சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் படங்களாய் பார்த்தேன். தபாங் 2 [ஹிந்தி], கடல், ஸ்பெஷல் சப்பீஸ் [ஹிந்தி].

தபாங் ஒன்றாம் பாகம் நாற்பது ரூபாய் கொடுத்து தண்டத்துக்கு ஒரு சீடி வாங்கி பார்த்தேன். கேவலமான பிரிண்ட். படம் சரியாய் புரியவேயில்லை. இந்த முறை அந்த தப்பை செய்யக் கூடாது என்று, ஆன்லைனில் டிவிடி பிரிண்ட் வந்ததும் தரவிறக்கினேன்!

பரவாயில்லை. நன்றாகவே இருந்தது. எனக்கு, ஒன்று, இரண்டு என்று பாயின்ட் பாயின்ட்டாய் பேசுபவர்களை பார்த்தால் பொறாமையாய் இருக்கும்! ஏன் என்றால் எனக்கு அப்படி பேச வராது. இந்த படத்தை பற்றி பேசும்போது அப்படி பேசலாம் என்று நினைக்கிறேன்!  கூடக் குறைய இருக்கும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். படத்தில் மூன்றே மூன்று விஷயங்கள் தான் சிறப்பு! ஒன்று, சல்மான் கான்! இரண்டு, சல்மான் கான்!! மூன்று, சல்மான் கான்!!![நான் தான் சொன்னேனே...]

எல்லாமே சல்மான் கான் தான் என்றால் அது என்ன மூன்று கணக்கு என்று கேட்டீர்கள் என்றால், மூன்றோடு முடித்தால்  தான் எனக்கும் எழுத எளிது, படிக்கும் உங்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும்!!

சல்மான் கான்! மனிதர் என்னமாய் கலக்குகிறார். எதை நினைத்து, இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார்களோ தெரியவில்லை, சல்மான் தவிர வேறு யாராவது இதை செய்ய முடியுமா என்று சந்தேகமாகத் தான் இருக்கிறது. இந்தக் கதாப்பாத்திரம் அவரின் உண்மையான குணநலன்களுடன் சற்று பொருந்திப் போவது காரணமாய் இருக்கலாம். மனதில் பட்டதை பேசுவது, எல்லாவற்றையும் கிண்டலடிப்பது மற்றும் அவரின் carefree attitude எல்லாமும் கொஞ்சம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது தான் சுல்புல் பாண்டே கதாப்பாத்திரம்!

ரணகளமான போலீஸ். அடி ஒவ்வொன்றும் காட்டு அடி. அதே சமயம் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லாத அதிரடி! "குலாப்ஜாமூன் சே யாத் ஆயா...", "கமால் கர்தே ஹோ யார்" போன்று ஆங்காங்கே நச் பஞ்ச்! அட்டகாசம். கவனிக்க நான் படத்தை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. வழக்கமான திருடன் போலீஸ் கதை தான். ஒரு பெரிய தாதா [தட்டச்சு பிழையில் முதலில் தாத்தா என்று இருந்தது...ஹிஹி!] இருப்பான், அவனை இவன் சீண்டுவான், இவனை அவன் சீண்டுவான்! கடைசியில் கதாநாயகன் வெற்றி வாகை சூடுவான். இதுவும் அப்படியே. கதையில் ஒரு மண்ணும் இல்லை. வழக்கமான இந்த போலீஸ் திருடன் கதையை கூட சுவாரஸ்யமாய் எடுக்கலாம். எடுத்துக் காட்டாக சாமி மாதிரி அபிமன்யு மாதிரி...இந்தப் படத்தில் அந்த சுவாரஸ்யம் கூட இல்லை.  தேவையில்லை. சல்மான் இருக்கிறாரே என்று நினைத்து விட்டார்கள். அதை அவர் காப்பற்றியும் இருப்பது தனிச் சிறப்பு!

பயங்கரமான சண்டையின் நடுவே, அடியாட்களின் செல்போனில் குத்து பாட்டு ஒலிக்க, உடனே தன்னை மறந்து ஆடுவது, அம்மாவின் போனா என்று கேட்டு, ப்ரணாம் மாஜி  என்று அடியாட்களின் அம்மாவுடன் பேசுவது, சொனாக்ஷியிடம் கொஞ்சுவது, அப்பாவிடமே அவரின் காதல் கதையை கேட்பது, அப்பாவுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு  பெண் குரலில் பேசி அவரை குழப்புவது, வில்லனை [பிரகாஷ்ராஜ்!] பார்த்து கொஞ்சம் கூட அசராமல் கலாய்ப்பது  என்று படம் நெடுக ஒரே கூத்து தான்.

"Madness of Salman Khan", nothing else.

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடல்

மணிரத்னம் படம் என்றால், அவர், படத்துக்கு பெயர் வைப்பதில் தொடங்கி, அந்தப் பெயரின் எழுத்து எந்த வடிவத்தில் எழுதப் பட்டிருக்கும் [தளபதி என்ற எழுத்தை நான் அதே வடிவத்தில் நூறு முறை எழுதிப் பார்த்திருப்பேன்!], அது எந்த வண்ணத்தில் இருக்கும் [தளபதி - சிவப்பு, நாயகன் - சி த்ரு வெள்ளை, அலைபாயுதே - மஞ்சள்]  படத்தில் அந்த டைட்டில் எப்படி வரும், அதன் பின்னணி இசை எப்படி இருக்கும், படத்தின் ஒவ்வொரு ஸ்டில்லும், ஃ ப்ரேமும், பாடல்களும், பாடல் வரிகளும் என்று ஒன்று விடாமல் நான் ரசித்ததுண்டு. "கடல்" படம் தான் முதன் முதலாய் அத்தகைய எந்த சுவாரஸ்யமும் எனக்கு அளிக்காமல் இருந்த முதல் மணிரத்னம் படம். அதன் எழுத்து வடிவம், வண்ணம், படத்தில் ஸ்டில்ஸ் என்று ஒன்று கூட மனதில் ஒட்டவில்லை. படமும் அப்படித் தான்! பாதி படம் பார்த்து விட்டு படுத்தேன், மீதி கதை என்னவாகும் என்று பார்க்கக் கூடத் தோன்றவில்லை!

இந்தப் படத்தைப் பற்றி சென்ற வாரமே நிறைய அலசி விட்டதால் என்று சன் டீவியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சொல்வது போல், எல்லா பதிவர்களும் அலசி, பிழிந்து காயப்போட்டு விட்டதால் நான் அந்தத் தப்பை செய்யப் போவதில்லை.

படத்தில் அரவிந்த்சாமியின் உடல் மொழி சில இடங்களில் எனக்கு கமலின் உடல் மொழியுடன் ஒத்திருந்தது போலத் தோன்றியது. இந்தப் பாத்திரத்தை கமலும், சாத்தான் பாத்திரத்தை ரஜினியும் செய்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது! யாருக்காவது அப்படி தோன்றியதா?

அர்ஜுன் மீசை எடுத்தால் சின்ன பையன், மீசை வைத்தால்  பெரிய ஆள். ஜென்டில் மேன் காலத்திலிருந்து இதை செய்து கொண்டு இருக்கிறார். அலுக்கவில்லை தான்! மனிதர் உடம்பை அப்படி வைத்திருக்கிறார், கன்னம் தான் கிழடு தட்டி போயிருக்கிறது. [அப்படி பார்த்தால் அமீர்கான், அக்ஷய் குமார், சல்மானுக்கெல்லாம் வயதே ஆகவில்லை, சப்பாத்தி?!] இதில் அரவிந்த்சாமி பரவாயில்லை. முடி வைத்ததும் ஆள் பழைய பம்பாய் ஆள் போல் ஆகிவிட்டார்! அர்ஜுன் நன்றாய் இருந்த காலத்தை எல்லாம் விட்டு விட்டு, மணிக்கு இப்போது தான் அவரை கூப்பிட தோன்றி இருக்கிறது. நல்ல வேளை ரஜினி நன்றாய் இருக்கும்போதே ஒரு படம் எடுத்து விட்டார். [தளபதியில் தலைவர் என்னா அழகு!]

கெளதமின் உயரம், உடம்பு நன்றாய் இருக்கிறது. கொஞ்சம் சிரிக்கும் போது கார்த்திக் மாதிரி இருக்கிறது. நான் எல்லா பாவமும் பண்ணி இருக்கேன் என்று கையை சுழற்றும் போது சடுதியில் கார்த்திக் தோன்றி மறைந்தார்!  இருந்தும் கார்த்திக்கின் அழகு இல்லை. அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக் என்ன அழகாகவா இருந்தார். போக போக சரியாயிரும். ஆக்கிருவாய்ங்க! நன்றாய் நடித்திருந்தாரா?

துளசி, கார்த்திகாவின் "zipped version" மாதிரி இருக்கிறார். கார்த்திகாவையே செய்து, கொஞ்சம் தலையில் தட்டி தட்டி செய்த மாதிரி...டிங், டிங் என்று தலையாட்டி பார்க்கும்போது கொஞ்சம் டெரராய் இருந்தார். தமிழ் சினிமாவை பொருத்தவரை கொஞ்சம் மறை கழண்ட மாதிரி இருந்தால், அது க்யூட்! கஷ்டம்...

பொன்வண்ணன் அருமையான நடிகர். ஏன் யாரும் உபயோகப்படுத்திக் கொள்வதில்லை என்று புரியவில்லை?

கலாராணியை வைத்து எனக்கு முழு நேர காமடி படம் எடுக்க ஆசை. அந்த அம்மா இனி அழதா இந்த பூமி தாங்காது சொல்லிட்டேன்!

ரஹ்மானுக்கு உலகத்தரத்தில் இசையமைக்க ஆசை இருந்தால், அதை ஆங்கில படங்களிலே அவர் செய்யலாம். அதற்கு அவருக்கு வழியும் இருக்கிறது, வாய்ப்பும் இருக்கிறது. மணப்பாடு கிராமத்தில் தருதலையாய் வளரும் ஒரு பிள்ளைக்கு பின்னணி இசையாய் "மூடி மூடி", "மூடி மூடி" என்று போடுவது எல்லாம் ஒட்டவே ஒட்டாத ஓவர்! பின்னணி இசை என்பது பாடல்களின் மெட்டை வாசிப்பது அல்ல என்று இவருக்கு யாராவது புரியவையுங்கள்!

ராஜீவ் மேனன் காமெரா படத்துல சூப்பர்னு சொன்னாங்க. நானும் தேடி தேடி பாத்தேன் எனக்கு கண்லயே பாடலையே...[குறும்பு!]

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்பெஷல் சப்பீஸ்

"ஏக் காவ் மேன், ஏக் கிஸான் ரகுதாத்தா" என்ற அளவில் தான் உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்றாலும் சரி, கமல் அடுத்து இந்த படத்தை தமிழாக்குவதற்கு முன் பார்த்து விடுங்கள். இந்த படத்தை பார்க்க இரண்டு காரணங்கள்...[மறுபடியும் நம்பரா!]

ஒன்று....

இதை பற்றி விரிவாய் கதையுடன் இன்னொரு பதிவு இடுகிறேன்.

 
2 Responses
  1. Anonymous Says:

    its really very intersting to read your blog pradeep. good cine Review.