எனக்கு, என் மனைவிக்கு, தருவுக்கு, மூன்று பேருக்கும் இரண்டு நாளாய் ஜலதோஷம். என் மனைவி நேற்று கண், மூக்கு, வாய் எல்லாம் கழண்டு விழும் ரேஞ்சுக்கு பரிதாபமாய் காட்சி அளித்தாள். இரவு ஒரு ஒன்பது மணி அளவில், வெறுத்து போய், "நீ தருவை  பாத்துக்கோ!!!!!" என்று சொல்லி விட்டு தூங்கப் போய் விட்டாள். போகும்போது  "அவளுக்கு ரசம் சாதம் குடு, அதுல நெய் ஊத்திக் கொடு, அதுல இரண்டு தக்காளி போட்டு பிசைஞ்சி கொடு, அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சி மிச்ச சாதத்துல பால் ஊத்திக் கொடு என்று ஒரு ஏழெட்டு  "பிட்"டாய் போட்டுப் போனாள். தரு என்னை பார்த்து தெரிந்தோ தெரியாமலோ ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் காண்பித்தாள். எனக்கு குபீல் என்றது.

அவளை தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு வந்தேன். சாதம் போட்டுக் கொள்ள ஒரு தட்டை வைத்துக் கொண்டு, அவளை கீழே நிறுத்தி விட்டு, குக்கர் விசிலை அவளிடம் கொடுத்து விட்டு, குக்கரை திறந்தேன். நான் பாத்திரத்தில் இருந்து சாதத்தை எடுப்பதற்குள், குக்கருக்குள் இருக்கும் மிச்ச சொச்ச தண்ணீரில் கையை வைத்தாள். அதை தடுத்து கையை எடுப்பதற்குள் சோற்றில் கையை வைத்தாள். "கண் இமைக்கும் நேரத்தில்..." என்று முழு வாசகத்தை எழுத ஆகும் நேரத்துக்கும் முன்னே அவள் கை ரசம் சாதத்தில் இருந்தது. ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு இன்னொரு கையில் அவளை ஏந்திக் கொண்டு, அவள் கை என் சட்டையில் படாமல் பேசினில் சென்று கழுவிட்டு ஹாலுக்கு வந்தேன். முதுகு லேசாய் வலித்தது!

தரு சுட்டி, ஆனால் சமத்து. அவள் சாப்பிட வேண்டும் என்றால் டீவியில் இசையருவி ஓட வேண்டும். அல்லது யு ட்யுபில் ரைம்ஸ் ஓட வேண்டும். நான் இசையருவியை தேர்ந்தெடுத்தேன். என் மகள் ஒரு அற்புதமான பிறவி. எல்லா தற்கால குத்துப்பாட்டும் அவளுக்குப் பிடிக்கும். இனிமேல் "ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் பாட்டு வைக்கிறார்கள்" என்று நான் கேட்கமாட்டேன். வீட்டில் குழந்தைகள் சாப்பிடத் தான் என்று நான் நன்றாக புரிந்து கொண்டேன். நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய், [சினிமா] நட்சத்திரங்களை காட்டி சோறூட்டும் காலம் வந்து விட்டது.

இசையருவி ஒரு அற்புதமான சானல். குத்துப்பாட்டு, காதல் காதல், இசை அரசர்கள் என்று எந்த நிகழ்ச்சி போட்டாலும், எல்லா நிகழ்ச்சியிலும் "பாக்காத பாக்காத", "கண்டாங்கி கண்டாங்கி", "ஏ பாப்பா, ஏ லூசு பாப்பா மேரேஜ் கலீசுன்னு கஜா சொன்னான்", "என் வீட்டுல நான் இருந்தேனே" இந்த பாட்டுக்களே வரும். அந்த பாட்டு முடியும் வரை தான் தரு அமைதியை இருப்பாள். பெரும்பாலான சமயங்கள் மேல் சொன்ன பாட்டுக்கள் அடுத்து அடுத்து வரும் என்பதால், ஒரு பத்து நிமிடத்துக்குள் என்ன சாப்பாடு ஊட்ட முடிகிறதோ அது தான் அவளின் அந்த வேளை சாப்பாடு!

ஒரு வழியாய் மேல் சொன்ன ஒரு பாடலை காட்டி அவளுக்கு சோறூட்ட ஆரம்பித்தேன். இரண்டு வாய் வாங்கினாள். பிறகு என் மடியில் இருந்து இறங்கி விட்டாள். அவளுக்கு அப்பாவுடன் இருந்தால் விளையாட வேண்டும். ஒரு சுவரோரத்தில் நின்று கொண்டு என்னை துரு துருவென்று பார்த்தாள். அப்படி என்றால், வாப்பா வெளையாடுவோம் என்று அர்த்தம். நான் சீரியசாய் சோறூட்ட போனால் அவள் கெக்கே புக்கே என்று சிரித்துக்கொண்டே கிடந்து ஓடினாள்.  சோற்றுக் கையுடன் ஒரு கையால் அவளை பிடித்தால், "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ" ரேஞ்சுக்கு பாம்பாய் வளைந்தாள்! கை சுளுக்க அவள் விழாமல் பாதுகாத்து தட்டின் அருகில் கடத்தி வந்தேன். ஒரு வாய் ஊட்டினேன். ரசத்தை அதிகம் ஊற்றி விட்டதால் அது அவள் தேகமெங்கும் கொட்டியது. குழந்தைகளுக்கு ஒரு துளி விழுந்தால் போதும், அதை கையில் எடுத்து, துடைத்து, கழுவி, தேய்த்து அதை பரப்புவது என்றால் அதுகளுக்கு கொள்ளை பிரியம்! அதையே அவளும் செய்தாள். "இரும்மா!", என்று நான் துடைத்து விடுவதற்குள் என் முகத்தில் கொஞ்சம் தேய்த்தாள். இதை தவிர்த்து, அவள் நடக்கும்போது நான் ஊட்டி விட்டதால் தரையெங்கும் கொட்டியது, என் கை அவள் வாய்க்குள் நுழையும் சமயம் அவள் திமிரியதால் அவள் கன்னத்தில் ஒட்டியது, திடீரென்று அவளுக்கு ஒரு ஞானோதயம் வந்து, "ச்சே...இந்த கருமத்தையா சாப்பிடறோம்" என்று அவள் துப்பியது என்று எல்லா வகையிலும் எல்லா இடத்திலும் சாதம் கிடந்தது.

இதன் நடுவே, தரையில் கிடக்கும் தலையணையில் அவளின் தலையை வைக்காமல் தன் முதுகை வைத்து அப்படியே பின்னால் சாய்ந்து அவளின் தலையில் அடிபடாமல் ஃபீல்டிங் செய்து [ஜாண்டி ரோட்சுக்கு எத்தனை குழந்தைகள்?], "அப்பா கொடுக்குற ரசத்துக்கு இதுவே பரவாயில்லை!" என்று அவளே முடிவெடுத்து, அவளின் மூக்கிலிருந்து டைரக்டாய் வாய்க்குள் போவதை தடுத்து, இங்கும் அங்கும் ஓடி ஆடி, அலுத்து, தரையில் கிடக்கும் தலையணை, விளையாட்டு சாமான் ஆகியவற்றில் சிறுநீர் கழித்து, அவளுக்கு ஜட்டி மாற்றி மறுபடியும் அவள் அதில் கால் வைப்பதுற்குள் அதை துடைத்து [கவனிக்க எல்லாம் ஒரு கையில்]....ஸ்வபா....காஜல் அகர்வால் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டீவியில் "கண்டாங்கி" என்ற ஒரு சொல் தான் காதில் விழுந்தது...ம்ம்ம்ம்ம்ம்!

இத்தனை களேபரங்களுக்கு நடுவில் வெற்றிகரமாய் அவளுக்கு ரசம் ஊட்டி, அடுத்த அரை மணி நேரத்தில் பால் சாதமும் ஊட்டும்போது தான் ஒரு விஷயம் உரைத்தது! என் மனைவி "தரு" முழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முக்கால்வாசி நேரம் அவளிடம் கேட்கும் ஒரே  கேள்வி..."பசிக்குதாம்மா? சாப்பிடறியா!!!!!!!!!!!!!! MOTHER!

அப்போது, டீவியில் "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு" பாட்டு ஓடியது. தரு அசையாமல் அந்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் [அது எப்படி எல்லா பொண்ணுங்களுக்கும் பொண்ணுங்களை திட்ற பாட்டு புடிக்குதுன்னு புரியலை...]! அதில் ஒரு வரி...

மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லைடா - நீயும்
டாவடிச்ச பொண்ண கட்டினா டவுசர் அவுரும்டா...

நான் நினைத்துக் கொண்டேன்....

"மம்மி சொன்ன பொண்ண கட்டினாலும், டாவடிச்ச பொண்ண கட்டினாலும்..... டவுசர் அவுர்றது உறுதி!
7 Responses
  1. Unknown Says:

    ஒரே நாள்லே டவுசர் அவுருதா ?


  2. Anonymous Says:

    ஜட்டி போடல


  3. Vanila Says:

    படிச்ச எனக்கே டையர்ட் ஆய்டுச்சு... எப்படி சமாளிக்கிறாள் நிஷா.....phew....


  4. அழகு..!!

    தருவுக்கு...துருதுருன்னு பேரு வச்சருக்கலாம்.

    அப்புறம் ஹாலில் கொட்டியிருந்த சாதத்தைப் பார்த்து...

    வீட்டில் வாங்கின டோஸை சொல்ல வீட்டுட்டீகளே ..!!


  5. கிண்டர் ஜாய் வாங்கி தாரேன் இதை சாப்பிட்டு முடிச்சா ! வெளியே கூட்டி போறேன் , இப்பிடி பல ட்ரிக்ஸ் இருக்கே ட்ரை பண்ணலையா?


  6. Same blood sir.. But enakku palagipochu..


  7. Anonymous Says:

    Pradeepukke ippadi iurkkunna... Subramanianukku eppidi irundirukkum...

    --KRS