மாமா டெல்லியில் இருப்பது ராஜேந்திர பிளேஸ் அருகில் பிரசாத் நகர். இந்தப் பக்கம் இருபது நிமிடம் நடந்தால் கரோல் பாக் [கரோல் பாக் என்றால் "கரோலின் தோட்டம்" என்று அர்த்தம். இப்போது அங்கு இருப்பது நல்ல ஒரு மார்கெட். தமிழர்கள் இந்த ஏரியாவில் தான் அதிகம்.] அந்தப் பக்கம் பத்து நிமிடம் நடந்தால் மெட்ரோ ஸ்டேஷன். அருமையான லொக்கேஷன். நான் அன்று சாவகாசமாய் எழுந்தேன். வீடே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடந்தது. கிட்டத்தட்ட பதினைந்து பேர் 4 குழந்தைகளை சேர்த்து! நல்ல ஒரு பீங்கான் கப்பில் சுடச் சுட ஒரு டீ குடித்து விட்டு அந்த பழைய எம் ஐ ஜி பிளாட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். இந்த மாதிரி அரசு பிளாட்டுகளில் எப்போதும் சுற்றி நல்ல இடம் விட்டு அருமையாய் கட்டி இருப்பார்கள். டெல்லி என்பதால் உள்ளேயே ஒரு பெரிய பார்க், கோயில் எல்லாம் வைத்து கட்டியிருந்தார்கள்.  எனக்கு ஒன்றும் வெயில் அவ்வளவாய் உரைக்கவில்லை. பார்க் போனேன். ஒரே ஒரு பெண் குழந்தை  சைக்கிள் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். "ஏன் பார்க்கில் யாருமே இல்லை?" என்று அவளிடம் கேட்டேன். "எனக்கு தெரியாது நான் இப்போ தான் வர்றேன்" என்று பதில் கூறி விட்டு புள்ளை புடிக்கிறவன் ரேஞ்சுக்கு பார்த்து விட்டு ஓடி விட்டாள். எல்லாம் வெஷம், வெஷம் என்று நினைத்துக் கொண்டு பிளாட்டை விட்டு வெளியே வந்தேன்.

எதிரில் ஒரு பெரிய ஏரியுடன் ஒரு பார்க் இருந்தது. "அடப்பாவிகளா, ஏரின்னா நாங்க எல்லாம் கொடைக்கானல் ஊட்டி தான்யா போகணும், இங்கே வீட்டுக்கு எதுக்க இருக்கே!" என்று பார்க் உள்ளே நுழைந்தேன். ஒன்று புரியவில்லை. இந்த மாதிரி பார்க்கில் ஒரு நுழைவாயில் இருக்கும். அதில் என் போன்றோர் நுழைவதே கஷ்டம் எனும் அளவுக்கு ஒரு சின்ன இடுக்கு. அதில் நாலு இரும்பு தடுப்புகள். கொஞ்சம் வலது, கொஞ்சம் இடது என்று மாறி மாறி நுழைந்து உள்ளே போக வேண்டும். பக்கத்தில் மெயின் கேட் இருக்கும், ஆனால் அது பூட்டியே இருக்கும். எதுக்கு இப்படி வைக்கிறார்கள்? கூட்டத்தை கட்டுப்படுத்த என்று எடுத்துக் கொண்டாலும், இந்த பார்க்கில் யார் இப்படி மொத்தமாய் நுழையப் போகிறார்கள்? இந்த கருமத்தில் குர்தா போட்டா பீம்பாய் சேட்டு மாமாக்கள் எப்படி நுழைவார்கள் என்று கேள்வி எழுந்தது? என்ன கண்றாவியோ.

உள்ளே நுழைந்து படித்துறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு மாமா, ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பொறி மாதிரி எதையோ ஒன்றை தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்தார். அதை ஒரு மீனும் சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. அவர் ஒரு இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார். இந்தப் பக்கம் நல்ல குஸ்தி பயில்வான்கள் மாதிரி நாலு பேர் டவுசர் பனியன் சகிதம் உட்கார்ந்து, கை கால் மடக்கியபடி வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அந்த பார்க்கில் நிறையா மரங்கள் இருந்தன. நேற்று அடித்த புயலில் ஒன்று இரண்டு விழுந்திருந்தது. வேடிக்கை பார்த்தபடியே அந்த ஏரியை சுற்றி நடந்தேன். ஒருவர் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார். ஒரு சர்தார்ஜி கிழவர் "மன்மோகன் சிங்" என்று தன் நண்பர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்.  என்று கேட்கலாம் என்று நான் நின்றேன். அவர் நிறுத்தி விட்டார். சரி என்று நடந்தேன். நிறைய வெண்ணிற வாத்துக்கள் ஒரு கூண்டில் இருந்தன. அவைகளுக்கு ஒரு பெண்மணி ப்ரெட் கொடுத்துக் கொண்டிருந்தார். "க்வாக், க்வாக்" என்று அவைகள் தத்தி தத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. எனக்கு தருவின் ஞாபகம் வந்தது. வாத்தை பார்த்தால் போதும், அவள் வாய் வாத்தின் வாயை போல் மாறி விடும். வாத்தின் குவாவை விட அவளின் குவா அழகு.

ஒரு ரவுண்டு அடித்து மீண்டும் அதே நுழைவாயில். வீட்டுக்கு நடந்தேன். அன்று இரவே காஷ்மீர் செல்ல உதம்பூருக்கு ரயில் பிடிக்க வேண்டும். பயணத்துக்கு வேண்டியதை எடுத்து வைக்க ஒரு போருக்கான ஆயுத்தங்கள் தொடங்கி இருந்தன. மாமா, அவரின் நண்பர் சென்ற வாரம் தான் காஷ்மீர் சென்று வந்ததாகவும், குளிர் அதிகம் இருப்பதாகவும் சொன்னார். என் மாமனார், மாமியாரிடம் ஸ்வட்டர் கூட இல்லை. அதன் பிறகு, குல்லாய், கையுறை, காலுறை என்று ஏகப்பட்டது வாங்க வேண்டி இருந்தது. தருவுக்கும் ஒரு ஷூ வாங்க வேண்டி இருந்தது. சரி என்று மதியம் 12, 1 மணி போல் கரோல்பாக் கிளம்பினோம். வீட்டின் வெளியே வந்து நின்றதும், நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி இங்கு ஈ-ரிக்ஷா வருகிறது. ஆளுக்கு பத்து ரூபாய் என்று நாலு நாலு பேராய் ஏறிக் கொண்டோம்.

கரோல்பாக் "மெக்டொனால்ட்ஸில்" இறக்கி விட்டார்கள். போர்டே பார்க்க வேண்டியதில்லை. அங்கு நின்ற கொலு கொலு பெண்களை வைத்தே சொல்லி விடலாம். அது மெக்டோனால்ட்ஸ் என்று!  இறங்கியவுடன் தண்ணீர் தாகம், ஒவ்வொருவரும் ஜூஸை வாங்கி கிளாஸ் கிளாசாய் அடித்தோம். பிறகு தான் கடைக்காரன் ஒரு கிளாஸ் ஐம்பது ரூபாய் என்று சொன்னான். பிரகஸ்பதி. அவனுக்கு தண்டம் அழுது விட்டு தருவுக்கு செருப்பு வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தோம். அவளைத் தவிர எல்லோருக்கும் செருப்பை பார்த்து விட்டு யானை விலை சொன்னதால் கமுக்காய் இறங்கி வந்தோம். இப்படி கடை கடையாய் ஏறி இறங்கி, முதலில் இந்த பொண்டு பொடிசுகளுக்கு இரண்டு செருப்பு வாங்குவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. பிறகு, சாக்ஸ். அதற்குள் குழந்தைகளின் கன்னம் வெயிலில் பழுத்து விட்டதால் ஒரு க்ரூப்பை வண்டி ஏற்றி அனுப்பி விட்டோம். ஸ்வட்டர் எங்குமே இல்லை. பிறகு ஒருவர் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்தது. ஸ்வட்டருடன், கொலை செய்யும்போது போடும் கையுறை மூன்றையும் வாங்கிக் கொண்டோம்.

பசி வயிற்றை கிள்ள ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போனதும் நன்றாய் கொட்டிக் கொண்டேன். மிச்ச சொச்ச பேக்கிங்கை முடித்துக் கொண்டு இரவு புறப்படத் தயாரானோம். மொத்தம் பதிமூன்று பேர். பத்து பெரியவர்கள், மூன்று குழந்தைகள். இதில் பதினைந்து லக்கேஜ்கள். பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. மாமா ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல டாக்சி எல்லாம் புக் செய்தார். இரவு உணவை முடிக்கும்போதும் டாக்சி வரவில்லை. பிறகு விசாரித்ததில், டாக்சி இல்லை, டிரைவர் இல்லை, அனுப்ப முடியாது என்று ஒரே குழப்பம். பிறகு அடித்துப் பிடித்து இன்னொரு டாக்சிக்கரனுக்கு போனை போட்டு அவனை வரச் சொல்லி ஒரு வழியாய் ஸ்டேஷன் போய் சேர்ந்தோம். ஸ்டேஷன் அருகில் இருந்ததால் பிழைத்தோம். நல்ல வேலையாய் அது ஏ சி ரயில். அப்பாடா என்று எங்கள் பெட்டியில் ஏறி, எல்லாம் செட் செய்து உட்கார்ந்தோம். ரயில் உதம்பூரை நோக்கி புறப்பட்டது. அன்றைய நாள் அலுப்புடன் முடிந்தது...

சுற்றுவோம்...
8 Responses
  1. உதம்பூர் வரை ட்ரையினா..ஜம்மு வரை தான் ட்ரையினில் போயிருக்கேன். கொலை செய்யும் போது போடும் கையுறை!!!


  2. appadiye konjam konjama mela pora varai paalam pottutu irukkanga amutha. ipo uthampur varai pogalam :)


  3. Latha padmanabhan Says:

    So r u in Kashmir. .. kadasila oru family trip pottachu. . Gud


  4. ம்............ தொடர்கின்றேன்.


  5. Neenga kadhai solra vidham nalla irukku pradeep..


  6. yeah latha, oru vazhiyaa oru trip pottaachu! (kaalathukkum seththu!)

    thulasi - romba azhuthukureenga :)

    krithi - kathai sollava teriyaathu namakku...


  7. Anonymous Says:

    interesting pradeep. as usual you are rocking.


  8. காஷ்மீர் போகலாமா என்ற எண்ணம் இருக்கிறது இதெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறேன்.