நான் தமிழன் அல்ல. நான் செளராஷ்ட்ரர் குலத்தில் பிறந்தவன். அப்பாடா இனி தமிழ் பிழைத்துக் கொள்ளும் என்று முனகுபவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இனி விஷயம் : சரி வலைப்பதிவில் தான் என்னன்னமோ பதிகிறோமே, நம் குலத்தைப் பற்றியும் பதித்து சரித்திரத்தில் இடம் பெறலாம் என்ற என் அவா இதோ இந்தப் பதிவில் வந்து நிற்கிறது.

செளராஷ்ட்ரர் குலம்: [இனிமேல் கொஞ்சம் சுருக்கி செள குலம்]

செள குலத்தார்களின் முதன்மைத் தொழில் நெசவு, பட்டு நூல் விற்பனை..மதுரையில் எல்லோரும் எங்களை "பட்டு நூற்காரர்" என்று தான் அழைப்பார்கள். ஆனால் இன்று அந்தத் தொழில் நலிந்து விட்டதால் அதைச் செய்பவர் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

செள குலம் இன்று குஜராத் இருக்கும் செளராஷ்ட்ரா என்ற பகுதியிலிருந்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது! சரி, தென்னகத்தில், தமிழ்நாட்டில் எப்படி வந்தார்கள்? அது எப்போது நடந்தது என்பதற்கு எந்த வித சான்றும் இல்லை. செள குலம் தமிழ்நாட்டில் வந்ததைப் பற்றி சில கதைகள் உலவுகிறது. அதாகப்பட்டது..

1. கஜினி முகமது வட இந்தியாவில் ஊடுருவிய போது அங்கிருந்த செள குலம் தங்களைக் காத்துக் கொள்ள தென்னாட்டில் தஞ்சம் புகுந்திருக்கலாம்.

2. சத்ரபதி சிவாஜி தென்னகத்தில் படையெடுத்த போது அவருடன் வந்த சிலர் தென்னகத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம்.

3. விஜயநகரப் பேரரசு, வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது, நாயக்கர்கள், தென்னகத்தின் ஒரு பகுதியை மதுரையை தலை நகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அப்போது நாயக்கர்களுக்கு உடை நெய்து கொடுப்பதற்காக சில செள குடும்பங்கள் மதுரை வரவழைக்கப்பட்டனர். இன்றும் நீங்கள் மதுரை திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி செள குடும்பங்களைப் பார்க்கலாம். அப்படியே மஹால் 7வது தெருவுக்குள் வந்தால், அந்த சமயத்தில் நான் மதுரை போயிருந்தால் என்னையும் பார்க்கலாம்! அது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. [அது அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா அதுவும் உங்களைப் பொருத்தது!] சரி கதைக்கு வருவோம். மஹால் 7வது தெருவில் நான் வசித்ததை வைத்துப் பார்க்கும் போது, இந்த மூன்று கதைகளில் இந்தக் கதை கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறது! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்ன முறைப்பு?

இன்று செள குலம் மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் போன்ற நகரங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். என்னைப் போல் பலர் கணினியியலிலும் கால் வைத்து, மன்னிக்கவும்..கை வைத்து உலகமெங்கும் பறந்து கொண்டிருக்கிறார்கள்! சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் போல செள குலத்திலும் உண்டு.

நான் அலுவலகத்தில் இருக்கும் போது யாராவது செல்·போனில் என்னவர்கள் பேச, நானும் என் தாய்மொழியில் பேச ஆரம்பித்து விட்டால் போதும், பாவம் பக்கத்தில் உள்ளவர்கள்! நான் ·போனை வைத்தவுடன் அவர்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், "நீங்க என்ன பேசுறீங்க? ஒன்னுமே புரியலையே" என்று கலைந்த தலையுடன் [பிச்சிகிட்டு தான்!] பாவமாய் கேட்பார்கள். அதற்குப் பிறகு ஒரு அரைமணி நேரம் நான் எங்கள் வரலாறு, புவியியல் என்று எல்லாம் சொல்ல வேண்டி இருக்கும். யாராவது ஒருவர் என்னை நீங்கள் தமிழா என்று கேட்டு விட்டால், தயங்காமல் ஆமாம் என்று சொல்லி விடுவேன். மறுத்து நான் இல்லை, நான் செள குலத்தை சார்ந்தவன், எங்கள் இனம்.. என்று மறுபடியும் அதே வரலாறு புவியியல் தான் சொல்ல வேண்டி இருக்கும்... வீட்டில் தாய்மொழியில் பேசுவதோடு சரி. செள பாஷை கொஞ்சம் கரடுமுரடானதாக இருக்க வேண்டும். [புரியாதவர்களுக்கு!] "தூத் = பால்", "பானி, பனி = தண்ணீர்", "காய் [GA] = பசு" போன்ற சில வார்த்தைகள் ஹிந்தியுடன் ஒத்துப் போவதுண்டு..நான் பேசும்போது இந்த வார்த்தைகள் வரவில்லை என்றால் உங்கள் தலை கலைவது நிச்சயம். கொங்குனி, மராட்டி கொஞ்சம் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். செளராஷ்ட்ரா மொழிக்கு எழுத்துக்களும் உண்டு. அது வழக்கொழிந்து போய் விட்டன. எழுத்துக்களைப் பற்றியும், சில செளராஷ்ட்ர மஹான்களைப் பற்றியும் செள நண்பர் ஒருவர் வலைபதிந்து இருக்கிறார். அது இங்கே.

செள குலத்தவர் அதிகம் இருப்பது மதுரையில் தான் என்று நினைக்கிறேன். 4 பேரில் ஒருவர் செள இனத்தைச் சேர்ந்தவராக இருப்பார். வட இந்தியாவிலிருந்து வந்ததாலோ என்னவோ, இயற்கை எங்களுக்கு கொஞ்சம் வெள்ளைத் தோலை கொடுத்து விட்டது. தில்லியிலும், சண்டிகரிலும் நான் இருந்த போது என்னை தமிழன் என்று யாரும் ஏற்றுக் கொண்டதில்லை. பெங்களூரிலும், சென்னையிலும் நான் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில், அரைகுறை ஹிந்தியிலும் ஆட்டோகாரர்கள் ஆரம்பித்து விடுகிறார்கள்! [அப்படியே, சலிச்சுக்கிறேனாம்!] தமிழர்கள் ஒரு இனிஷியல் போட்டுக் கொள்வார்கள், எங்களுக்கு இரண்டு இனிஷியல்! வீட்டுப் பேர், அப்பா பேர்! வீட்டுப் பேர் [sur name] கொண்டா, தொகுலுவா, ராமியா, குப்பா, ஈஸ்வரீஸ், லவ்டான், மொல்லின், நாட்டாமை இப்படி பல உள்ளன. ஒரு குடும்பப் பெயர் கொண்டவர்கள் கூடப் பிறந்தவர்களாவர். என் முழுப் பெயர் ஈஸ்வரி சுப்பிரமணியன் பிரதீப் குமார். எனக்கு, உங்களுக்கு தெரிந்த சில செளராஷ்ட்ரக் குல பிரபலங்கள், டி. எம். செளந்தராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, எம். என். ராஜம், ஏ. எல். ராகவன்..[சினிமாவில் இருந்தால் தான் பிரபலமா? புத்தி போகாதே!]

செளராஷ்ட்ரா மக்கள்:

1. புளியோதரை செய்வதில் எங்களை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று சொல்லலாம். அவ்வளவு பிரபலம். எங்கு ஊர் சுற்றச் சென்றாலும், எத்தனை பேர் சென்றாலும், யார் போகிறார்களோ இல்லையோ, தூக்குச்சட்டி நிறைய புளியோதரை போகும்.

2. பஸ்ஸில் ஏறும் முன் யார் டிக்கட் எடுப்பது என்று முடிவு செய்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் ஏறிக் கொண்டு இங்கிருந்து நான் டிக்கட் எடுத்து விட்டேன் என்று அவர்கள் ஸ்டாப் வரும் வரை பேசிக் கொண்டே வருவார்கள்.

3. தமிழையும் செளராஷ்ட்ராவைப் போல பேசுவது எங்கள் குல பெண்மணிகளுக்கே உரியது. ஸ்டாப் வரும்வரை உட்கார்ந்திருந்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில் இறங்காமல் பஸ் எடுத்தவுடன் "என்ன ஆளுய்யா நீ? பிள்ளே இறங்குதுல்லே" என்று செளராஷ்ட்ரா கலந்த தமிழில் காட்டுக் கூச்சல் போடுவார்கள். நகைச்சுவையாக இருக்கும்.

இதே போல், ஒரு மூதாட்டி பஸ்ஸில் ஏறி கண்டெக்டரிடம், ஏம்பா, இந்த பஸ்ஸ¤ பந்தடி 3 போகுமா என்று ஒரு சிறு தெருவின் பெயரைச் சொல்லிக் கேட்டாளாம். அதற்கு கண்டெக்டர், வீட்டு நம்பரையும் சொல்லும்மா, வீட்லையே இறக்கி விட்டுர்றோம் என்றாராம். நான் பள்ளியில் படிக்கும் போது 15 ஐ பைனஞ்சி என்று உச்சரிப்பேன். ஒரு தமிழ் நண்பன், டேய் அது பைனஞ்சி இல்லடா, பதினஞ்சு! அப்படி தான் சொல்லனும்னு சொல்லிக் கொடுத்தான். அதன் பிறகு நானும் திருத்திக் கொண்டேன். எத்தனை மொழிகள் பேசினாலும் தாய்மொழி கலக்காமல் பேச முடியாது என்பது இயற்கை போலும்.

4. "நமக்கு", "எங்களுக்கு" இந்த இரண்டும் எப்போதும் செள மக்களுக்கு குழப்பத்தை தரக்கூடியது என்று நினைக்கிறேன். எதை எங்கே பேச வேண்டும் என்று முழிப்போம். நான் எம். எஸ். சி படித்துக் கொண்டிருந்த போது வழக்கம் போல ஒரு வாயாடித் தமிழ் பெண்ணிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தேன். எங்களோடு படிக்கும் என் செள நண்பன் அங்கே வந்து, "டேய் எங்களுக்கு 10 தேதி செமஸ்டர் ஆரம்பிக்கப் போகுது" என்றான். அந்தப் பொண்ணு சும்மாவே எல்லாரையும் கிண்டல் செய்வாள்..போதுமே! பதிலுக்கு அவள், "அப்புறம் எங்களுக்கெல்லாம் செமஸ்டர் இல்லையா? உங்களுக்கு மட்டும் தானா?" என்று நக்கலடித்தாள். ஒரே வகுப்பில் இருப்பவர்களுடன் பேசும் போது நமக்கு என்று சொல்ல வேண்டும் என்று என் நண்பனுக்குத் தெரியவில்லை. இதெல்லாம் கடலைல சகஜம்ப்பா!

5. என்னைப் பொறுத்தவரை செள மக்கள் எந்த வம்பு தும்புக்கும் போகாத ஆசாமிகள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். செள இனத்தில், இவர் அந்த வீட்டு பையனை வெட்டிட்டு 10 வருஷம் ஜெயிலுக்கு போயிட்டு வந்துருக்காரு என்று நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. துஷ்டனைக் கண்டால் போதும், காத தூரத்துக்கு விலகி நிப்போம். நம்மை ஏன் இவ்வளவு மென்மையாக வளர்த்தார்கள் என்று கூட எனக்கு சில சமயங்களில் சந்தேகம் வருவதுண்டு.

இப்போதைக்கு இவ்வளவு தான்.

நன்றி:

mksarav.blogspot.com
palkar.org
sourashtra.com

37 Responses
  1. Very Interesting!

    எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமும் செள. இனத்தை சேர்ந்தவர்தான். அவரின் 'காதுகள்' நாவலை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழின் மிக முக்கியமான நாவல் இது.


  2. நான் சொல்லவந்தேன். சுரேஷ் கண்ணன் சொல்லிவிட்டிருந்திருக்கிறார்.


  3. Thangamani Says:

    அதே! அது நல்ல நாவல்.
    இது நல்ல பதிவு!


  4. ROSAVASANTH Says:

    ஒரு காலத்தில் மதுரையில் அரசியல் கூட்டங்கள் பாதி சௌராஷ்டிரா கலந்து பேச்சு இருக்கும் என்று கோமல் சுவாமிநாதன் எழுதி படித்திருக்கிறேன். அதிலிருந்து சௌ மக்களின் ஆளுமை புரிகிரது. எம்.வி.வி பற்றி சொல்ல வந்தேன், சொல்லியாகிவிட்டது. இன்னும் பலருக்கு தெரியாத ஒரு செய்தி. தமிழ் திரைப்பட பாடல்களில் ஒரு காலத்தில் ஆட்சி புரிந்த டி. எம். சௌந்தர்ராஜன் சௌ இனத்தை சேர்ந்தவர். பல 'பச்சை' தமிழர்களை விட அவர் தமிழ் உச்சரிப்பு மேலல்லவா,

    இதே போல மரட்டி மற்றும் குஜராத்திகளும் நிரம்ப தமிழகத்தில் உண்டு. திலிப்குமார் ஒரு குஜராத்தி.


  5. நாகப்பட்டினத்தில் நான் வசித்த தெருவுக்குப் பக்கத்து தெருவுக்குப் பெயர் பட்டுநூல்காரத் தெரு. எனக்குத் தெரிந்து அந்தத் தெருவில் எந்த சவுராஷ்டிரர்களும் வசித்ததில்லை. பட்டுநூல் வேலை செய்பவர்களும் வசித்ததில்லை. [1970-லிருந்தே]

    தொடர்ந்து உங்கள் குடும்பங்களின் வழக்கங்கள், பண்டிகைகள், சாப்பாடு, திருமணம் போன்றவற்றையும் எழுதுங்கள்.


  6. Paramakudi ya maRanthuttingale.
    Anghe Sourashra School kooda irukke.


  7. Anonymous Says:

    I think there is a Saurashtra engineering college too in Tamil Nadu.

    I had a saurashtrian friend who used to tell me that it was due to Mahmud Ghazni that they came to Madurai.

    Please write more about your community.


  8. நல்ல பதிவு பிரதீப். பதினைந்து வருடமாக எங்கள் குடும்பத்தாருக்கு ஒரு சௌராஷ்டிர குடும்பத்தாருடம் நட்பு இருக்கிறது. அருமையான மக்கள். நீங்கள் எழுதியிருக்கும் பல விதயங்களை 'ஆமாம்' போட்டுக்கொண்டே எழுதினேன்.

    எனக்குத் தெரிந்திருந்த சொற்ப சௌராஷ்டிரா வார்த்தைகளை மறந்துவிட்டேன். இல்லையென்றால், இங்கே போட்டு அலட்டியிருக்கலாம். :P

    தொடர்ந்து விரிவாக எழுதுங்கள். இம்மாதிரியான விதயங்கள் பதிவு செய்து காக்கப்பட வேண்டும்.

    புளியோதரை செய்யச் சொல்லித் தந்த auntyயை நினைத்துக்கொண்டே,
    மதி


  9. Anonymous Says:

    Excellent.. and more informative.The second and third reasons u had listed in the beginning are agreeable for the imigration of sowrashtra people to our south. Then write more about this.. regarding.. your food habits, marriages. Are your people likes tamilians? and Are they willing to continue their stay in Tamilnadu? etc., etc.,
    This topic is very interesting and write more pradeep.


  10. Anonymous Says:

    பிரதீப்:

    நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

    திரைப்படத்துறையைச் சாராத ஒரு முன்னோடி தமிழ் சௌராஷ்டிரர், கும்பகோணம் அல்லது திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவர், பெயர் எஸ். ஆர். ராதா என ஞாபகம். முதன்முதலாக த.நா சட்டமன்றத்தில் வேட்டியை அவிழ்த்துவிட்டு, கால்சட்டையுடன் நடனமாடியவர் என நம்பப்பட்டவர்;)


    ரொம்ப காலமாக இங்கு அமேரிக்காவில் வசித்துவரும் பரசுராம் குடும்பத்தினரின் நிறுவனம் handm
    20 வருடங்களுக்கு முன்பே தமிழர்களின் தணியாத திரைப்பட ஆசையை தணிக்க ஒளிநாடாக்கள் விற்று புண்ணியம் சேர்த்துக் கொண்டவர்கள்.

    அமேரிக்காவில் பிறந்த, இக்குடும்பத்தை சேர்ந்த ஹேமந்த் தமிழ் பற்றி சொல்லியிருந்ததை இங்கு காணலாம் பொக்கிஷம்


  11. Anonymous Says:

    முந்தைய பின்னூட்டத்தை எழுதிய பேர்வழி வாசன்.


  12. பிரதீப்,

    சிறப்பானதொரு பதிவு. இதைப் படித்தவுடன் என்னுடைய பள்ளி நாட்களுக்கே போய்விட்டேன்.

    அப்போது விடுமுறைக்கு மதுரைக்குப் போவேன். அத்தை வீடு செனாய் நகரில் இருந்தது. தெருவோரங்களில் எல்லாம் தறி போட்டு நெய்துகொண்டிருப்பார்கள். அத்தை பசங்களோடு கிரிக்கெட் விளையாடியது, கீழே விழுந்து எழுந்து குட்டி சைக்கிள் வாடகைக்கு எடுத்து சைக்கிள் பழகியது என்ற எல்லா நினைவுகளும் இந்த 'டக்... டக்...' பின்னணி இசையோடுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

    'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...'

    நன்றி பிரதீப்...


  13. என் அருமை நண்பர்களே!

    இந்தப் பதிவுக்கு இத்தனை வரவேற்பு கிடைக்குமென்று நான் நினைக்கவில்லை. இதைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் நிச்சயமாய் எழுதுகிறேன்.

    பின்னூட்டம் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! ஜுக்கு சொந்தோஷ்! [செளராஷ்ட்ராவில் மிக்க மகிழ்ச்சி!]


  14. Anonymous Says:

    Pradeep

    Good Post.

    MVMin 'aadugal'nichayam nee padikka vendum. adu tamil govt award petra puthagam..

    Nee sourashtravai 'SOW' enru surukkamale irundirukkalam...yenenral...'SOW' enbadarku tamilil 'Panri' enru artham.
    SOW makkalai patri eludiya anda "Busil ticket patri pesuvadu"....idarku nee nichayam Karthickirku nanri sollanum.

    Balaji K.R.S


  15. செள என்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் தவிர்த்திருப்பேன்.

    ஆமாம் கார்த்திக் மிக அருமையாக அப்படி பேசிக் காட்டினான்.

    நன்றி


  16. பிரதீப்,

    இப்பத்தான் ( இன்னைக்குத்தான்) உங்க பதிவுகளைப் பார்த்தேன். அருமை!!! 'பட்டுநூல்
    காரங்க 'பலபேர் நமக்குக் குடும்ப நண்பர்களா இருந்தாங்களாம், நாங்க மதுரை ஜில்லாவுலே
    இருந்த சமயம்! எங்க அக்கா சொல்லியது நினைவுக்கு வந்தது!!!

    எம். என் ராஜம். செளராஷ்டிரா கம்யூனிட்டி! இது எனக்குப்புது நியூஸ். எவ்வளவு அழகான,
    அழுத்தமான தமிழ் உச்சரிப்பு அவுங்களோடது!!!

    இன்னும் எழுதுங்க. உணவு, மற்ற பழக்க வழக்கங்கள் எல்லாம்!!!!

    என்றும் அன்புடன்,
    துளசி.


  17. Anonymous Says:

    i am bala writing from Muscat. this article is very new to me.. as though i hail from tanjore .. i really proud of madurai being the venue for the tamil sangam.. i had a friend & class mate in my college period in annamalai university engineering college during 85-89 . his name is N.G.Janarthan.. he is still a very good friend to me.. as u said he was very polite & gentle.. i have never seen him shouting for any reasons.. he also hail from panthadi st, madurai.. keep writing more about ur people.. thank & regards, bala


  18. மதுரை தெற்குவாசலில் இருந்தபோது ஒரு பக்கம் முஸ்லீம்களும், இன்னொரு பக்கம் செளராஷ்ட்ர மக்களும் சூழ, பள்ளி (St.Mary"s) செல்லும் வழியெல்லாம் செளராஷ்ட்ர மக்கள் வீடுகள் வழியே சென்ற நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.
    நீங்கள் சொன்னதுபோல அப்போது softie-களாகத்தான் இருந்தார்கள். அதை உணர்ந்து அறுபதுகளிலேயே வாலிபர்கள் பலரும் gym-களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்களே?


  19. Pradeep nice blog about our sowrashtrians with your humorous touch....chokkad likkiraas!


  20. Anonymous Says:

    That was nice E.S.Pradeep. Am from Madurai too.. Most of my friends are Sourashtrians. I still remember a few phrases they commonly use..

    Thogo kaai podas? Thora kaam seeli jaa. (What matters to u? Mind ur own business)

    Thora nao kaai mai? (Whatz ur name?)

    Suna(Dog)

    Your blog brings back all those sweet memories. Gd job.


  21. Anonymous Says:

    எங்கு ஊர் சுற்றச் சென்றாலும், எத்தனை பேர் சென்றாலும், யார் போகிறார்களோ இல்லையோ, தூக்குச்சட்டி நிறைய புளியோதரை போகும்.

    I laughed so hard after reading this.

    Radha


  22. Anonymous Says:

    "என்ன ஆளுய்யா நீ? பிள்ளே இறங்குதுல்லே" என்று செளராஷ்ட்ரா கலந்த தமிழில் காட்டுக் கூச்சல் போடுவார்கள். நகைச்சுவையாக இருக்கும்."

    It is very humorous and also
    your old pronuncian of 15 (Painainthu).

    I had a very good friend Ramdas
    and we studied together at PSG College of Technology, Coimbatore
    and then we both went to Grad School for higher studies in engg. I miss him a million. Thanx for taking me on a trip in the memory lane. Plez keep publishing more enjoyable items like this about your beautiful people and your community. Best,


  23. Anonymous Says:

    Nanri intha visayamyellam neenga yellarukum sonnthuku mikka magilchi adaigiren. Nan sila peruku kuriyathai neengal pala peruku kuriyirukirirgal. Sila sourashtra nanbargal sourashtra mozhiyai kevala paduthum bothu varuthamaga ullathu. Antha nilai maara vendum. Tamilargal tamil patru kondu pesuvathai pola pesa vendum yenru kuravillai. Aanal nam sourashtravai sourashtra makkal kevala paduthamal irunthal mikka magilhi adaiven...
    Intha aavalai ungal mulam sollikollum oru sourashtra bedki.....(Sourashtravile kuri irupen aanal tamil nanbargal padithal purinthukolla vendum enbatharkaga! )


  24. Anonymous Says:

    //'SOW' enbadarku tamilil 'Panri' enru artham.//
    In Engish it means female pig.
    This is the first time I'm hearing that this is a tamil word. Is this really true?


  25. TBCD Says:

    "சார் ஒரு எம்பேது (80) குடுங்க."... இது நாம் இன்னும் மறக்காத செள...
    ஒரு குழந்தை ஒரு நாட்டில பிறந்தாலே...அதுக்கு குடியுரிமை குடுக்கிறாங்க. நீங்க இத்தனை தலைமுறை இருக்கீங்க நீங்களும் தமிழ்ர் தான்...இப்படி எல்லோரும் பார்த்தா..கைபர் கனவாய்லிருந்து ஆரம்பிக்கனும்...தமிழனா வாழ்ற எல்லொரும் தமிழரெ..


  26. ப்ரதீப்

    சூப்பர் போஸ்ட். பின்னிட்டீங்க! சான்ஸே இல்லை!

    //நான் அலுவலகத்தில் இருக்கும் போது யாராவது செல்·போனில் என்னவர்கள் பேச, நானும் என் தாய்மொழியில் பேச ஆரம்பித்து விட்டால் போதும், பாவம் பக்கத்தில் உள்ளவர்கள்!//

    செளராஷ்ட்ர கல்லூரியில் மூணு வருஷம் படிச்சேனே. எனக்கு எப்படி இருந்திருக்கும்!

    //செள பாஷை கொஞ்சம் கரடுமுரடானதாக இருக்க வேண்டும். //

    இது ஓவரான அன்டர் எஸ்டிமேட்! தெலுங்கு மலையாளம் கன்னடம் ஏன் அரபிக்னு எந்த பாஷையாயிருந்தாலும் தெரியாட்டாலும் அவங்க பேசறதை வச்சும் சில பொதுவான வார்த்தைகளை வச்சும் பேசறவங்களோட முகபாவத்தை வச்சும் ஓரளவுக்கு என்ன பேசறாங்கன்னு அனுமானிக்கலாம். செளராஷ்ட்ரா - சான்ஸே இல்லை. அது எப்படிங்க 'நாளைக்கு அவனப் போட்டுத் தள்ளிரலாம்'ங்கறத கூட சிரிச்சிக்கிட்டே பேசினா எப்படிக் கண்டுபிடிக்கறதாம்?

    தலைகீழா நின்னும் ஒரு வாக்கியம் கூட கத்துக்க முடியலை. கூட படிச்ச செளராஷ்ட்ரா நண்பர்கள் முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சுட்டு விட்டுட்டாங்க. அதுலயும் கல்லூரில மக்களை பிரிச்சு வேற வச்சிருந்தாங்களா? அவங்களோட கடலை போடறதுக்கு பதிலா நிலாவுக்கு ஈஸியா போய்ட்டு வந்துரலாம். முத்து ரஜினிக்கு மீனா ஊருக்குப் போக வழி கேக்கச் சொல்லிக் கொடுத்த மாதிரி எனக்கும் ஒருத்தன் 'து மோ கொஞ்சுவோ' மாதிரி எதையோ ஒண்ணைச் சொல்லிக் கொடுத்து அந்தப் புள்ளை சிரிச்சுக்கிட்டே தலை தெறிக்க அவங்க 'ஏரியா'க்குள்ள ஓடினது இன்னம் ஞாபகத்துல இருக்கு!

    //செளராஷ்ட்ரா மொழிக்கு எழுத்துக்களும் உண்டு.//

    இது வேறயா? அனேகமா ரைட் டாப் கார்னர்லருந்து லெப்ஃட் பாட்டம் கார்னருக்கு எழுதற ஸ்டைலா இருந்திருக்கும்!

    //எங்கு ஊர் சுற்றச் சென்றாலும், எத்தனை பேர் சென்றாலும், யார் போகிறார்களோ இல்லையோ, தூக்குச்சட்டி நிறைய புளியோதரை போகும். //

    :-)))))

    //பஸ்ஸில் ஏறும் முன் யார் டிக்கட் எடுப்பது என்று முடிவு செய்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் ஏறிக் கொண்டு இங்கிருந்து நான் டிக்கட் எடுத்து விட்டேன் என்று அவர்கள் ஸ்டாப் வரும் வரை பேசிக் கொண்டே வருவார்கள். //

    இது மறத் தமிழர் எல்லாருக்கும் பொதுவானதுதான். எல்லாரும் ஏறியாச்சா என்று கேட்டுக் கேட்டு எல்லாரையும் டென்ஷன் பண்ணி ஒரு வழி பண்ணிடுவோம்ல?

    //நான் பள்ளியில் படிக்கும் போது 15 ஐ பைனஞ்சி என்று உச்சரிப்பேன்.//

    என்னமோ நாங்கள்ளாம் 15ஐ பதினைந்துன்னு கரெக்ட்டா சொல்ற மாதிரி. நாங்க 'பாஞ்சு' 'பாஞ்சு' இல்ல அதைச் சொல்வோம்!

    //என்னைப் பொறுத்தவரை செள மக்கள் எந்த வம்பு தும்புக்கும் போகாத ஆசாமிகள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள்.//

    ஆனா ஊளைக்குசும்பு ஜாஸ்தின்னு கேள்விப்பட்ருக்கேன்! :-)

    பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.


  27. சுரேஷ்.

    //எம்.வி. வெங்கட்ராமும்//

    பதிப்பக விவரங்களைத் தர இயலுமா? இணையத்தில் வாங்க இயலுமா?


  28. ஹலோ k.r.s.

    //'SOW' enbadarku tamilil 'Panri' enru artham//

    ஏன்யா இப்படி பீதியைக் கெளப்புறீரு. நான் இந்த மாதிரி கேள்விப் பட்டதேயில்லையே! :-((

    அப்றம் பத்திரிகைலல்லாம் 'செள. xxxxxxக்கும் செளபாக்கியவதி Xxxxxxxக்கும்'ன்னு போடறதெல்லாம்.


  29. Anonymous Says:

    பல செளராஷ்டிரர்கள் தமிழறிஞர்களாகப் பேச்சில்,எழுத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.என்ன சாது என்று சொல்லி விட்டீர்கள்.பெண்கள் பேசிக்கொள்வதே சண்டை போட்டுக் கொள்வது போல்த்தானே இருக்கும்.(கோபித்துக் கொள்ளாதீர்கள்).பழகுவதற்கும்,நட்பிற்கும்
    மிகவும் அருமையான பலர் உண்டு.
    சிலர் பார்ப்பனர் போல நினைப்பிலும் நடப்பிலும் இருந்தாலும் பலர் தமிழ்ப்
    பற்று உள்ளவர்கள்.
    சொந்தத்திலேயே அதிகம் திருமணம் செய்து கொள்வது,மதுரைக் காரவர்கள் உயர்ந்தவர்களென்ற சில குறைகள் உண்டு.
    பலர் நன்கு படித்து நல்ல வேலைகளில் உலகெங்கும் வாழ்கிறார்கள்.சிலர் அய்யர் என்று பெய்ரில் வைத்துக் கொண்டாலும் அவர்கள் பிற்படுத்தப் பட்ட இட ஒதுக்கீட்டில் சேருவார்கள்.
    என் இனிய நண்பருக்கு இது ஒரு தமிழந்தான் நீங்கள் என்று கூறி அன்பு காணிக்கையாக்குகின்றேன்.


  30. Unknown Says:

    Today on june 13, 2008 I was browsing your site and woule like to say about
    செள means beautiful, one hundered
    But SOW means pig. You must put only SOU FOR செள.
    Next Sourashtra is not a caste, is a race. All kind of people are there in sourashtra like business, periest, working and fighters.
    By checking house names like Sethupathy, Nattamai etc.


  31. Latha Kuppa Says:

    very nicely written :) Enjoyed reading this post!


    latha


  32. Latha Kuppa Says:

    Enjoyed reading your post. Made me laugh. Yes, what you said about our people are true :)


  33. Anent Says:

    Pradeep,
    It's superb to read your blog post about Sourashtrians.
    Anent


  34. santhilal Says:

    Your writing style is very interesting,humourous and excellent.''intha bus panthadi 3 pokumaa??'' saththam pottu siriththaen. [LOL.]OUR ammaan ask the mutton shop'' nammalukku thoda kari 120 kiraam podunga''our marriage customs [ kashtams ] resemble brhamins'.


  35. Superb blog dha.

    prEvkan
    Raamesh Keerthi N J

    PS: 'N' refers to Nattamai


  36. Wow, after long time i am getting lot of comments on this post. Thanks for all who read/comment it. A spl thanks to Anent! Anent - I thought u r reading my blogs quite long time, r u reading this post now only?


  37. koshereal Says:

    உங்கள் இனம் உங்கள் மக்கள் மென்மையானவர்கள்.இடபெயர்ந்தவர்கள். ரஜ்ஜியத்தால் .மத காெள்கையால் பாதித்து தங்ளை மாற்றிொண்டவர்கள். உங்கள் இன
    மக்களின் மூலகடவுள் . அடுத்த கடவுள் தர்பாேதியநிலை அனைத்துக்கும் பதில் பிரபஞ்சம் எனக்குொடுத்துள்ளார்.