கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சென்னையில் இருந்தாலும், நேற்று தான் கலாக்க்ஷேத்ரா செல்லும் வாய்ப்பு கிடைத்தது! பல நாள் கனவு நேற்று ஒருவாறு நிறைவேறியதில் சந்தோஷம்! அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு யாராவது பின்னால் வந்து போகும் போது மட்டும் வேலைக்கான விஷயங்களை மேக்ஸிமைஸ் செய்து கொண்டும், யாரும் இல்லாத சமயங்களில் இணையத்தில் மேய்ந்து கொண்டும் இருந்தேன். சரி அப்படி ஒன்றும் பிரமாதமாக வேலை இல்லை என்றால் ஏதாவது ஒரு கச்சேரிக்குப் போகலாமே என்று எண்ணி கூகுளாரிடம் எந்த இடத்தில் என்ன கச்சேரி, எந்த சபாவில் என்ன டிபன் என்று கேட்டதில் கலாக்ஷேத்திராவில் எப்படியோ என்னை கொண்டு போய் நிறுத்தியது! இன்று மாலை 6:30 மணிக்கு வைஜெயந்தி மாலா பாலியின் பரதநாட்டியம் என்று போட்டிருந்தது!

என்ன வைஜெயந்தி மாலா இன்றும் நடனம் ஆடுகிறார்களா என்று சந்தேகம் ஒரு புறம் இருந்த போதிலும் பாலி என்ற அவரின் முழுப் பெயர் கொஞ்சம் ஊர்ஜிதப்படுத்தியது!

கட் செய்தால் கலாக்க்ஷேத்ரா!

அடடா, சென்னையில் அதுவும் ஒருவர் மேல் ஒருவர் நடக்கும் திருவான்மியூரில் இப்படி ஒரு இடமா என்று வியந்தேன்! விசாலமான இடம். சுற்றிலும் மரங்கள். ரம்மியமான சூழல்! ஐ.ஐ.டி கேம்பஸை ஞாபகப்படுத்தியது! ஆங்காங்கே காவி வேட்டியுடனும், தலையில் குடுமியுடனும் வெள்ளைக்காரர்கள். 50 ரூபாய் டிக்கட் இருந்தாலும் முன்னர் பெற்ற அனுபவத்தாலும், [க்ளிக்] எங்கே வைஜெயந்தி மாலா ஆடும் போது என் கால் கையை மிதித்து விடுவாரோ என்று பயந்து 100 ரூபாய் டிக்கட் எடுத்து, பாதுகையை வெளியே விடுத்து, ஒரு இருள் போர்த்திய சபைக்குள் நுழைந்தேன். கேரள சேலை சரசரக்க அம்சமான பெண்களில் ஒருவர் எனக்கு இருக்கை தேடிக் கொடுத்தார்!

அரங்கின் ஒரு ஓரத்தில் மட்டும் கொஞ்சம் வெளிச்சம். ஒரு பெண்மணி [பெயரை மறந்திருப்பேன் என்று உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை] அப்போது தான் பாடத் தொடங்கினார்! மேடையில் ஒரு மெல்லிய வெளிச்சத்தின் ஊடே பட்டுப் புடவை சரசரக்க 72 வயது வைஜெயந்தி மாலா பாட்டி சாரி வைஜெயந்தி மாலா பாலி ஆடத் தொடங்கினார்! வாசுதேவராய், தேவகியாய், சக்தியாய், கிருஷ்ணனாய் கிட்டத் தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் விடாமல் ஆடினார்! ஆடுவதற்கு முன் அந்த நடனத்தின் சாராம்சத்தை ஆங்கிலத்தில் சொல்லி எனக்குப் புரிந்ததை விட, அவரின் அபிநயம் எனக்கு ஓரளவுக்குப் புரிந்தது! பாடியவரின் குரலும் அற்புதம்! முதலில் சற்று நேரம் அவர் குரலுடன் வயலின் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு மிருதங்கமும் சேர்ந்ததும் ஆட்டம் சூடு பிடித்தது! அதோடு ஒரு பகுதிக்கு மட்டும் காயத்ரியின் நட்டுவாங்கம் [இவர் வேறு பெண்!] சேர்ந்து கொள்ள நாங்கள் எல்லோரும் சற்று நேரம் கோகுலத்திற்கே சென்று வந்தோம்! [இப்படி எல்லாம் யாராவது நாட்டியத்தை விமர்சித்திருப்பார்களா?] கிருஷ்ணன் கோவர்தன மலையை தூக்கி எல்லோரையும் மழையிலிருந்து காப்பது வரை நடனம் தொடர்ந்தது!

சுற்றி இருள் சூழ, மேடையில் இருந்த மெல்லிய விளக்கொளியில் அவர் ஆடிய விதம், அது ஒரு அற்புத கனம்! ஆதிசேஷனாய் அவர் வளையும் போதெல்லாம், அர்பணிப்பும், செய்யும் செயலில் ஈடுபாடும் இருந்தால் ஐம்பதென்ன எழுவதும் வளையும் என்று புதுமொழியை நான் கற்றுக் கொண்டேன்! ஒவ்வொரு முத்திரையும் அத்தனை கச்சிதம்! வீரப்பாவும் பத்மினியும் தான் இல்லாமல் போனார்கள்!

இவருக்கு அமைந்திருப்பது என்ன ஒரு வாழ்க்கை? அழகு, பெயர், புகழ், பணம், கலை, என்ன இல்லை இவரிடம்! எழுபது வயதிற்கு மேலும் இவரின் நடனத்தைப் பார்க்க அத்தனை கூட்டம்! அத்தனை ஆவல்!! அத்தனை எதிர்பார்ப்பு!

சிலர் பிறக்கும்போதே வரம் பெற்றுப் பிறக்கிறார்கள் போலும்...

மேன்மக்கள் மேன்மக்களே!!

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!