இன்று என் முதல் குறும்படம் "விடியல்", "ஐ" டீவியில் "ஐ" தியேட்டர் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த சேனல் ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகிறதாம். இப்போதைக்கு அரசு கேபிளில் தான் வருகிறதாம். படத்தை பார்த்து விட்டு பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு ஃபோன் செய்து என்னோடு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். [நேயர்கள் தொலைபேசியில் பேசுவார்கள் என்று சத்தியமாய் எனக்குத் தெரியாது!] அதில் ஒருவர் "படம் மிக அருமையாய் இருந்தது, ஆனால் முழுதாய் பார்க்க முடியவில்லை, வீட்டில் கரண்ட் போய் விட்டது!" என்றார்.  க்ளைமேக்ஸ் பார்க்காமல் "விடியல்" படம்  பார்த்தால் எவனோ ஒருவன் ஊர் சுற்றுவதை எடுத்தது போல் தான் இருக்கும். அவருக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஒன்று நிச்சயம் நம் நாட்டில் இனிமேல் க்ளைமேக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்து படம் எடுக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்!

அடுத்து பேசியவர் பெயர் "சரவெடி" சாமிநாதன்! படத்தை பாராட்டி பேசினார். இப்படி சிவரஞ்சனி, அம்பத்தூர் திவ்யா, கார்த்திகேயன், தயாநிதி என்று ஐந்து பேர் பேசினார்கள். கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா, ரேடியோவில் "நேயர் விருப்பம்" நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் பெயர்களை சொல்வார்கள். அதை உன்னிப்பாய் கவனித்து, சில பெயர்களை குறிப்பிட்டு "இவர்கள் எப்படி இருப்பார்கள்?" என்று எழுதி இருப்பார். அது தான் என் நினைவுக்கு வந்தது! வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!

எப்படியோ, எதிர்பாராமல் அமைந்த ஒரு புதுமையான அனுபவம். நாளை கலை 10 மணிக்கு மறு ஒளிபரப்பு என்று சொன்னார்கள். வீட்டில் அரசு கேபிள் வைத்திருப்பவர்கள், சேனல் வந்தால், வேறு வேலை எதுவும் இல்லையென்றால் முயற்சி செய்து பாருங்கள். www.interactivetv.tv வழியாகவும் பார்க்கலாம் என்றார்கள். இன்று வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்து தோல்வி அடைந்தார்கள். நீங்கள் நாளை முயற்சி செய்து பாருங்கள்.

ஹே...எல்லாரும் நல்லா பாருங்க, நான் டீவியில வந்துட்டேன், டீவியில வந்துட்டேன்..நானும் செலிப்ரிட்டி தான்!
5 Responses
  1. Anonymous Says:

    Amazing.... Thats really a great achievement Pradeep!! Congratz!!
    -K.R.S



  2. Nijama pradeep....


  3. Unknown Says:

    Good achievement pradeep ...it's just beginning ,you will go places


  4. ghoppuraane seethe :-)
    Thanks for ur belief on me murali!