சென்ற வார இறுதியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும்போதே (அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் வந்து ஒரு வருடத்திற்கு எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை இழுப்போம். சற்று பொறுத்துக் கொள்ளவும்!) இப்படி ஒன்று தொடங்கப் படவிருக்கிறது என்ற செய்தியை படித்தேன். அதுவும் கோட்டூர்புரத்தில் என்றதும் மகிழ்ச்சியாய் இருந்தது, காரணம் என் வீட்டுக்கு சற்று அருகில்! (சென்னையில் வீட்டிலிருந்து பத்து பதினைந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் எல்லா இடங்களும் அருகில் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!) ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் சென்னை வந்ததற்கு பல காரணங்களில் கன்னிமாரா நூலகமும் ஒரு காரணம். வார இறுதியில் அங்கேயே தவமிருந்து பல விஷயங்களை கற்றுத் தேர்ந்து, ஜோல்னா பை, சோடா புட்டி கண்ணாடி, பத்து நாள் தாடி சகிதமாக என்னை நான் பல முறை கற்பனை செய்திருக்கிறேன். உங்கள் அதிர்ஷடமோ என் துரதிருஷ்டமோ அப்படி எதுவும் நேரவில்லை. இந்த ஐந்து வருடத்தில் இரண்டே முறை தான் அங்கு சென்றிருக்கிறேன். வேளச்சேரியிலிருந்து அங்கு செல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் என்று நானே முடிவு கட்டிக் கொண்டேன். (படிக்கிற புள்ளைன்னா போயிருக்கும்!) அதனால் என்னையும் சேர்த்து ஐந்து பேர் வந்து போகும் வேளச்சேரி நூலகத்தில் தஞ்சம் புகுந்து கொண்டேன். "வாப்பா பிரதீப்" என்று அங்கு நூலகர் கேட்டதும் மேலும் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது! இப்போது அந்தக் கனவு மீண்டும் வரத் துவங்கி இருக்கிறது!!!

காந்தி மண்டபம் சாலையில் காந்தியின் எளிமைக்கு எந்த சம்மந்தமுமில்லாமல் ஒரு பெரிய மென்பொருள் அலுவலக கட்டடம் போல் எட்டு ஏக்கருக்கு பரந்து விரிந்து பிரம்மாண்டமாய் பளபளக்கிறது நூலகம்! 3.75 லட்சம் சதுரடிக்கு எட்டு மாடி கட்டிடத்தை எழுப்பி இருக்கிறார்கள். பனிரண்டு லட்சம் புத்தகங்களை கொள்ளும் வசதியுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட உலகத் தரம் வாய்ந்த நூலகம். இதை தவிர்த்து, 1 2 8 ௦ பேர் அமரக்கூடிய அரங்கம், 8 ௦ ௦ பேர் அமரக்கூடிய சுற்று மாளிகையரங்கம் (தமிழ்ல சொல்லனும்னா amphitheatre!) என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சமீபத்தில் தான் திறப்பு விழா முடிந்ததால் இன்னும் அனைத்தும் இயங்க ஆரம்பிக்கவில்லை. தரை தளத்தையும், முதல் தளத்தையும் மட்டுமே மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். தரை தளத்தில் பார்வை அற்றவர்களுக்காக ப்ரைலி புத்தகங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான அத்தனை வசதிகளும் உள்ளன. இது மிகப் பெரிய விஷயம் தான். நம் நாட்டில் தான் அவர்களை கண்டு கொள்வதே இல்லையே?

முதல் தளம் முழுவதும் குழந்தைகளுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். ஜே ஜே என்று கூட்டம். எப்போதும் பீச், கோயில், சினிமா போய் போரடித்து இங்கு வந்த கூட்டமோ என்று நினைத்தேன். "லைப்ரரி இஸ் வெரி குட்!" என்று ஒரு குழந்தை தன் தந்தையிடம் சொல்லி என் வயிற்றில் ஜிகர் தண்டாவை ஊற்றியது! (நமக்கு மதுரை பக்கம் ஹிஹி...) குழந்தைகளுக்கான புத்தகங்கள், ரைம்ஸ் சீடீக்கள், விளையாட்டுக்கள்! அடுத்த செக்க்ஷனில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆங்கில ஜெர்னல்கள் இருந்தன. வண்ணத் திரையும், திரை விருந்தும், சினிக் கூத்தும் இருந்தது, இது என்னடா கூத்து என்று அதுகளை எடுத்து புரட்டினேன். முழுவதும் படித்து விட்டு, பச்சை தமிழனாய், "கருமம், கருமம், நாடு உருப்படுமா" என்று நினைத்துக் கொண்டேன்! 1௦௦ எம்பி பீ எஸ் வேகம் கொண்ட இணையக் கணிப்பொறிகள் வேறு! அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட சலவை கற்கள், முதியவர்களுக்காக சாய்வு நாற்காலி, மாணவர்களுக்காக பெரிய மேஜை நாற்காலிகள் என்று மொத்தமாய் நூலகத்தை பார்த்தால் அமெரிக்காவில் (ஆரம்பிச்சிட்டான்யா!) இருப்பது போலவே உணரவே, கழிவறைக்குச் சென்றேன். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது போல், கழிவறையின் நிலையில் இந்தியாவை கண்டேன்!

வெளியே வந்ததும் பறவைகளுக்காக ஒரு புத்தம் புதிய விசேஷ கழிப்பிடம் பார்த்தேன்! அறிஞர் அண்ணாவின் சிலையை தான் சொல்கிறேன். இந்த நாட்டில் தலைவராய் மட்டும் ஆகி விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்! அந்த சிலையின் அடியில் அண்ணாவின் வாசகம்:

"வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், புத்தகச் சாலைக்கு தரப்பட வேண்டும்!"

எத்தனை சரியான வாசகம்!

4 Responses
  1. //வண்ணத் திரையும், திரை விருந்தும், சினிக் கூத்தும் இருந்தது, இது என்னடா கூத்து என்று அதுகளை எடுத்து புரட்டினேன்.//

    அடேடே . . . புள்ள அப்பப்ப நல்ல காரியமும் செய்யுதே . . . நடத்து ராசா


  2. Thamizhan Says:

    நல்லதைப் பாராட்டி மேலும் எப்படி முன்னேறலாம் என்பதைச் சிந்தித்து அதைச் செயல் பட ஒவ்வொருவரும் உழைக்கும் வரை நாம் உருப்படவே முடியாது. நாடும் உருப்பட முடியாது.


  3. மெல்லிய எள்ளலோடு எழுதுவதுதான் உங்கள் பலம். அதை விட்டு விடாதீர்கள். சுவாரசியமான குறுங்கட்டுரை. :)


  4. //மெல்லிய எள்ளலோடு எழுதுவதுதான் உங்கள் பலம். அதை விட்டு விடாதீர்கள். சுவாரசியமான குறுங்கட்டுரை. :)

    நன்றி சுரேஷ்! கண்டிப்பா, அது ஒன்னு தானே தெரியும்.

    //நல்லதைப் பாராட்டி மேலும் எப்படி முன்னேறலாம் என்பதைச் சிந்தித்து அதைச் செயல் பட ஒவ்வொருவரும் உழைக்கும் வரை நாம் உருப்படவே முடியாது. நாடும் உருப்பட முடியாது//

    ரொம்ப சரியா சொன்னீங்க.

    //வண்ணத் திரையும், திரை விருந்தும், சினிக் கூத்தும் இருந்தது, இது என்னடா கூத்து என்று அதுகளை எடுத்து புரட்டினேன்.//

    //// அடேடே . . . புள்ள அப்பப்ப நல்ல காரியமும் செய்யுதே . . . நடத்து ராசா ////

    ஹிஹி போங்க சார்! வெக்கமா இருக்கு!!