வலைபதியாததற்கு அலுவலகத்தில் வேலை என்று இப்போது சாக்கும் சொல்ல முடியாது! ப்ராஜக்ட் முடிந்து விட்டதால், போய் எங்காவது ஒழி என்று இரண்டு வாரம் லீவு கொடுத்து அனுப்பி விட்டார்கள்! சும்மா இருப்பதே சுகம் என்று வீட்டில் தான் இருக்கிறேன்! ஆனாலும் ஒரு வாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை!!

முதல் நாள் முழுவதும் வீட்டில் இருந்தேன் என்று நினைக்கிறேன்! கொஞ்சம் பயம் வந்து விட்டது. என்னடா அலுவலகத்தில், நாங்கள்ளாம் எப்படியெல்லாம் கோட் அடிச்சோம் தெரியுமா என்று தாம் தூம் என்று குதித்து லீவு வாங்கினோமே, இந்த ஒரு நாளுக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே என்று பகீரென்றது! சரி வீட்டில் இருக்கக் கூடாது, எங்காவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஞானம் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது!

அந்த ஞானத்தின் விளைவாக என் நண்பன் ஒருவன் செங்குன்றத்தை தாண்டி ஒரு கோயில் இருக்கிறது. அங்கு சென்று வந்தால் சீக்கிரம் திருமண பாக்கியம் கிட்டுவதோடு வீடு, மனை வாங்கும் சுப காரியங்களும் நடைபெறும் என்று சொன்னான்!! அடேய் நான் ஆல்ரெடி வீடு வாங்கியாச்சே அது கைய விட்டு போகாதுல்ல என்று அப்பாவியாய் கேட்ட என்னை பொருட்படுத்தாது அந்தக் கோயிலுக்கு கூட்டிப் போனான்! போகும் வழியெல்லாம் என் சிந்தனைகள் இங்கு சில பத்திகளாக...

அவன் சொன்ன கோயில் செங்குன்றத்தை தாண்டி கொல்கத்தா ஹைவேயிலிருந்து சிறுவாபுரி என்ற இடத்தில் ஒரு டீ கடை சந்தில் திரும்பி வயல் வரப்புகளை கடந்து போனால் வருகிறது. அங்கு சீண்டுவாரேயில்லாமல் அப்பாவியாய் ஒரு முருகன் காட்சியளிக்கிறார்! சரி சிறுவாபுரியின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்த டீ கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து அந்தக் கோயிலைப் பற்றி இப்படி ஒரு கதை கட்டி விட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்! நான் போய் இறங்கியதும் என் நண்பர்களை முறைத்து சொன்னது, "நான் ஐ பாட் வச்சிருந்ததாலே நீங்க தப்பிச்சீங்க!!" உடனே என் நண்பன் நீ தான் சாமி கும்பிட மாட்டியே ஹெல்மெட்டை வச்சுக்க என்றான்! எனக்கு அப்போ தான் வெளங்கிச்சு இதுக்கு தான் நம்மள கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு...ஹைய்யோ...ஹைய்யோ!!

அது ஒரு சின்ன கோயில் தான், சுற்றுலா துறையினரின் [டீ கடை பசங்க] புத்திசாலிதனத்தால் கோயிலை புதுப்பிக்கும் அளவிற்கு பொருள் சேர்ந்திருக்கிறது! பாவம் முருகன் வழக்கம் போல் குபு குபுவென்று கொதிக்க கொதிக்க உஷ்ணத்தில் நிற்கிறார். அய்யர் சற்றே வெளியில் வந்து பக்தர்களுக்கு விபூதி கொடுக்கும் இடத்திற்கு டைல்ஸ் ஒட்டி ஸ்ப்ளிட் ஏசி எல்லாம் பொருத்தியிருப்பது கொஞ்சம் ஓவர்! என் நண்பன் முருகனிடம் உருகி வேண்டிக் கொண்டிருந்தான்! போதும் வாடா, ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் ஆயிட போகுது என்றேன்...அதற்கு அவன், இருடா, ஒன்னுக்கு ரெண்டு வீடா கெடச்சுட்டா என்றான்! அடக் கடவுளே....

அப்போது மணி மாலை ஒரு ஆறு இருக்கும். அந்த நேரத்தில் கூட கோயிலில் எங்கள் மூவருடன், அந்தக் கோயில் அய்யர், இன்னும் சிலர், அப்புறம் ரொம்ப கொசு...அவ்வளவு தான்! என் நண்பன் ஒருவனுக்காகவே அய்யர் ஓடி ஓடி எல்லா கடவுளுக்கும் லைட் போட்டு தீபாராதனை காட்டி...என்ன ஒரு ஸ்பெஷல் கவனிப்பு!! அங்கு சுற்றுலா துறையின் ஒரு அதிகாரி நான்கு கற்களை பொறுக்கி வைத்துக் கொண்டு சார், வீடு கட்டுங்க சார் நெனச்சது நடக்கும் என்றார்! எனக்கு தூக்கி வாரிப் போட்டது...ஓஹோ சிச்சுவேஷனை மெயின்டெய்ன் பண்றீங்களா..ஆமா சார் இங்கே கன்ஷ்ட்ரக்ஷன் காஸ்ட் என்ன போகுதுன்னு ஒன்னும் எஸ்கலேஷன் ஆகலையா என்று கேட்டிருக்கலாம்! சரி போனா போகுதுன்னு விட்டுட்டேன்! விட்டுட்டேன்!!

இதையெல்லாம் விட ஒரு கொடுமையை எல்லா கோயில்களிலும் நான் பார்ப்பது; இருபது ரூபாய் பல்பை வாங்கி மாட்டி விட்டு அதற்கு அவன் முழு முகவரியோட உபயம் எழுதுவது!! இந்தக் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல! முருகன் முகத்தைத் தவிர அனைத்திலும் உபயம் இருந்தது! ஒரு வேளை ப்ரஹாரம் இருட்டாக இருப்பதால் அங்கு இருக்கும் உபயம் தெரியவில்லையோ என்னமோ! ஒரு அழகான முருகன் படத்தை அய்யர் கொடுத்தார், நன்றாக இருக்கிறதே என்று நம்பி வாங்கிப் பார்த்தால் முக்கால் படம் முருகனுக்கு, மீதி கால் படம் விளம்பரத்திற்கு!!

துக்கம் வரும் சமயத்தில் ஆறுதலாய் இருப்பதற்காக கடவுள் என்ற பாத்திரத்தை மனிதன் படைத்தான்! கஷ்டம் வரும்போதெல்லாம் அதோ கடவுள் வருவார், அவர் நமக்கு எல்லா செல்வங்களும் அள்ளித் தருவார், நம் கஷ்டங்களை எல்லாம் போக்குவார்...இந்த ஜென்மம் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்வு செழிக்கும் என்று நம்பி காலம் தள்ளினான்! இன்று அந்த நம்பிக்கையும் நீர்த்துப் போய் எத்தனை போலியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கடவுள் கடவுள் என்று இல்லாத கடவுளின் பெயரை சொல்லி இருக்கும் சக மனிதனை ஏமாற்றிப் பிழைப்பது என்ன பிழைப்பு? திருமணமாக ஒரு சாமி, குழந்தை பெற ஒரு சாமி..இப்படியே போனால் அந்தக் கோயிலுக்கு போ, வீட்டு குழாயில் தண்ணீ வரும், அந்தக் கோயிலுக்குப் போ வீட்ல கரண்டே போகாது என்று கூட சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!!

என் நண்பர்களை போல் பலர் இருக்கிறார்கள்! இத்தகைய விஷயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை!! ஆனாலும் அவர்கள் அந்த மூட நம்பிக்கைச் சேற்றுக்குள் சுகமாகவே மூழ்கிக் கிடக்கிறார்கள்! என்னுடன் தானே படித்தார்கள் என்று அவர்களின் கல்வியையும், பகுத்தறிவையும் அதே சேற்றில் என் கையால் துழாவுகிறேன்! துழாவிக் கொண்டேயிருக்கிறேன்!!
5 Responses
  1. sskb Says:

    Paguttarivup Paasaraiyil eppozhudu serndeero??


  2. i am always in that paasarai only sir!


  3. Anonymous Says:

    "இதையெல்லாம் விட ஒரு கொடுமையை எல்லா கோயில்களிலும் நான் பார்ப்பது; இருபது ரூபாய் பல்பை வாங்கி மாட்டி விட்டு அதற்கு அவன் முழு முகவரியோட உபயம் எழுதுவது!!"

    Naan inda oru varikku mattum comment eludikolgiren. enakku therinda varaikkum, avan anda irubadu roobaai koduthadarkaga thaan, than peyarai vilambarapaduthikolgiraan... nichaya vice versa alla enru thaan en experiencil naan kandadu... adanaal avanukku nichayam kodukkum manappanmai iruppadagave naan paarkiren... eppadiyo oru manidanukku kodukkum manappanmai undaanade oru nalla thodakkam allava... naam en idai varaverka koodadu?


  4. irubathu roobai bulbukke than peyarai naarpathu roobai koduthu vilambaram seithu kolbavan kodukkum manapaanmai ullavanaaka enakku padavillai...

    irukkiraara illayaa endru theriyaatha kadavulukkaaga ennanamo pithalaattam seithu vittu kovilil oru padam varainthu vaithaal paavam tholainthu vidum endru nambuvorai ennaal etru kolla mudiyavillai..

    anbe sivam padathil varum dialogue...

    seira tappai ellam senjuttu undiyalla kaasa pottutaa antha kadavul ungalai mannichi kaapathanum...appadi kaappathura kadavul kadavule kedaiyaathu..cooli, enna avarum kaasu vaangittu thaane velaya seiraaru...


  5. hrbaskar Says:

    இது உண்மையில் முருகன் கோயில் அல்ல. ஒரு ஜினாலயம், அதாவது ஒரு சமண கோயில். சமணத்திருவுருவம் இருன்த இடத்தில் முருகன் சிலை வைக்கப்பட்டது. சமண சிலை இப்பொழுது ஊருக்கு எல்லையில் கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கிறது. ஸ்ரீபாவாபுரி - சிறுவாபுரி ஆகியது. ஜினமேடு - சின்னம்பேடு ஆகியது. இது தான் உண்மை.