நாற்பது ஆண்டுகளுக்கு முன் ரயில்வேயில் குமாஸ்தாவாக பணி புரிந்தவர் நேற்று இயற்கை எய்தியுள்ளார்! கடந்த நாற்பது ஆண்டுகளும் அவர் ரயில்வேயில் பணி புரிந்து விட்டு இறந்திருந்தால் அவரின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்திருக்குமோ இல்லையோ, இந்தப் பதிவுக்கு அர்த்தமிருந்திருக்காது! கடந்த நாற்பது ஆண்டுகள் கலையுலகில் அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் இன்று அவரின் மறைவிற்கும், இந்தப் பதிவிற்கும் அர்த்தம் சேர்க்கிறது! நாகேஷ்! இந்தப் பெயரை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, நாகேஷ் என்ற பெயரைக் கேட்டவுடன் அதில் ஒரு வித நகைச்சுவை எனக்குத் தென்படுகிறது. முன் பின் தெரியாத ஒருவரின் அறிமுகத்தின் போது அவர் தன் பெயரை நாகேஷ் என்று சொன்னால் உங்களின் மனம் அனிச்சையாய் நடிகர் நாகேஷை நினைத்து ஒரு புன் முருவல் பூக்கும். அதை உங்களால் தவிர்க்க முடியுமா? அத்தகைய தாக்கத்தை நம் மனதில் நிரந்தரமாய் தங்கி இருக்கச் செய்தவர் நாகேஷ். மாடி வீட்டு மாதுவையும், தருமியையும், வைத்தியையும், செல்லபாவையும் மறக்க முடியுமா? ஆயிரம் பொன் பரிசாச்சே, சொக்கா என்ற அவரின் கூவல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருவிளையாடல் வெற்றி விழாவை மதுரையில் கொண்டாடினார்களாம். அந்தத் திரைக்காவியத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் பொற்கிழி கொடுத்து கெளரவிக்கப் பட்டதாம். அந்த விழாவிற்கு நாகேஷை அழைக்கவில்லை. அது தான் சினிமா, என்று நாகேஷின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் நின்று கொண்டே படித்த ஞாபகம்!!

நிற்க

இந்நேரம் அபியும் நானும் படத்தை வலையுலகம் பிரித்து மேய்ந்திருக்கும். என்ன செய்வது? எனக்கு இப்போது தான் அதைப் பார்க்க முடிந்தது! டூயட் மூவிஸாரிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல திரைப்படம்! எனக்குப் பிடித்தது! குழந்தைங்க கடகடன்னு வளர்ந்துர்றாங்க, ஆனா சில அப்பாக்கள் வளர்றதே இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!! இன்றைய தலைமுறையில் குழ்ந்தைகள் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவே உள்ளனர். they know what they are doing! தன் கருத்தை, தன் வாழ்க்கையை, தன் கனவை தம் பிள்ளைகளிடம் திணிக்கும் நம் இந்திய மரபு ஒழிய வேண்டும்! நல்லதோ கெட்டதோ, பிள்ளைகளை வழி நடத்துவதோடு பெற்றொர்களின் கடமை முடிந்து விடுகிறது. இதிலும் காதல் உண்டு என்ற போதும், இது போன்ற காதல் அல்லாத வாழ்வின் பிற உணர்வுகளின் மீதும் தமிழ் சினிமாவின் பார்வை விழ வேண்டும்! பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா, ரவி சாஸ்திரி [இவர் பெயர் என்ன?] கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ஜோடி எனக்கு ஏனோ பாரத விலாஸில் சிவாஜி - கே. ஆர். விஜயா ஜோடியை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. அசட்டுத் தனமாய் நடந்து கொள்ளும் புருஷனுக்கு ஏற்ப அவனை ஒரு குழந்தையாய் பாதுகாக்கும் ஒரு மனைவி! பாரத விலாஸிலும் இதே காரெக்டரைசேஷன் தான். த்ரிஷாவின் காதலனாக பல்லே பல்லே என்று ஒரு சிங் வந்து நிற்பது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அக்மார்க் ட்விஸ்ட்! மாமனாருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக பிரதமரே அவரிடம் தொலைபேசியில் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தான் பட்டது! அதிலும் மாப்பிள்ளையின் சொந்த பந்தங்களின் கதை எல்லாம் ஓவர் டோஸ்! அபியின் குடும்பம் ஒரு அழகான அமைதியான சராசரியான குடும்பம் என்பதைப் போல் மருமகனையும் யதார்த்தமானவனாகக் காட்டி இருக்கலாம்! என்ன தான் படம் நன்றாய் சென்றாலும், சருக்கு மரம் விளையாடச் சென்ற பிருத்திவிராஜின் குழந்தையை எங்கே காணோமே என்று என் மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது. இடைவேளை வரை அது அப்பாவைத் தேடவே இல்லை, வீட்டுக்கு போவோம் என்று சொல்லவே இல்லை.
2 Responses
  1. Sivakumar Says:

    //ரவி சாஸ்திரி [இவர் பெயர் என்ன?]//

    குமரவேல்

    //மாமனாருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக பிரதமரே அவரிடம் தொலைபேசியில் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தான் பட்டது! //

    பிரதமருக்கும் நண்பர்கள் இருப்பார்கள், personal relationship இருக்கும். அவரும் நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதர் - அந்த அடிப்படையில் தான் இந்த சீன் வைக்கப்பட்டுள்ளது. இதையே ராதா மோகனும் Hindu - Friday Review ல் சொல்லியும் இருந்தார்.


  2. ya i understand, but trishavum, antha maapillai payyanin alattalum overai iruntahthu...