மறுநாள் ரயில் ஜம்முவை கடந்ததும் கண் விழித்தேன். ஒரே இரவில் சமதளங்கள் யாவும் பள்ளத்தாக்குகள், தெளிந்த நீரோடைகள், மலை முகடுகளாய் மாறிப் போயிருந்தன.


முகம் கழுவி விட்டு, வாசலில் நின்று ஈரம் தடவிய குளிர் காற்றை அனுபவித்தேன். விடுமுறை தொடங்கிவிட்டது போல் இருந்தது. அப்போது தான் தூரத்தில் முதன் முதலில் பனி மலையை பார்த்தேன். மிகுந்த குதூகலத்துடன் அதை குடும்பத்தினருக்கும் காட்டினேன். ரயில் ஒரு எட்டு எட்டரை மணிக்கு உதம்பூரை அடைந்தது. அங்கிருந்து காஷ்மீர் செல்ல "ஹங்க்ரி பேக்ஸ்" என்ற நிறுவனத்திடம் பேக்கேஜ் டூர் ஏற்பாடு செய்திருந்தோம். பெட்டி, பைகளை தூக்கிக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து காத்திருந்தோம். எங்கள் டெம்போ வந்த பாடில்லை. மாமா டிரைவருக்கு கால் அடித்தால் நான் இங்கே தான் நிற்கிறேன், நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள் என்றார். இத்தனை லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு எங்கே நடப்பது? ஏன் இவர் வந்து ஏற்றிச் செல்லக் கூடாது என்று எரிச்சலாய் இருந்தது. அப்போது தான் அங்கு இருந்த ஒரு டேக்சி ஸ்டாண்டில் இருந்தவர்கள், அவர் இங்கே வந்தால் எங்களுக்கு பணம் கட்ட வேண்டும். இது தான் எங்கள் நடைமுறை. அதை தவிர்ப்பதற்காக அவர் உங்களை வரச் சொல்கிறார் என்றார்கள். அடப்பாவிகளா என்று நொந்து கொண்டே நின்றோம். ஒரு வழியாய் அவர் வந்து அவர்களுக்கு பணம் கட்டி விட்டு எங்கள் சாமான்களை ஏற்றிக் கொண்டார். டிரைவர் ஒரு சர்தார்.

எல்லோரும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் நான் கடைசியில் ஏறினேன். டிரைவர் அருகில் இருந்த சீட்டில் அமரப் போனேன். உடனே வண்டியில் ஒரே சிரிப்பு, சத்தம். என்னவென்று கேட்டதற்கு, நான் முன்னால் உட்காருவேனா இல்லை என் மனைவி அருகில் உட்காருவேனா என்று பந்தயமாம். அடப்பாவிகளா! இத்தகைய பயணங்களில் நான் முன்னால் உட்காருவதையே விரும்புவேன். அதுவும் டிரைவர் அருகில். அப்போது தான் அவரிடம் பேச்சு கொடுத்து அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடியும். ஆனால் இந்த முறை, 5 நாட்கள் அந்த வண்டியில் சுற்றியதில், மிகவும் சொற்பமான நேரமே அந்த இருக்கை எனக்குக் கிடைத்தது. காரணம்,  தரு! அவள் அம்மாவால் மட்டும் அவளை சமாளிக்க முடியவில்லை.

பயணம் இனிதே தொடங்கியது. டிரைவர் சர்தாரின் பெயர் சன்னி. அத்தனை பேரில் நானும் என் மாமாவும் நன்றாய் ஹிந்தி பேசுவதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். உங்கள் இரண்டு பேரிடமும் தான் ஹிந்தி சிக்னல் இருக்கிறது என்று கலாய்த்தான். எதை கேட்டாலும் "கோய் டென்ஷன் நஹி ஜி" என்றான். வழக்கமான சர்தார்ஜீக்களின் உயரம் இல்லை என்றாலும், நான் அவனை அங்கிள் என்று கூப்பிடலாம் என்பது போல இருந்தான். நான் உங்களை விட சின்னவன், இருபத்தி ஆறு வயது தான் ஆகிறது என்று சொல்லி குண்டை போட்டான் [பக்கி கண்டுபிடிச்சிட்டானே!]. பயணம் ஆரம்பித்ததும் ஏதோ பஞ்சாபி பாடலை போட்டான், பிறகு பழைய ஹிந்தி பாடல்கள். இது சரிப்படாது என்று எங்கள் மொபைலில் இருந்து தமிழ் பாடல்களை போட்டோம். தலையை தலையை ஆட்டி நம் ஊர் குத்துப் பாட்டுக்களை ரசித்தான். எல்லோருக்கும் பசி வயிற்றை கிள்ள, அந்த கடுப்பில் எல்லோரும் பக்கத்தில் இருப்பவர்களை கிள்ள, சரி முதலில் சாப்பிடுவோம் என்று முடிவெடுத்தோம். இதோ அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று இறக்கி விட்டான். அத்தனை கூட்டத்தை அந்த ஹோட்டல் ஜென்மத்தில் பார்த்திருக்காது போலும், ஆர்டர் செய்து களைத்து, ஒரு வழியாய் கிடைத்து, புசித்து வெளியேற ஒரு மணி நேரம் ஆகி விட்டது. வண்டியில் ஏறி சிறிது தூரத்தில் டிராப்பிக் ஜாம். உதம்பூரிலிருந்து பஹல்காம் செல்வதாய் ப்ளான். நான் சொல்கிறேன், நாம் அங்கு போய் சேர மாலை 4, 5 ஆகிவிடும் என்று பயமுறுத்தினான். இங்கு டிராப்பிக் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை என்று மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட்டான். எப்படியோ வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தது.

அந்த ஜாமை கடந்து சன்னி வண்டியை விரட்டினான். முன்னால் ஒரு கார் போய் கொண்டிருந்தது. அதை ஒரு பெரிய தொப்பி போட்ட ஆசாமி ஒட்டிக் கொண்டிருந்தார். சன்னி ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தான். திடீரென்று அந்த கார் எங்கள் டெம்போவின் முன்னால் நின்றது. அந்த தொப்பி ஆசாமி காரை விட்டு கீழே இறங்கினார். அவர் காரை விட்டு கீழே இறங்குவதற்கும் சன்னியின் கைகள் மேலே சல்யுட் அடிக்க ஏறுவதற்கும் சரியாய் இருந்தது. தொப்பி ஆசாமி, சரியான உயரத்தில், ஒட்ட முடி வெட்டி, கிளீன் ஷேவ் செய்து, மிடுக்காய் ட்ரெஸ் செய்து, ட்ரிம்மாய் இருந்தார். அவரை பார்த்தவுடன் சொல்லி விடலாம் அவர் ஒரு ஆர்மிமேன் என்று! இறங்கியதும், "ஒயே, துஜே படி ஜல்தி ஹைன்?" [உனக்கு என்ன ரொம்ப அவசரமோ?] என்று ஒரே கேள்வியை கேட்டார். சன்னி வாய் பேசவில்லை. வார்த்தை வரவில்லை. ரோட்டில் இருந்தவர்கள் அவரை காருக்குள் போகச் சொல்லி சைகை செய்தார்கள். அவர் புலம்பிக் கொண்டே காருக்குள் ஏறிக் கொண்டார். சன்னியின் முகத்தில் ஈ ஆடவில்லை. அந்த ஒரு கணம், இப்படி இல்ல இருக்கணும் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டேன். செம சீன்!


வழி நெடுக பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும், மலை சிகரங்களையும் கண்டு களித்துக் கொண்டே சென்றோம். ஆங்காங்கே அழகான வ்யு பாய்ண்ட் வேறு இருந்தது.  இந்த இடத்தை பாருங்கள்...


வழியில், அந்த குறுகிய மலைப்பாதையில் அத்தனை வண்டிகள் வரும் அந்த பாதையில் சாவகாசமாய் ஒரு இருநூறு முன்னூறு ஆடுகளை ஒட்டிக் கொண்டே செல்கிறார்கள். சன்னியிடம் கேட்டதற்கு, "இந்த ஆடுகளை ஜம்முவில் இருந்து ஒவ்வொரு கோடை காலங்களிலும் மேய்ச்சலுக்காக காஷ்மீருக்கு இப்படியே கால்நடையாக ஓட்டிக் கொண்டு போவார்கள். குளிர்காலம் தொடங்கியதும் மறுபடியும் இவைகளை ஜம்முவிற்கு அழைத்து வருவார்கள். இவர்களை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. இதற்காக பெர்மிட் கூட உண்டு. பெர்மிட் வைத்திருப்பவர்களை போலீஸ்காரன் கூட கேள்வி கேட்க முடியாது" என்றான். இந்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு இப்படி பல வித சலுகைகளை அளித்திருக்கிறது என்றும் சொன்னான்.

ஒரு மூன்று, நான்கு மணி நேர பயணத்திற்குப் பின்னர் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் இறங்கினோம். நெய், ராஜ்மா ரைஸ் [அந்த ஹோட்டல் ஸ்பெஷல்], பாப்பட், தயிர் என்று அட்டகாசமாய் இருந்தது. ஒரு கட்டு கட்டிக் கொண்டோம். தரு தான் ஒன்றுமே சாப்பிடவில்லை. போகும் இடம் எல்லாம் சாப்பாடு கொடுப்போம். எதையும் சாப்பிட மாட்டாள். பிறகு அவளுக்கு என்று ஒரு பார்சல் வாங்க வேண்டியது, அதை பிறகு தூக்கி போட வேண்டியது! அந்த இரு வாரங்களும் அவள் அப்படித் தான் செய்தாள். பயணத்தில் அவளுக்கு எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

மறுபடியும் டிராப்பிக் காரணமாக தேநீருக்கு ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் பஹல்காமுக்குள் நுழையும் போது நன்றாய் இருட்டி விட்டது. நல்ல குளிர் இருந்தது. அப்போது மணி ஏழு, ஏழரை இருக்கும். ஊரே பாதி அடங்கி இருந்தது. கடைகள் சாத்தப்பட்டு விட்டன. தெருவில் விளக்குகளே இல்லை. காஷ்மீரில் 70% முஸ்லீம்கள், 20% சர்தார்கள், 10% ஹிந்துக்கள் இருப்பதாக சன்னி சொன்னான். ஆங்காங்கே தென்பட்ட ஆடவர்கள், முக்கால்வாசி பேர் தாடி வைத்திருந்தார்கள். அழுக்காய் இருந்தார்கள். ஒரு பெரிய குர்தா போன்ற ஒன்றை போட்டிருந்தார்கள். அது முழங்கால் வரை நீண்டிருந்தது. அவர்கள் கைகளும் அந்த உடைக்கு உள்ளேயே இருந்தது. கடும் பனிக் காலத்தில், இந்த உடைக்கு உள்ளே ஒரு மண்சட்டியில்அடுப்பு போன்ற ஒன்றை வைத்து உடலை சூடேற்றிக் கொள்வார்களாம். இப்படியே கதை பேசியபடி நாங்கள் தங்க வேண்டிய பயின் கிளிப் ரிசார்ட்டுக்கு சென்று இறங்கினோம். செம சில்லென்று இருந்தது. சுற்றி ஒரே இருட்டு. ரிசார்டை ஒட்டி ஒரு பெரிய மலை. சரி என்ன இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்வோம் என்று நாள் முழுவதும் வண்டியில் வந்த களைப்பு தீர உணவருந்தி விட்டு படுத்துக் கொண்டோம்.

சுற்றுவோம்...
3 Responses
  1. Anonymous Says:

    அருமை.
    காஷ்மீர் ஒரு கனவு. இன்னும் கனவாகவே இருக்கிறது எனக்கு. அனுபவித்தமைக்கு வாழ்த்துக்கள்!


  2. போற வழி சூப்பரா இருந்தாலும் எப்படா ஸ்ரீநகர் வரும் என்று ஆகி விடுகிறது. காஷ்மீரில் பெட்ரோல் விலை நம்மை விட குறைவு தானே??


  3. amutha - sariyaa sonneenga...evvalavu dooram!