இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு பின் சனிக்கிழமை காலை தான் சென்னை வந்து சேர்ந்தேன். மே முப்பதாம் தேதி வெள்ளி மாலை, "Off to Delhi for a vacation  — feeling excited" என்று முகநூலில் ஸ்டேட்டஸ் போடும்போது இப்போது தான் காதல் வந்தது போல் வயிற்றில் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்தது!. அதற்கு காரணம், இதற்கு முன் இத்தனை பெரிய குடும்பப் பயணம் மேற்கொண்டதில்லை. ஒரு வாரம் காஷ்மீர், ஒரு வாரம் டெல்லி, ஆக்ரா. இரண்டு வார பயணம். மாமா டெல்லியில் இருந்ததாலும்,  ஸ்பைஸ் ஜெட்காரன் நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று ஆஃபர் கொடுத்ததாலும் இந்தப் பயணம் சாத்தியப்பட்டது.

ஏழு இருபதுக்கு கிளம்பிய வானவூர்தி [வான...வூர்தியா?] பத்து, பத்தரைக்கு டெல்லியில் தரை இறங்கியது. வானத்தில் பறக்கும் போது, "டெல்லியில் மணல் புயல் அடிக்கிறது, இறங்க கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்!" என்று பைலட் சொன்னார். "இது என்னடா நம்ம வரும்போது தான் இப்படி புயல் எல்லாம் கிளம்பணுமா?" என்று நொந்து கொண்டேன். அதிகம் தாமதப்படுத்தாமல் இறக்கி விட்டார். "செக்-இன்" செய்த பைகளுக்கும் எனக்கும் என்றும் ராசி இருந்ததில்லை. எல்லோரும் அவர்கள் பையை எடுத்துக் கொண்டு, ஏர்போர்ட்டை பூட்டும் சமயத்தில் தான் என் பைகள் ஆடி அசைந்து வரும். அதற்குள் பெங்களூரிலிருந்து வந்த என் தம்பி வெளியிலிருந்து பத்து தடவை போன் அடித்து விட்டான். நல்ல வேலையாய் இரண்டு ப்ரீ பெய்ட் டேக்சி புக் செய்திருந்தான். "தம்பியுடையான் டேக்சிக்கு அஞ்சான்!" எல்லா பெட்டி பைகளையும் எடுத்துக் கொண்டு ப்ரீ பெய்ட் டேக்சி வரும் பிளாட்பாரத்தில் நின்றால் ஒரு வண்டியும் நிற்க மாட்டேன் என்கிறது. அருவியில் இருந்து வரும் தண்ணீர் ஓடையாய் மாறி ஓடும் ஒரு இடத்தில் அதிலிருந்து கொஞ்சம் நீரை அள்ளி எடுத்து நாம் குடிக்கும்போது மேலே ஒருவன் ஒன்னுக்கு அடித்துக் கொண்டிருப்பதை பார்ப்போம் அல்லவா? அந்த மாதிரி, நாங்கள் இங்கே பத்து பெட்டியை வைத்து வரிசையில் காத்திருக்க அவனவன் டேக்சி எங்கிருந்து வருகிறதோ அங்கேயே நிறுத்தி ஏறிக் கொண்டிருந்தான். [உவமை வெளங்குதா?] ஆரம்பிச்சிட்டாய்ங்களா? என்று நினைத்துக் கொண்டு நானும் என் தம்பியும் அதே வழியை கடைப்பிடித்து இரண்டு வண்டியை பிடித்தோம்.  இருவர் முகத்திலும் வெற்றிப் புன்னகை.

வண்டியில் ஏறியதும் "லேட் நைட் எக்ஸ்ட்ரா சாப்" என்றார். சரி பாக்கலாம் போங்க , என்றால் "இப்போவே சொல்லுங்க, இல்லைன்னா இறங்கிக்குங்க" என்றார். ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தோம். பெட்டி பைகளை பார்த்த மாமா "ஏதோ இவர்களை நாலு நாள் வந்து தங்கிட்டு போங்க என்று அழைத்தால், இவர்கள் ஒரேடியாய் வந்து விட்டார்கள் போல இருக்கிறதே?!" என்று ஜெர்க் ஆகி விட்டார். "இன்னும் பார்சல் லாரியில வருது மாமா!" என்று சொல்லி இருக்கலாம், எதற்கு முதல் நாளே வம்பு என்று விட்டு விட்டேன்.

அந்த இரவிலும் டெல்லி தக தக என்று கொதித்துக் கொண்டிருந்தது. டெல்லி வெயில் சென்னை மாதிரி வேர்ப்பதில்லை. அடிக்கடி நாவுலரச் செய்கிறது. மாமாவின் வீட்டில் இரண்டு பெட்ரூமில் ஏசி, ஹாலில் ஏர் கூலர் என்று இருந்ததால் தப்பித்தோம். ப்ளான் படி மறுநாள் இரவு காஷ்மீர் கிளம்ப வேண்டும். டெல்லியில் இருந்து உதம்பூருக்கு ரயில், அங்கிருந்து பேக்கேஜ் டூர்காரர்கள் பிக்கப் என்று ஏற்பாடு. நல்ல ஒரு அரட்டைக்கு பின்னர் எல்லோரும் சோர்ந்து உறங்கினோம்.  சுற்றுலாவின் முதல் நாள் இனிதே முடிந்தது...

சுற்றுவோம்...
3 Responses
  1. 2010-ஏபரலில் 14 பேர் டில்லி,அமிர்தசரஸ்,ஜம்மு,வைஷ்ணவதேவி,ஸ்ரீநகர் போயிட்டு ரிடர்னில் ஆக்ரா போனோம்.ஸ்ரீநகரில் போட் ஹவுஸில் 4 நாட்கள் தங்கினோம். முழுக்க முழுக்க நாங்களே திட்டம் செய்தோம். உங்க காஷ்மீர் எப்படி என்று படிக்க ஆவலுடன்.


  2. amutha - sema plana irukke...ellathayum paathutteenga...ezhuthuren! neenga padikka thaane poreenga :-)


  3. கஷ்மீர் பயணமா!!!!!

    இன்னும் போகலை. உங்களோடு சேர்ந்துக்கறோம்.ஒக்கேவா!!!