தலைப்பு நல்லா இருக்கா? மழைக்கும் பக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தான். ஆனால் எழுதப் போவதற்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறதே...எல்லாம் நம்ம வாத்தியார் வழி தான். அவர் டெல்லியில் இருந்த போது அவருக்கு கனையாழியின் கடைசி பக்கங்கள் கிடைத்தது. வகைதொகை இல்லாமால் எழுதினார். [இப்படிச் சொன்னால் திட்டுவதாய் அர்த்தம் இல்லையே?] எனக்கு இந்த வலைதளம் தான் கனையாழி, குமுதம், விகடன், கல்கி எல்லாம்...அது தான் என் வலைப்பக்கங்களிருந்து கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி, அதாவது நம் பள்ளி நாட்களில் ஒரு நோட்டை இரண்டு பாடத்திற்கு பயன்படுத்த நோட்டின் மத்தியில் ஒரு பக்கத்தை மடக்கி அம்புக்குறி மாதிரி செய்வோமே, அதே போல் செய்து என் வாழ்வின் அனுபவச் சிதறல்களை எடுத்து கொஞம் மெருகூட்டி, பதப்படுத்தி....அதை ஒரு கோர்வையாக்கி...என்ன புரியலையா? ஒன்னுமில்லை, வந்தது போனது, பூசுனது, பூசாதது இப்படி எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்கடி பலவிதமான மொக்கைகளா போட்டுத் தள்ளலாம்னு பாக்குறேன்!

பின்ன என்னங்க, எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற கதையாய் எத்தனை நாள் தான் யாருமே வராத டீ கடையை ஆத்திக் கொண்டிருப்பது. இந்த உலகத்துல காலை ஆட்டிட்டே இருக்கணும், இல்லைன்னா சோலி முடிஞ்சி போச்சுன்னு கொண்டு போய் அடக்கம் பண்ணி புடுவாய்ங்க என்று நடிகர் திலகம் எங்கோ சொன்னதாய் ஞாபகம். அவர் சொன்னது போன்ற ஒரு காலாட்டலுக்கான முயற்சி தான் இது. அதுக்காக சார் நேத்து ராத்திரி பூரா தூங்கல, பாத்ரூம் போகல, சரியா சாப்புட்ல என்றெல்லாம் எழுதி மொக்கை போட மாட்டேன். ஆனா நீங்க எல்லாரும், மத்தவங்களுக்கு செய்ற மாதிரி, ஐம் ஃப்ஸ்ட், இதோ பல்லு வெளக்கிட்டு வந்துட்றேன் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும் சரியா? சரி மேட்டருக்கு வருவோமா?

இந்தப் பரதேசத்தில் தனிமையிலே இனிமை காண முடியுமா என்று யோசித்து வந்த அத்தியாயம் இனிதே நிறைவடைந்து விட்டது. சரியாய் என் மனைவி இங்கு வரும் முதல் நாள் அன்று ஒரு பதிவை போட்டிருக்கிறேன். என்ன? மனைவி வந்தாச்சா, எங்கே சொல்லவேயில்லை என்றெல்லாம் என் முகத்தை பிங்க் கலரில் மாத்தக் கூடாது சொல்லிட்டேன்! அதற்குப் பிறகு இந்தப் பக்கம் கை வைக்கவில்லை. [தலை வைத்துப் படுக்க இது என்ன பாயா?] உடனே, இந்த ஆம்பளைங்களே இப்படித் தான் ஒரு பதிவு போட வக்கில்லைன்னாலும் பொண்டாட்டியை குறை சொல்லலைன்னா இவங்களுக்குத் தூக்கம் வராதே என்று என் இனிய சிநேகிதிகளான நீங்கள் நினைப்பதற்குள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவு படுத்திக் கொள்கிறேன். மாறாக அவள் தான் நான் யு டியுப் பார்க்கும் போதெல்லாம் இதென்ன எப்போ பாத்தாலும் யூ டியுப், ஒழுங்கா ப்ளாக் போட்ற வழியை பாருங்க என்று நச்சரிக்கிறாள். பரிட்சைக்கு படிக்காம அப்படி என்ன டீவி வேண்டிக் கிடக்கு என்று அம்மா திட்டுவது போல் இருக்கிறது.

நானும் இந்த உரைநடை போட்டிக்கு ஒரு சிறு காவியத்தை எழுதிடுவோம்னு பாக்குறேன், அதை பத்தி நெனைக்கும் போது மனசுல கதையா கொட்டுது ஆனா அதை எழுதலாம்னு உக்காந்தா இந்த எழுத்து தான்...வார்த்தை...!!!! பைத்தியக்காரனை [பேரைத் தேடி போட்டுருக்கலாமோ?] நினைத்தால், இல்லை இல்லை நாயகனை நினைத்தால் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. 30,000 செலவு பண்ணி இப்படி எல்லாம் தமிழை வளர்க்கிறாரே என்று. வீட்டில் திட்ட மாட்டாங்களா சார்?

வெண்ணிலா கபடி குழு பார்த்தேன். எனக்குப் பிடித்தது. என்ன தமிழ் சினிமாவில் ஹீரோ சைக்கிளில் பஸ்சை முந்தினால் காதல் வந்து விடுகிறது. கிஷோர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அருமையான நடிகர் என்று தோன்றுகிறது. நெல்லை பாஷையை அருமையாய் பேசி நடித்திருக்கிறார். அதுல் குல்கர்னிக்கு வந்த நிலை இவருக்கு வரக் கூடாது என்று எங்கும் இல்லாத ஆண்டவனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சரண்யா கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறார். இசை அருமை. லேசா பறக்குது மனசு மனசு...மனசு லேசாய் பறக்கவே செய்கிறது. செல்வகணேஷை யாரும் கண்டு கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
பசங்க படம் பார்த்தேன். கை தட்டி அன்புவை பிழைக்க வைப்பதை தவிர்த்தால் மிக அருமையான படம் தான். சுப்ரமணியபுரத்தில் செய்ய ஆரம்பித்தது. பேக்ரவுண்டில் இளையராஜா பாட்டை ஓட விடுவது...[சிறு பொன்மணி அசையும்...] இதிலும் தொடர்கிறது. செல்ஃபோனில் ரிங்டோனாக வித விதமான பாட்டுக்களை வைத்துக் கொண்டு அவர் அலம்பு விடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, ராஜா என்னமா போட்ருக்காரு...படத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃபோன் செய்து பேசுவது... அதிலும் "என்ன ஜப்பான்ல இருந்தா? புஜ்ஜிமாவா, டேய் அது கொழந்தை டா" சீன் சுப்பர்!

வேலியில் போவதை வேட்டிக்குள் விட்ட கதையாய் கொழுப்பெடுத்துப் போய் யாரடி நீ மோகினி பார்த்தேன். நான் கடவுளில் போலீஸ் பேசும் டயலாக் தான் ஞாபகம் வந்தது. அடுத்து அதே காட்சியில் ரஜினி பேசும் வசனமும் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டேன். ஒரே இரவில் ஒரு மண்ணும் தெரியாத தனுஷ் ப்ரோக்ரமாய் அடித்துத் தள்ளுகிறார். ஜாவா கன்சோலில் மெசேஜ் பாக்ஸ் வருகிறது. ஒரு மென்பொருள் பொரியாளனாய் மனம் கொதிக்கிறது. ஆள் முக்கால் ஆடை காலாய் இடைவேளை வரை வலம் வரும் நயந்தாரா வீட்டில் ஒரே ஆச்சாரமாம். காலையில் கோழி கூவ எந்திருக்கனுமாம். அருகம்புல் ஜூஸ் குடிக்கனுமாம். எல்லா பொம்மனாட்டிகளும் இழுத்து போத்திட்டு இருக்கனுமாம். இந்த கண்டிஷன் எல்லாம் போட்றவர் யார் என்று பார்த்தால் கே. விஸ்வநாத். அற்புதமான பல படங்களை எடுத்த அவரால் அந்தப் படத்தில் எப்படி நடிக்க முடிந்தது என்று தெரியவில்லை. நெஜம்மா முடியலை...கார்த்திக் எம்.ஜி.ஆர் கலரில் இருக்கிறார். ஆனால் நயந்தாரா, சரண்யா என்று எல்லோரும் துரத்தி துரத்தி தனுஷை லவ் பண்ணுகிறார்கள். எப்படி இவர் விடாமல் இந்த மாதிரி கேரக்டரிலேயே நடிக்கிறார் என்று தெரியவில்லை। அவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கிறது. கண்ட நாள் முதலில் இது தான்டா லவ்னு சிரிப்பார். இதில் அழுகிறார், கோபப்படுகிறார். போதும் கார்த்திக் கொல்லாதீங்க... முதலில் தமிழ் சினிமாவில் அமேரிக்க மாப்பிள்ளை, இந்த மாதிரி சொத்தை நண்பன் கேரக்டரை எல்லாம் தடை செய்ய வேண்டும்! சாரு நம்மை எல்லாரையும் திட்டுவது சரி தான்...இந்தப் படம் ஏன் சார் நூறு நாள் ஒடனும்?

இவ்வளவு காண்டாய் பேசும் நானே எல்லாம் கலந்து கட்டி ஒரு மசாலா பதிவைத் தானே போட வேண்டி இருக்கு...விடுங்க விடுங்க! தமிழர் என்று சொல்லுவோம், தறி கெட்டுப் போவோம்!
2 Responses
  1. //தரி //

    தறி கெட்டுப் போவோம். :-) நல்லாத்தான் இருக்கு. அடிச்சு தூள் கிளப்புங்க.


  2. சுரேஷ்,

    முதலில் றி தான் போட்டேன், பிறகு நெசவு செய்யும் தறியைக் குறிக்குமோ என்று குழப்பம் வந்து விட்டது...சரி நாசமாய்த் தானே போறோம், அதற்கு எதற்கு பெரிய ற என்று அப்படி போட்டேன். இப்போ சரியா போச்சு!