தலை நிறைய எண்ணெய் வைத்து, அழுத்தி தலை வாரி கழுத்திலும், கையிலும் கருப்பு கயிருடன் வலம் வரும் ஹீரோ! கடுகளவு கூட இடுப்போ, தொப்புளோ தெரியாத ஹீரோயின், பூ விழுந்த கண்ணோடு கூட படிக்கும் ஒரு பெண், எங்க தாத்தாக்கு மேலுக்கு முடியல, அதான் எனக்கு கண்ணாலம் என்று வெகுளியாய் ஒரு பையன், வாழ்வின் கஷ்ட நஷ்டங்களினால் வயதுக்கு மீறிய அனுபவ அறிவுடன் மற்றொரு பெண், கல்லுடைக்கும் வயதான அப்பா, அண்ணன் படிக்கட்டும் என்று தன் படிப்பை தியாகம் செய்து கல்லுடைக்கும் அருமை தங்கை, க்ளாஸில் கைட் விற்கும் புரஃபசர்....இப்படி சினிமாவின் எந்த சாயலும் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது பாலாஜி சக்திவேலின் கல்லூரி!

கல்லூரி என்றாலே ஜீன்ஸ், டீ சர்ட், மினி, மைக்ரோ ஸ்கர்ட் என்று படம் காட்டிக் கொண்டிருந்த கோலிவுட் சற்று மிரண்டு தான் போயிருக்க வேண்டும்! ஆணும் பெண்ணும் கடைசி வரை நட்பாய் பழகவே முடியாதா என்ற கேள்விக்கு கல்லூரியை களமாக்கி அரிதாரம் பூசாத நிஜ மனிதர்களாய் உலவ விட்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

உள்ளே காலியாக இருந்தாலும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வருவது...வீட்டுக்கு போனா அப்பன் தொல்லை, பஸ்ஸுக்கு வந்தா கண்டக்டர் தொல்லை என்று கானா எடுத்து விடுவது, நம்ம க்ளாஸ்லயும் இப்படி ஒரு ஜாரியா என்று பல்லிளிப்பது, வட்டமாக உட்கார்ந்து அனைவரும் உணவை பரிமாறிக் கொள்வது, உள்ளூர் கலவரத்தில் உடைபட்ட பாதையை சாக்கடையில் இறங்கி சரி செய்வது, தம் கூடப் படிக்கும் பெண்டு பிள்ளைகளை ஜாக்கிரதையாக வீட்டில் விட்டுச் செல்வது, நண்பர்கள் புடை சூழ சினிமாவிற்குச் செல்வது, நண்பனின் கல்யாணத்திற்குச் சென்று க்ரூப் ஃபோட்டொ எடுத்துக் கொள்வது, ஒட்டப் பந்தயம் தொடங்கும்போது நண்பன் வெற்றி பெற வேண்டுமே என்று ஓடிச் சென்று திருநீறு பூசி விடுவது, அடுத்த கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் சென்று பிரச்சனை ஆவது, கல்லூரிச் சுற்றுலாவில் சங்கில் எல்லாருடைய பேரும் எழுதிக் கொள்வது என்று ஒவ்வொரு காட்சியிலும் நம் ஒவ்வொருவரின் கல்லூரி நாட்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்!

ஜோஷ்வாவின் இசையில் நா முத்துக்குமாரின் வரிகள் கொஞ்சம் காதிலும் விழுகின்றன! படத்தில் பாடல்கள் உறுத்தாத அளவுக்கு அளவாகவும், அழகாகவும் செழியனின் விழியினூடே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். வெண்ணீராடை மூர்த்தி மற்றும் வழக்கமாய் கல்லூரி படங்களில் வரும் ப்ரொபசர்கள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். உணர்ச்சிகரமான கட்டங்களை இன்னும் கொஞ்சம் லைட்டாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது, ஏனென்றால் அத்தகைய கட்டங்கள் தியேட்டரில் காமெடி ஆகிவிடுகிறது...

காதல் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகி எங்கே இது தோல்வியைத் தழுவி விடுமோ என்பதற்காக அதை தவிர்க்கும் வண்ணம் வரும் பத்திரிக்கை விளம்பரங்கள் தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்! இந்தப் படத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை! நீங்கள், "என்ன இப்படி நெஞ்சை நக்குறாய்ங்க" ரகத்தினரானால் கொஞ்சம் கஷ்டம் தான்! ஆனால் அது பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இல்லை! நட்பையும், காதலையும் சொல்லும்போது அதுவும் கல்லூரி காலங்களில் நடப்பவை என்பதால் அத்தகைய உணர்ச்சி மிகுந்த காட்சிகள் தவிர்க்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்!

சங்கர் ஒரு நல்ல இயக்குநர் என்பதை விட நல்ல தயாரிப்பாளர் என்ற என் எண்ணம் மேலும் வலுவுற்றிருக்கிறது!
8 Responses
  1. முதற்கண் இந்தப் பதிவை வண்மையாகக் கண்டிக்கிறேன்!
    ஏன்னா நடிகை தாமன்னா-வைப் பத்தி ஒன்னுமே சொல்லல! :-)

    //கல்லூரி என்றாலே ஜீன்ஸ், டீ சர்ட், மினி, மைக்ரோ ஸ்கர்ட் என்று படம் காட்டிக் கொண்டிருந்த கோலிவுட் சற்று மிரண்டு தான் போயிருக்க வேண்டும்!//

    :-))
    சரியா எடுத்துக் காட்டியிருக்கீங்க!
    நண்பர்களுக்குள் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், எப்படி இயல்பா ஒவ்வொருவரும் நட்பு வட்டத்துக்குள் வராங்க என்பதை அழகாச் சொல்லி இருக்காங்க!

    பாடல்களைப் பற்றியும் விமர்சனத்தில் சொல்லி இருக்கலாமே! சரியா-தவறா பாடல் இதமானது தான்!

    //சங்கர் ஒரு நல்ல இயக்குநர் என்பதை விட நல்ல தயாரிப்பாளர் என்ற என் எண்ணம் மேலும் வலுவுற்றிருக்கிறது//

    இதுக்குப் பேர் தான் நட்சத்திர உள்குத்தா? :-))


  2. Anonymous Says:

    தமிழர்களை தமிழர்களுக்குப் பிடிக்காதே...பார்க்காமா விட்றுவானுங்க...


  3. ஹாரி Says:

    I can't understand how you guys praise the movie. Good Cinema is not just reality or close to reality.

    Yes, His previous movie KADHAL is really a good movie.

    But KALLOORI is dissopointing. He constantly trying to make his audience giggle everytime.

    The climax needs special mention. Complete misfit for this film.


  4. krs,

    ஆத்தி, நாளைய முதல்வர் தமன்னா வாழ்க! போதுமா?
    நான் வந்த இரண்டாவது நாளே படம் பார்த்து விட்டதா, பாடல் வரிகள் எல்லாம் புதுசாக இருந்தன! இப்போ தானே சன் மியுஸிக்ல போட ஆரம்பிச்சிருக்காய்ங்க! எதையும் தப்பா எழுதிறக்கூடாது பாருங்க! என்ன நான் சொல்றது?

    நோ உள்குத்து! டைரக்ட் வெளிக்குத்து :)

    அனானி,

    மிகச் சரியாய் சொன்னீர்கள்!

    harry,

    என்னைப் பொறுத்தவரை, சினிமா என்பது ஒரு வாழ்வின் பதிவு தான்! உலகம் கொண்டாடும் சினிமாக்கள் முக்கால்வாசி இப்படித் தான் இருக்கின்றன! மொழியே தெரியாதவன் கூட படத்தை பார்த்தால் தமிழ்நாட்டில் மக்கள் இப்படித் தான் இருக்கிறார்கள் என்று உணர வேண்டும்!

    இதே கருத்துக்கு தாங்களும் ஒத்துப் போக வேண்டியதுமில்லை :)


  5. Anonymous Says:

    I coudnt read this latest post on kalluri, the fonts are not showing up in my machine????
    I enjoyed the movie verymuch, and I was expecting a post from you not sure what you ve written in the post...


  6. ஹாரி Says:

    //இதே கருத்துக்கு தாங்களும் ஒத்துப் போக வேண்டியதுமில்லை //

    I'm completely agree with you.

    What I'm trying to point out is the movie has weak script, poor execution with little bit of reality.

    //உலகம் கொண்டாடும் சினிமாக்கள் முக்கால்வாசி இப்படித் தான் இருக்கின்றன!//

    Ofcourse !


  7. இந்த பதிவையும் வாய்ப்பிருந்தால் பாருங்கள்:

    http://espradeep.blogspot.com/2007/12/test.html


  8. SurveySan Says:

    //The climax needs special mention. Complete misfit for this film. //

    its interesting to see, how peoples tastes differ a whole 180degrees :)