வலைப்பதிவாளர்கள் யாரும் ஏன் நாடக விழாவுக்கு வருவதில்லை என்ற என் முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு, குவிந்த பின்னூட்டத்தில் வலைப்பதிவாளர்களுக்கு நாடகத்தில் இருக்கும் பற்று எனக்கு புரிந்து விட்டது. சரி எல்லோருக்கும் வேலைப் பளுவின் காரணமாக வர முடியவில்லை என்று நான் நினைத்துக் கொண்டு தொடர்கிறேன்.

நாடகம் - ஹலோ ராஜி
கதை, வசனம், இயக்கம் - அகஸ்டோ
சிறப்பு விருந்தினர்கள் - டி.கே.எஸ். அண்ணாச்சியின் வாரிசுகள், நாடக நடிகை ஷீலா

ஜாதி மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாத ஒரு முற்போக்கும் எண்ணம் கொண்ட பெண்ணை பெண் பார்க்க நல்ல இதயங்கள் கொண்ட இருவர் வருகிறார்கள். அதில் யாரை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நிகழும் குழப்பங்களே கதை. இந்தக் கால இளஞர்கள் செய்யக்கூடிய நற்காரியம் ஏராளமாக இருக்கிறது, அதை விடுத்து ஜாதி மதம் என்ற பிரிவினையில் சிக்கி தவிக்ககூடாது என்று ஒரு சின்ன மெஸேஜ்!

தமிழ் திரையிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் வரும் செளந்தர்யா வித விதமான சேலைகளில் கதாநாயகியாக வலம் வந்தார். மற்ற நடிகர்களின் பெயர் எனக்கு மறந்து விட்டது. பொண்ணு பேர் மட்டும் எப்படி ஞாபகம் இருக்கு என்று கேட்காதீர்கள்! ஹார்மோன் திருவிளையாடல்!! அதையன்றி யாமொன்றும் அரியோம் பராபரமே!! எல்லா நடிகர்களும் நன்றாகவே நடித்தனர். பிரகாஷாக வந்தவர் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு நடிக்கிறாரோ என்று தோன்றியது. மற்றபடி நாடகம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை மிக அருமை!

"நீ இந்த வெள்ளை சஃவாரி போட்டாலே கல்யாணத்துக்கு போறேன்னு ஊருக்கே தெரியுமேடா!" என்று இன்றும் சஃவாரி அணிபவர்களை கிண்டல் செய்கிறார்கள். கல்யாணம் என்றாலே மாப்பிள்ளை பாம்பே டையிங், ஒன்லி விமல் மாடல்கள் போல் ஒரு சஃவாரி எடுத்துக் கொள்வது ஒரு காலம்.

"இவர்தான் கிருஷ்ணனா என்று கேட்டதற்கு, ஏன் புல்லாங்குழலோட வந்தாதான் ஒத்துக்குவீங்களா என்பது நச் பதில்."

"இதுக்கு தான் நான் என் கல்யாணத்தப்போ பொண்ணே பாக்கலை, போட்டோ மட்டும் அனுப்ச்சேன்! ஃபோட்டோல நான் கொஞ்சம் சுமாராவெ இருப்பேன். தாலி கட்டும் போது அவ என்னை உத்துப் பாத்து ஓன்னு கதறுனா, என்னன்னு கேட்டா, ஃபோட்டோல சிங்கம் மாதிரி இருந்தியேய்யா, நேர்ல அசிங்கமா இருக்கியேன்னா.."

இப்படிப் பல இடங்களில் பல நச் நச் கள்! அந்த நடிகர் மிக இயல்பாய் நடித்தார். பாராட்டுக்கள்.

இந்த நாடகத்தில் இன்னொரு முக்கியமான விஷயம், 3 விநாடிகளில் க்ளைமாக்ஸ்! இதை நாடகத்திற்கு முன்பே சொல்லி எதிர்பார்ப்பை கூட்டினார்கள்! எதிர்பார்ப்பு என்று வந்துவிட்டால் ஏமாற்றத்தை தவிர்ப்பது கஷ்டம் தான். கொஞ்சம் சப்பென்று தான் இருந்தது. நாயகி கடைசியில் தன் கணவனை தேர்ந்தெடுத்ததில் எனக்கு கொஞ்சம் உறுத்தவே செய்தது. ஆனாலும் பாராட்டத்தக்க முயற்சி!

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய மனிதனாய் ஆகக் கூடாது, அப்படியே ஆனாலும் இந்த மாதிரி மேடையேறக்கூடாது, அப்படியே ஏறினாலும் பொன்னாடை போர்த்துவதை தவிர்க்க வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் பொன்னாடை போர்த்துகிறார்கள். இத்தனையும் கொண்டு போய் என்ன தான் செய்வார்களோ தெரியவில்லை..

2 Responses
  1. நல்ல முயற்சி.. விமர்சனம் நன்றாக இருந்தது.. ஒரு சின்ன ஆலோசனை சொல்லலாமா ப்ரதீப்..?

    வெறுமனே.. கட்டுறை படிப்பதை போல தோன்றுவதை தவிர்க்க, தாங்கள் நாடகத்தில் ரசிக்கும் காட்சிகளை ஓரிரு புகைப்படங்கள் எடுத்து வலைப்பதிவில் போடலாமே..

    கசப்பான மருந்தை தேனில் குழைத்து தருவதைப் போல.. உங்கள் கட்டுரையின் கஷ்ட்டத்தை அந்தப் புகைப் படங்களைப் பார்த்து மறப்போம் நாங்கள்..


  2. பாவக்காய் கசப்பாக இருந்தாலும் அது உடலுக்கு நல்லது. அதைப் போல் தான் என் பதிவும்!