  1. Anonymous Says:

    Next time put Sunny's photo also
    -- KRS