அமீர் கான் ஒரு படத்தை பற்றி சொல்கிறார் என்றால் அதை நான் பார்த்து விடுவேன். அவரின் ரசனை மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. அவரின் பரிந்துரைகள் என்னை இதுவரை ஏமாற்றியதில்லை. இந்தப் படமும் அப்படித் தான்.


ஷிப் ஆஃப் தீசிஸ் என்பது தீசிஸ் என்பவரின் பாரடாக்ஸ் என்கிறது விக்கி. அதாவது தமிழில் "முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை". [முற்றிலும் தமிழில் சொன்னால் கொஞ்சம் புரிஞ்சதும் குழம்பிடுதுல்ல?] அது யாதெனில், ஒரு பொருளில் உள்ள அனைத்து பாகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி அமைத்து விட்டால் எஞ்சுவது அதே பொருளா வேறு பொருளா? எடுத்துக்காட்டாக, ஒரு கப்பலில் உள்ள அனைத்து பாகங்களையும் மாற்றி விட்டால் இறுதியில் இருப்பது அதே கப்பலா? இல்லை வேறு கப்பலா? [எவ்வளவு வேலையத்து இருந்திருக்காய்ங்க பாருங்க!] இது உலகத்தையே உலுக்கிய [இது என்னோட பில்டப்பு!] ஒரு பெரிய தத்துவார்த்த கேள்வி! இப்படியாக நீங்கள் பிரபஞ்சத்திலுள்ள எந்தப் பொருளையும் எடுத்துக் கொண்டும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முயலலாம். அந்த முரண்பாட்டு மெய்யுரையின் அடிப்படையில் அமைந்த படம் தான் ஷிப் ஆஃப் தீசிஸ். [நம்ம படத்துலயும் கதைன்னு ஒன்னு இருக்கே!]

இந்தப் படத்தில் ஆனந்த் காந்தி [இயக்குனர்] எடுத்துக் கொண்டிருக்கும் பொருள் மனித உடல். உடல்கள்! இறந்த ஒருவரின் கண், கல்லீரல், சிறுநீரகத்தை எடுத்து மூவருக்கு வைக்கிறார்கள். அந்த மூவர்,


கண் பார்வையற்ற புகைப்பட நிபுணியான ஒரு பெண்.

மிருக வதையை எதிர்க்கும் ஒரு துறவி.

ஒரு கலை சார்ந்த குடும்பத்தில் பிறந்து, சதா பணத்தை கட்டி அழும் ஒரு ஸ்டாக் ப்ரோக்கர்.

இறுதியில் ஷிப் ஆஃப் தீசிஸ் படி அவர்கள் யாராய் வாழ்கிறார்கள் என்ற கேள்வியுடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இது போதும், நான் கதையை சொல்லப் போவதில்லை. நீங்களும் அனுபவியுங்கள்!

வீடு, சந்தியா ராகம் எல்லாம் ஆர்ட் பிலிம், நல்ல படம் என்றால் சிங்கம், துப்பாக்கி தான் என்றால் நீங்கள் அப்பீட் ஆகிக் கொள்ளுங்கள்! உங்களால் ஒரு நிமிடம் கூட இந்த படத்தை தாங்க முடியாது. சீரான ஒரு நீரோட்டத்தை உங்களால் பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? அப்படி இருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை. எந்த வித அதிபயங்கர திருப்பங்களும் இல்லாமல் [நீரோடையில் இருப்பதுண்டு!] அமைதியாய், சீராய், சாந்தமாய் பயணிக்கிறது. அது மிக அழகாய் நம்மையும் உள் இழுத்துக் கொள்கிறது. படத்தில் நிறைய பேசுகிறார்கள். அமைதியாக, சாந்தமாக, சத்தமாக, அழுத்தமாக, மௌனமாக இப்படி பல வகையில் பேசுகிறார்கள். வாழ்வியல் சார்ந்த, மரணம் சார்ந்த, சுய மதிப்பு சார்ந்த பலவிதமான கேள்விகளை படம் முழுதும் எழுப்பிக் கொண்டே போகிறார்கள். சப் டைட்டில் போட்டும் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறுபடியும் ஒரு தடவை படத்தை பார்க்க வேண்டும்.உண்மையில், இந்த படம் முடிந்தவுடன் தான் தொடங்குகிறது. படம் முடிந்து வீட்டுக்கு வந்தும் அது நம் மனம் எங்கும் வியாபித்து விடுகிறது.



காமெரா வாயில் ஒத்திக் கொள்ளலாம் போலிருக்கிறது [அட அதாங்க உம்மா!]. சில இடங்களில் நடிகரின் முகத்தில் இடித்துக் கொண்டு காமெரா நிற்கிறதோ என்று தோன்றுமளவுக்கு க்ளோசப் வைத்திருக்கிறார்கள். எல்லா காட்சிகளும் பார்வையாளர்களை பார்த்து "என்னப்பா, பாத்தியா, நல்லா பாத்தியா?" மாத்தவா என்பது போல் நிறுத்தி நிதானமாக காட்டுகிறார்கள். [ தற்போதைய தமிழ் சினிமா பாடல்களை நினைத்துக் கொண்டேன். கண் சிமுட்டுவதற்குள் நாலு கட் செய்து விடுகிறார்கள்.] குறிப்பாய் அந்த பனிமலையும், நீரோடையும், அங்கு நிலவும் கனத்த மெளனமும் அந்தப் பெண்ணின் மனநிலையோடு நம்மையும் இணைத்து விடுகிறது. அந்தக் கணத்தில் நானும் அவளோடு அங்கு இருந்ததை போல இருந்தது. அருமை...இப்படி படத்தில் பல கணங்கள் படத்தில் வாய்க்கின்றன. துறவி மண்புழுவை காப்பாற்றுவது, அந்த இளம் வக்கீலிடம் வாக்குவாதம் செய்வது, நோயால் துன்புறுவதை காட்சிபடுத்தியது, புத்தகம் கொடுக்க வரும் அந்த தாத்தாவின் பிரசன்ஸ், ஸ்டாக் ப்ரோக்கரின் நண்பனின் அங்கதங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தில் பல இடங்கள் மெளனமான கணங்கள் இருப்பதால், இசை ஆங்காங்கே பேசுகிறது.

மொத்தத்தில் ஆனந்த் காந்தியின் படத்தை பார்க்க உங்களுக்கு "காந்தி" யின் பொறுமை வேண்டும். என்றும், பொறுமையின் பலன் அற்புதம் தானே?
3 Responses
  1. Anonymous Says:

    //எல்லா காட்சிகளும் பார்வையாளர்களை பார்த்து "என்னப்பா, பாத்தியா, நல்லா பாத்தியா?" மாத்தவா என்பது போல் நிறுத்தி நிதானமாக காட்டுகிறார்கள். [ தற்போதைய தமிழ் சினிமா பாடல்களை நினைத்துக் கொண்டேன். கண் சிமுட்டுவதற்குள் நாலு கட் செய்து விடுகிறார்கள்.]//பாலாஜி-க்கு ரொம்ப பிடிக்கும்-ன்னு நெனைக்கிறேன். அவர் அடிக்கடி கம்ப்ளைன்ட் பண்றது இதை பத்தி தான்.
    நல்ல விமர்சனம் பிரதீப். படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலை உண்டு பண்ணிட்டே.



  2. Sathish Says:

    Nice one... Padam paarthuthu thiruma vanthu comment podaren... ( 1 or 2 yrs le )