சிங்காரச் சென்னையில் நாடக விழா அமோகமாய் நடக்கிறது. என் பையனை பத்தி ஏன் கேக்குறீங்க, சினிமா, ட்ராமான்னு சுத்துறான் என்று பெற்றோர்கள் அங்கலாய்க்க நான் நேற்று முதன் முறையாய் நாடகம் காணச் சென்றேன். மதுரையில் இப்படி எல்லாம நாடகம் நடந்ததா என்றே எனக்குத் தெரியாது. அது சரி, சண்டேன்னா ரெண்டு, அர்ஜுன் அம்மா யாரு? புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?, திரைப்பட விழா, நாடக விழா எல்லா வித பரபரப்பும் இங்கு தானே இருக்கிறது. பத்திரிக்கைகாரர்கள், சினிமாகாரர்கள், நாடக நடிகர்கள் மக்களை அப்பாடா என்று ஒரு நாளும் இருக்க விட மாட்டார்கள். அதனாலோ என்னமோ சென்னை எனக்கு மிகவும் பிடிக்கிறது.

25ம் தேதி தொடங்கிய விழாவுக்கு நேற்று தான் போக நேர்ந்தது. சும்மா தான் இருந்தேன், தொடங்கிய அன்றிலிருந்தே போயிருந்தால் கொஞ்சம் நாடக அறிவாவது வளர்ந்திருக்கும். நேற்று நாடகம் முன்பு நடந்த பேச்சில் இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள். நான் அரங்கில் கடைசியில் நின்றிருந்தாலோ, என் தலை கொஞ்சம் வழுக்கை ஆனதாலோ அவர்களுக்கு நான் இளைஞன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நேற்று டி.நகரில் உள்ள வாணி மகாலில், ஓபுல் ரெட்டி அரங்கில் மாலி எழுதிய "நம்மவர்கள்" என்ற நாடகத்தை டிவி. வரதராஜனின் யுனைட்டெட் விஷுவல்ஸ் நிறுவனத்தினர் நடத்தினார்கள். விழாவுக்கு பழைய நடிகர் ஸ்ரிகாந்த், ரமணன், மாலி, எஸ்.வி. சேகர் அனைவரும் வந்திருந்தனர். ஸ்ரிகாந்த் அவர் காலத்தில் நாடகங்கள் நடத்த பட்ட கஷ்டங்களை சுவைபடக் கூறினார். எஸ்.வி.சேகர் யாரும் அழைக்காமலே உரிமையோடு மைக்கில் வந்து நகைச்சுவையாய் பேசினார். மனிதருக்கு நல்ல டைமிங் சென்ஸ்.

நான் அந்த அரங்கில் போய் சேர்ந்ததே ஒரு குறு நாடகம் போல் தான் இருந்தது. தரமணியிலிருந்து 5T பேருந்தில் ஏறி [டிக்கட் 3 ரூபாய்] டி.நகர் சென்று அங்கிருந்து 47ஐ பிடித்து [டிக்கட் 2 ரூபாய்] வாணி மகாலில் இறங்கும் போது மணி 7. நம் ஆட்கள் எங்கே அதற்குள் தொடங்கி இருக்கப் போகிறார்கள் என்று நினைத்தால், வெளியே கதவை பூட்டிக் கொண்டு ஒருவர், ஹால் ஃபுல் சார் என்றார். எனக்கு பகீரென்றது. கல்கி அவர்கள் "கர்நாடகம்" என்ற பெயரில் நாடகத்தையும் சினிமாவயும் விமர்சனம் செய்ததை போல் நானும் "ஹிந்துஸ்தானி" என்ற பெயரில் விமர்சனம் செய்து கலை உலகிற்கு சேவை செய்வதாய் இருந்தேனே, இப்படி குண்டை தூக்கி போடுகிறாரே இந்த மனிதர் என்று கலங்கினேன். என்னைப் போலவே நாடகம் பார்க்க வந்திருந்த சிலர் என்ன சார் ரொம்ப தூரத்துல இருந்து வர்றோம், நின்னு பாத்துக்குறோம்..விடுங்க என்றார். நான் தலையை ஆட்டினேன். [நம்ம என்னைக்கு பேசினோம் சொல்லுங்க?] அந்த மனிதர் அதெல்லாம் முடியாது சார். ஏற்கனவே அங்கே பல பேரு நின்னுட்டு தான் இருக்காங்க என்றார் கறாராய்! அவர் அந்தப் பக்கம் கொஞ்சம் நகன்றதும் கதவைத் திறந்து விட்டார் ஒரு தாத்தா..ஒரு ஓரமா நின்னு பாருங்க என்றார். வாழ்க!

இன்னும் நான் விஷயத்துக்கே வரவில்லை. நாடகம்! இந்தியா, பாகிஸ்தான் உறவைச் சொல்லும் வழக்கமான, உருக்கமான கதை. முஸ்லீம்களை நாம் வெறுப்பதில்லை, அவர்களும் நம்மவர்களே என்ற கருத்து. எனக்கு ஒன்று புரியவில்லை. இந்த நாடகத்தை பார்க்க எத்தனை முஸ்லீம் தோழர்கள் வந்திருப்பார்கள்? பாகிஸ்தானில் சென்று இந்த நாடகத்தை போட்டால் அங்கிருப்பவர்கள் நம்மைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்று சொல்லலாம். இங்கு வந்திருப்பவர்களோ பெரும்பாலும் 50, 60 வயதைக் கடந்த பிராமணக் கூட்டம். இந்த நாடகத்தை இங்கே போடுவதால் யாருக்கு என்ன பயன்? சரி நல்ல விஷயத்தை யாரு வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

ஒரு நாடகம் என்பது பார்வை இழந்தவருக்கும், காது கேளாதவருக்கும், பேச முடியாதவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை காரணமாக வைத்துக் கொண்டே கொஞ்சம் இல்லை அதிகமாகவே மிகைப்படுத்தி நடிக்கிறார்கள். 78ல் பிறந்த என்னால் இந்த வகையான நடிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் தான் இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜியின் படங்கள் பிடிப்பதில்லை. ஆனால் நான் சிவாஜியின் படங்களைப் பார்க்கும்போது அந்த காலத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு பார்ப்பதால் என்னால் அதை ரசிக்க முடிந்தது. ஆனால் இந்த நாடகத்தில் என்னால் ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை.

என்னதான் நாம் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை நாம் பலவிதங்களில் மார்தட்டிக் கொண்டாலும், ஹிந்து முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளும், முஸ்லீம் ஹிந்துக்களுக்கு செய்த கொடுமைகளும் எல்லோர் மனதிலும் ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது. மன்னிக்க நாம் என்ன தெய்வப்பிறவியா என்று ஹிந்துவும் கேட்கிறான், முஸ்லீமும் கேட்கிறான்.

கடவுள் இருக்கிறார் என்னும் இவர்கள் மசூதியையும் கோயிலையும் உடைக்கிறார்கள். கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதி எதையும் உடைப்பதில்லை என்று எப்போதோ யாரோ சொன்னது என் ஞாபகம் வந்தது.

மற்றபடி நாடகத்தில் லைட்டிங் நன்றாக இருந்தது. ரஹீமாக வந்தவர் நன்றாக நடித்தார். பிஸ்மில்லா கானாக வந்தவர் சத்ரியன் படத்தில் வந்த அருமைநாயகத்தை ஞாபகப்படுத்தினார். அவரது நடிப்பும் அருமை. சில இடங்களில் வசனங்கள் பளிச்! அந்த போலிஸாய் வந்தவரை நினைத்தால் எனக்கு சிரிப்பாய் இருக்கிறது. நாடகத்தை முழுமையாக நான் பார்க்கவில்லை. எப்போது முடியும் என்று ஆகிவிட்டது. அரங்கில் உட்கார்ந்திருந்தவர்களும் நெளிந்து கொண்டு தான் இருந்தார்கள். உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பார்த்ததால் கால் வலித்து 9 மணிக்கு கழன்று கொண்டேன்.

வெளியே வந்து டி.நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு குல்லா அணிந்த முஸ்லீம் போய் கொண்டிருந்தார். அவரையே வெறித்துப் பார்த்தேன். அவரும் என்னையே சந்தேகமாய் பார்த்தார். "நம்மவர்கள்" என்று நினைத்துக் கொண்டு நடந்தேன்.

7 Responses
  1. நல்ல பதிவு. எனக்கும் நாடகம்னா ஒரே ஆசை. எப்படியாவது ஒரு 'நல்ல'நாடகம் பாத்துரணும்!


  2. rajkumar Says:

    Good writeup.

    Write more.

    Anbudan

    Rajkumar


  3. துளசி,

    அவ்வளவு ஆசை இருந்தால், சென்னை வாருங்கள். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாக நினைக்கிறேன்.

    ராஜ்குமார்

    ரொம்ப நன்றி. எழுதிட்டா போச்சு!


  4. ஆமாங்க பிரதீப்,

    இங்கே நியூஸியிலே இருக்கேன்.

    ஒரே ஒருதடவை கிரேசி மோகன் நாடகம் ஒண்ணு பார்த்தேன்.

    இந்தமுறை டிசம்பர் மாசம் இந்தியா போலாமான்னு ஆசையா இருக்கு. பார்க்கலாம் வாய்க்கிறதான்னு?


  5. thulasi,

    today we have "MEESAI AANAALUM MANAIVI" drama. CO-INCIDENCE? :-)


  6. thulasi,

    sorry, i missed crazy mohan's name in my previous comment.


  7. Anonymous Says:

    Pradeep,

    Naan mudalil paarthadu...Hindi Drama... Pindbu thaan oru tamil drama paarthen...
    Chennail Tamil Drama paarka varugira paadiper English pesikkondu thaan varuvadaga enakku thonrugiradu... Nee enna ninaikkirai?