மதுராபுரி ஒரு அழகான சிற்றூர். ஆறுகளும், மலைகளும், பச்சை போர்வை போர்த்திய வயல்களும் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தது. அந்த ஊர் மக்கள் அனைவரும் மிக நல்லவர்கள். யாருக்கும் எந்த வித தீங்கும் செய்யாமல், ஒருவருக்கொருவர் உபகாரமாய் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரை சுற்றி அடர்ந்த காடு ஒன்று இருந்தது. ஒரு முறை, வெகு தொலைவிலிருந்து கள்ளகன் என்ற அரக்கன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் மதுராபுரியை பற்றி வரும் வழி எல்லாம் நிறைய கேள்விப்பட்டிருந்தான். நெடுந்தூரமாய் பயணம் செய்து வந்த அவன் மிகவும் களைத்து போயிருந்தான். இனிமேல் சில நாட்கள் இங்கே தங்கி ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதிலும் மதுராபுரியை சேர்ந்த மக்கள் எல்லாம் செல்வச் செழிப்பாக கொழு கொழுவென்று இருப்பார்கள் என்று அவன் கேட்டிருந்தான். அதை நினைக்கும்போது அவன் நாக்கில் அப்போதே எச்சில் ஊறியது.

அப்போது மதுராபுரியைச் சேர்ந்த வேலப்பன் அந்த வழியாய் பக்கத்து ஊருக்குச் சென்று கொண்டிருந்தான். உடனே இது தான் சமயம் என்று அவன் முன் கள்ளகன் தோன்றினான். வேலப்பன் இத்தனை பயங்கரமான அரக்கனை பார்த்து குலை நடுங்கிப் போனான். கள்ளகன் பயங்கரமாகச் சிரித்தான். வேலப்பனுக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. தயவு செய்து என்னை கொன்று விடாதே என்று கெஞ்சினான். அதற்கும் அரக்கன் பலமாகச் சிரித்தான். சிரித்து ஓய்ந்ததும், கள்ளகன் வேலப்பனிடம், "இதோ பார், நான் இப்போது கடுமையான பசியில் இருக்கிறேன். இருந்தும் இப்போது நான் உன்னை கொல்ல மாட்டேன். நான் இந்த வனத்தில் தான் இன்னும் சிறிது காலம் தங்கப் போகிறேன். நான் மதுராபுரியை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அதன் செல்வச் செழிப்பும் நான் அறிவேன். அதனால் நீ உன் ஊருக்குச் சென்று என்னை பற்றி கூறி தினமும் எனக்கு ஒரு வண்டி சோறு, ஒரு வண்டி குழம்பு, ஒரு வண்டி ரசம், ஒரு வண்டி தயிர், ஒரு வண்டி கூட்டு, ஒரு வண்டி பொறியல், ஒரு வண்டி கோழி முட்டை, ஒரு கோழி, ஒரு ஆடு, ஒரு மாடு, ஒரு மனிதன் ஆகியவற்றை ஏற்பாடு செய். அதனால் தான் உன்னை இப்போது உயிருடன் விடுகிறேன். நாளை முதல் எனக்கு இது வந்து சேர வேண்டும், இல்லையென்றால் நான் ஊருக்குள் புகுந்து ஊரையே அழித்து விடுவேன்." என்றான். இதைக் கேட்ட வேலப்பன் வெலவெலத்துப் போனான். தலை தப்பியது புண்ணியம் என்று நினைத்தாலும், தன் ஊர் மக்களை நினைத்து வருந்தினான்.

ஊருக்கு வந்த வேலப்பன் ஊரில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு நடந்தவைகளை ஒன்று விடாமல் சொன்னான். இதைக் கேட்ட அனைவருக்கும் கை, கால் ஓட வில்லை. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அரக்கன் முன் சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும் என்று தங்கள் விதியை நினைத்து நொந்தனர். பின்னர், கள்ளகன் கேட்டதை எல்லாம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். பெரிய குடும்பத்திலிருந்து, குடும்பத்திற்கு ஒருவரை, அதாவது முதலில் வயதானவர்களை, பிறகு ஆடவர்கள், பிறகு பெண்கள், பிறகு குழந்தைகள் என்று அரக்கனிடம் அனுப்ப முடிவு செய்தார்கள். அதன் படியே மறுநாளிலிருந்து செய்ய ஆரம்பித்தார்கள். சோறு இன்னும் ரெண்டு வண்டி கேட்டாலும் கொடுக்கலாம், இப்படி நாளுக்கு ஒருவரை பலி கொடுப்பது அவர்களால் தாங்க முடியவில்லை. ஆனால் கள்ளகன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவேயில்லை. அவன் அவனுக்கு தினமும் வரும் விருந்தில் அக மகிழ்ந்து போயிருந்தான். இத்தனை காலம் இந்த ஊரை வந்து சேராதது எத்தனை தவறு என்று தன்னையே நொந்து கொண்டான்.

நாட்கள் செல்லச் செல்ல மதுராபுரியில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டது. அந்த ஊரே களையிழந்து விட்டது. யாருக்கும் எதிலும் மனம் ஒட்டவில்லை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்த ஊரில் சாவுக் கலையே தாண்டவமாடியது. அப்போது அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். மக்கள் அவரிடம் நடந்தவைகளை சொல்லி புலம்பினர். சாமியார் அவர்களை ஆறுதல் படுத்தி விட்டு, சிறிது நேரம் நிஷ்டையில் அமர்ந்தார். மக்கள் அனைவரும் அவரை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவரின் முகம் ஒளிர்ந்தது. மெதுவாய் கண்ணை திறந்த சாமியார் மக்களை பார்த்து புன்னகை பூத்தார். பிறகு திடீரென்று அவர் முகத்தில் இருந்த ஒளி மங்கியது. மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஊர் பெரியவர் ஒருவர் சாமியாரிடம் விசாரித்தார். சாமியார், "கள்ளகனை கொல்ல என்ன வழி என்று என் ஞான திருஷ்டியில் கண்டு கொண்டேன்!" மக்கள் அனைவரும் ஆரவாரத்தால் குதூகளித்தனர். ஊர் பெரியவர், சொல்லுங்கள் சாமி, என்ன கண்டீர்கள் தங்கள் ஞான திருஷ்டியில், எப்படி அவனை கொல்வது, என்று வினவினார். சாமியார், வெகு நாட்களுக்கு முன், ஒரு முறை கள்ளகன் இரை தேடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பூனைக் கூட்டத்தை கண்டான். அந்தக் கூட்டம் முழுவதையும் அடித்துச் சாப்பிட்டான். கடைசியில் ஒரு வயதான பூனை ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தது. அதனை உண்பதற்காக அதை பிடித்து அதனுடைய கழுத்தை அழுத்தும்போது, அதிசயமாய் அந்த பூனை பேசியது. என் கண்ணுக்கு முன்னே என் கூட்டத்தை இரக்கமில்லாமல் ஒழித்த உன்னை நான் சபிக்கிறேன் என்றது. அதைக் கேட்ட கள்ளகன் ஆத்திரம் கொண்டு, சீ, வாயை மூடு கிழப் பூனையே! கேவலம் பூனை நீ, நீயா என்னை கொல்வது? இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்று அதன் கழுத்தை மேலும் அழுத்தினான். உடைந்த குரலில் அந்தப் பூனை, இன்னும் சில காலங்களில் என்னை போலவே ஒரு பேசும் பூனையை நீ பார்ப்பாய், அதனிடம் "இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்று சொன்னவுடன் உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும். அதோடு இப்படி ஒரு சாபம் உனக்கு இருப்பதை நீ மறக்கக் கடவது என்றும் சபித்து விட்டது என்றார்.

ஊர் மக்கள் இதை வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வாய் வரை சென்ற உணவை தட்டிப் பறித்தது போல் ஆகிவிட்டது ஊர் மக்களுக்கு. இந்தப் பேசும் பூனையை எங்கே தேடுவது? பூனை எங்காவது பேசுமா? அப்படி ஒரு பூனை இந்த உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் எப்படி அதை தேடிக் கண்டுபிடிப்பது என்று பல வித கேள்விகள், குழப்பங்கள் எழுந்தன. அப்போது கூட்டத்திலிருந்து "இந்த வேலையை நான் செய்கிறேன்" என்று ஒரு குரல் வந்தது. கூட்டத்தை விளக்கி ஒரு சிறுவன் வந்தான். எல்லோரும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்கள். அந்த சிறுவன் பொன்னன். தன் வயதான பாட்டியுடன் அந்த ஊரில் வாழ்ந்து வந்தான். சிறு வயதிலேயே அவனுடைய தாய் தந்தை இறந்து விட்டார்கள். பாட்டி தான் அவனை வளர்த்து வந்தாள். பொன்னன் மிகவும் புத்திசாலி! ஊருக்கே அவன் செல்லப் பிள்ளை. கள்ளகனுக்கு உணவாக அவன் பாட்டி தான் அடுத்து செல்ல வேண்டியிருந்தாள். அதை நினைத்து வருந்திக் கொண்டிருந்த நிலையில் சாமியாரின் இந்த உபாயம் பொன்னனுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது. சாமியார் அவனை அருகில் அழைத்து பொன்னனை ஆசிர்வதித்தார். பொன்னன் பூனையை கொண்டு வரக் கிளம்பினான்.

மறுநாள் அதிகாலை எழுந்து பொன்னன் சுத்தமாகக் குளித்தான். அரக்கனுக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அதோடு தன்னிடம் உள்ள பேசும் பூனையை பெட்டியில் வைத்துக் கொண்டான். அரக்கனின் இடம் நோக்கி விரைந்தான். கள்ளகன் மிகவும் பசியுடன் இருந்தான். உணவின் நறுமணம் அவன் உணர்ந்ததும், அவன் குகை விட்டு வெளியே வந்தான். அவனால் இனிமேலும் பொறுக்க முடியவில்லை. உணவை எடுத்து வாயில் வைக்கும்போது பொன்னன், கள்ளகரே நில்லும், இன்று நீங்கள் உண்ணப் போகும் மானுடன் நான் தான். நீங்கள் உணவை உண்பதற்கு முன் தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்றான். வயதானவர்களையே தின்று சலித்திருந்த கள்ளகனுக்கு பிள்ளைக் கறி என்றதும் குதூகலமாய் இருந்தது. சரி வேகமாய் சொல், நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன் என்றான். இது தான் சமயம் என்று நினைத்த பொன்னன், கள்ளகரே, என்னிடம் ஒரு பேசும் பூனை இருக்கிறது. அது பொல்லாத பூனை. நீங்கள் மிகுந்த பலசாலி என்று அதனிடம் சொன்னேன். அந்தப் பூனையோ, தன்னை விட பலசாலி இந்த உலகிலேயே கிடையாது, கள்ளகன் எல்லாம் என் கால் தூசி என்று சொல்லி விட்டது! உங்களை அது இப்படி அவமானப்படுத்தியதால், அதை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். நீங்களே அதற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றான். அதை கேட்ட கள்ளகன் உடலில் உஷ்ணம் பரவியது. காதிலிருந்து புகையாய் வந்தது. எங்கே அந்தத் திருட்டு பூனை காட்டு என் முன்னால் என்று கர்ஜித்தான். பொன்னன் மெல்ல தான் கொண்டு வந்திருந்த பெட்டியின் பூட்டை திறந்தான். அது நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தது. அதன் தலையில் லேசாய் தட்டினான். பூனை விழித்தெழுந்தது. அதன் முன்னே பிரம்மாண்டமான கள்ளகனை பார்த்து சற்று மிரளாமல் கொட்டாவி விட்டது. கள்ளகனுக்கு ஆத்திரம் பொங்கியது...அடே, நான் யார் தெரியுமா? என்று கத்தினான். பதிலுக்கு பூனையும், அடே, நான் யார் தெரியுமா? என்றது. "நீயா என்னை கொல்வாய், இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்றதும், பதிலுக்கு பூனையும் அதையே சொன்னது. சொல்லி முடித்த அடுத்த நிமிஷம், கள்ளகனின் தலை வெடித்து சுக்கு நூறாய் ஆனது.

வெற்றி வாகையுடன் பொன்னன் ஊருக்குள் வந்தான். ஊர்காரர்களால் அவர்கள் கண்ணையே அவர்களால் நம்பமுடியவில்லை. எப்படி அந்த அரக்கனை கொன்றாய் என்று கேட்டார்கள். இதோ, இந்தப் பூனையின் மூலம் தான் என்று பூனையை பெட்டியிலிருந்து காட்டினான். பூனை அனைவரையும் பார்த்து விழித்தது. பிறகு பெட்டியை பூட்டி விட்டான். இந்த பூனையின் பெயர் என்ன என்று ஒருவன் கேட்டான். இதன் பெயர் "டாக்கிங் டாம்" என்றான் பொன்னன்!
2 Responses
  1. Anonymous Says:

    adappaaavi...

    Venkatesh


  2. padichi veruthu poyittennu teriyuthu :-)