1. அதிக நெருக்கமில்லை
என்று நான் நினைத்த
நண்பனொருவன்

அவன் சென்ற சுற்றுலாவில்
என் நினைவில்
எனக்காக வாங்கி வந்த
ஏதோ ஒன்றை
எங்கோ தொலைத்து விட்டேன்!

2. நான் இதை
எழுதிக் கொண்டிருக்கும் போது

மாராப்பு விலகிய ஒரு பெண்ணின்
மாரை நீ வெறித்துக் கொண்டிருக்கலாம்

டீ கடையில் ஒரு சிறுவன் கொடுக்கும்
டீயை வாங்கி உறிஞ்சிக் கொண்டிருக்கலாம்

காற்றே இல்லாமல் சில நொடிகள்
தென்னங்கீற்று அசையாமல் இருந்திருக்கலாம்

உன் வாயிலிருந்து ஒரு பருக்கை
கீழே சிந்தியிருக்கலாம்

சுவற்றின் மேலேறிய எறும்பு
காலிடறி விழுந்திருக்கலாம்

இனம்புரியா ஒரு அச்சத்தில்
பறவையின் சிறகுகள் படபடத்திருக்கலாம்

கடல் சற்றே உள் வாங்கியிருக்கலாம்...

எதற்கும் இருக்கட்டும், என்
பேனாவை மூடியே வைக்கிறேன்!
3 Responses
  1. நல்ல முயற்சி...
    முதல் கவிதை என்னைப் பொருத்தவரை நிஜம்தான்....:-(


  2. சின்ன பையன்,

    நன்றி!


  3. Anonymous Says:

    "சுவற்றின் மேலேறிய எறும்பு
    காலிடறி விழுந்திருக்கலாம்" - sathaarana varthaigal than.. anaalum rasikavaithana...