அப்படியே வருடத்திற்கு பத்து டூர் அடிக்கவில்லை என்றாலும், எனக்கு பாக்கேஜ் டூர்கள் பிடிப்பதில்லை. அவர்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள். செக்கு மாடு போல் ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு வண்டி இருக்க வேண்டும், இஷ்டம் போல் சுற்ற வேண்டும், அப்போது தான் அந்த இடம், அந்த மக்கள், அங்கு உள்ள வாழ்க்கை முறையை சரியாய் அறிய முடியும். கிட்டத்தட்ட ஹிப்பிகள் மாதிரி சுற்றிப் பார்க்க வேண்டும். [இந்த அறிவெல்லாம் கல்யாணத்திற்கு முன் வராது!] ஆனால் அதை குடும்பத்தோடு செய்ய முடியாது. அதனால் பாக்கேஜ் டூர் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.

நான் வண்டியில் ஏறியதில் இருந்து சன்னியிடம் இதைத் தான் சொன்னேன். "எல்லோரும் போகும் இடங்களுக்கு என்னை கூட்டிப் போகாதே. பொட்டானிக்கல் கார்டன், நிஷாத் கார்டன் என்று பாக்கேஜில் இருந்தது. இந்த பட்டாணி, பொரிகடலை கார்டன் எல்லாம் எங்கள் ஊட்டியிலேயே இருக்கிறது. எனக்கு எந்த "மேன் மேட்" இடங்களும் தேவையில்லை. இங்கு இயற்கையை தான் நான் பார்க்க வேண்டும்!" என்றேன். அவனுக்கு குபீல் என்று இருந்தது, அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பேக்கேஜ் டூர்களில் இது சாத்தியமில்லை என்று எனக்குத் தெரியும். ஏன் என்றால் அவர்கள் வண்டியை எடுக்கும்போதே எங்கெல்லாம் போக வேண்டும், எத்தனை கிலோ மீட்டர் ஆகும், எத்தனை லிட்டர் டீசல் போட வேண்டும், எவ்வளவு கூலி, லாபம் என்று சகலத்தையும் ஏற்பாடு செய்து கொண்டு தான் வருவார்கள். இருந்தாலும் சில டிரைவர்கள் "கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆகும், நான் கூட்டிப் போகிறேன்!" என்று சொல்லலாம். அதனால் கேட்டுப் பார்த்தேன். சன்னி சரி என்றும் சொல்லவில்லை, முடியாது என்றும் சொல்லவில்லை.

சென்னையில் இருக்கும்போது நான் தினமும் அதிகாலை எட்டு, எட்டரைக்கு துயில் எழுவேன். இந்த மாதிரி வெளியிடங்களுக்கு போனால் ஐந்து, ஆறு மணி! அந்த வெளியூரின் காலையை நான் முதலில் அனுபவிக்க வேண்டும். முதல் நாள் இரவே, ஆறரை மணிக்கு அறைக்கு டீ வரும் என்று சொல்லி இருந்தார்கள். நான் ஆறு மணிக்கு என் மனைவியை கூட்டிக் கொண்டு, காமெராவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். என் அம்மாவும் விழித்திருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். வெளியே செம குளிர். ஒரு பத்து டிகிரி இருக்கும். ரிசார்ட்டுக்கு அருகில் மரங்கள் அடர்ந்த ஒரு மலை. அதை ஒட்டி ஒரு ஒத்தையடிப் பாதை ஒன்று போனது. அதில் நடந்தோம். சில அடிகள் எடுத்து வைத்ததும் வலது புறம் ஒரு பெரிய பனி மலை. கடந்து சிறிது தூரம் சென்றதும், கீழே ஒரு சாலை. அதை ஒட்டி ஒரு தெளிந்த நீரோடை. அதன் சல சல சத்தம், பறவைகளின் இரைச்சல், சுத்தமான காற்று. பார்த்துக் கொண்டே இருந்தோம். நீங்களும் பாருங்கள்...




அன்று மாலை அந்த நீரோடைக்கு அருகில் சென்று அமர்வது என்று முடிவு செய்து கிளம்பினோம். ரிசார்ட்டில் டீ வந்து போயிருந்தது. அங்கு குடிக்க சுடு தண்ணீர் கேட்டாலே கொடுக்க மாட்டான், இதில் டீ எங்கிருந்து கிடைப்பது. சரி என்று அன்றைய சுற்றுலாவுக்காக ரெடியாகத் துவங்கினோம். நானே நம்ப முடியாதபடிக்கு என் ரூமில் கீசர் எல்லாம் இருந்தது. அதில் சூடான நீரும் வந்தது. உடம்பில் குத்துவது குளிரா, கொதிக்கும் நீரா என்று புரியாமல் குளித்து முடித்தேன். ஒவ்வொருவராய் ரெடியாக, ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி என்றார்கள். எங்கள் இளவரசியை எழுப்பி அவளுக்கு நாலு லேயர் ட்ரெஸ் போட்டு பார்த்தால் பொதி மூட்டைக்கு கை கால் முளைத்த மாதிரி இருந்தாள். காலை உணவு "ஆளு பரொத்தா" என்று ஞாபகம். ஒரு கட்டு கட்டி முடிப்பதற்கும் சன்னி வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது.

அன்றைய ப்ரோக்ராம் பஹல்காமை சுற்றிப் பார்ப்பது. பஹல்காம் "valley of shepherds" என்கிறார்கள். இந்த சிறு டவுன் "லிட்டர்" நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் வானுயர்ந்த பனி மலை, பசுமை போர்த்திய புல்வெளி, அதை கருத்தாய் மேயும் செம்மறி ஆடுகள், சில்லென்ற சீதோஷணம், தெளிந்த நீரோடை, சுத்தமான காற்று...வேறு என்ன வேண்டும்? அருமையான இடம்.







இந்த ஊரில் ஐந்து முக்கியமான வ்யூ பாய்ண்ட் இருக்கிறது. அதை நம் காரில் சென்று பார்க்க முடியாது. அங்கிருக்கும் லோக்கல் காரை வாடகை  எடுத்துத் தான் சென்று பார்க்க வேண்டும். "சோன்மார்க்", "குல்மார்க்" எல்லா சுற்றுலா தளங்களிலும் இதே கதை தான்! நம் டிரைவர் கருத்தாய் அவர்கள் இருக்கும் இடத்தில் விட்டு விடுவார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கிக் கொள்வார். நல்ல வேளையாக அரசு நிர்ணயித்த தொகையுடன் வாடகை கார்கள் இருந்தன. ஒரு டவேரா (பத்து பேர் அமரும் வண்டி) வாடகை 1850 ரூபாய். லக்கேஜ்களை சேர்த்தால் ஒரு உருளைக்கிழங்கு லாரி தான் வேண்டும். என்ன செய்வது, உள்ளே எங்களை அமுக்கிக் கொண்டோம். அந்த வண்டி மலை மேல் ஒரு ஒற்றையடிப் பாதை மேல் வளைந்து நெளிந்து சென்றது. இந்த அழகில் எதிரில் வரும் வண்டி. இது போதாதென்று வழியில் இருநூறு, முன்னூறு ஆடுகளை கவலையின்றி மேய்த்துக் கொண்டு டிராபிக் ஜாம் செய்து கொண்டிருந்தார்கள். வழியெங்கும் அழகு கொட்டிக் கிடந்தது. ஆங்காங்கே ஒரு சிறிய வியூ பாய்ண்ட் இருந்தது. "ஹே நிறுத்தப்பா!" என்றால், "இங்கெல்லாம் நிறுத்திக் கொண்டிருந்தால் எல்லா இடத்தையும் பார்க்க முடியாது. வரும்போது பார்க்கலாம்" என்று அவன் வண்டியை விட்டான். சரி செம இடத்துக்குக் கூட்டிப் போகிறான் என்று நினைத்தோம். முதல் இடம் வந்தது. இறங்கியதும் குதிரைகளின் சாணத்தின் வாசம் மூக்கைத் துளைத்தது. சுற்றிப் பனி மலைகள் இருந்தாலும், வரும் வழியில் இருந்த அழகு இங்கு கொஞ்சம் கம்மியாகவே இருந்தது. அங்கிருந்து குதிரையில் செல்லலாம் என்றூம் அதற்கு வாடகை ஐநூறு அறநூறு என்றார்கள். ஆளை விடுங்கள் என்று கொஞ்சம் பெரிய புல் தரையாய் பார்த்து ஒதுங்கிக் கொண்டோம்.





அடுத்து "பேதாப் பள்ளத்தாக்கு". "பேதாப்" என்ற ஹிந்திப் படம் அங்கு எடுத்தார்கள், அதனால் அதற்கு அந்தப் பெயர். அந்த இடம் ரொம்ப காமர்ஷியலைஸ் ஆகி இருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அங்கு சிறிது நேரம் கழித்து விட்டு, மெதுவாய் குழந்தைகளுக்கு வேண்டியதை ஊட்டி விட்டு, எங்களுக்கு வேண்டியதை வாயில் போட்டுக் கொண்டு வண்டியில் ஏறினால் அவன் எங்கள் மீது ஏறினான். "என்னடா?" என்றால், "ஒவ்வொரு இடமும் இவ்வளவு நேரம் பார்த்தால் நான் எப்படி அடுத்த சவாரி கூட்டி வருவது, சீக்கிரம் வாருங்கள்!" என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான். "அடங்கொய்யா, ஏண்டா நீங்க ரெண்டு ட்ரிப் அடிக்கிறதுக்காக நாங்க சீக்கிரம் வர முடியுமா?" என்று கேட்டால், அவன் பேசுவதையே பேசிக் கொண்டிருந்தான். "இது தான் டயம், இதற்குள் வர வேண்டும்!!" என்று சட்டம் பேசினான். குழந்தைகள் இருக்கும்போது அப்படித் தான் ஆகும் என்று எவ்வளவோ சொல்லியும் புலம்பிக் கொண்டே அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அது ஒரு சின்ன மலை. அந்த மலையில்  பனி இன்னும் இருந்தது. பனியில்  சென்று நடக்க, அங்கு வாடகைக்கு ஷூ ஒன்று விலை ஐம்பது ரூபாய். பனியில்  பட்டு குளிராமல் இருக்க நீளமான ஜாக்கெட் ஒன்றின் வாடகை நூறு ரூபாய். பனியில் வழுக்காமல் மேலே ஏற ஒரு குச்சி, அதற்கு வாடகை இருபது ரூபாய். உங்களை கைத் தாங்கலாய் கைட் ஒருவன் அந்த மலையின் உச்சி வரை கொண்டு போய் விட ஐநூறு ரூபாய். டிரைவர் வேறு அரை மணியில் வாருங்கள் என்று விரட்டிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் அரைடஜன் வயதானவர்கள் என்பதால், என் மனைவியும், என் மாமா பையனும் [ரஜினிகாந்த் வீடு போஸ்ட்ல படிச்சீங்களே, அவனே தான்!] சென்றார்கள். மற்றவர்கள் தேவுடு காக்க ஆரம்பித்தோம்.  நான் அமெரிக்காவிலேயே பனிச்சறுக்கு வேண்டிய மட்டும் ஆடி விட்டதால் ஒன்றும் சுவாரஸ்யமாய் இல்லை. தரு என்னை வைத்துக் கொண்டு எனக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்! எல்லோரும் போகாததால் அவன் சொன்ன அரை மணியில் போய் வண்டிக்கு அருகில் நின்றோம். நேராய் கீழே கொண்டு வந்து சேர்த்து விட்டான். அங்கிருந்து சன்னி எங்களை பிக்கப் செய்து கொண்டு ரிசார்ட்டில் கொண்டு சேர்த்தான். அவனிடம் இவர்கள் செய்யும் அநியாயத்தை எல்லாம் புலம்பினேன். அவன், "ஒன்றும் செய்வதற்கில்லை. இங்கு இது தான் நடைமுறை, அவர்கள் சம்பாதிப்பது நான்கு மாதங்கள் தான். ஒன்றும் செய்ய முடியாது!" என்றான். "இதற்குத் தான் எல்லோரும் போகும் இடம் வேண்டாம்" என்று சொல்கிறேன் என்று அவனிடம் மறுபடியும் ஒரு பிட்டு போட்டேன். "நீங்கள் கவலைப்படாதீர்கள், நாளை போகும் வழியெல்லாம் உங்களுக்கு என்ன காட்ட வேண்டுமோ பாருங்கள்!" என்று சொல்லி என்னை குளிர்வித்தான்! அன்று இரவு நன்றாய் சாப்பிட்டு விட்டு, நல்ல குளிரில் வெட்ட வெளியில் எல்லோரும் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் அலைந்து திரிந்து ஓய்ந்தது...

சுற்றுவோம்...
மறுநாள் ரயில் ஜம்முவை கடந்ததும் கண் விழித்தேன். ஒரே இரவில் சமதளங்கள் யாவும் பள்ளத்தாக்குகள், தெளிந்த நீரோடைகள், மலை முகடுகளாய் மாறிப் போயிருந்தன.


முகம் கழுவி விட்டு, வாசலில் நின்று ஈரம் தடவிய குளிர் காற்றை அனுபவித்தேன். விடுமுறை தொடங்கிவிட்டது போல் இருந்தது. அப்போது தான் தூரத்தில் முதன் முதலில் பனி மலையை பார்த்தேன். மிகுந்த குதூகலத்துடன் அதை குடும்பத்தினருக்கும் காட்டினேன். ரயில் ஒரு எட்டு எட்டரை மணிக்கு உதம்பூரை அடைந்தது. அங்கிருந்து காஷ்மீர் செல்ல "ஹங்க்ரி பேக்ஸ்" என்ற நிறுவனத்திடம் பேக்கேஜ் டூர் ஏற்பாடு செய்திருந்தோம். பெட்டி, பைகளை தூக்கிக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து காத்திருந்தோம். எங்கள் டெம்போ வந்த பாடில்லை. மாமா டிரைவருக்கு கால் அடித்தால் நான் இங்கே தான் நிற்கிறேன், நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள் என்றார். இத்தனை லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு எங்கே நடப்பது? ஏன் இவர் வந்து ஏற்றிச் செல்லக் கூடாது என்று எரிச்சலாய் இருந்தது. அப்போது தான் அங்கு இருந்த ஒரு டேக்சி ஸ்டாண்டில் இருந்தவர்கள், அவர் இங்கே வந்தால் எங்களுக்கு பணம் கட்ட வேண்டும். இது தான் எங்கள் நடைமுறை. அதை தவிர்ப்பதற்காக அவர் உங்களை வரச் சொல்கிறார் என்றார்கள். அடப்பாவிகளா என்று நொந்து கொண்டே நின்றோம். ஒரு வழியாய் அவர் வந்து அவர்களுக்கு பணம் கட்டி விட்டு எங்கள் சாமான்களை ஏற்றிக் கொண்டார். டிரைவர் ஒரு சர்தார்.

எல்லோரும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் நான் கடைசியில் ஏறினேன். டிரைவர் அருகில் இருந்த சீட்டில் அமரப் போனேன். உடனே வண்டியில் ஒரே சிரிப்பு, சத்தம். என்னவென்று கேட்டதற்கு, நான் முன்னால் உட்காருவேனா இல்லை என் மனைவி அருகில் உட்காருவேனா என்று பந்தயமாம். அடப்பாவிகளா! இத்தகைய பயணங்களில் நான் முன்னால் உட்காருவதையே விரும்புவேன். அதுவும் டிரைவர் அருகில். அப்போது தான் அவரிடம் பேச்சு கொடுத்து அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடியும். ஆனால் இந்த முறை, 5 நாட்கள் அந்த வண்டியில் சுற்றியதில், மிகவும் சொற்பமான நேரமே அந்த இருக்கை எனக்குக் கிடைத்தது. காரணம்,  தரு! அவள் அம்மாவால் மட்டும் அவளை சமாளிக்க முடியவில்லை.

பயணம் இனிதே தொடங்கியது. டிரைவர் சர்தாரின் பெயர் சன்னி. அத்தனை பேரில் நானும் என் மாமாவும் நன்றாய் ஹிந்தி பேசுவதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். உங்கள் இரண்டு பேரிடமும் தான் ஹிந்தி சிக்னல் இருக்கிறது என்று கலாய்த்தான். எதை கேட்டாலும் "கோய் டென்ஷன் நஹி ஜி" என்றான். வழக்கமான சர்தார்ஜீக்களின் உயரம் இல்லை என்றாலும், நான் அவனை அங்கிள் என்று கூப்பிடலாம் என்பது போல இருந்தான். நான் உங்களை விட சின்னவன், இருபத்தி ஆறு வயது தான் ஆகிறது என்று சொல்லி குண்டை போட்டான் [பக்கி கண்டுபிடிச்சிட்டானே!]. பயணம் ஆரம்பித்ததும் ஏதோ பஞ்சாபி பாடலை போட்டான், பிறகு பழைய ஹிந்தி பாடல்கள். இது சரிப்படாது என்று எங்கள் மொபைலில் இருந்து தமிழ் பாடல்களை போட்டோம். தலையை தலையை ஆட்டி நம் ஊர் குத்துப் பாட்டுக்களை ரசித்தான். எல்லோருக்கும் பசி வயிற்றை கிள்ள, அந்த கடுப்பில் எல்லோரும் பக்கத்தில் இருப்பவர்களை கிள்ள, சரி முதலில் சாப்பிடுவோம் என்று முடிவெடுத்தோம். இதோ அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று இறக்கி விட்டான். அத்தனை கூட்டத்தை அந்த ஹோட்டல் ஜென்மத்தில் பார்த்திருக்காது போலும், ஆர்டர் செய்து களைத்து, ஒரு வழியாய் கிடைத்து, புசித்து வெளியேற ஒரு மணி நேரம் ஆகி விட்டது. வண்டியில் ஏறி சிறிது தூரத்தில் டிராப்பிக் ஜாம். உதம்பூரிலிருந்து பஹல்காம் செல்வதாய் ப்ளான். நான் சொல்கிறேன், நாம் அங்கு போய் சேர மாலை 4, 5 ஆகிவிடும் என்று பயமுறுத்தினான். இங்கு டிராப்பிக் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை என்று மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட்டான். எப்படியோ வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தது.

அந்த ஜாமை கடந்து சன்னி வண்டியை விரட்டினான். முன்னால் ஒரு கார் போய் கொண்டிருந்தது. அதை ஒரு பெரிய தொப்பி போட்ட ஆசாமி ஒட்டிக் கொண்டிருந்தார். சன்னி ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தான். திடீரென்று அந்த கார் எங்கள் டெம்போவின் முன்னால் நின்றது. அந்த தொப்பி ஆசாமி காரை விட்டு கீழே இறங்கினார். அவர் காரை விட்டு கீழே இறங்குவதற்கும் சன்னியின் கைகள் மேலே சல்யுட் அடிக்க ஏறுவதற்கும் சரியாய் இருந்தது. தொப்பி ஆசாமி, சரியான உயரத்தில், ஒட்ட முடி வெட்டி, கிளீன் ஷேவ் செய்து, மிடுக்காய் ட்ரெஸ் செய்து, ட்ரிம்மாய் இருந்தார். அவரை பார்த்தவுடன் சொல்லி விடலாம் அவர் ஒரு ஆர்மிமேன் என்று! இறங்கியதும், "ஒயே, துஜே படி ஜல்தி ஹைன்?" [உனக்கு என்ன ரொம்ப அவசரமோ?] என்று ஒரே கேள்வியை கேட்டார். சன்னி வாய் பேசவில்லை. வார்த்தை வரவில்லை. ரோட்டில் இருந்தவர்கள் அவரை காருக்குள் போகச் சொல்லி சைகை செய்தார்கள். அவர் புலம்பிக் கொண்டே காருக்குள் ஏறிக் கொண்டார். சன்னியின் முகத்தில் ஈ ஆடவில்லை. அந்த ஒரு கணம், இப்படி இல்ல இருக்கணும் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டேன். செம சீன்!


வழி நெடுக பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும், மலை சிகரங்களையும் கண்டு களித்துக் கொண்டே சென்றோம். ஆங்காங்கே அழகான வ்யு பாய்ண்ட் வேறு இருந்தது.  இந்த இடத்தை பாருங்கள்...


வழியில், அந்த குறுகிய மலைப்பாதையில் அத்தனை வண்டிகள் வரும் அந்த பாதையில் சாவகாசமாய் ஒரு இருநூறு முன்னூறு ஆடுகளை ஒட்டிக் கொண்டே செல்கிறார்கள். சன்னியிடம் கேட்டதற்கு, "இந்த ஆடுகளை ஜம்முவில் இருந்து ஒவ்வொரு கோடை காலங்களிலும் மேய்ச்சலுக்காக காஷ்மீருக்கு இப்படியே கால்நடையாக ஓட்டிக் கொண்டு போவார்கள். குளிர்காலம் தொடங்கியதும் மறுபடியும் இவைகளை ஜம்முவிற்கு அழைத்து வருவார்கள். இவர்களை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. இதற்காக பெர்மிட் கூட உண்டு. பெர்மிட் வைத்திருப்பவர்களை போலீஸ்காரன் கூட கேள்வி கேட்க முடியாது" என்றான். இந்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு இப்படி பல வித சலுகைகளை அளித்திருக்கிறது என்றும் சொன்னான்.

ஒரு மூன்று, நான்கு மணி நேர பயணத்திற்குப் பின்னர் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் இறங்கினோம். நெய், ராஜ்மா ரைஸ் [அந்த ஹோட்டல் ஸ்பெஷல்], பாப்பட், தயிர் என்று அட்டகாசமாய் இருந்தது. ஒரு கட்டு கட்டிக் கொண்டோம். தரு தான் ஒன்றுமே சாப்பிடவில்லை. போகும் இடம் எல்லாம் சாப்பாடு கொடுப்போம். எதையும் சாப்பிட மாட்டாள். பிறகு அவளுக்கு என்று ஒரு பார்சல் வாங்க வேண்டியது, அதை பிறகு தூக்கி போட வேண்டியது! அந்த இரு வாரங்களும் அவள் அப்படித் தான் செய்தாள். பயணத்தில் அவளுக்கு எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

மறுபடியும் டிராப்பிக் காரணமாக தேநீருக்கு ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் பஹல்காமுக்குள் நுழையும் போது நன்றாய் இருட்டி விட்டது. நல்ல குளிர் இருந்தது. அப்போது மணி ஏழு, ஏழரை இருக்கும். ஊரே பாதி அடங்கி இருந்தது. கடைகள் சாத்தப்பட்டு விட்டன. தெருவில் விளக்குகளே இல்லை. காஷ்மீரில் 70% முஸ்லீம்கள், 20% சர்தார்கள், 10% ஹிந்துக்கள் இருப்பதாக சன்னி சொன்னான். ஆங்காங்கே தென்பட்ட ஆடவர்கள், முக்கால்வாசி பேர் தாடி வைத்திருந்தார்கள். அழுக்காய் இருந்தார்கள். ஒரு பெரிய குர்தா போன்ற ஒன்றை போட்டிருந்தார்கள். அது முழங்கால் வரை நீண்டிருந்தது. அவர்கள் கைகளும் அந்த உடைக்கு உள்ளேயே இருந்தது. கடும் பனிக் காலத்தில், இந்த உடைக்கு உள்ளே ஒரு மண்சட்டியில்அடுப்பு போன்ற ஒன்றை வைத்து உடலை சூடேற்றிக் கொள்வார்களாம். இப்படியே கதை பேசியபடி நாங்கள் தங்க வேண்டிய பயின் கிளிப் ரிசார்ட்டுக்கு சென்று இறங்கினோம். செம சில்லென்று இருந்தது. சுற்றி ஒரே இருட்டு. ரிசார்டை ஒட்டி ஒரு பெரிய மலை. சரி என்ன இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்வோம் என்று நாள் முழுவதும் வண்டியில் வந்த களைப்பு தீர உணவருந்தி விட்டு படுத்துக் கொண்டோம்.

சுற்றுவோம்...
மாமா டெல்லியில் இருப்பது ராஜேந்திர பிளேஸ் அருகில் பிரசாத் நகர். இந்தப் பக்கம் இருபது நிமிடம் நடந்தால் கரோல் பாக் [கரோல் பாக் என்றால் "கரோலின் தோட்டம்" என்று அர்த்தம். இப்போது அங்கு இருப்பது நல்ல ஒரு மார்கெட். தமிழர்கள் இந்த ஏரியாவில் தான் அதிகம்.] அந்தப் பக்கம் பத்து நிமிடம் நடந்தால் மெட்ரோ ஸ்டேஷன். அருமையான லொக்கேஷன். நான் அன்று சாவகாசமாய் எழுந்தேன். வீடே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடந்தது. கிட்டத்தட்ட பதினைந்து பேர் 4 குழந்தைகளை சேர்த்து! நல்ல ஒரு பீங்கான் கப்பில் சுடச் சுட ஒரு டீ குடித்து விட்டு அந்த பழைய எம் ஐ ஜி பிளாட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். இந்த மாதிரி அரசு பிளாட்டுகளில் எப்போதும் சுற்றி நல்ல இடம் விட்டு அருமையாய் கட்டி இருப்பார்கள். டெல்லி என்பதால் உள்ளேயே ஒரு பெரிய பார்க், கோயில் எல்லாம் வைத்து கட்டியிருந்தார்கள்.  எனக்கு ஒன்றும் வெயில் அவ்வளவாய் உரைக்கவில்லை. பார்க் போனேன். ஒரே ஒரு பெண் குழந்தை  சைக்கிள் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். "ஏன் பார்க்கில் யாருமே இல்லை?" என்று அவளிடம் கேட்டேன். "எனக்கு தெரியாது நான் இப்போ தான் வர்றேன்" என்று பதில் கூறி விட்டு புள்ளை புடிக்கிறவன் ரேஞ்சுக்கு பார்த்து விட்டு ஓடி விட்டாள். எல்லாம் வெஷம், வெஷம் என்று நினைத்துக் கொண்டு பிளாட்டை விட்டு வெளியே வந்தேன்.

எதிரில் ஒரு பெரிய ஏரியுடன் ஒரு பார்க் இருந்தது. "அடப்பாவிகளா, ஏரின்னா நாங்க எல்லாம் கொடைக்கானல் ஊட்டி தான்யா போகணும், இங்கே வீட்டுக்கு எதுக்க இருக்கே!" என்று பார்க் உள்ளே நுழைந்தேன். ஒன்று புரியவில்லை. இந்த மாதிரி பார்க்கில் ஒரு நுழைவாயில் இருக்கும். அதில் என் போன்றோர் நுழைவதே கஷ்டம் எனும் அளவுக்கு ஒரு சின்ன இடுக்கு. அதில் நாலு இரும்பு தடுப்புகள். கொஞ்சம் வலது, கொஞ்சம் இடது என்று மாறி மாறி நுழைந்து உள்ளே போக வேண்டும். பக்கத்தில் மெயின் கேட் இருக்கும், ஆனால் அது பூட்டியே இருக்கும். எதுக்கு இப்படி வைக்கிறார்கள்? கூட்டத்தை கட்டுப்படுத்த என்று எடுத்துக் கொண்டாலும், இந்த பார்க்கில் யார் இப்படி மொத்தமாய் நுழையப் போகிறார்கள்? இந்த கருமத்தில் குர்தா போட்டா பீம்பாய் சேட்டு மாமாக்கள் எப்படி நுழைவார்கள் என்று கேள்வி எழுந்தது? என்ன கண்றாவியோ.

உள்ளே நுழைந்து படித்துறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு மாமா, ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பொறி மாதிரி எதையோ ஒன்றை தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்தார். அதை ஒரு மீனும் சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. அவர் ஒரு இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார். இந்தப் பக்கம் நல்ல குஸ்தி பயில்வான்கள் மாதிரி நாலு பேர் டவுசர் பனியன் சகிதம் உட்கார்ந்து, கை கால் மடக்கியபடி வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அந்த பார்க்கில் நிறையா மரங்கள் இருந்தன. நேற்று அடித்த புயலில் ஒன்று இரண்டு விழுந்திருந்தது. வேடிக்கை பார்த்தபடியே அந்த ஏரியை சுற்றி நடந்தேன். ஒருவர் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார். ஒரு சர்தார்ஜி கிழவர் "மன்மோகன் சிங்" என்று தன் நண்பர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்.  என்று கேட்கலாம் என்று நான் நின்றேன். அவர் நிறுத்தி விட்டார். சரி என்று நடந்தேன். நிறைய வெண்ணிற வாத்துக்கள் ஒரு கூண்டில் இருந்தன. அவைகளுக்கு ஒரு பெண்மணி ப்ரெட் கொடுத்துக் கொண்டிருந்தார். "க்வாக், க்வாக்" என்று அவைகள் தத்தி தத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. எனக்கு தருவின் ஞாபகம் வந்தது. வாத்தை பார்த்தால் போதும், அவள் வாய் வாத்தின் வாயை போல் மாறி விடும். வாத்தின் குவாவை விட அவளின் குவா அழகு.

ஒரு ரவுண்டு அடித்து மீண்டும் அதே நுழைவாயில். வீட்டுக்கு நடந்தேன். அன்று இரவே காஷ்மீர் செல்ல உதம்பூருக்கு ரயில் பிடிக்க வேண்டும். பயணத்துக்கு வேண்டியதை எடுத்து வைக்க ஒரு போருக்கான ஆயுத்தங்கள் தொடங்கி இருந்தன. மாமா, அவரின் நண்பர் சென்ற வாரம் தான் காஷ்மீர் சென்று வந்ததாகவும், குளிர் அதிகம் இருப்பதாகவும் சொன்னார். என் மாமனார், மாமியாரிடம் ஸ்வட்டர் கூட இல்லை. அதன் பிறகு, குல்லாய், கையுறை, காலுறை என்று ஏகப்பட்டது வாங்க வேண்டி இருந்தது. தருவுக்கும் ஒரு ஷூ வாங்க வேண்டி இருந்தது. சரி என்று மதியம் 12, 1 மணி போல் கரோல்பாக் கிளம்பினோம். வீட்டின் வெளியே வந்து நின்றதும், நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி இங்கு ஈ-ரிக்ஷா வருகிறது. ஆளுக்கு பத்து ரூபாய் என்று நாலு நாலு பேராய் ஏறிக் கொண்டோம்.

கரோல்பாக் "மெக்டொனால்ட்ஸில்" இறக்கி விட்டார்கள். போர்டே பார்க்க வேண்டியதில்லை. அங்கு நின்ற கொலு கொலு பெண்களை வைத்தே சொல்லி விடலாம். அது மெக்டோனால்ட்ஸ் என்று!  இறங்கியவுடன் தண்ணீர் தாகம், ஒவ்வொருவரும் ஜூஸை வாங்கி கிளாஸ் கிளாசாய் அடித்தோம். பிறகு தான் கடைக்காரன் ஒரு கிளாஸ் ஐம்பது ரூபாய் என்று சொன்னான். பிரகஸ்பதி. அவனுக்கு தண்டம் அழுது விட்டு தருவுக்கு செருப்பு வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தோம். அவளைத் தவிர எல்லோருக்கும் செருப்பை பார்த்து விட்டு யானை விலை சொன்னதால் கமுக்காய் இறங்கி வந்தோம். இப்படி கடை கடையாய் ஏறி இறங்கி, முதலில் இந்த பொண்டு பொடிசுகளுக்கு இரண்டு செருப்பு வாங்குவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. பிறகு, சாக்ஸ். அதற்குள் குழந்தைகளின் கன்னம் வெயிலில் பழுத்து விட்டதால் ஒரு க்ரூப்பை வண்டி ஏற்றி அனுப்பி விட்டோம். ஸ்வட்டர் எங்குமே இல்லை. பிறகு ஒருவர் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்தது. ஸ்வட்டருடன், கொலை செய்யும்போது போடும் கையுறை மூன்றையும் வாங்கிக் கொண்டோம்.

பசி வயிற்றை கிள்ள ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போனதும் நன்றாய் கொட்டிக் கொண்டேன். மிச்ச சொச்ச பேக்கிங்கை முடித்துக் கொண்டு இரவு புறப்படத் தயாரானோம். மொத்தம் பதிமூன்று பேர். பத்து பெரியவர்கள், மூன்று குழந்தைகள். இதில் பதினைந்து லக்கேஜ்கள். பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. மாமா ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல டாக்சி எல்லாம் புக் செய்தார். இரவு உணவை முடிக்கும்போதும் டாக்சி வரவில்லை. பிறகு விசாரித்ததில், டாக்சி இல்லை, டிரைவர் இல்லை, அனுப்ப முடியாது என்று ஒரே குழப்பம். பிறகு அடித்துப் பிடித்து இன்னொரு டாக்சிக்கரனுக்கு போனை போட்டு அவனை வரச் சொல்லி ஒரு வழியாய் ஸ்டேஷன் போய் சேர்ந்தோம். ஸ்டேஷன் அருகில் இருந்ததால் பிழைத்தோம். நல்ல வேலையாய் அது ஏ சி ரயில். அப்பாடா என்று எங்கள் பெட்டியில் ஏறி, எல்லாம் செட் செய்து உட்கார்ந்தோம். ரயில் உதம்பூரை நோக்கி புறப்பட்டது. அன்றைய நாள் அலுப்புடன் முடிந்தது...

சுற்றுவோம்...
இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு பின் சனிக்கிழமை காலை தான் சென்னை வந்து சேர்ந்தேன். மே முப்பதாம் தேதி வெள்ளி மாலை, "Off to Delhi for a vacation  — feeling excited" என்று முகநூலில் ஸ்டேட்டஸ் போடும்போது இப்போது தான் காதல் வந்தது போல் வயிற்றில் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்தது!. அதற்கு காரணம், இதற்கு முன் இத்தனை பெரிய குடும்பப் பயணம் மேற்கொண்டதில்லை. ஒரு வாரம் காஷ்மீர், ஒரு வாரம் டெல்லி, ஆக்ரா. இரண்டு வார பயணம். மாமா டெல்லியில் இருந்ததாலும்,  ஸ்பைஸ் ஜெட்காரன் நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று ஆஃபர் கொடுத்ததாலும் இந்தப் பயணம் சாத்தியப்பட்டது.

ஏழு இருபதுக்கு கிளம்பிய வானவூர்தி [வான...வூர்தியா?] பத்து, பத்தரைக்கு டெல்லியில் தரை இறங்கியது. வானத்தில் பறக்கும் போது, "டெல்லியில் மணல் புயல் அடிக்கிறது, இறங்க கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்!" என்று பைலட் சொன்னார். "இது என்னடா நம்ம வரும்போது தான் இப்படி புயல் எல்லாம் கிளம்பணுமா?" என்று நொந்து கொண்டேன். அதிகம் தாமதப்படுத்தாமல் இறக்கி விட்டார். "செக்-இன்" செய்த பைகளுக்கும் எனக்கும் என்றும் ராசி இருந்ததில்லை. எல்லோரும் அவர்கள் பையை எடுத்துக் கொண்டு, ஏர்போர்ட்டை பூட்டும் சமயத்தில் தான் என் பைகள் ஆடி அசைந்து வரும். அதற்குள் பெங்களூரிலிருந்து வந்த என் தம்பி வெளியிலிருந்து பத்து தடவை போன் அடித்து விட்டான். நல்ல வேலையாய் இரண்டு ப்ரீ பெய்ட் டேக்சி புக் செய்திருந்தான். "தம்பியுடையான் டேக்சிக்கு அஞ்சான்!" எல்லா பெட்டி பைகளையும் எடுத்துக் கொண்டு ப்ரீ பெய்ட் டேக்சி வரும் பிளாட்பாரத்தில் நின்றால் ஒரு வண்டியும் நிற்க மாட்டேன் என்கிறது. அருவியில் இருந்து வரும் தண்ணீர் ஓடையாய் மாறி ஓடும் ஒரு இடத்தில் அதிலிருந்து கொஞ்சம் நீரை அள்ளி எடுத்து நாம் குடிக்கும்போது மேலே ஒருவன் ஒன்னுக்கு அடித்துக் கொண்டிருப்பதை பார்ப்போம் அல்லவா? அந்த மாதிரி, நாங்கள் இங்கே பத்து பெட்டியை வைத்து வரிசையில் காத்திருக்க அவனவன் டேக்சி எங்கிருந்து வருகிறதோ அங்கேயே நிறுத்தி ஏறிக் கொண்டிருந்தான். [உவமை வெளங்குதா?] ஆரம்பிச்சிட்டாய்ங்களா? என்று நினைத்துக் கொண்டு நானும் என் தம்பியும் அதே வழியை கடைப்பிடித்து இரண்டு வண்டியை பிடித்தோம்.  இருவர் முகத்திலும் வெற்றிப் புன்னகை.

வண்டியில் ஏறியதும் "லேட் நைட் எக்ஸ்ட்ரா சாப்" என்றார். சரி பாக்கலாம் போங்க , என்றால் "இப்போவே சொல்லுங்க, இல்லைன்னா இறங்கிக்குங்க" என்றார். ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தோம். பெட்டி பைகளை பார்த்த மாமா "ஏதோ இவர்களை நாலு நாள் வந்து தங்கிட்டு போங்க என்று அழைத்தால், இவர்கள் ஒரேடியாய் வந்து விட்டார்கள் போல இருக்கிறதே?!" என்று ஜெர்க் ஆகி விட்டார். "இன்னும் பார்சல் லாரியில வருது மாமா!" என்று சொல்லி இருக்கலாம், எதற்கு முதல் நாளே வம்பு என்று விட்டு விட்டேன்.

அந்த இரவிலும் டெல்லி தக தக என்று கொதித்துக் கொண்டிருந்தது. டெல்லி வெயில் சென்னை மாதிரி வேர்ப்பதில்லை. அடிக்கடி நாவுலரச் செய்கிறது. மாமாவின் வீட்டில் இரண்டு பெட்ரூமில் ஏசி, ஹாலில் ஏர் கூலர் என்று இருந்ததால் தப்பித்தோம். ப்ளான் படி மறுநாள் இரவு காஷ்மீர் கிளம்ப வேண்டும். டெல்லியில் இருந்து உதம்பூருக்கு ரயில், அங்கிருந்து பேக்கேஜ் டூர்காரர்கள் பிக்கப் என்று ஏற்பாடு. நல்ல ஒரு அரட்டைக்கு பின்னர் எல்லோரும் சோர்ந்து உறங்கினோம்.  சுற்றுலாவின் முதல் நாள் இனிதே முடிந்தது...

சுற்றுவோம்...
அலுவலகத்தில் இருந்து வரும்போது கடையில் வாங்க வேண்டிய பொருட்களை வீட்டு அம்மா குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்கள். வரும் வழியில் நில்க்ரீஸ் சென்றேன். பாப்பாவின் டயபர் [இதை கண்டுபிடித்தவனை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்! என்னா மூளை?] பிஸ்கட் பாக்கெட்டுகள், பழம் என்று வாங்கிக் கொண்டேன். பில் போடுவதற்காக ஒரு கவுண்டரில் எல்லா பொருட்களையும் வைத்தேன். அங்கே நில்க்ரீஸ் பெயர் போட்ட கேரி பேக் இருந்தது. சுரேகா நினைவுக்கு வந்தார். கச்சேரியை ஆரம்பிச்சிர வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன்.

பில் போட ஒரு நடுத்தர வயது ஆணும் கவரில் பொருட்களை போட்டுக் கொடுக்க  ஒரு சின்ன பையனும் நின்று கொண்டிருந்தார்கள். "சார் கவர் வேணுமா?" என்று சின்ன பையன் கேட்டான். "காசா?" என்று கேட்டதற்கு ஆமாம் என்று தலை ஆட்டினான். "எவ்வளவு?" என்றேன். "ரெண்டு ரூபாய்!" என்றான். "நான் பத்து ரூபா தர்றேன், ப்ளைன் கவரா கொடுங்க, உங்க கடை பேர் இருக்க கூடாது!" என்றதும் சற்று ஜெர்க் ஆனார்கள். மேலும், "உங்க கடையை விளம்பரப்படுத்த நான் ஏங்க காசு கொடுக்கணும்" என்றேன்? "இல்லை சார், நீங்க பை ஏதாவது கொண்டு வந்துருக்கீங்களா?" என்று நடுத்தர வயது இளைஞன் கேட்டான். "இல்லையே, எப்பவும் கைல ஒரு பையை வச்சுட்டே சுத்திட்டு இருக்க முடியுமா பாஸ்?" என்றேன். இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள். அவர் பில் போட்டுக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் "இருங்க, காசு இல்லாம கவர் கொடுத்தா வாங்குறேன், இல்லன்னா நான் வேற கடையில வாங்கிக்கிறேன்" என்றேன். கணினியில் எல்லாம் தட்டி விட்டு 426 சார் என்றார். 26 ஆ இல்லை 24 ஆ என்று கேட்டேன். சிரித்தார். "கவர் காசு இல்லைல்ல?" என்றேன். "இல்லை சார்" என்று சிரித்தார். எல்லா பொருளும் கவருக்குள் போட்டு கொடுத்தார்கள். பிரதீப் ஹேப்பி! நன்றி சுரேகா சார். பின்னால் ஒருவர் பொருட்களை வாங்க நின்று கொண்டிருந்தார். அவர் என்ன செய்தாரோ?!