என்னையும் இந்த விளையாட்டுக்கு கூப்பிட ஒரு நண்பர் வலைப்பூவில் இருப்பதைக் குறித்த களிப்புடனும், நான் இந்த புத்தக விளையாட்டுக்கு உகந்தவனா என்ற கலவரத்துடனும் இதை எழுதுகிறேன்.

நான் அரை மூச்சாய் [இன்னும் முழு மூச்சாய் ஆரம்பிக்கவில்லை] புத்தகம் படிக்க ஆரம்பித்ததே 2 வருடங்களுக்கு முன் தான். அதற்கு முன் குமுதம், விகடன், அதுவும் எப்போதாவது கையில் மாட்டும் போது. 5 வருடம் கல்லூரியில் கழித்தேன். அந்த மாலை நேரங்களை என்ன செய்தேன் என்று இன்று கவலைப் படுகிறேன். அப்போவே ஒழுங்காய் படித்திருந்தால் இன்னைக்கு தில்லா இந்தப் பதிவுல இறங்கியிருக்கலாம். சரி விளையாட்டை ஆரம்பிக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அம்புலிமாமா, சிறுவர் மலர் விரும்பிப் படித்ததுண்டு. அம்புலிமாமாவில் கதைகளை விட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு அழகான சிறிய குடிசை, ஒற்றையடிப் பாதை, புல் தரைகள், நிறைய மரங்கள், அரசர் கதைகளில் வரும் மாட மாளிகைகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இங்கு நாம் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. [டாம் அண்ட் ஜெர்ரி, பழைய தமிழ் திரைப்படங்களில் வரும் கிணற்றடி செட்டிங் பார்க்கும் போது இதே உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு!]

எண்ணிக்கை!

பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும், புதுமைப்பித்தனின் 6 புத்தகங்களையும் தனித் தனியான புத்தகங்களாக வைத்துக் கொண்டால் என்னிடம் ஒரு 35 புத்தகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் ரொம்ப ஓவர் தான், என்ன பண்றது புத்தகங்கள் அதிகம் இல்லாத எழைய்யா! அம்மா! [ஐய்யயோ என்ன ராப்பிச்சை ரேஞ்சுக்கு போயிடுச்சே!]

பட்டாம்பூச்சி

எதையாவது படிக்க வேண்டும் என்று நான் வாங்கிய புத்தகம். ரா. கி. ரங்கராஜன் என்றால் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் இருந்ததால் இந்த புத்தகத்தை தில்லியில் வாங்கினேன். ஒரு அருமையான ப்ரெஞ்ச் நாவல் [என்று ஞாபகம்] மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தக் கதாநாயகன் ஹென்றி ஷெராயர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைபடுகிறான். அவன் அங்கிருந்து தப்பிப்பதே கதை. என் நண்பர்கள் படித்து விட்டு அவனாகவே தன்னை அடிக்கடி உருவகப்படுத்திக் கொண்டு "இங்கிருந்து தப்பிக்க வேண்டும்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

விஞ்ஞானச் சிறுகதைகள்

மனிதர் 60, 70 களில் விஞ்ஞானக் கதைகளை பிரித்து மேய்ந்திருக்கிறார். அந்தத் தொகுதியில் முதல் கதை "ஒரு கதையில் இரண்டு கதைகள்" அதிலேயே நான் சாஷ்டாங்கமாய் விழுந்து விட்டேன். ஒரு கதையை "டிட்டோ என்றான்" என்று ஆரம்பிப்பார்! ராகவேனியத்திடம் ஒரு குரங்கு அகப்பட்டுக் கொண்டு அது படாத பாடு படுத்தும். அதை எப்போது படித்தாலும், வயிறு வலிக்க கண்களில் நீர் வழிய சிரிப்பேன். திமிலா, சென்னை கடலில் மூழ்கிய பிறகு ஒரு பயணம், ஜில்லு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜெயகாந்தன் சிறுகதைகள்

பெங்களூர் தமிழ் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர் ஆன பிறகு, அங்கிருந்து இவருடைய சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். அக்னிப் பிரவேசம், குருபீடம், அந்தக் கோழைகள், அக்ரஹாரத்துப் பூனை, ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, சுய தரிசனம், சாத்தான் வேதம் ஓதுகிறது, தவறுகள் குற்றங்களல்ல, நான் இருக்கிறேன், நிக்கி, சிலுவை..இப்படி எத்தனை எத்தனை அருமையான கதைகள், இதில் அவருடைய மொழி ஆளுமையும், அவருடைய பாத்திரப் படைப்பும், தன்னைச் சுற்றி நடப்பவைகளில் தன்னுடைய கூர்ந்த பார்வையும் [observation ஐ இந்த சொதப்பு சொதப்பி இருக்கிறேன்!] என்னை வியக்கச் செய்தது. இப்படியாக என்னிடம் அறைகுறையாய் இருந்த சுஜாதாவுடனும், ஜெயகாந்தனும் சேர்ந்து கொண்டார்.

புதுமைபித்தன் சிறுகதைகள்

சிறுகதை உலகில் பல புதுமைகளை புகுத்தியவர் என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடைய 5, 6 புத்தகங்கள் கொண்ட சிறுகதை தொகுப்பை வாங்கினேன். முதல் கதை "பூசனிக்காய் அம்பி!", ஏதோ ஒரு அம்பியின் செயல்களை சொல்லி விட்டு, அவனைக் கொஞ்ச நாளா காணோம் என்று சொல்லி கதையை முடித்து விடுவார்! இது என்ன கதை, இதில் என்ன புதுமை இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. சுஜாதாவையும், ஜெயகாந்தனையும் அரைகுறையாய் படித்தவனுக்கு புதுமைப் பித்தன் அவ்வளவு சீக்கிரம் பிடிபட மாட்டாரோ என்னமோ? படிக்கப் படிக்க அவரின் புதுமைகளை உணர ஆரம்பித்தேன், அநாயசமாக சிறுகதை இலக்கணங்களை உடைத்து எழுதி இருக்கிறார். கதையின் முடிவில், 1937, மணிக்கொடி என்று இருந்தது. 60, 70 களில் சுஜாதா இவ்வளவு யோசித்திருக்கிறாரே என்ற பிரமிப்பு குறைந்து இந்த மனிதர் 1937ல் இப்படி எல்லாம் எழுதி இருக்கிறாரே என்ற பிரமிப்பு ஏற்பட்டது. அவருடைய "நவீன கந்தபுராணம்" நான் மிகவும் ரசித்த கதை. இன்னொரு கதையில் [பெயர் ஞாபகமில்லை] முடிவு சொல்லாமல் இது நான் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது மிதந்து வந்த ஓலையில் இருந்தது. இவ்வளவு தான் கிடைத்தது என்று முடித்து விடுவார். "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்", ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் படும் பாடு இப்படி எத்தனையோ புதுமைகள்..உண்மையிலேயே புதுமைப் பித்தன் தான்.

பெய்யெனப் பெய்யும் மழை

என்னுடைய வலைப்பதிவுக்கு பெயர் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒன்று எனக்கு மழை ரொம்பப் பிடிக்கும். இன்னொன்று வைரமுத்துவின் இந்தக் கவிதைத் தொகுப்பு. இதில் காதலைப் பற்றிய கவிதையில்:

உன் பின்னால் ஒளிவட்டம் தோன்றும்
தபால்காரன் தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே உன் கண்ணாடி உடையும்

ஊழி என்னும் கவிதையில்:

நிமிர்ந்ததெல்லாம் சாய்ந்ததில்
சாய்ந்த ஒன்று நிமிரந்தது
பைசா கோபுரம்!

ஏதோ ஒரு கவிதையில் இரு முத்தான வரிகள்

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்!

இவர் எதைப் பார்த்தாலும் கவிதையாய் தான் பார்ப்பாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மிக அழகான தொகுப்பு! இன்னொரு முறை படிக்க வேண்டும், நிறைய மறந்து போய் விட்டேன்.

நான் படித்த மற்ற புத்தகங்கள்

கம்யுனிசம் நேற்று - இன்று - நாளை - ஜெவஹர்
துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
இரண்டாம் காதல் கதை - சுஜாதா
திரைக்கதை எழுதுவது எப்படி - சுஜாதா
சத்திய சோதனை - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
அகிரா குரோசோவா
பொதுவுடைமை தான் என்ன? - ராகுல்ஜி
தண்ணீர் தேசம் - வைரமுத்து

படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்

பொன்னியில் செல்வன் - 2 பாகம் ஆச்சு![அடப்பாவி, இப்போ தான் பொன்னியின் செல்வனுக்கே வர்றியான்னு கேக்காதீங்க!]
வண்ணநிலவன் கதைகள்
உலக சினிமா - எஸ். ராமகிருஷ்ணன்
தி. ஜானகிராமன் கதைகள்
தாத்தா சொன்ன கதைகள் - கி. இராஜநாராயணன்
அசோகமித்ரன் கதைகள்
மால்குடி டேஸ் - ஆர். கே. நாராயணன் - ஆங்கில புத்தகங்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று நான் வாங்கிய ஒரு புத்தகம், இரண்டு கதைகளோடு நிற்கிறது.

கற்றது அணுவளவு; கல்லாதது பிரபஞ்சமளவுன்னு சும்மாவா சொன்னாங்க? [ஏதோ மாறினாப்பில இருக்கே?]

ஒஹோ, இன்னும் விளையாட்டு முடியவில்லை, நானும் ஒரு 5 பேரை வழிமொழிய வேண்டுமே. அப்படி நான் யாரையும் சொல்லப் போவதில்லை. அதற்கு பதிலாக யார் இன்னும் இதைப் பற்றி எழுதவில்லையோ அத்தனை பேரும் எழுதலாம், எழுதனும்! ம்ம்.. ஈ கலப்பை எடுங்கோ, ஆரம்பிங்கோ!!

6 Responses
  1. Thangamani Says:

    இன்னும் பெங்களூரில்தான் இருக்கீங்களா? நினைவிருக்கா, ஒரு முறை ஏ மெஸ்ஸில் பார்த்தோமே!

    தமிழ்ச்சங்க நூலகம் பெரியதா? IISc ஜிம்கானா நூலகத்திலும் கொஞ்சம் நூல்கள் உண்டு. நாங்கள் கொஞ்சம் (ஒரு 30 நூல்கள்) புதிய நூல்கள் வாங்கி அங்கு வைத்திருக்கிறோம். நண்பர்கள் மூலம் பயன்படுத்திக்கொள்ளவும்.நன்றிகள்.


  2. Pradeep,

    Why don't you increase the font size?


  3. Anonymous Says:

    தங்கமணி

    தற்போது நான் சென்னையில் குடிபெயர்ந்துள்ளேன்.

    Suresh,

    I think font size is very normal. If you have scroll mouse, scroll the mouse with the ctrl key clicked. u can see big fonts. :-)


  4. Anonymous Says:

    kalakkuriye pradeep....

    Go ahead!!!

    anda Wrox...ASP.Net vaanguniye...padichu mudichitiya?

    Balaji K.R.S.


  5. Ram.K Says:

    ஜெயமோகன்னு ஒருத்தர் கதை எழுதராரு, அவரோட விஷ்ணுபுரம் படித்துப் பார்க்கவும்.


  6. Ungal Blog Peyar paartthadhum ninaitthukkonden Idhu Vairamuthuvin kavidhai thoguppin peyaraayitre yenru..U seem to be a book worm...The zeal to read tamil author's books increases...