போன வார விடுமுறையில் (இந்த வாரம் என்ன செய்தேன் என்று அடுத்த வாரம் வரும், ஓகே? நான் ரொம்ப பிசி....) நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்கை வாக் மாலுக்குச் சென்றிருந்தேன். நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி கொஞ்சம் நடந்து ஷேர் ஆட்டோவில் ஏறினால் ஐந்து ரூபாயில் மால். பார்த்தவுடன் பெங்களூர் ஃபாரம் மால் நினைவுக்கு வந்தது. மாலுக்குள் நுழைந்து யாரை நிறுத்தி கேட்டாலும் ஐடியில் பணி புரிவதாகத் தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் வரி கட்டுவதற்கு நல்ல ரோடு போடுகிறார்களோ இல்லையோ நிறைய்ய மாலை திறக்கிறார்கள். அங்கும் கொள்ளை கொள்ளையாய் விலை வைத்து ஒட்டு மொத்தமாய் ஐடிகாரர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள்! பைக் பார்க்கிங் இருபது ரூபாய்! நிறைய்ய குழி உள்ள ஒரு தட்டில் காக்காய்க்கு வைப்பதை போல் பல வித பதார்த்தங்களை படைத்து இருநூறு ரூபாய்! ஒரு சினிமா நூற்றி இருபது ரூபாய். ஆனால் நூற்றி இருபது ரூபாய்க்கு எந்த வஞ்சனையுமில்லாமல் அப்படியே அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை போலவே வடிவமைத்திருக்கிறார்கள். பாப்கார்ன்களின் சைஸ் உட்பட.

நான் மகான் அல்ல

கார்த்தி இருந்தால் போதும், காமெடிக்கு தனியாய் ஆள் எடுக்கத் தேவையில்லை. அவர் வந்தாலே தியேட்டரில் சிரிக்கிறார்கள். மனிதர் சிரிப்பிலும் முறைப்பிலும் பிரமாதப்படுத்துகிறார். இவர் அடியாட்களின் கால்களை பிடித்து சுழற்றி அடித்தால் நம்ப முடிகிறது. என்னை பொறுத்துவரை அவர் பேட்டியில் எப்படி பேசுகிறாரோ அப்படியே தான் படங்களிலும் இருக்கிறார். அதனால் அவரின் நடிப்பு மிக இயல்பாய் தெரிகிறது என்று தோன்றுகிறது. அவருக்கு சம்மந்தமேயில்லாத ஒரு குணநலன் கொண்ட கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும். எப்படியோ தமிழ் சினிமாவிற்கு ஒரு மாஸ் ஹீரோ கிடைத்து விட்டார்.

காஜல்

நான் கவனித்த வரை காஜலுக்கு மிகவும் பெரிய்ய.....பற்கள்! சீ, யு பேட் பாய்ஸ்! இடைவேளைக்கப்புறம் ஹீரோயினே வராத ஒரு படம் இது தான் என்றேன், ஒரு கனவு பாட்டு கூட இல்லை என்றேன், அப்புறம் தான் தெரிந்தது நான் பாபகார்னுக்கு க்யூவில் நிற்கும் போது வந்து போய் விட்டார் என்று! வேறு என்ன சொல்ல, வழக்கமாய் நடிகைகள் சொல்லும் மூன்றாம் பிறை ஸ்ரீ தேவி ரோலா? இதைப் பற்றி அரை பக்கத்துக்கு பேச? எப்போ தான் தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் தேவதைகளாய் இல்லாமல் மனிதர்களாய் நடமாடப் போகிறார்களோ!

சுசீந்திரன்

ரெண்டு படம் ஓடி விட்டது. இன்னும் வாங்கவில்லை என்றால் இப்போதே போய் ஒரு புது கூலிங் கிளாஸ் வாங்கிக் போட்டுக் கொள்ளலாம்! அதை கழட்டாமல் பேட்டி தரலாம்! அதற்கான சகல தகுதியும் இருக்கிறது!

படம் முடிந்து விட்டது, சீட்டிலிருந்து வெளியே வரும்போது கவனித்தேன். அரங்கெங்கும் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச நொறுக்குத் தீனிகள். நம் மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்களா அல்லது கீழே கொட்டுகிறார்களா தெரியவில்லை. அடுத்த காட்சிக்குள் அத்தனை பெரிய அரங்கை சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு கஷ்டம் தான்!

படத்தை விட எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அந்த மாலில் இருந்த பெரிய லேண்ட்மார்க்! போய் உட்கார்ந்து ரெண்டு சின்ன புத்தகத்தை முடித்தேன். அதிலே ஒன்று சுஜாதாவின் சினிமா உலக கட்டுரைகள்! அதில் எனக்கு ஞாபகம் (கவனிக்க, என்னுடைய ஞாபகம்!) இருக்கும் சில வாத்தியார் முத்துக்கள்!

"நாடோடித் தென்றலுக்காக பாரதிராஜா ரஞ்சிதா என்ற ஒரு உயரமான பெண்ணை அறிமுகப்படுத்தினார். சரியாய் நடிக்க வராததால் அடித்து விட்டாராம். மேலும் கேட்டால் எனக்கும் ரெண்டு விழும்!"

"நடிகை ஷோபா ஓடி வந்து அங்கிள் என்று பாலுமகேந்திராவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்! அது அங்கிளுக்கான பழக்கமில்லை என்று என் மனைவி வீட்டுக்கு வந்ததும் சொன்னார். "

"சுந்தரராஜன் என்னிடம் கேட்டார். அது நீங்க எழுதின கதையா, கதை என்னன்னு தெரியாம நடிச்சேன். ஆமா அதுல நான் யார்? கதைப்படி நீங்க செத்த பொணம் என்றேன்!"

"மணிரத்னம் என்னை அந்த சின்ன ஸ்டூடியோவுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அந்தப் பையனிடம் புகழுக்குத் தயாராகுங்கள் என்று சொன்னேன்" அவர் தான் ஏ. ஆர். ரகுமான்!

இன்னொரு ஆங்கில சுய முன்னேற்ற புத்தகம் ஒன்றையும் படித்தேன். அதிலிருந்து, என் ஞாபகத்திலிருந்து,

................................................................................

(நான் எப்படி முன்னேறுவேன் சொல்லுங்க?!)

ஒரு கேள்வி:

இன்று கேப்டன் டீவியில் முரளியின் பேட்டியை பார்க்கும்போது, அடுத்த மாதம் பெங்களூர் வருவதாக நண்பனிடம் சொன்னது ஞாபகம் வந்தது, எந்த நம்பிக்கையில் அப்படி சொல்கிறோம்? என்று தோன்றியது!


2 Responses
  1. Anonymous Says:

    மொக்கையா இருக்கு; அடுத்தவாட்டி நல்லா எழுது
    -
    வெங்கடேஷ்


  2. oh appadiya, nalla ezhuthitta pochchu...