"சாக்லேட் லைம்ஜூஸ் ஐஸ்க்ரீம் டாஃப்பியான்" என்று ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் ஒரு பாடல் வரும். குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தை நான் அடைந்து விட்டேன், எனக்கு இனிமேல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்களில் உள்ள மோகங்கள் குறைந்து விட்டன என்று! அற்புதமான பாடல். அதே போல் நான் வளர்ந்து விட்டேன் என்று சொன்னாலும் என் மனைவி வளராததால் பொம்மை படங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது! ஷ்ரக் 4 வரும்போதே நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள், ஏதோ சாக்கு போக்கு சொல்லி அதை கடந்தால் டாய் ஸ்டோரி 3 வந்து விட்டது. இனியும் தப்பிக்க முடியாது என்று சொல்லி அதை அனுபவிக்கத் தயாரானேன். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் அவளின் நச்சரிப்பு தாங்காமல் நான் பொம்மை படம் பார்க்கும் போதெல்லாம் மிக அற்புதமான அனுபவம் தான் எனக்கு வாய்க்கிறது. ஆனாலும் அடுத்த முறை இன்னொரு படத்தை பார்க்கும் ஆவல் பிறப்பதில்லை. ராவண் போன்ற படங்களின் மீதே ஆவல் பிறக்கிறது! அது சரி என் மனைவியாவது அவளின் உள்ளே உள்ள குழந்தையை தக்க வைத்திருக்கிறாளே அது வரை சந்தோஷமே! அதனால் எனக்கும் இத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்க்கிறது. இனி டாய் ஸ்டோரி 3 !

ஆண்டி (தமிழ் ஆண்டி அல்ல!) என்ற சிறுவனிடம் வித விதமான பொம்மைகள் இருக்கின்றன. வூடி என்ற கவ்பாய் பொம்மை, ஜெஸ்ஸி என்ற ஒரு கவ் கேள், பஸ் என்ற விண்வெளி வீரன், ஒரு ஜோடி உருளைக்கிழங்கு பொம்மைகள், ஒரு பன்றி இப்படி வித விதமாய்! இவைகளைக் கொண்டு அவன் கற்பனை உலகத்தில் வித விதமான விளையாட்டுக்களை விளையாடுகிறான். அவனுக்கு இந்த பொம்மைகள் என்றால் உயிர். அதே போல் அந்த பொம்மைகளுக்கும்! (பொம்மைகளுக்கு ஏது உணர்ச்சி என்று நீங்கள் சொன்னால் பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சன் பிக்சர்சாரின் அடுத்த வரவு என்ன என்ற டார்ச்சரை அனுபவிக்கலாம்!) அவனின் சந்தோஷம் தான் அவர்களின் சந்தோஷம். காலம் செல்ல செல்ல ஆண்டி வளர்ந்து பெரியவனாகி விடுகிறான். (எந்த சைக்கிள் சக்கரமும் சுற்றாமல்!) அதன் காரணமாக அவன் பொம்மைகளிடம் விளையாடி வெகு நாட்கள் ஆகின்றன. அவன் இவைகளுடன் விளையாடவில்லை என்றாலும் எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு பெட்டியில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறான். பெட்டிக்குள் எல்லா பொம்மைகளும் சேர்ந்து இனிமேல் ஆண்டிக்கு தாங்கள் தேவையில்லை, அவன் எப்படியும் தங்களோடு விளையாடப் போவதில்லை என்று புலம்புகின்றன. ஆனால் வூடி அதை மறுக்கிறது. ஆண்டிக்கு குழந்தை பிறந்தால் அதனை சந்தோஷப்படுத்தலாம், ஆண்டி நம்மிடம் விளையாடினாலும், இல்லாவிட்டாலும் அவன் தான் நம் எஜமானன், அவனிடம் தான் நாம் இருக்க வேண்டும் என்று வாதம் செய்கிறது.

ஒரு கட்டத்தில் ஆண்டி கல்லூரியில் சேர வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவன் அம்மா அவன் போவதற்கு முன் அவனுடைய அறையை காலி செய்ய விரும்புகிறாள். தேவையற்றவைகளை ஒரு மூட்டையாகவும், பரண் மேல் போட வேண்டியவைகளை இன்னொரு மூட்டையாகவும் கட்டச் சொல்கிறாள். அவனின் பொம்மைகளை நல்ல ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொடுத்து விடலாம் என்று கூறுகிறாள். அவனுடைய பொம்மையை இழக்க ஆண்டி விரும்பவில்லை. அதனால் எல்லா பொம்மைகளையும் ஒரு சாக்கில் கட்டி பரணில் போட முடிவு செய்கிறான். வூடி அவனுக்கு நெருங்கிய நண்பன். அதனால் அதை மட்டும் தன் கல்லூரிப் பெட்டியில் வைத்து விட்டு மற்ற அனைத்தையும் ஒரு சாக்கில் போட்டு கட்டிக் கொள்கிறான். தவறுதலாக அது குப்பை மூட்டைகளுடன் சேர்ந்து விடுகிறது. வூடி இதை கண்டு கொள்கிறது. தன் நண்பர்கள் தவறுதலாய் குப்பைகளில் சேர்ந்து விட்டதை பார்த்து அவைகளை காப்பாற்ற வூடி களம் இறங்குகிறது. ஆனால் மற்ற பொம்மைகள் அதிலிருந்து தந்திரமாய் தப்பித்து காப்பகத்திற்குப் போய் மற்ற குழந்தைகளை மகிழ்விக்க காப்பகத்திற்காக உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொள்கின்றன. இதைக் கண்ட வூடி அவர்களை கண்டிக்கிறது. ஆனால் யாரும் அதனுடைய பேச்சை மதிக்கவில்லை. அந்த வாக்கு வாதத்தில் ஆண்டியின் அம்மா காரை கிளப்பிக் கொண்டு அந்த காப்பகத்திற்கு வந்து விடுகிறாள். வூடியும் இதில் மாட்டிக் கொள்கிறது. அந்த காப்பகத்தில் ஒரு கரடி பொம்மை இருக்கிறது. அது எல்லா பொம்மைகளின் தலைவனாக விளங்குகிறது. புது பொம்மைகளை வரவேற்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் குழந்தைகள் உங்களிடம் விளையாடுவார்கள்; சந்தோஷமாய் இருங்கள் என்று வாழ்த்தி விட்டுப் போகிறது. இப்படி ஒரு இடமா என்று ஆண்டியின் அனைத்து பொம்மைகளும் குதூகலிக்கின்றன. ஆனால் வூடி மட்டும் உங்களுக்கு விருப்பமிருந்தால் இங்கேயே இருங்கள் ஆனால் நான் ஆண்டியிடம் செல்கிறேன் என்று கிளம்பி விடுகிறது. போகும் வழயில் அடிபட்டு ஒரு குழந்தையின் கையில் சிக்கி விடுகிறது. அந்தக் குழந்தை வூடியை தன் வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறது. அங்கு இருக்கும் மற்ற பொம்மைகளிடமிருந்து காப்பகத்தில் இருக்கும் கரடி பொம்மை பொல்லாதது என்றும் அது எல்லா பொம்மைகளையும் மிரட்டி வைத்திருக்கிறது என்ற உண்மையை தெரிந்து கொள்கிறது. அந்த கரடி பொம்மை ஏன் அப்படி ஆனது என்று ஒரு ப்ளாஷ் பேக்! வழக்கமான தமிழ் சினிமா பாணியில் கேட்பவரின் முகத்தை பார்க்காமல் ஜன்னலை பார்த்துக் கொண்டே ஒரு பொம்மை கதை சொல்கிறது. வூடி எப்படி தன் நண்பர்களை அந்தக் கரடியிடமிருந்து காப்பாற்றி ஆண்டியிடம் சேர்ந்தது என்பதே மீதிக் கதை. அதகளப்படுத்தியிருக்கிறார்கள் (கேபிள் சங்கரை அதிகம் படித்தது தப்பாய் போய் விட்டதே!)



பொம்மைகளை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதை. ஹாஸ்யம், சோகம், காதல், வஞ்சம், கோபம், தந்திரம்...அப்பப்பா! ஒரு பொழுது போக்குச் சித்திரத்திற்கான அனைத்து அம்சங்களும் அம்சமாய் பொருந்தியிருக்கிறது. இதில் ஐ மேக்ஸ் 3 டி அனுபவம் வேறு! கேட்கவா வேண்டும். பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் (நான் சொல்லலை? கேபிளாரே தான்!) இந்தப் படத்தின் கதையை ஒரு வீக்கெண்டில் எழுதியதாக விக்கி சொல்கிறது. எப்படி இந்த அளவு பிரமாதப்படுத்துகிறார்கள் என்ற ஆச்சர்யத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ஏதோ ஒரு சுவிட்சை தட்டியதால் பஸ் (விண்வெளி வீரன்) செய்யும் காதல் அளப்பறைக்கே கொடுத்த காசு சரியாகி விடும். கண்டிப்பாக குழந்தைகளை கூட்டிச் சொல்லுங்கள்! தலை தனியாய் உடல் தனியாய் இருக்கும் பொம்மையை பற்றி ராமகிருஷ்ணன் துணையெழுத்தில் எழுதியிருந்தார். இந்தப் படத்தை பார்த்தால் உங்கள் குழந்தைகள் இனிமேல் கண்டிப்பாய் அப்படி செய்யாது என்று நினைக்கிறேன்.

கொசுறு:
நேற்று ஒரு பொம்மை கடைக்கு என் மனைவியுடன் போயிருந்தேன். ஒரு பெரிய குரங்கு பொம்மையை பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவளுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று சொன்னாள். இதை நம்ம வாங்கிட்டு போயிட்டா அதோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருத்தப்படுமே என்றேன்? என் மனைவி சிரித்தாள்! பொம்மை வாங்காமல் திரும்பினோம். வாட் எ கிரேட் எஸ்கேப்!!
அபிஷேக்கின் (அல்லது அவரது டூப்பின்) முதுகில்ஆரம்பிக்கிறது படம். உயரமான மலையிலிருந்து விழுகிறார். க்ளைமாக்சிலும் அதே போல் விழுகிறார். இந்த முறை முகத்தை காட்டிக் கொண்டே! முதுகில் ஆரம்பித்து முகத்தில் முடிகிறது படம். ஆரம்ப காட்சிகள் ராகினியை கடத்துவது தான் என்றால் அவர் பாட்டுக்கு தனியாய் ஒரு படகில் போய் கொண்டிருக்கிறார். அபிஷேக் தனி ஆளாய் போய் கடத்தியும் விடுகிறார்.. பிறகு ஏன் அந்த போலீஸ்காரர்களின் வாகங்களை வழி மறித்து தீ வைத்தார்கள்? ஏன் ஒரு பெண் போலீஸ்காரர்களை மயக்கி கூட்டிச் சென்றார்? ஏன் மூன்று போலீஸ்காரர்கள் கம்பில் கட்டி வைத்து தீ வைத்தார்கள்? ஒன்றும் புரியவில்லை...நான் தான் ஏதாவது கோட்டை விட்டு விட்டேனா? தெரிந்தால் சொல்லுங்கள்!

ராகினி மரணத்திற்கு பயப்படவில்லை, மலையிலிருந்து குதித்து விடுகிறாள். உடனே பீராவுக்கு காதல் வருகிறது, அப்போது ஒரு பாடல் என்று மணி சிச்சுவேஷன் சொல்லியிருப்பாரா? இத்தனை அபத்தமாகவா மணி யோசிக்கிறார்? குல்ஸாரும் வைரமுத்துவும் உருகி உருகி எழுதிய பாடலுக்கு இது தான் சிச்சுவேஷனா? இதனால் எப்படி காதல் வரும் என்று யாரும் மணியிடம் வாதாடி இருக்கா மாட்டார்களா? இதெல்லாம் தமிழ் படத்தில் சகஜம், இதெல்லாம் கேட்க கூடாது என்கிறீர்களா?

தமிழில் விக்ரம் அடிக்கடி சிரிக்கிறாரா தெரியவில்லை. அபிஷேக் எதெற்கெடுத்தாலும் கண்ணை உருட்டி உருட்டி சிரிக்கிறார். காமெடியாய் இருக்கிறது. பிளஃப் மாஸ்டரில் அபிஷேக்கின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி எந்த வித அலட்டலும் இல்லாத காரெக்டர் தான் இவருக்கு சரியாய் இருக்குமென்று நினைக்கிறேன். ராவணில் விக்ரமும் ப்ரியாமணியும் அழகாய் ஹிந்தி பேசியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் உருத்தவேயில்லை. விக்ரமின் அஜானபாகுவான உடல் அவரின் பாத்திரத்திற்கு மிகச் சரியாய் இருக்கிறது. மீசை கொஞ்சம் தூள் விக்ரமை நினைவு படுத்துகிறது. விக்ரமிற்கு பிரசாந்தின் ராசி அடித்து விட்டது என்று நின்னைக்கிறேன். பிரசாந்த் நடிக்காத பெரிய இயக்குனர்களே இல்லை. ஆனால் அவர் இன்னும் மேலே வரவேயில்லை. அதே போல் லிங்குசாமி, சுசி கணேசன், மணிரத்னம் என்று இவரும் என்னனமோ செய்து பார்க்கிறார். படம் தான் ஓட மாட்டேன் என்கிறது. ஆனால் படம் எப்படி இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று தன்னை நிரூபித்துக் கொள்ளத் தவறவுதே இல்லை. இவரின் "வெடி"யாவது சரியாய் வெடிக்கிறதா பார்க்கலாம்! ப்ரியாமணிக்கு அவரின் கட்டை குரலே ஒரு ப்ளஸ்! ஐஸ்வர்யாவைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதோ எனக்கு வயதாகப் போகிறது என்பது போல் இருக்கிறது அவரின் தோற்றம்.

பிரம்மாண்டமான விஷ்ணு சிலை, மலைகள், அருவிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் எல்லாம் இருக்கிறது ராவணில், இந்த கதை தான்.... திரைக்கதை! இப்படி ஒரு மொக்கை படம் எடுக்க ஏன் இத்தனை மெனக்கெடல் என்று புரியவில்லை. இத்தனை அமெச்சூர்த்தனமான ஒரு மணிரத்னம் படத்தை நான் இது வரை பார்த்ததில்லை. அவரே சொல்வது போல் பேசாமல் அவர் கோல்ப்ஃ விளையாட போய் விடலாம்!

"பத்து தலை ராவணன்" - விக்ரம்; "ஒரே தலை! தலைவலி!!" - பிரதீப்

கொசுறு:

"நான் உன்னை போல் அல்ல வளர்ந்து விட்டவன்" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், என் மனைவியின் வற்புறுத்தலால் நேற்று தான் டாய் ஸ்டோரி 3 பார்த்தேன். அதுவும் 3 டியில. அது கதை. அது படம். விருப்பமே இல்லாத ஒருவனையும் சுண்டி இழுத்து விடுகிறார்கள். எத்தனை அற்புதமான உழைப்பு. என்ன ஒரு கற்பனை வளம். கண்டிப்பாய் பாருங்கள்!
கடைசியாக நீங்கள் உங்கள் பேனாவில் எப்போது புது ரீஃபில் போட்டீர்கள்? சில கேள்விகள் ஏன் எதற்கு என்று தெரியாமல் மனதில் வந்து விடுகின்றன! அப்படித் தான் இதுவும் வந்தது. அதைப் பற்றி நினைக்க நினைக்க சுவாரஸ்யமாய் இருந்தது (எனக்கு!). நான் 4 வது படிக்கும்போது முதன் முதலாய் பேனா உபயோகித்தேன். வெறும் 50 பைசா தான்! ஆரம்பத்தில் அடக்கமாய் இருக்கும்; போகப் போக தமிழ் சினிமாவில் அளவுக்கு மீறி பேசும் குழந்தைகளைப் போல் அளவுக்கு மீறி மை கொட்டும்! மணி மணியாய் கையெழுத்து இருந்தால் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். மை கொஞ்சம் மூக்கில் ஒட்டிக் கொள்ளும்! வீட்டுப் பாடம் எழுதி முடித்து விட்டுப் பார்த்தால் கையில், காதில், முகத்தில் எல்லாம் மையின் கரை படிந்திருக்கும். அந்த ஐம்பது பைசா பேனாவை ஒரு நாள் தொலைத்து விட்டு கதறி அழுதது இன்றும் நினைவிருக்கிறது! அந்த ஐம்பது பைசா பேனாவுக்கும் நான் ரீஃபில் போடுவேன். ரீஃபில் நாலணா என்று ஞாபகம்! அன்று ஜாமேட்றி பாக்ஸ் இருந்ததாலோ என்னமோ பேனாக்கள் அதிகம் தொலையவில்லை. ஓரிரு முறை ரீஃபில் மாற்றும் வரை தாக்கு பிடித்தது. இன்று ஒரு பேனாவை பாதுகாப்பது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது! நேற்று என் பேனாவை இங்கே விட்டு விட்டேன், பார்த்தீர்களா என்று கேட்டால் இன்று சிரிப்பார்கள்! பெரியவர்கள் தான் பேனாவை இப்படித் தொலைக்கிறோமா? குழந்தைகள் பத்திரமாய் வைத்துக் கொள்கிறார்களா? ரீஃபில் தீர்ந்தால் ரீஃபில் போடுகிறார்களா? கடைகளில் ரீஃபில் மட்டும் கிடைக்கிறதா? இன்றும் குழந்தைகள் ரீஃபில் தீர்ந்து போகும்போது கையை உதறியும், வாயில் வைத்து ஊதியும் எழுதுகிறார்களா?

நான் பள்ளியில் படித்த போது என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அவனுடைய ரெனால்ட்ஸ் பேனாவை எப்போது மூடினாலும் அதன் மூடியின் கீழ் நுனி அந்தப் பேனாவின் உடம்பு பகுதியில் எழுதப்பட்டிருக்கும் ரெனால்ட்ஸ் என்ற எழுத்தை நோக்கியே இருக்கும். யாராவது அவன் பேனாவை கடன் வாங்கி திருப்பித் தந்தாலும் மூடியை அதன் திசையில் சரியாக திருப்பிக் கொள்வான். அது அவனுடைய அனிச்சையான ஒரு செயல்! அவனிடம் இருந்து அப்போது எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது! அவன் பன்னிரண்டாவது வகுப்பில் அத்தனை கணக்குகளையும் ஒரு நோட்டில் அச்சடித்த மாதிரி எழுதி வைத்திருந்தான். ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது! அந்த நோட்டுக்கு ஏகப்பட்ட கிராக்கி! நானும் அந்த நோட்டை கடன் வாங்கி, அதனுடைய நேர்த்தியில் மயங்கி கணக்கை கோட்டை விட்டிருக்கிறேன்! "உங்க நாயனத்துல தான் அப்படி சத்தம் வருதா?" என்று தில்லானா மோகனாம்பாவில் மனோரமா சிவாஜியிடம் கேட்பதைப் போல் அவனிடமும் அவன் பேனாவைப் பற்றிக் கேட்டு, அதை வாங்கி ஆராய்வோம்! என்ன தான் உடம்பில் எண்ணை தடவி புரண்டாலும் ஒட்ற மண்ணு தானே ஒட்டும்?

பத்தாவது படிக்கும் போது மை பேனாவின் ஆதிக்கம்! மை பேனாவில் குண்டு குண்டு, பட்டை படையாய் எழுதினால் நிச்சயம் 400 க்கு மேல் வாங்கி விடலாம் என்று ஒரு கருத்து இருந்தது! அதற்காக கூர்மையான நிப்பை பிளேடால் கீறி பட்டை ஆக்குவோம்! ஹீரோ பேனாவை சீண்டவே மாட்டோம்! அந்த மாதிரி பட்டையாய் எழுதும் பேனா ஒன்று என் வீட்டுக்கு அருகில் உள்ள பலசரக்கு கடையில் கிடைத்தது. அண்ணா நகரில் உள்ளவன் கூட என் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் தான் அந்த பேனாவை வாங்கினான். விலை மூன்று ரூபாய்! இத்தனை உழைத்தும் (!) மார்க் வந்ததும் தான் புரிந்தது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் என்று! "நம்ம குண்டு எழுத்தை பார்த்து பேப்பர் திருத்துறவருக்கு சண்டை போட்டு வந்த தன்னோட குண்டு பொண்டாட்டி ஞாபகம் வந்துருக்குமோ?" என்று சிலர் சந்தேகப்பட்டார்கள்!

சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகும் ஏதாவது டூர் போகும்போதும் பேனா கொண்டு போவது எனக்கு பழக்கம் ஆகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை, பேனா எப்போது வேண்டுமென்றாலும் பயன் படும் என்று ஒரு எண்ணம். எங்காவது காத்திருக்க உட்கார்ந்தால் ஒரு பேப்பர் கிடைத்தால் ஏதாவது கிறுக்க ஆரம்பித்து விடுவேன். நான் எதற்கெடுத்தாலும் கிறுக்குவதை பார்த்த என் நண்பன் என்னிடம் "நீ கொலை எதுவும் செய்யாதே உன்னை எளிதாய் கண்டுபிடித்து விடுவார்கள்" என்று எச்சரித்திருக்கிறான். கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை வாத்தியார் பேனா கேட்டதற்கு மூடியை வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் கொடுத்தேன். ரொம்ப வெவரமா இருக்கியே என்றார். அது பாராட்டா இல்லை திட்டா என்று தெரியவில்லை. அதே போல் எல்லா பெண் நண்பர்களுக்கும் அசைன்மென் நோட்டில் வித விதமாய் பேர் எழுதித் தந்து பல மாணவர்களின் (கவனிக்க: பெண் நண்பர்கள், ஆண் மாணவர்கள்!) வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் ஸ்டாம்ப் புக் கிடைத்து விட்டால் போதும், "ஒரு சொல் கேட்டால் ஓராயிரம் சொற்பொழிவுகள் நடத்தும் என் பேனா இன்று ஏனோ மௌனப் போராட்டமே நடத்துகிறது!" என்று பிரிவின் சோகத்தை கசக்கிப் பிழிந்திருக்கிறேன்! சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகு மேனஜர் பேசுவதை நோட்ஸ் எடுப்பதற்காக வேக வேகமாய் எழுத ஆரம்பித்து இன்று என் கையெழுத்து கோழி என்ன சேவல், டைனோசர் கிறுக்கல்களை விட மோசமாய் இருக்கிறது!

அவளின் நினைவுகள் தொலைவதில்லை
அடிக்கடி தொலையும் பேனாக்களைப் போல்!
ஒரு மழை நாளில்
உன்னை பார்த்தேன்
குடைக்குள்ளிருந்தே நான் நனைந்தேன்

உன்னை நான்
கற்றது
கண்ணளவே

வாழ்வின்
நெளிவு சுழிவுகளையும்
மேடு பள்ளங்களையும்
எனக்கு விளக்கியது...
உன் தேகம்

உன்னை சந்தனத்தில்
அழகு பிடித்து
எத்தனை சிவராத்திரிகள்
ஆயிற்று?

ஆச்சர்யம் தான்!
இரு மனிதர்களால்
எப்படி ஒரு
தேவதையை செய்ய முடிந்தது!