உழைப்பாளிகளுக்கு என் "மே" தின வாழ்த்துக்கள்!

"கோ" என்றால் அரசன் என்று தானே அர்த்தம். அரசாட்சியை பிடிக்க நடக்கும் போராட்டம் தான் கதைக் களம் என்பதால் தான் இந்தப் பெயரா? தெளிவா புரிஞ்சிக்கிறதுக்காக கேட்டேன்! படத்தைப் பார்க்காதவர்கள், கதை படிக்க விரும்பாதவர்கள் முதல் பத்தியை படிக்க வேண்டாம்!

ஜீவா பத்திரிகை புகைப்படக்காரர். பறந்து பறந்து புகைப்படம் எடுக்கிறார். [கே.வி. ஆனந்த் பத்திரிகையில் இருந்த போது இப்படி தான் படம் எடுத்திருப்பாரோ?] புகைப்படங்களை எடுத்துத் தள்ளி, சில பல அரசியல் அநியாயங்களை அம்பலப்படுத்தி, நேர்மையாய் களத்தில் இறங்கி போராடி அரசியலில் ஜெயிக்க விரும்பும் தன்னுடைய சில நண்பர்கள் ஆட்சியை பிடிக்க பெரும் உதவி செய்கிறார். அதில் ஜெயிக்கிறார். அங்கே தான் ஒரு ட்விஸ்ட்.[அங்கே கொண்டு போயா வச்சீங்க?] அவ்வளவு தான் கதை!

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுப் புதுக் கதைக் களங்களை கொண்டு வந்து தமிழ் சினிமாவிற்கு புது நீர் பாய்ச்சுகிறார் ஆனந்த். அதற்காகவே ஒரு சபாஷ். அதிலும் அயன் படத்தைப் பற்றி அவரே படத்தில் வரும் பியாவின் மூலம் கிண்டலடித்துக் கொள்வது நல்ல ஏளனம். ஜீவா இயல்பாய் நடிக்கிறார்; மனிதர் எந்த பாத்திரத்திலும் பொருந்தி விடுகிறார். அனால் சொங்கி மாதிரி இருக்கிறார். அவர் ஹேர் ஸ்டைல், அரும்பு மீசை, ஆட்டு தாடி, கிரிதா என்று அடம்பிடிக்கும் சில முடிகள்!! முதலில் எண்ணை கிண்ணை போட்டு மீசையை வளத்துக்குங்க பாஸ்! [இல்லை, பிரஷாந்த் கிட்ட ஐடியா கேளுங்க!!] நம் தலையெழுத்து தமிழ் சினிமாவில் தான் தமிழ்நாட்டில் ஹீரோ இருந்தாலும் ஏதோ ரஷ்யா நாட்டில் இருப்பதை போல் 4 சொக்காய் போடறான்! அதை பார்க்கும்போதே கருமம் எங்கே எங்கேயோ வேர்க்குது! அஜ்மல் ஜம்மென்று இருக்கிறார். ஆனாலும் அந்த அமெரிக்க மாப்பிள்ளை லுக் கொஞ்சம் மாற வேண்டும். கார்த்திகாவுக்கு நல்ல கண்கள். உயரத்தில் அடுத்த அனுஷ்கா! கச்சிதமாய் இருக்கிறார். ஆனால் அம்மாவிடம் இருந்த கருப்பு அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கிறது! ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது. அழகா? பியா வழக்கமான தமிழ் சினிமாவின் ஒரு லூசு பெண் கதாப்பாத்திரம். தமிழ் சினிமாவில் லூசு பெண் கதாபாத்திரங்களை உடனடியாய் தடை செய்ய வேண்டும். அப்புறம் பாடல்கள்! பியா இறந்து விடுகிறாள். அவளுடன் சேர்ந்து வாழும் கார்த்திகாவிற்கு தனியாய் இருக்க பயமாய் இருக்கிறது. கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஜீவா கண்ணைத் துடைக்கிறார்; கட்! ஃபாரின் லொக்கேஷன்! [அசிலி பிசிலி பாடல் லொகேஷன் அற்புதம்; எந்த இடம் அது? சொர்க்கமா?] ஒரு பாட்டு!! தியேட்டரே உச்சு கொட்டுகிறது! ராமா...பிரகாஷ் ராஜ் தன் பங்குக்கு கையை ஆட்டி ஆட்டி, பல்லைக் கடித்தது விட்டுப் போகிறார்! [நடிப்பை கொஞ்சம் மாத்துங்க சார்!] ஜெகனுக்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் நல்ல ரோல்கள் கொடுக்க வேண்டும். டாக் ஷோக்களில் பேசிப் பேசி அவரின் பாடி லாங்க்வேஜ் அனாயாசமாய் இருக்கிறது. மனிதர் நடிப்பது மாதிரியே தெரியவில்லை! பையா, அயன் என்று எல்லா படங்களிலும் அவரின் நடிப்பை ரசித்தேன்.

படம் பார்த்து வெளியே வரும்போது எனக்கும் என் மனைவிக்கும் சில கேள்விகள். என்ன தான் அதிரிபுதிரியான திரைக்கதையை இருந்தாலும் லாஜிக்கை மீறாமல் இருந்தால் தான் ரசிக்க முடிகிறது! இல்லையென்றால் அது மதியம் சாப்பிட்ட சின்ன மட்டன் பீஸ் பல்லில் மாட்டிக் கொள்வதை போல் இடையூறு செய்கிறது!! தம்மாத்துண்டு குழந்தையிடம் பியா திறந்து காட்டுவது; முதலமைச்சர் இறந்த இடத்திலிருந்து தப்பித்து வருபவனை காவல் துறை கண்டு கொள்ளாதாது; உள்ளே என்ன நடந்தது என்று விசாரிக்காதது ஒருவேளை அந்த வெடி விபத்துக்கு ஜீவாவே காரணமாய் இருந்திருந்தால் என்று கேள்வி யாருக்கும் வராதது என்று லாஜிக் ஏகத்திற்கு உதைக்கிறது! என்னை பொறுத்தவரை பத்திரிகைத் துறையை சமத்தாய் காட்டியது ஹிந்தியில் வந்த பேஜ் 3 படம் தான்! அதில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்! அது வாழ்க்கை; இது வெறும் கடைந்தெடுத்த மசாலா சினிமா!

அப்புறம் முக்கியமான ஒன்று திரைக்கதை வடிவமைப்பின் போது அதன் அடிப்படை விதியின் படி ஒரு கதாப்பத்திரத்தின் தன்மையை, அதன் குணாதசியத்தை முதலிலேயே வரையுறுத்த வேண்டும்! அவன் நல்லவனா, கெட்டவனா, புத்திசாலியா, சோம்பேறியா என்பதை தெளிவாய் சொல்லி விட வேண்டும். படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒருவனை கோழையாய் காட்டி விட்டு க்ளைமேக்ஸில் அவன் எதிரிகளை புரட்டி எடுத்ததற்கு காரணம் அவன் பத்தாவது வயதில் கராத்தே கற்றுக் கொண்டான் என்று ஒரு மொக்கை ஃபிளாஷ் பேக் காட்டினால் சப்பித் தனமாக இருக்கும்! அனால் அந்த விதியை இத்தகைய படங்களில் சரியாய், நாசூக்காய் பயன் படுத்தா விட்டால் பார்ப்பவர்கள் எளிதில் யூகிக்கக் கூடிய அபாயம் உண்டு. பிறகு சுவாரஸ்யம் கெட்டு விடும். இந்தப் படத்தில் அந்த விதியை பற்றி கதாசிரியர்கள் யாரும் கவலைப்படவேயில்லை! படம் பூராவும் அஜ்மலை நல்லவனாய் காட்டி விட்டு திடீரென்று அவரை கெட்டவன் ஆக்கிவிட்டார்கள். அவர் ஏன் அப்படி மாறினார் என்பதற்கு எந்தக் காரணமும் சரியாய் சொல்லப்படவில்லை! ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்கு நல்லது தான் செய்திருப்பாரா? அல்லது மற்ற அரசியல்வாதிகளை போல் தான் இருந்திருப்பாரா என்று புரியவில்லை!

அப்படி பார்க்கும் போது, இந்த மாதிரி புலனாய்வு படங்களின் திரைக்கதை என்பது என்ன? கதாசிரியரின் சுதந்திரம் எது வரை? அவர் கதை எழுதுகிறார் என்பதற்காக அவரே ஒருவரை நல்லவர் என்று காட்டுவார்; இந்தப் படத்தில் அஜ்மலை காட்டுவதை போல். ஆங்காங்கே இவர் தான் இந்தக் கதையை திசை திருப்புவார் என்பதை போல சில கதாப்பாத்திரங்களின் பெயரில் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவார். இந்தப் படத்தில் கோட்டா, பிரகாஷ் ராஜ் மற்றும் அஜ்மல் குழுமத்தில் தாடி வைத்த ஒருவரை காட்டுவது போல்! பிறகு யாரை நாம் அப்பாவி என்று நினைத்தோமோ அவன் பயங்கர கெட்டவன் என்று சொல்லி அதற்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டு விவரித்து படத்தை முடித்து விடுவார். நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை நம்ப வைத்து இப்படி கழுத்தருக்கிறார்களே, இதை நாம் "ஆ" என்று வாய் திறந்து என்ன ட்விஸ்ட் என்று மெய் மறந்து பார்க்கிறோமே என்று தோன்றியது! எல்லா புலனாய்வு படங்களின் அடிப்படை கரு இது தான் என்றாலும், இந்தப் படத்தில் தான் எனக்கு இந்தக் கேள்வி உதித்தது! அது ஏனோ?

முதல் பத்தி மட்டுமில்லை மற்ற எல்லா பத்திகளிலும் கதையை தூவியிருக்கிறேன். முன்னமே சொல்ல வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டேன். கதை தெரிந்து விட்டதா? சாரி !!
6 Responses


  1. KV Anand used to take photographs for Super Novel during end of 80's. SUBA was the exclusive writer for Super Novel. Those days KV Anand got a fan following for his cover photographs.


  2. Anonymous Says:

    படம் நல்லா இருக்கா? இல்லையா? ரீவீவ் படிச்ச வரைக்கி, போர் அடிக்காம போகும் போல இருக்கே!

    வெங்கடேஷ்


  3. venky,

    padam nalla thaan irukku. bore adikkaama poguthu...


  4. Unknown Says:

    கதைய மொத்தமா சொல்லிட்டீங்களே. அப்புறம் என்ன?